செண்பக ஜெகதீசன்

இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன்     
கெடுப்பார் இலானுங் கெடும்.     திருக்குறள் -448: பெரியாரைத் துணைக்கோடல்) 

புதுக் கவிதையில்…

தவறும்போது
தட்டிக் கேட்கும்
தக்க பெரியோர்
துணையற்ற மன்னனுக்கு,
கெடுக்கும் பகைவரின்றியே
கேடு வரும்! 

குறும்பாவில்…

இடித்துரைத்துத் திருத்திடத் துணையாயப்
பெரியோரில்லா மன்னன்,
பகைவரின்றியே பெரிதும் கெடுவான்! 

மரபுக் கவிதையில்…

தவறிடும் போதெலாம் எடுத்துரைத்தே
     –தட்டிக் கேட்கும் பெரியோரை
அவைதனில் அறிவுத் துணையாக
     –அமைத்துக் கொள்ளா மன்னவரும்,
புவியதன் வாழ்வில் பொறாமையுடன்
     –பொருதிட நிற்கும் பகைவர்கள்
எவரு மின்றியே கெட்டிடுவார்
      –எல்லா மிழந்து நிற்பாரே! 

லிமரைக்கூ…

இடித்துரைக்கும் பெரியோரென்றும் துணையே,
இல்லையெனில் மன்னவரும் கெடுவர்
எதிரியின்றியே,
இல்லையென்றும் பெரியோருறவுக் கிணையே! 

கிராமிய பாணியில்…

தொணவேணும் தொணவேணும்
பெரியவுங்க தொணவேணும்,
தவறுசெஞ்சா தட்டிக்கேக்கும்
பெரியவங்க தொணவேணும்… 

தொணயிதுபோல் இல்லயிண்ணா
தொலஞ்சிபோவான் ராசாவுமே,
கெடுக்கவரும் எதிரியில்லாமலே
கெட்டுப்போவான் ராசாவுமே… 

அதால,
தொணவேணும் தொணவேணும்
பெரியவுங்க தொணவேணும்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.