( எம் .ஜெயராமசர்மா…. மெல்பேண் … அவுஸ்திரேலியா )
காசநோய் ஒருகாலாம் காலனாய் நின்றது
கணக்கின்றிப் பலபேர்கள் காலனிடம் போனார்கள்
மருந்துபல வந்ததனை மாற்றிவிட்ட காரணத்தால்
காசநோய் கதையிப்போ காணாமல் நிற்கிறது !
அப்போது தொடக்கமே ஆருக்கு வந்தாலும்
அவராடி அடங்கிவிடும் அவலத்தை தருகின்ற
முற்றிநிற்கும் நோயாக முழுவுலகும் பரந்துநிற்கும்
புற்றுநோயை தடுப்பதற்கு புறப்படுங்கள் மருத்துவமே !
குழந்தைமுதல் பெரியவரை புற்றுநோய் வதைக்கிறது
குணமடைய பலமருந்தும் கொடுத்துமே வருகின்றார்
என்றாலும் இந்தநோய் எதைப்பார்த்தும் அசையாமல்
எமனாக வந்துநின்று இம்சையே கொடுக்கிறது !
புற்றுநோய் வந்துவிட்டால் புறவுலகே இருண்டுவிடும்
வெற்றிடமாய் எல்லாமே விரக்தியாய் ஆகிவிடும்
சுற்றமெலாம் சூழ்ந்திருந்து துக்கத்தில் ஆழ்ந்திடுவார்
வற்றிவிடும் வாழ்வுநோக்கி மனமழுது நின்றுவிடும் !
எப்படி வருமென்று எவர்க்குமே தெரியாது
அப்படி வந்துவிட்டால் அதுஅவர்க்கு பெருந்துன்பம்
தப்பிவிட மாட்டோமா எனவெண்ணும் ஏக்கத்தால்
தவியாய்த் தவிப்பதுவே பெருந்தவிப்பாய் ஆகிவிடும் !
பலவிதப் புற்றுநோய்கள் பலருக்கும் வருகிறது
சிலருக்கு சுகம்வந்து சிறிதுகாலம் வாழ்ந்திடுவர்
புற்றுநோய் பற்றிக்கொண்டோர் புலம்பிநின்று அழுதிடுவர்
அழுதிடுவார் கவலைபற்றி அதுவலட்டிக் கொள்வதில்லை !
புகைபிடித்தால் புற்றுநோய் வருமென்று சொன்னாலும்
புகைத்தபடி புற்றுநோய் விளம்பரத்தில் புகைவிடுவார்
அவர்க்குப்பகை புகையென்று அறிந்து அவரிருந்தாலும்
அவர்புகையை ரசித்தபடி ஆனந்தம் கொண்டிடுவார் !
விழுப்புணர்ச்சிக் கூட்டங்கள் பலசென்று வந்தாலும்
விழுப்புணர்ச்சி அவரிடத்தில் விழித்தபடி தானிருக்கும்
விழுந்தெழும்பி விவரீதம் அவருக்கு வந்தபின்னர்
விழிபிதுங்கி வேதனையில் வெந்துஅவர் துடித்துநிற்பார் !
புற்றுநோய் கோரமதை புரிந்துணர்ந்து கொள்ளவேண்டும்
புற்றுநோய் விழிப்புணர்வை பூரணமாய் பெறவேண்டும்
அற்பமெனப் புற்றுநோயை அலட்சியமாய் பார்க்காது
ஆரோக்கியம் நல்வாழ்வு அமைந்துவிட வேண்டிநிற்போம் !

Leave a Reply