நவராத்திரி நாயகியர் (9)
க. பாலசுப்பிரமணியன்
திருமீயச்சூர் மாதா லலிதாம்பிகை
மலைமகளும் அலைமகளும் கலைமகளும் கைப்பிடித்து
மனமாளும் ஓர்மகளாய் உலகாள வந்தவளே !
மடியாத அறிவுக்கும் முடியாத மூச்சுக்கும்
முதலாகி, இடையாகி முடிவான மூலப்பொருளே ]
விடைமீது அமர்ந்தோன் இடப்பக்கம் அருள்கொண்டு
மடைதிறந்த வெள்ளமென மனமுவந்து தருபவளே !
சடைகொண்ட சங்கரனின் சடவில்லாத் தாண்டவத்தில்
தடையின்றிக் கால்தூக்கி களம்வென்ற கல்யாணியே !
அருணனோடு கருடனுக்கும் அருள்தந்த அம்பிகையே
அரியணை மேலமர்ந்தாலும் அன்பின் வடிவானவளே
அகத்தியன் புகழ்பாட அகமெல்லாம் மகிழ்ந்தவளே
அபயக்கரம் கொண்டு அடியாரைக் காப்பவளே !
களையான கன்னமதைக் காதலுடன் தொட்டுவிட
கலக்கமெல்லாம் நீங்கி காமேஸ்வரி களிப்புற்றாய் !
கண்டத்திலே விடமடக்கி அண்டமிதைக் காத்தவனைக்
கைப்பிடித்த கருணையே ! சங்கரியே ! சாந்தநாயகி!
சக்கரத்தின் மேலமர்ந்து சங்கடங்கள் தீர்ப்பவளே !
வக்கிரங்கள் நீக்கிவிடும் மீயச்சூரின் மெய்ப்பொருளே !
மந்திரங்கள் தந்திரங்கள் மனம்நாடத் தேவையில்லை
வந்திருந்து வணங்கிவிட்டால் வளமெல்லாம் தருபவளே !
பந்தமென்று இவ்வுலகில் உன்னையன்றி யாருண்டு ?
சுந்தரியே ! வந்திடுவாய் ! சோதனைகள் நீக்கிடுவாய்
கொலுசொன்று வைத்திருப்பேன் கோமகளே ஏற்றிடுவாய் !
கொலுவிருக்க அழைக்கின்றேன் குணவதியே வந்தமர்வாய் !