கடன்
சரஸ்வதி ராசேந்திரன்
‘’என்னங்க. பேசாமலேயே உட்கார்ந்திருக்கீங்க,கடன்காரன் எப்படி திட்டிட்டுப் போனான் , ஒரு வாரத்துக்குள்ளே பணத்தை கொடுக்கலைன்னா சாமானெல்லாம் ரோட்டுக்கு வந்திடும்னு சொல்லிட்டுப்போறான் நீங்க என்னடான்னா…’’’ கீதா சொல்ல
‘’எனக்கு என்ன காது செவிடா? இல்லே தமிழ் தெரியாதா? வேற மொழியில சொன்னமாதிரி மொழி பெயர்க்கிறாயா?எல்லாம் காதுல விழுந்துது ‘’எரிந்து விழுந்தான் வினோத்
‘’என்ன செய்யப்போறீங்க’’
‘’ ஒரு வாரம் இருக்கில்லே யோசனை பண்ணுவோம் ‘’
தெரிந்தவர்களிடம் எல்லாம் கேட்டு பார்த்தான் கிடைக்க வில்லை
நாள் நெருங்க நெருங்க பயம் அப்பிக் கொண்டது .
‘’என்னங்க தெருவே வேடிக்கை பார்க்கப் போகுது அவமானமாகப்போகுது.. என்ன செய்யப் போறீங்க?’’
‘’ குடும்பமே தூக்கமாத்திரை சாப்பிட வேண்டியதுதான் .சும்மா தொணதொணக்காதே உங்க வீட்டிலேயும் எங்க வீட்டிலேயும் கேட்கமுடியாது நாம இருக்கிற லட்சணத்திலே காதல் திருமணம் வேறு.. கடைசியா நம்மயோசனைத்திலகம் யோகேஸ்வரனை கேட்போம் அவனாவது உருப்படியா ஏதாவது சொல்றானா பார்ப்போம் இதோவரேன் ‘’சொல்லிவிட்டு வெளியேறினான் யோகேஸ்வரன் சொன்ன யோசனை பிடித்திருந்தாலும் உயிருக்கு மோசம் வந்தால் என்ன செய்வது என்று பயமாகவும் இருந்தது வினோத்திற்கு. அடுத்த நாள்-
தெருவில் ஒரே களேபரம் .மாற்றுக்கட்சிக்காரன் எதிர்க்கட்சிக்கார தலைவரை கேவலமாக பேசி விட்டதால் துடித்தெழுந்த தொண்டர்கள் மாற்றுக்கட்சிக்காரனின் உருவ பொம்மையை கொளுத்திக்கொண்டிருந்தார்கள் .அப்பொழுது யோகேஸ்வரன் கண்ணைக்காட்ட யாருக்கும் தெரியாமல் ஓடிப்போய் வினோத் ரப்பர் செருப்புடன் எரியும் உருவப்பொம்மையை மிதித்து அணைக்க முற்பட திடீரென வினோத்தின் பேண்ட் பற்றி யெரிய..யோகேஸ்வரன் ’’ வேண்டாண்டா தலை வருக்காக தீ குளிக்காதே என்று சத்தமிட்டபடியே அவனை மணலில் போட்டு புரட்ட தொடைகள் வெந்த எரிச்சலில் வினோத் கத்த- ஆஸ்பிடலுக்கு கொண்டுபோனார்கள்..என்னவோ தலைவருக்காக தீகுளித்ததுபோல் பாவலா செய்ய ..எதிக்கட்சியின் தலைவர் தன்னை கேவலாமாகப் பேசியது பொறுக்காமல் இப்படி யொரு தொண்டனா என எண்ணி உடனடியாக தீக் குளித்த குடும்பத்திற்கு இரண்டு லட்சம் பணமும் ஆஸ்பிடல் செலவையும் ஏற்றுக் கொண்டார் ..யோகேஸ்வரன் ஐடியா ஒர்க் அவுட் ஆனதால் வினோத் தன் கடனையும் யோகேஸ்வரனுக்குரிய பங்கையும் கொடுத்து கடன் காரனிடமிருந்து தப்பினான்.