சூரியகாந்தனின் ‘எதிரெதிர் கோணங்கள்’ நாவலில் பெண்ணியம்          

0

ச.சங்கர்

முன்னுரை

படைப்பிலக்கியத்தின் பொதுத்தன்மைகளைக் கொண்டு பல கோட்பாடுகள் உருவாகின. அவ்வாறு உருவான கோட்பாடுகளில் ஒன்று பெண்ணியம். பெண் படும்பாடுதான் பெண்ணியப் படைப்புகளின் அடிப்படைத்தளமாக அமைந்துள்ளது. இதற்கு ஆண்படுத்தும் பாடுகள் மட்டுமின்றிச் சமூகச்சூழல்களும் கலாசாரமும் மதமும் அடிப்படைக்காரணமாக அமைகின்றன. சூரியகாந்தனால் எழுதப்பட்ட நாவல்கள் பெண்களின் வாழ்வைச் சீரழிக்கும் சிக்கல்களைத் தமது அனுபவங்களாக முன் வைத்துள்ளன. இவருடைய எதிரெதிர் கோணங்கள் நாவலின்வழி பெண்களுக்கு ஏற்படக்கூடிய கொடுமைகளையும், பெண்ணியச் சிந்தனைகளையும் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெண்ணியம்விளக்கம்

பெண்ணியம் என்பது உலகளாவியது; இஃது உலகில்உள்ள அனைத்து மனித குலத்துள்ளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் முன்னேற்றத்தை விமர்சிக்க ஏற்பட்டது எனலாம். இது பெண்களின் சமத்துவத்தையும் முன்னேற்றத்தையும் வலியுறுத்துவதாகும்.

`Feminism` என்ற ஆங்கிலச்சொல் Femina என்ற இலத்தீன் சொல்லிலிருந்து `மருவி` வந்ததாகும். Femina என்றால் பெண்ணின் குணாதிசயங்களைக் கொண்டுள்ளன என்பது பொருளாகும். இச்சொல் முதலில் பெண்களின் பாலியல் குணாதிசயங்களைக் குறிப்பிடவே வழங்கப்பட்டது. பின்பே பெண்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதற்காக எடுத்தாளப்பட்டது.1

1889இல் Womanism என்ற சொல் பெண்களின் உரிமைப் பிரச்சினையையும் அதனடிப்படையிலான போராட்டத்தையும் உணர்த்தப் பயன்படுத்தப்பட்டது. 1890ஆம் ஆண்டு Womanism என்ற சொல்லினிடத்தை Feminism  என்ற சொல் பெற்றது. 1894ஆம் ஆண்டு வெளிவந்த ஆக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் முதன்முதலில் இச்சொல் எடுத்தாளப்பட்டது. Feminism என்ற சொல்லுக்குத் தன்வாழ்வின் மூலம் அர்த்தம் ஏற்படுத்திக் கொடுத்தவர் ரேஸ்ரேசே என்ற பெண்மணி ஆவார்.2 பெண்ணியம் என்ற சொல்லாடல் பெண்விடுதலைக்கான கோட்பாட்டுப்பதிவாக அமைந்துள்ளது.

இலக்கியங்களில் பெண்ணியம்

மனித வாழ்வின் பிரதிபலிப்பே இலக்கியம். இலக்கியங்கள் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகத் திகழ்கின்றன. இலக்கியங்கள் பெண்ணிய உணர்வின் அடிப்படையில் எழுந்தவையாக இருந்தாலும் வாசகர்களின் மனநிலைக்கு ஏற்ப இன்பமாகவோ, துன்பமாகவோதான் அதன் முடிவு அமைந்திருக்கும். பெண்ணிய உணர்வுடன் எழுதப்படும் இலக்கியங்கள் பெண்களின் மனஉணர்வுகள் பண்புகள் பிரச்சனைகள் போன்றவற்றைக் கூறுகின்றன.

சூரியகாந்தனும் பெண்ணியமும்

     பெண்ணியத்தை மையப்படுத்தி பல படைப்பாளிகள் பல படைப்புகளை படைத்து வருவதை காண்கிறோம். ஒவ்வொரு படைப்பாளியும் இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைப்பெறக்கூடிய நிகழ்வுகளை அவர்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்பத் தம்முடைய படைப்புகளில் படைக்கின்றனர். அந்த வகையில் சூரியகாந்தனும் தம்முடைய படைப்புகளின் வாயிலாகப் பெண்களுக்கு ஏற்படக்கூடிய கொடுமைகளையும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களையும் பெண்ணியம் குறித்த செய்திகளாகச் சுட்டிக்காட்டுகிறார்.

எதிரெதிர் கோணங்கள் நாவலில் சமூகக் கொடுமைகள்

     இன்றைய சமூகத்தில் பெண்களுக்குப் பல்வேறு கோணங்களில் இருந்து ஏதாவது ஒரு வகையில் துன்பங்கள் வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் சூரியகாந்தனின் எதிரெதிர் கோணங்கள் நாவலில் சீனிவாசனின் மூத்தமகள் பாக்யரதி கஸ்தூரிராஜ் அண்ட் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பெர்சனல் ஸ்டெனோவாகப் பணிபுரிந்து வருகிறாள். அதே நிறுவனத்தில் வேலை செய்யும் அஸிஸ்டெண்ட் மேனேஜர் ராபர்ட்டைக் காதலித்து வந்தாள். தன் காதல் வீட்டுக்குத் தெரியும்முன்பே தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி ராபர்ட்டைக் கேட்க, குடும்பச் சூழ்நிலையையும் மதத்தையும் காரணம்காட்டித் தன் தாய் சம்மதத்தோடுதான் திருமணம் இல்லையேல் உன்வீட்டில் பார்க்கும் ஒருவரைத் திருமணம் செய்துகொள் என்று கூறித் தப்பித்துக்கொள்ளும் ஆண்களின் மனநிலையைப் படம்பிடித்துக்காட்டுகிறார்.

சமூகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏராளம் நிகழ்கின்றன. குறிப்பாக, திருமணம் செய்யப்பட்ட பெண்களின் கொடுமைகள் குடும்பம் சார்ந்தும், உறவுகள் சார்ந்தும் நிகழ்வதைக் காணமுடிகிறது. திருமணம் நிகழ்ந்து கணவன் தனது தவறான நடவடிக்கை அல்லது தற்செயலாக அவன் இறத்தலுக்கு மனைவியே காரணம் என்ற தவறான எண்ணம் மக்கள் மனத்தில் இருப்பதைக் காணமுடிகிறது. இதனைச் சூரியகாந்தனும் தனது எதிரெதிர் கோணங்கள் நாவலில் “துக்கம் விசாரிக்க வந்தவர்களில் பெரும்பாலோர் பாக்யரதியை கபோதித்தனத்தோடும், கழிசடைத்தனத்தோடும் ஒரு மாதிரியாக வெறித்துப் பார்த்தனர். கால் முதல் தலை வரையிலும் கண்களால் அளந்தனர். தாலி கழுத்தில் ஏறின பதினஞ்சாம் நாளே உனக்கு இந்தக்கதி வந்துடுத்தே… எம் மகளே” (ப-129). என அலமேலு தலையில் அடித்துக்கொண்டு அழுததையும் தாலிச்சரடு கழுத்தை விட்டு நீங்கின மறுநாளே கங்காதரன் வீட்டார் தாங்கள் போட்டிருந்த நகைகளையும் இவளிடமிருந்து கழட்டிக்கொண்டு வீட்டைவிட்டு விரட்டும் அவலங்களைக் குறிப்பிட்டும் தாலி ஏறுவதற்கும், தாலி அறுபடுவதற்கும் பெண்ணே காரணம் என்ற சமூக அவலத்தைப் புலப்படுத்துகின்றார்.

கணவனால் ஏற்படும் கொடுமைகள்

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பர். பாக்யரதி வாழ்க்கையில் அது நரகமாகிப் போனது. காதலனால் கைவிடப்பட்டவள் பெற்றோர் சம்மதத்துடன் பார்சல் சர்வீஸ் ஒன்றில் வேலைசெய்த கங்காதரனைத் திருமணம் செய்து கொள்கிறாள். இவளின் காதல் வாழ்க்கையைத் தெரிந்துகொண்ட கங்காதரன் ஒவ்வொரு நாளும் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாக்குகின்றான். “உன்னைத் தாண்டி உத்தமி…… நாங் கேட்டது கூட காதில் விழலையா? உன்னோட மாஜி காதலனோட நெனப்பு இப்ப வந்துடுச்சோ…. சொல்லேண்டி உங்களோட காதல் லீலைகளை… சிதம்பரம் பூங்காவிலேயும், ரேஸ்கோர்ஸ் ரோட்டிலேயும் பார்த்தவனாச்சே”3 என்னோட பணத்துக்கு ஆசைப்பட்டு உன்னைக்கட்டி வெச்சிட்டானா உங்கப்பங்காரன்.” என்று ஒவ்வொரு நாளும் தன் மனைவியை அடித்தும், உதைத்தும், சிகரெட்டால் சுட்டும் துன்புறுத்துகின்றான். போதை தலைக்கு ஏறிய உடன் வண்ண, வண்ண நீலப்படங்களை வைத்துக்கொண்டு அதில் உள்ளது போல் தன்னுடன் இருக்க வேண்டும் என வற்புறுத்தி தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் மிருகங்களுக்கு மத்தியில் தன் குடும்ப கௌரவத்திற்காகவே போராடும் பெண்களின் உளக்குமுறலைக் குறிப்பிடுகிறார்.

பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள்

ஆண்களையும் பெண்களையும் சமமாகக் கருதும் இக்காலகட்டத்தில் ஒரு சிலர் பெண்களைப் போகப்பொருளாகவே கருதுவதையும், பணிபுரியும் இடத்தில் பெண்கள் அனுபவிக்கின்ற துன்பங்களையும் சூரியகாந்தனின் எதிரெதிர் கோணங்கள் நாவலில் காணலாம். கல்பனா பிரியா அட்வடைஸிங் ஏஜென்ஸியில் பணிபுரிந்து வருகிறார் அதே கம்பெனியில் வேலை செய்யும் அசோக் ஓனர் இல்லாத சமயங்களில் அவளிடம் சம்பந்தம் இல்லாமல் பேசுவது, ஆசை வார்த்தைகளைக் கூறுவது, தொட்டுப் பேசுவது, அவள் அழகை வர்ணிப்பது என சக இடத்தில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் காணமுடிகின்றது.

      கல்பனாவின் குடும்ப சூழ்நிலையையும் அவளுடைய குடும்ப வறுமை நிலையையும் நன்கு புரிந்துகொண்ட முதலாளி கணேசமூர்த்தி அவளைத் தன்னுடைய இச்சைக்கு இணங்குமாறு வற்புறுத்துவதையும் யாருமில்லா சமயத்தில் அவளை அடைய நினைப்பதையும், அதற்காக ஆசைவார்த்தைகளைக் கூறுவதையும் காணமுடிகிறது. “நெக்ஸ்ட் மன்த்லேர்ந்து உனக்கு இருநூறு இல்லெ ஐந்நூறு ரூபாய் அதிகப் படுத்தலாம்னு ஃபீல் பன்றேன்”4 என்று சொல்லிக்கொண்டே தோளில் படர்ந்த கைகள் மெல்ல மெல்ல இறுகிக் கீழ்நோக்கி இறங்குவதை உணர்ந்து கொண்ட இவள் `அய்யோ……இந்த அநியாயத்தை என்னால் அனுமதிக்க முடியாது என்று ஒரே தள்ளாக அந்த ஆளைத் தள்ளிவிட்டாள்”5 இவ்வாறு பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகும் கல்பனா அதை வெளியில் சொல்லமுடியாமல் மனதளவில் புழுங்குவதையும் வேலைக்கு செல்லும் பெண்கள் தன் குடும்ப கௌரவத்தைக் காக்கத் தன் பிரச்சனையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் உணர்ச்சிகளை மனதில் அடக்கிக் கொண்டு வாழ்ந்து வருவதையும் காண முடிகின்றது. 

முடிவுரை

சமுதாயத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய அவலங்களையும் அவர்களுக்கு எதிராக ஏற்படக்கூடிய கொடுமைகளையும் ஆசிரியர் தம்முடைய எதிரெதிர் கோணங்கள் நாவலின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். எதிரெதிர் திசைகள் ஒரு மையத்தில் சந்தித்தால் புதிய பாதைகள் உருவாகும். எதிரெதிர் கோணங்கள் ஒரு நோக்கில் சிந்தித்தால் புறப்பாடுகள் சமமாகும். உணர்ச்சிபூர்வமாகச் சிந்தித்தவள் அறிவுப்பூர்வமாக சிந்திக்கத்தொடங்குகிறாள். பெற்றோர்களை, சகோதரிகளை, சிநேகிதிகளைத் தனக்குத் துரோகம் செய்தவர்களை நினைத்துப் பார்க்கும் பண்புடையவளாக சூரியகாந்தன் தன் நாவலில் பெண்ணியச் சிந்தனைகளை சுட்டுகிறார்.

அடிக்குறிப்பு

[1].  பெண்ணியம் – முனைவர் இரா.பிரேமா – ப.11
2. பெண்ணியம் – முனைவர் இரா.பிரேமா – ப.12
3. சூர்யகாந்தனின் எதிரெதிர் கோணங்கள்- ப.139.
4. சூர்யகாந்தனின் எதிரெதிர் கோணங்கள்- ப.62.
5. சூர்யகாந்தனின் எதிரெதிர் கோணங்கள்- ப.63

*****

ச.சங்கர்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
எஸ்.கே.எஸ்.எஸ்.கலைக்கல்லூரி
திருப்பனந்தாள்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.