அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 69

0

தேசிய அருங்காட்சியகம், சூரிச், சுவிச்சர்லாந்து (2)
(ஜோஹான்னஸ் குட்டன்பெர்க்)

முனைவர்.சுபாஷிணி

அச்சுப்பதிப்பாக்கம் உலக மக்கள் வாழ்வியலில் மாபெரும் சிந்தனைப் புரட்சிக்கு அடித்தளம் அமைத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. மிகக்கடினமான எழுதும் முறையும், ஒரு நூலை உருவாக்க எடுத்துக் கொள்ளப்பட்ட நீண்ட நேரம் என்பதும் கல்வியை குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும்தான் ஏதுவானதான ஒரு சூழலை இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திலுமே ஏற்படுத்தியிருந்தன. அச்சு இயந்திரங்கள் படிப்படியாக பயன்பாட்டில் பரவத் தொடங்கியபின்னர் ஒரு தனி நூல் தயாரிப்பு என்பதற்கு பதிலாக ஒரே அச்சுக்கூடத்தில் ஒரு தயாரிப்பினை மட்டும் கொண்டு பல நூல்களை உருவாக்கலாம் என்ற நிலை உருவானது. இது அதிக அளவில் நூல்கள்பதிப்பாக்கம் பெறுவதற்கு அடித்தளம் அமைத்தது. இதுவே ஐரோப்பாவில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி அது உலகம் முழுவதும் பரவும் நிலையையும் உருவாக்கியது. இப்புரட்சிக்கு ஆதாரமாக அமைந்த அச்சு இயந்திரம் உருவாகி நூற்கள் எண்ணிக்கையில் பலவாக அச்சிடப்பட உருவான காலம் 15ம் நூற்றாண்டாகும்.

1

அச்சு இயந்திரத்தின் தந்தை என அறியப்படும் ஜொஹான்னஸ் குட்டன்பெர்க் 1436ம் ஆண்டில் அச்சு இயந்திரத்தைப்பற்றி தனது சூழலில் இருந்த ஏனைய சில ஆர்வலர்களுடன் சேர்ந்து தொடங்க முயன்றார். கடும் ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக, 1439ம் ஆண்டில் இம்முயற்சி வெற்றி பெற ஆரம்பித்தது. பதிப்புத்துறையில் புரட்சியை ஏற்படுத்திய இந்த முயற்சி தோன்றியபோது முதலில் ஜெர்மனியில் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் நகரமான மைன்ஸ் நகரில் தான் ஒரு அச்சு ஆலை உருவாக்கப்பட்டது. இதனை ஜொகான்னஸ் குட்டன்பெர்க் தொடங்கி நடத்தி வந்தார். அச்சுப்பதிப்பாக்கத்திற்கு வரவேற்பு கூடியபோது, அதாவது 1480ஆம் ஆண்டில் ஜெர்மனி தவிர்த்து ஏறக்குறைய் 270 இடங்களில் ஐரோப்பாவின் பல இடங்களில் அச்சு ஆலைகள் உருவாகின.

2
அச்சு ஆலைகள், கல்வியும், உலக அறிவும் சமூகத்தில் உள்ள ஒரு சாராருக்கு மட்டுமானதல்ல. அவை எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்ற புரட்சியை உருவாக்கி வெற்றியும் கண்டது. அச்சு இயந்திரங்கள் இல்லாத ஒரு நிலையை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது அல்லவா?

சுவிச்சர்லாந்தைப் பொறுத்தவரை அங்கு குட்டன்பெர்க்கின் அச்சு இயந்திரத்தை வாங்கி சூரிச் நகரில் அச்சு ஆலையை உருவாக்கியவர் கிறிஸ்தோவ் ஃப்ரோஷாவர் (1490 – 1564). ஆரம்ப காலத்தில் அச்சு ஆலைகளில் பைபிள்களே மிக அதிக அளவில் அச்சிடப்பட்டன. இவரது பெயரிலேயே தற்சமயம் சூரிச் நகரின் மையப்பகுதியில் ஒரு சாலையும் இருக்கின்றது. இவர் பைபிள் மட்டுமன்றி, மார்ட்டின் லூதரின் எழுத்துக்கள், சுவிங்லியின் எழுத்துக்கள் ஆகியனவற்றோடு யுராஸ்மூஸ் ஃபோன் ரோட்டர்டாம் அவர்களின் எழுத்துக்களையும் அச்சிட்டவர் என்ற சிறப்பினைப் பெறுகின்றார். இவரது அச்சுப்பணிக்குப் பயன்படுத்தப்பட்ட தாட்கள் அங்கே சூரிச் நகரிலேயே உள்ள லிம்மாட் தாள் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்பட்டன.

3

சூரிச் தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள சேகரிப்புக்களில் ஜொகான்னஸ் குட்டன்பெர்கின் அச்சு இயந்திரம் ஒன்றும் உள்ளது. ஒரு முழு அச்சு இயந்திரம். மரத்தால் உருவாக்கப்பட்ட, இன்னமும் பயன்படுத்தக்கூடிய நிலையில் இருக்கும் அச்சு இயந்திரத்தை இங்கே பாதுகாப்பான ஒரு பகுதியில் இங்கே காட்சிக்கு வைத்துள்ளார்கள்.. இங்கே காட்சிக்கு இருக்கும் இந்த அச்சு இயந்திரம் போன்ற வடிவில் உள்ள ஒரு அச்சு இயந்திரம்தான் 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்து அங்கே கொல்லத்தில் தமிழின் முதல் தமிழ் அச்சு நூல் உருவாகக் காரணமாகவும் இருந்தது என்பதை நாம் இவ்வேளையில் நினைவுகூரத்தான் வேண்டும்.

4

இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்த அச்சு இயந்திரத்தோடு 16, 17ஆம் நூற்றாண்டு அச்சு நூல்கள் சிலவற்றையும் காட்சிக்கு வைத்துள்ளனர். உலக வரலாற்றில் அறிவுத்தளத்தில், பெரும் புரட்சியை ஏற்படுத்திய இவ்வகைப் பணிகளைப் பற்றி அறிந்து கொள்ளும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை.

5

சூரிச் தேசிய அருங்காட்சியகத்தில் இருக்கும் ஏனைய சில அரும்பொருட்களைப் பற்றி மேலும் சொல்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.

தொடரும்..
சுபா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.