நிர்மலா ராகவன்

உற்று உற்றுப் பார்க்கிறார்களே!

%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d

“ஏன் சில ஆண்கள் எங்களை உற்று உற்றுப் பார்க்கிறார்கள்?” என்று என் மலாய் மாணவி ஒருத்தி என்னிடம் சந்தேகம் கேட்டாள். “ஆனால் சீனர்கள் அப்படிப் பார்ப்பதில்லை,” என்றபோது, சிறிது மகிழ்ச்சி அந்த பதின்ம வயதுப் பெண்ணின் முகத்தில்.

பதிலளிக்க ஒரு சீன மாணவியை அழைத்தேன். “It is silly!” என்று முகத்தைச் சுளித்தாள்.
இன்னொரு பெண் சேர்ந்துகொண்டாள்: “இவர்களுக்குப் பயந்து உடலைக் குறுக்கிக்கொண்டு நடப்பதில், இடுப்பு வலிக்கிறது, டீச்சர்!”

மலேசியாவில் குட்டையான ஜட்டி போன்ற ஆடையை அணியும் சீனப்பெண்களை எங்கும் சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். குளிர் நாட்டிலிருந்து வந்ததால் அவர்களுக்கு பூமத்திய ரேகை அருகிலிருக்கும் இந்நாட்டின் வெப்பத்தைத் தாங்கமுடியாது. `வீட்டுக்குள் நுழைந்ததும், முதல் வேலையாக நான் செய்வது ஷார்ட்ஸ் அணவதுதான்!’ என்று என் சக ஆசிரியைகள் பேசிக்கொள்வார்கள். வேலைக்கு கவுன், குட்டைப் பாவாடை என்று அணிவார்கள்.

மலாய்க்காரப் பெண்களோ குதிகால்வரை தொங்கும் ஆடை, தலைமுடியை மறைக்க ஒன்று என்று அணிவார்கள். என்கூட வேலை பார்த்த ஒரு பெண்மணி மதத்தைப் போதித்தவள். “உன்னிடம் ஒரு விஷயம் கூறுகிறேன், நிர்மலா,” என்று ஆரம்பித்தாள். “ஒரு பெண்ணின் மணிக்கட்டையும், குதிகாலையும் ஆண்கள் பார்த்துவிட்டால், அவளுடைய உடலிச்சையை அவர்களால் உணர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றாள். அவள் எப்போதும் காலுறை, கையுறை அணிந்திருப்பாள்.

எனது புடவை பிளவுஸின்கீழ் வெளிப்பட்டுக் கொண்டிருந்த இரண்டு, மூன்று அங்குல முதுகுப் பகுதியைப் பார்த்துவிட்டு, “அது எப்படி நீங்கள் உடலின் நடுப்பாகத்தைக் காட்டுகிறீர்கள்?” என்று அதிசயப்பட்டுக் கேட்டாள் இன்னொருத்தி.

“அது அப்படித்தான்!” என்றேன் அலட்சியமாக.

ஒரு சீனத்தோழி என் முதுகில் கிள்ளிப்பார்த்தாள். எனக்கு உறைக்கவில்லை என்பதில் அவளுக்கு ஆச்சரியம்.

ஐரோப்பாவில் சில நாடுகளில் குறிப்பிட்ட பகுதிகளில் நிர்வாணமாக இருக்க அனுமதி உண்டு. ஸ்வீடனில் NUDIST CAMP என்ற பகுதியைப்பற்றி IRVING WALLACE என்ற ஆசிரியர் எழுதியிருந்த ஒரு ஆங்கில நாவல் படித்திருந்தேன். அதில், கதாநாயகனின் குறிப்புப்படி, எந்தவித காம இச்சையும் தோன்றவில்லையாம். ஆனால், குறிப்பிட்ட நேரம் முடிந்து, அவர்கள் ஒவ்வோர் ஆடையாக அணியும்போதுதான் மனதில் கிளர்ச்சி ஏற்பட்டதாம்.

பெண்கள் தம் உடலை மூடி மறைக்க வேண்டும் என்று விதித்தவர்கள் ஆண்களாகத்தான் இருக்க வேண்டும். `இதெல்லாம் இயற்கைதான்!’ என்று சாதாரணமாக எடுத்துக்கொள்ளாததால், ‘நம் மனம் இப்படி அலைபாய்கிறதே!’ என்ற குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி, அந்தக் `கேவலமான’ இச்சையைத் தோற்றுவித்த பெண்களின்மேல் ஆத்திரம் கொண்டு, அவர்களைக் கட்டுப்படுத்தக் கையாளும் உபாயம் என்றே தோன்றுகிறது.

கதை: ஒருவர் தாம் பெற்ற மகள்களின் உடை விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். சற்று மெல்லிய துணியை பதினெட்டு வயதான அவர்கள் வாங்கி வந்தபோது, `இதுவா!’ என்று அவர் முகத்தைச் சுளித்தாராம். உடனே அவர்கள் கடைக்குத் திரும்பப் போய், மிகக் கனமான துணியை வாங்கினர், புடவைக்கு ஏற்ற பிளவுஸ் தைக்க. அந்தப் பெண்கள் மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்த செய்தி இது. தந்தை நம் பாதுகாப்பில் இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறாரே என்ற பெருமையில் விளைந்த மகிழ்ச்சி அது. இந்த மனிதர் மகள் வயதை ஒத்த பெண்களுடன் தகாத முறையில் பழகுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

வட, தென்னிந்தியக் கோயில்களில் பெண்களின் மார்புச்சேலை சற்று முன்னேபின்னே இருந்தாலும், முதுகில் (MIDRIFF) ஓரடி தெரிந்தாலும், எந்த ஆணும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை என்பதை மகிழ்ச்சியுடன் கவனித்திருக்கிறேன். கோயிலுக்கு வருவது கடவுளைக் கும்பிட்டுச் செல்ல; பிறரைக் கவனித்து, வம்பு பேச அல்ல என்று புரிந்திருப்பார்கள்.

இப்போதெல்லாம் மலேசிய நகர்ப்புறங்களில், ஹிந்தி திரைப்படங்களில் கதாநாயகி அணிவதுபோல் பாதி அல்லது முழுமையான முதுகை வெளிக்காட்டும் பிளவுஸ் அணிவது இளம்பெண்களிடம் நாகரிகமாக ஆகிவருகிறது.

`இது அசிங்கம்!’ என்று ஆர்ப்பரிப்பவர்கள் அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தத் தெரியாதவர்களா, அல்லது `அவரவர் செய்வது அவரவருக்குச் சரி’ என்ற பெருந்தன்மை இல்லாதவர்களா?

ஒருவேளை, எப்போதும், எதற்கும் பிறரைப்பற்றி எதிர்மறையாகவே பேசி, தம் உயர்வையும் அதிகாரத்தையும் நிலைநாட்டிக்கொள்ள நினைப்பவர்களோ?

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *