எட்டுத்தொகை நூல்களில் இயைபு வனப்பு
-பா.ராஜபாண்டி
சங்க இலக்கியம் என்று அழைக்கப்படும் பதினெண்மேற்கணக்கு நூல்கள் அகம், புறம் என்ற இரு பொருண்மைக்கு உட்பட்டு வந்த பாக்களைப் பெற்று அமைந்துள்ளன. இவற்றுள் செவ்வியல் இலக்கியங்களான எட்டுத்தொகை நூல்கள் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகின்றன. இப்பாக்களில் ஈற்றடியில் கடைசி எழுத்து உயிர்மெய் கலந்து ஏகார ஓசையுடன் அமைந்து முடிவதாகப் பாடப்பட்டுள்ளன. ஆனால் ஒருசில பாடல்கள் இவ்விதியிலிருந்து சற்று மாறுபட்டு உயிர்மெய்யீராக அல்லாமல் மெய்யெழுத்தாகவே வந்துள்ளன. தொல்காப்பியர் ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யெழுத்துக்களும் ஈற்றடியில் இறுதியாக வந்து அமையும் செய்யுட்களை இயைபுவனப்பு எனக் கூறுகின்றார். எட்டுத்தொகை நூல்களில் சில செய்யுட்கள் தொல்காப்பியரின் எண்வகை வனப்புகளுள் ஒன்றான இயைபுவனப்பு செய்யுட் வகையைச் சார்ந்தவையாகும். இந்நூலில் உள்ள தொல்காப்பியர் கூறிய இயைபுவனப்பின் இலக்கண அமைப்பு கொண்ட செய்யுட்களைக் கண்டறிந்து, அவற்றின் பாடுபொருள் நிலையினையும், சிறப்பினையும் விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
தொல்காப்பியரின் எண்வகை வனப்பு:
வனப்பு என்பது அழகு, அலங்காரம் எனப் பொருள்படும். வனப்பின் வகைமை பற்றிக் கூறும் தொல்காப்பியர், “பொருந்தக் கூறிய எட்டொடுந் தொகைஇ” (தொல்.செய்யுளியல்.நூ.1) எனக் கூறுகின்றார். அதாவது, வனப்பு எட்டு வகைப்படும். அவை, 1.அம்மை, 2.அழகு, 3.தொன்மை, 4.தோல், 5.விருந்து, 6.இயைபு, 7.புலன், 8.இழைபு போன்றவையாகும். இவர் செய்யுளியலில் முதலில் கூறிய 26 செய்யுள் உறுப்புகளோடு அம்மை முதலாக இழைபு ஈறாகச் சொல்லப்பட்ட எண்வகை வனப்புகளோடு சேர்த்து மொத்தம் 34 செய்யுள் உறுப்புகள் என்று கூறுகின்றார்.
தொல்காப்பியரின் இயைபுவனப்பு:
இயைபு என்னும் வனப்பு இலக்கியச்செய்யுளில் இறுதியில் அமையும் மெல்லின, இடையின எழுத்துக்கள் அடிப்படையில் இனங்காணப்படும் செய்யுளுறுப்பாகும். அதாவது ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யெழுத்துக்களில் ஏதேனும் ஒன்று ஈற்றில் பொருள் இயைந்தும், சொல் இயைந்தும் வருவதை இயைபுவனப்பு என்கிறார் தொல்காப்பியர். இதனை,
“ஞகார முதலா னகார ஈற்றுப்
புள்ளி இறுதி இயைபெனப் படுமே” (தொல்.செய்.இளம்பூரணர் உரை. நூ.232)
என்ற நூற்பா மூலம் விளக்குகின்றார். இளம்பூரணர், “ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யும் ஈறாக வரும் செய்யுள் இயைபென்னும் செய்யுளுறுப்புகளாகும் என்பார்.”1 இவ்வுறுப்புக்கு உதாரணம் வந்த வழிக் காண்க என்று கூறி, இறுதியில் முடியும் மணிமேகலை பாட்டுக்களைக் கூறுகின்றார். பேராசிரியர், “மேலே கூறப்பட்ட பதினொரு புள்ளியீற்றினுள் ஒன்றினை இறுதியாகச் செய்யுள் பொருள் தொடராகவும், சொற்றொடராகவும் செய்வது இயைபெனப்படும் என்கிறார்.”2 இவர் இயைபு என்பது பொருள் இயைந்தும், சொல் இயைந்தும் வருவது என்கிறார். சான்றாக மணிமேகலையையும், கொங்குவேளிரால் செய்யப்பட்ட கொங்குவேண்மாக்கதையினையும் காட்டுகின்றார். இவர் “அவை இப்பொழுது வீழ்ந்தன போலும்’’ என்று குறிப்பிடுவதன் மூலம் ஏனைய பத்து மெய்களும் ஈற்றில் அமையும் தொடார்நிலைச் செய்யுள் கிடைக்கவில்லை என்பது நன்கு புலனாகின்றது. நச்சினார்க்கினியர், “முன்னர்க் கூறிய பதினொரு புள்ளியுள் ஒன்றனை ஈற்றில் வந்து செய்யுளை பொருட்டொடராகச் செய்வது இயைபெனப்படும் என்கிறார்.”3 சான்றாக மணிமேகலையும், உதயணன் கதையும் இக்காலத்தவர் கூறும் அந்தாதிச் சொற்றொடரும் கொள்க எனக் கூறுகின்றார்.
தொல்காப்பியர் இயைபு இலக்கண வரலாற்றில் மெல்லினம், இடையினம் எழுத்துக்களையும் கூறுமிடத்து ‘ங்’ என்ற மெய்யினைத் தவிர்த்து,
“ஞகார முதலா னகார ஈற்றுப்
புள்ளி யிறுதி இயைபெனப் படுமே” (தொல்.பொருள்.செய்.பேரா.நூ.552)
என்ற நூற்பாவினையும், மொழிக்கு இறுதியாக வரும் எழுத்துக்களைக் கூறும் போது ‘ங்’ என்ற மெய்யொற்றைத் தவிர்த்து,
“ஞணநம னயரல வழள வென்னும்
அப்பதி னொன்றே புள்ளி யிறுதி” (தொல்.எழுத்து.மொழி.நூ.45)
என்ற நூற்பாவினையும் படைத்துள்ளார். ‘ங்’ என்ற மெய்யொற்றை ஏன் தவிர்த்தார் என்று தெரியவில்லை. மேலும் தொல்காப்பியர் மொழி மரபில் மொழிக்கு ஈறாகும் எழுத்துக்களைக் கூறும்போது,
“உயிர்ஔ எஞ்சிய இறுதி யாகும்”
(தொல்.எழுத்து.மொழி.நூ.36) என்றும்,
“கவவோ டியையின் ஒளவு மாகும்” (தொல்.எழுத்து.மொழி.நூ.37)
என்றும் நூற்பாக்களைக் கூறுகின்றார். அதாவது, உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும் மொழிக்கு ஈறாக வரும் என்று கூறுகின்றார்.
‘ங்’என்ற மெய்யொற்றைத் தவிர்த்து மீதமுள்ள பதினொரு மெய்யீறுகள் இலக்கியச் செய்யுளின் இறுதியில் தொடர்நிலைச் செய்யுளாக வந்து, அழகுற அமைவது இயைபுவனப்புச் செய்யுளாகும், இதேபோல் தொடை வகையினைக் கூறும்போது ‘இயைபுத் தொடை’ என்றும், வண்ணம் வகையினைக் கூறும்போது ‘இயைபு வண்ணம்’ என்றும் கூறுகின்றார். இவற்றில், இயைபுத் தொடை என்பது அடிதோறும் இறுதி எழுத்தோ அல்லது இறுதிச் சீரோ ஒன்றி வருவதாகும். இதனைத் தொல்காப்பியர்,
“இறுவாய் ஒப்பின தியைபென மொழிப” (தொல்.பொருள்.செய்.பேரா.நூ.408)
என்று நூற்பா மூலம் விளக்குகிறார். ‘இயைபு வண்ணம்’ என்பது இடையின எழுத்துக்கள் மிகுதியாக வருவதாகும். இதனைத் தொல்காப்பியர்,
“இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே” (தொல்.பொருள்.செய்.தமிழண்ணல் உரை.நூ.1474)
என்ற நூற்பாவின் மூலம் சுட்டுகின்றார். ஆகையால் தொல்காப்பியர் காலத்தில் எண்வகை வனப்புகளில் ஒன்றான இயைபு வனப்பு பிற்காலத்தில் ஒரு தொடை வகையாகக் கருதப்பெற்றது எனலாம்.
தொல்காப்பியர் இயைபு இலக்கண வரலாற்றில் மெல்லினம், இடையினம் எழுத்துக்களையும் கூறுமிடத்து ‘ங்’ என்ற மெய்யினைத் தவிர்த்துள்ளார். மீதமுள்ள பதினொரு மெய்களும் இலக்கியச்செய்யுளில் இறுதியில் வந்து அழகுற அமைவது இயைபுவனப்பு செய்யுளுறுப்பாகும். க.வெள்ளைவாரணார், ”ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு புள்ளியுள் ஒன்றினை இறுதியாகக் கொண்டு முடியும் செய்யுள் இயைபு என்னும் வனப்புடையது என்பார்.”4 ச.பாலசுந்தரம், “விட்டிசையின்றிச் சொற்களைப் புணரியல் விதிப்படி இயைந்து யாப்பது இயைபெனப்படும். ஞகார முதலா னகாரம் ஈறாக மொழியிறுதி நிற்கும் புள்ளி எழுத்துப் பதினொன்றையும் வருமொழியொடு புணர்த்தி யாப்பது இயைபென்னும் உறுப்பாகும். உரையாசிரியர்கள், பதினொரு மெய்யெழுத்துகளும் செய்யுள் ஈறாக நிற்குமாறு அமைதல் இயைபு என்பர். ஆனால் ஞ.ந.வ ஆகிய ஈறுகள் அங்கனம் நிற்றற்குரியன அல்ல, ஆகலின் அவர்கள் கருத்து பொருந்துமாறு இல்லை என்பார்.”5 இவரின் கருத்து தொல்காப்பிய எழுத்ததிகார மொழிமரபு என்ற இயலின்,
“உச்ச காரமோடு நகாரம் சிவணும்” (தொல்.எழுத்து.மொழிமரபு.நூ.46)
என்ற நூற்பாவினையும்,
“உப்ப காரமோடு ஞகாரையும் அற்றே
அப்பொருள் இரட்டாது இவணை யான” (தொல்.எழுத்து.மொழிமரபு.நூ.47)
என்ற நூற்பாவினையும்,
“வகரக் கிளவி நான்மொழி ஈற்றது” (தொல்.எழுத்து.மொழிமரபு.நூ.48)
என்ற நூற்பாவினையும் ஒட்டியே அமைந்துள்ளது. அதாவது நகர மெய் பொருந், வெரிந் என்றும், ஞகர மெய் உரிஞ் என்றும், வகர மெய் அவ், இவ், உவ், தெவ் என்றும் வருகின்ற சொற்களின் மட்டும் இறுதியில் வரும் என்ற கருத்துரை உள்ளதைக் கொண்டு அமைந்துள்ளன. ஆனால் உரையாசிரியர்கள் கருத்தானது,
“ஞணநம னயரல வழள வென்னும்
அப்பதி னொன்றே புள்ளி யிறுதி” (தொல்.எழுத்து.மொழிமரபு.நூ.45)
என்ற நூற்பாவினை ஒட்டியே அமைந்துள்ளது. அடிகளாசிரியர், “இயைபு என்பன மேலே கண்ட பதினொரு புள்ளி ஈறாய் வந்த பாட்டெல்லாம்”6 என்றும், தமிழண்ணல், “ஞகரமெய், னகரமெய் ஆகியன செய்யுள் இறுதியில் வருமாறு இயற்றுதல்”7 என்றும் கூறுகின்றனர். இவ்வாறு இயைபுவனப்பு என்பது செய்யுளின் இறுதியில் வரும் மெல்லினம் (ங் தவிர) இடையினம் ஆகிய மெய்யெழுத்துக்களின் இலக்கணம் கூறும் உறுப்பாக உள்ளது.
தொல்காப்பியர் மெல்லினம், இடையினம் சார்ந்த எழுத்துக்கள் (ஙகரத்தை தவிர) மொழிக்கு இறுதியில் வரும் என்று கூறியவர் வல்லின எழுத்துக்களில் குற்றியலுகரம் மொழிக்கு இறுதியில் வரும் என்பதை புணரியலில்,
“அறுநான்கு ஈற்றொடு நெறிநின்று இயலும்”
(தொல்.எழுத்து.புணரியல்.நூ.1)
என்ற நூற்பாவில் சுட்டிச் செல்கின்றார். இவ்வாறு மொழிக்கு இறுதியில் இருபத்தாறு எழுத்துக்கள் வரும் என்று கூறியவர் அவற்றுள் உயிரீற்றுக் குற்றியலுகர ஈறுகளை ஒழித்து, ஏனைய பதினொரு ஒற்றுகளே இயைபென்னும் இலக்கியத்திற்கு வரும் என்று கூறுகின்றார். எனவே ஒற்றுகள் என்பது இயைபு வனப்பிற்குச் சிறந்த இயல்பாகும் என்பதை உணர முடிகின்றது.
தமிழண்ணல் “ஞ,ண,ந,ம,ன என்ற புள்ளியிறுதியில் முடியும் பாடல்கள் இயைபு வனப்பாகும். இந்நூற்பாவின் பொருள் விளங்கவில்லை. அவ்வாறு முடியும் பாடல்கள் எவையும் இல்லை’’8 என்றும், “இயைபு வனப்பு என்பது ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யும் ஈறாக வரும் செய்யுட்கள். இது காலத்தால் மறக்கப்பட்ட ஒரு வகையாகத் தோன்றுகின்றது. நெடும்பாடல்களின் தொகுப்பு போன்ற பழங்காப்பியங்களில் இவ்வியைபு வனப்பு அமையும்”9 என்றும் எடுத்துரைக்கின்றார்.
சோ.ந.கந்தசாமி, “செய்யுளின் இறுதி எழுத்து கூறப்பட்ட புள்ளி எழுத்துக்களில் ஒன்றாக வருவது இயைபு வனப்பாகும்”10 என்றும், சொ.பரமசிவம் “மெல்லினம் ஆறனுள் ஞ்,ண்,ந்,ம்,ன் என்னும் ஐந்தும், ய்,ர்,ல்,வ்,ழ்,ள் என்ற இடையினம் ஆறும் சேர்ந்த பதினொரு புள்ளி எழுத்துக்கள் ஈறாக வந்த பாட்டுக்கு இயைபுவனப்பு என்று பெயர். இயைபுப் பொருள் தொடராகவும், சொற்றொடராவும் செய்யப்படும் பாட்டு’’11 என்றும், வை.கா.சிவப்பிரகாசம் “ஞகரம் முதலா னகரம் ஈறாகவுள்ள பதினொரு மெய்கள் அமைவது இறுதியில் இயைபு வனப்பின் சிறப்பு’’12 என்றும் கூறுகின்றனர்.
இவ்வாறு இயைபு வனப்பு என்பது செய்யுளின் இறுதியில் வரும் மெல்லினம் (ங் தவிர) இடையினம் ஆகிய மெய்யெழுத்துக்களின் இலக்கணம் கூறும் உறுப்பாக உள்ளது. தொல்காப்பியர் மொழி இறுதியில் வரும் எழுத்துக்களைப் பற்றி மொழி மரபில் நூற்பா 36,37 ஆகியவற்றில் கூறுகின்றார். இவ்வாறு மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்களைப் பற்றி கூறியவர் ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்களே இயைபென்னும் இலக்கியத்திற்கு வரும் என்று கூறுகின்றார். பிற்கால இலக்கண நூலான யாப்பருங்கல விருத்தியுரை, “ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் சொற்றொடராய்ச் செய்யப்படும் பாட்டு இயைபு எனப்படும்”13 என்று கூறுகின்றது. இவ்வாறு பதினொரு மெய்களும் ஈற்றில் அமைவது இயைபுவனப்பு இலக்கியம் என்று இலக்கணம் உள்ளதே தவிர, இவற்றுக்கான இலக்கியம் மறைந்தன போலும் என்பதும் இடைக்கால உரையாசிரியர்களின் கருத்தாக உள்ளது.
எட்டுத்தொகை நூல்களில் இயைபு வனப்பு:
எட்டுத்தொகை நூல்களின் செய்யுட்களில் தொல்காப்பியரின் இயைபு வனப்பில் அமைந்த செய்யுட்களைக் கீழ்க்கண்டவாறு காணலாம்.
ஐங்குறுநூற்றில் பொருளீட்டச் சென்ற தலைவன் தன் மனைக்குக் காலம் தாழ்த்தி வந்தவனைக் கண்ட தலைவி அவன் புறத்தொழுக்கம் (பரத்தமை ஒழுக்கம்) புரிந்துள்ளான் என வருந்துகின்றாள். அவ்விடத்தில் தோழி தலைவனின் நல்லொழுக்கத்தினைக் கூறித் தெளிவுபடுத்துகின்றாள். இதனை ஓரம்போகியார்,
“செந்நெலஞ் செறுவிற் கதிர்கொண்டு கள்வன்
றண்ணக மண்ணளைச் செல்லு மூரற்
கெல்வளை நெகிழச் சாஅ
யல்லல் உழைப்பது எவன் கொல் அன்னாய்” (ஐங்குறுநூறு. பா-27) என்ற பாடல் மூலம் சுட்டுகின்றார். செந்நெற் கதிர்களை நண்டுகள் மண்ணாலான குளிர்ந்த வளையத்திற்குள் (நண்டுபொந்து) கொண்டு சொல்வதைப் போன்று தலைவன் தன் முயற்சியால் பொருளீட்டித் தன் மனைக்கு வருவான் எனத் தலைவனின் கடமையைத் தோழி தலைவனிடம் கூறுகின்றாள். இப்பாடலில் ஈற்றடியின் கடைசிச்சொல் “அன்னாய்” என்று “யகர” மெய்யெழுத்தில் வந்து முடிவதைக் காணமுடிகிறது.தலைவன் மீது காதல்மனம் கொண்ட தலைவி அவன் பிரிவினை நினைத்து உடல் மெலிவுற்றாள். செவிலி உடல் மெலிவிற்குக் காரணம் அணங்கினால் வந்திருக்கும் என எண்ணி வெறியாட்டு நிகழ்த்த முயன்றாள். அதனை அறிந்த தோழி தலைவியின் கற்பினைக் காப்பதற்குச் செவிலியிடம் தலைவியின் உடல் மெலிவுக்கான காரணத்தைத் தோழி அறத்தோடு நின்று கூறுகின்றாள். இதனை ஓரம்போகியார்,
“உண்டுறை யணங்கிவ ளுறைநோ யாயிற்
றண்சேறு கள்வன் வார்க்கு மூரற்
கொண்டொடி நெகிழச் சாஅய்
மென்றோள் பசப்ப தெவன்கொ லன்னாய்” (ஐங்குறுநூறு.பா-28)
என்ற பாடலின் மூலமாகச் சுட்டுகின்றார்.பசலை நோயானது ஊரார் நீர் எடுக்கும் துறையின்கண் உள்ள தெய்வத்தால் உண்டானதல்ல. தலைவியின்மேல் உள்ள இந்நோய் குளிர்ந்த சேற்றில் நண்டுகள் ஊர்ந்து கோலம் போடுவதற்கு ஏற்ற ஊரினையுடைய தலைவனால் வந்த காதலே, தலைவியின் உடல் மெலிந்து ஒளிமிக்க வளையல் நெகிழ்வதற்கு காரணம் எனத் தோழி தன் தாயான செவிலியிடம் கூறுகின்றாள். இப்பாடலில் “உண்துறை அணங்கு” என்ற சொல் ஊரில் குடிநீர் எடுக்கும் இடத்தினையும், அவ்விடத்தில் மனிதர்களைத் தீண்டி வருத்தும் அணங்கு (பேய் அல்லது தெய்வம்) தங்கும் என்ற பண்டைய மக்களின் நம்பிக்கையும் கூறப்பட்டுள்ளன. இப்பாடலில் ஈற்றடியின் இறுதி எழுத்து யகர மெய்யுடன் முடிவதைக் காணமுடிகின்றது.
இவ்வாறு ஐங்குறுநூற்றில் மூன்றாம் பத்தான கள்வன் பத்தில் உள்ள பத்துப்பாடல்களும், யகர மெய்யெழுத்து இறுதியில் வந்து முடிவதாகப் பாடப்பட்டுள்ளன. இப்பாடல்களில் அன்னாய் என்ற சொல் தலைவி, தோழி, செவிலி, ஆகியோரைக் குறித்து வருகின்றது. இப்பாடலில் ஈற்றடியில் முடியும் அன்னாய் என்ற சொல் கூற்றின் பொருளை விளக்க வருமிடத்து முதல் சொல்லாக வந்து நிற்கின்றது. எனவே, உரையாசிரியர்களின் விளக்க உரைகளின்படி யகர மெய்யுடன் அமைந்த இப்பாடல்களை இயைபு வனப்புச் செய்யுளாகக் கொள்ளலாம். மேலும் கபிலரின் குறிஞ்சித் திணையில் ‘அன்னாய்ப் பத்து’ என்னும் பகுதியில் ‘அன்னாய்’என யகரமெய் ஈற்றில் வந்து முடிவதாக பத்துப்பாடல்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ‘அன்னாய்’ என்ற சொல் தலைவியைக் குறிப்பதாக ஆறு பாடல்களிலும், செவிலியைக் குறிப்பதாக இரண்டு பாடல்களிலும், தோழியைக் குறிப்பதாக இரண்டு பாடல்களிலும் இடம்பெற்றுள்ளன.
எனவே ‘அன்னாய்’என்ற சொல் தோழி, செவிலி, தலைவி ஆகியோரைக் குறித்து நிற்கின்றது. தோழி தலைவியை பெருமாட்டி, அன்னை என்று அழைப்பதாகவும், தலைவி தோழியை தோழியே என்று விளித்து அழைப்பதாகவும், தோழி செவிலியை அன்னை, தாய் என அழைப்பதாகவும் ‘அன்னாய்’ என்ற சொல் பொருள்படுவதை உணரமுடிகின்றது.
தோழி தலைவியிடம் கேட்காமலே தலைவனிடம் சென்று இரவுக்குறி நேர்ந்து பின்னர் தலைவியிடம் தலைவன் இரவுக்குறியில் வருவதை உணர்த்தியபொழுது தலைவி நீ நேர்ந்தமை நன்றே எனத் தோழியிடம் தலைவி கூறுகின்றாள். இதனை மாடலூர் கிழார்,
“ சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி
வான மீனின் வயின்வயின் இமைக்கும்
ஓங்குமலை நாடன் சாந்துபுலர் அகலம்
உள்ளின், உள்நோய் மல்கும்:
புல்லின் மாய்வது எவன்கொல்? – அன்னாய்” (குறுந்தொகை.பா.150)
என்ற பாடல் மூலம் சுட்டுகின்றார். ‘அன்னாய்’ என்ற சொல் இறுதியில் வந்து முடிவதால் யகரமெய் ஈற்றில் வருகிறது. இப்பாடலில் அன்னாய் என்பது தோழியைக் குறிக்க வரும் சொல்லாகும். மேலும், சங்க நூலான எட்டுத்தொகை நூல்களில் பல பாடல்கள் பல மெய்யெழுத்துக்களை ஈற்றில் எழுத்துக்களாகக் கொண்டு முடிகின்றது.
இயற்கைப் புணார்ச்சிக்குப் பின்னர் தலைவி மாட்டு நிகழும் செயல் வேறுபாடுகளைத் தலைவியது நாற்றம், தோற்றம் முதலான ஏழன் முதலாகத் தலைவியின் ஒழுக்கத்தை உணர்ந்த தோழி, தலைவி தன்னை மறையாமை காரணமாக மெய்யாகவும், பொய்யாகவும் பிழை நிகழாவண்ணம் கவர் பொருள் நாட்டத்தாள் என்று புனைந்து தலைமகனுக்குக் கூறுகின்றாள். இதனைக் கபிலர்,
“கயமலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன்
ஆங்கண் உடைய அவன்”(கலித்தொகை.பா.37)
என்ற பாடல் மூலம் விளக்குகின்றார். இப்பாடலில் இறுதியடியில் இறுதி எழுத்தானது ‘னகர’ மெய்யான ‘ன்’ என்ற மெய்யெழுத்து ‘அவன்’ என்று பயின்று வந்துள்ளது. இதே போன்று கலி.51(அவன்), கல்-56(உடையான்), கல்-84 (தவறுடையேன்), கலி-86 (மகன்), கலி-11(மன்) போன்ற பாடல்களில் இறுதியடியில் இறுதி எழுத்தாக ‘னகர’ மெய்யான ‘ன்’ என்ற எழுத்தானது பயின்று வந்துள்ளதைக் காணமுடிகின்றது.
தலைமகளது குறிப்பினைக் கண்டு பிரிய இருக்கின்றான் என ஐயம் கொண்ட தலைவி, ஐயுற்றுச் செல்கின்ற அக்காலத்து தலைவன் கனவில் அரற்றினமைக் கேட்ட தலைவி, பொருள் வயிற் பிரிவான் எனத் துணிந்து ஆற்றாதவளாய்த் தோழியிடம் கூறுகின்றாள். இதனைப் பெருங்கடுங்கோ,
“நெஞ்சு நடுக்குறக் கேட்டும் கடுத்தும் தாம்
போயின்று சொல் என் உயிர்” (கலித்தொகை.பா.24)
என்ற பாடல் மூலம் தெளிவுபடுத்துகின்றார். இப்பாடலின் இறுதியடியில் இறுதி எழுத்தானது ‘ரகர’ மெய்யான ‘ர்’ என்ற எழுத்தினைக் கொண்டு ‘உயிர்’ என அமைந்துள்ளது. இதே போன்று கலி-141 (தமர்), கலி-145 (துயர்) போன்ற பாடல்களில் ‘ரகர’ மெய்யான ‘ர்’ என்னும் மெய்யெழுத்து பாடலின் இறுதி எழுத்தாகப் பயின்று வருவதைக் காணலாம்.
தலைவன் பரத்தையர் சேரியிலிருந்து வந்த பொழுது காமக்கிழத்தி தன் அன்பு மிகுதியால் ஊடியதைக் கண்ட தலைவன் அங்கு சென்றான். இதனைக் கண்ட காமக்கிழத்தி ஊடல் தீர்கின்றாளாயாகக் கூறினாள். இதனை மருதனிளநாகனார்,
“பொது அவிழ் பனிப்பொய்கை புதுவது தளைவிட்ட
வீழ்ந்தார் விருப்பு அற்றக்கால்.” (கலித்தொகை.பா.69)
என்ற பாடல் மூலம் விளக்குகின்றார். இப்பாடலின் இறுதியடியில் இறுதி எழுத்தாக ‘லகர’ மெய்யான ‘ல்’ என்னும் மெய்யெழுத்து ‘அற்றக்கால்’ என பயின்று வந்துள்ளது. இதேபோன்று கலி-70 (கால்), கலி-82(தொழில்), கலி-85 (பால்), கலி-91 (செயல்), கலி-96 (செல்) போன்ற பாடல்களின் இறுதியில் ‘லகர’ மெய்யான ‘ல்’ என்னும் எழுத்து பயின்று வந்தமையை உணர முடிகின்றது.
தலைவன் பரத்தையிடமிருந்து வீட்டுக்கு வந்து, இல்லத்துள் நுழையாமல் வேலிக்கு அப்பால் நிற்கின்றானாகத் தலைவி தலைமகனுக்கு உரைக்கின்றாள். இதனை மருதனிளநாகனார்,
“நயம் தலை மாறுவார் மாறாக மாறா
கோதை பார்ப்பு ஆட காண்குவம்.” (கலித்தொகை.பா.80)
என்ற பாடல் மூலம் விளக்குகின்றார். இப்பாடலின் இறுதியடியில் மகர மெய்யான ‘ம்’ என்ற மெய்யெழுத்து இறுதி எழுத்தாக ‘காண்குவம்’ எனப் பயின்று வந்துள்ளது. இதேபோன்று கலி-81(நாம்), கலி-90(உடையேம்), கலி-109(வரும்) போன்ற பாடல்களில் இறுதியடியில் இறுதி எழுத்தாக மகர மெய்யான ம்’ என்ற மெய்யெழுத்து பயின்று வந்துள்ளதைக் காணமுடிகின்றது.
தலைவனது கொடுமை உள்ளத்தைச் சுடுகின்றது என்று கூறிய தலைவியிடம் பாணன் முதலிய வாயிலோர் நயந்து கூறும் வழி, தலைவியானவள் பரத்தையரைக் குறும்பூழ்ப் பறவை என்று கூறுகின்றாள். இதனை மருதநிளநாகனார்,
“நில் ஆங்கு நில் ஆங்கு இவார்தரல் எல்லாநீ
நடலைப்பட்டு எல்லாம் நின் பூழ்.” (கலித்தொகை.பா.95)
என்ற பாடல் மூலம் விளக்குகிறார். இப்பாடலின் இறுதியடியில் ழகர மெய்யான ‘ழ்’ என்னும் மெய்யெழுத்து ‘பூழ்’ என்று இறுதி எழுத்தாகப் பயின்று வந்துள்ளது.
பாண்டியனுடைய தலைநகராகிய மதுரை அறிவானே ஆராய்ந்து நோக்குமிடத்து இவ்வுலகினுள்ள ஏனைய நகரங்கள் அனைத்தினும் சிறந்தது என்பதை,
“உலகம் ஒருநிறையாத் தானோர் நிறையாப்
புலவார் புலக்கோலால் தூக்க-உலகனைத்தும்
தான்வாட வாடத தன்மைத்தே
தென்னவன்
நான்மடக் கூடல் நகர்.” (பரிபாடல்திரட்டு, ஆறாம்பாடல். மதுரை.பக்.475)
என்ற பாடல் மூலம் அறியமுடிகின்றது. இப்பாடலானது பாண்டியனது மதுரை நகர் நல்லிசைப்புலவர்கள் தமது அறிவாகிய துலாக்கோலாலே இவ்வுலகத்தில் உள்ள நகரங்கள் அனைத்தினது பெருமையினையும் ஒரு தட்டிலிடும் நிறையாகவும், தனது பெருமையை ஒரு தட்டிலிடும் நிறையாகவும் கொண்டு சீர்தூக்குமிடத்து உலகத்தில் உள்ள அனைத்து நகரங்களின் பெருமையும் தாழ்ந்து நிற்க, தன்பெருமை அங்கனம் தாழ்ந்து நிற்காமல் சிறப்பினைப் பெறும் தன்மை உடைத்ததாகும் என்று கூறுகின்றது. இப்பாடலின் கடைசி அடியின் இறுதிச் சீரில் இறுதி எழுத்தானது இயைபு வனப்பின் இலக்கணமான ரகர ஒற்று இடம் பெற்றுள்ளதை உணரலாம்.
முடிவுகள்
தொல்காப்பியர் கூறிய இயைபுவனப்பின் பாடுபொருளானது ஞ,ண,ந,ம,ன,ய,ர,ல,வ,ழ,ள என்னும் பதினொரு மெய்யெழுத்துக்கள் பாடலின் இறுதியில் பயின்று வருவன என்பதாகும். எட்டுத்தொகையில் பதினொரு மெய்களில் ன்,ர்,ல்,ம்,ழ்,ய் போன்ற மெய்யெழுத்துகளே பாடலின் இறுதியில் பயின்று வந்துள்ளது. மற்ற ஐந்து மெய்களான ண்,ஞ்,ந்,வ்,ள் போன்றவை பயின்று வரவில்லை. சங்க இலக்கியங்களுக்கு உரித்தான ஏகார ஓசையுடன் எழுத்துக்கள் வராமல் இயைபுவனப்பின் பாடுபொருளான பதினொரு மெய்யெழுத்துக்கள் இறுதியாக வருவதால் இப்பாடல்களின் அடியானது மிகச் சிறப்பினைப் பெறுகிறது. இவை தவிர மற்ற உயிர் மெய் எழுத்துகளும் எட்டுத்தொகையில் பயின்று வருவதைக் காணலாம். சங்க இலக்கியத்திற்கான ஏகார ஓசையில் முடியும் என்ற பாடுபொருள் அமைப்பு, இயைபுவனப்பின் பாடுபொருளான பதினொரு மெய்யெழுத்துக்களின் வழியில் பாடுபொருள் மாற்றி அமைவதால் பாடல்கள் மிகச்சிறப்பினைப் பெற்றுள்ளமையினை உணரலாம்.
***
குறிப்புகள்
- தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை,ப.167
- தொல்காப்பியம், பொருளதிகாரம், பேராசிரியர் உரை,பக்.429-430
- தொல்காப்பியம், பொருளதிகாரம், நச்சர் உரை,ப.240
- வெள்ளைவாரணர்.க, செய்யுளியல் உரைவளம்,ப.1031
- பாலசுந்தரம்.ச, செய்யுள் உறுப்புக்கள்,ப.136.
- அடிகளாசிரியர்(ப), தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணர் உரை,ப.428
- தமிழண்ணல், சங்க மரபு,ப.89
- தமிழண்ணல், தொல்காப்பியரின் இலக்கியக்கொள்கைகள்,பாகம்- 2,ப.97
- தமிழண்ணல், இந்திய இலக்கியச் சிற்பிகள்,தொல்காப்பியர்,ப.108
10.கந்தசாமி. சோ.ந, தமிழ் யப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும், பாகம்-1,ப.282
- பரமசிவம். சொ.ம, நற்றமிழ் இலக்கணம்,ப.645
- சிவப்பிரகாசம். வை.கா, செந்தமிழ்ச் செல்வி, வனப்பிலக்கியமும் இலக்கிய வனப்பும்,ப.425
- யப்பருங்கல விருத்தியுரை.ப.172
***
துணை நின்றவை:
குறுந்தொகை மூலமும் உரையும், (2009), பொ.வே.சோமசுந்தரனார் உரை, கழக வெளியீடு, 522,டி.டி.கே.சாலை, சென்னை-18.
ஐங்குறுநூறு மூலமும் உரையும், (2009), பொ,வே.சோமசுந்தரனார் உரை, கழக வெளியீடு, 522,டி.டி.கே.சாலை, சென்னை-18
கலித்தொகை. மூலமும் உரையும், (2007), நச்சர் உரை, கழக வெளியீடு, 522,டி.டி.கே.சாலை, சென்னை-18
பரிபாடல் மூலமும் உரையும், (2007) பொ,வே.சோமசுந்தரனார் உரை, கழக வெளியீடு, 522,டி.டி.கே.சாலை, சென்னை-18
தொல்காப்பியம்,பொருளதிகாரம், (2001), கழக வெளியீடு,
522,டி.டி.கே.சாலை, சென்னை-18
தமிழண்ணல் – தொல்காப்பியம்,பொருளதிகாரம் மூலமும் கருத்துரையும், (2008), மீனாட்சி புத்தக நிலையம்,
48,தானப்ப முதலி தெரு, மதுரை-1
பாலசுந்தரம்.ச – தொல்காப்பியம்,பொருளதிகாரம்,காண்டிகையுரை (1991), தாமரை வெளியீட்டகம்,367,மேலவீதி, தஞ்சாவூர்-9
வெள்ளைவாரணர்.க – தொல்காப்பியம், செய்யுளியல் உரைவளம் (1989),மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை, மதுரை-21
பரமசிவம்.சொ.ம – நற்றமிழ் இலக்கணம்,(2010), பட்டுப் பதிப்பகம்,
1269,32-ம் தெரு, அண்ணா நகர் மேற்கு, கம்பர் குடியிருப்பு,
சென்னை-40
தமிழண்ணல் – சங்க மரபு, (1991), மீனாட்சி புத்தக நிலையம்,
48, தானப்ப முதலி தெரு, மதுரை-1
தமிழண்ணல் – தொல்காப்பியரின் இலக்கியக்கொள்கைகள்,பாகம்-2,
செல்லப்பா பதிப்பகம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை-1
சிவப்பிரகாசம்.வை,கா – செந்தமிழ்ச் செல்வி, வனப்பிலக்கியமும் இலக்கிய வனப்பும், (1963) தமிழ் பண்பாட்டு மையம்,மதுரை-1
***
-பா.ராஜபாண்டி
முனைவா் பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 46.
Email:rajapandiraja1986@gmail.com