மீ.விசுவநாதன்

எத்தனையோ நல்லவைகள் இங்கே – அந்த
இடமெல்லாம் நானிருக்க வேண்டும்
சத்தமின்றி செய்கின்ற நன்மை – என்
சந்தோஷச் செய்தியாக வேண்டும் !

கல்வியிலே வல்லவர்கள் வாழும் – இடம்
கண்டுகண்டு நான்கூட வேண்டும்
வல்வினைகள் ஆக்கமுடன் ஓங்கும் – என்
வளர்தேசம் நானறிதல் வேண்டும் !

நீர்நிலைகள் பூந்தோட்டம் யாவும் – எந்த
நிலையினிலும் தூய்மையாக வேண்டும்
ஊர்களுக்கே உபதேச மின்றி – என்
உள்ளமிதை உள்வாங்க வேண்டும் !

என்வீடு என்தெருக்கள் யாவும் – என்
இதயமுடன் சுத்தமாக வேண்டும்
பொன்பூமி என்தேசம் வாழ – என்
பொல்லாமை குணம்மாற வேண்டும் !

நீசெய்க என்றுசொல் லாமல் – நான்
செய்கின்ற முதலாளாய் வேண்டும்
வாய்ப்பேச்சு வேதாந்த மின்றி – என்
வாக்கெல்லாம் உண்மையாக வேண்டும் !
(02.09.2016 11.58 AM)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சந்தோஷச் செய்தி

  1. அருமை . நல்ல வேண்டுதல். இறைவன் இந்த குணங்களை எல்லாருக்கும் அருள வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *