க. பாலசுப்பிரமணியன் 

 

திருவெக்கா  – அருள்மிகு சொன்னவண்ணம் வந்த பெருமாள்

aso

இறைபாடும் கவிதன்னை இழிவாக மதிப்பிட்டு

இசைபாட அழைத்திட்ட புவியாளும் மன்னவனை

இரவோடு இரவாக அரவோடு விட்டொழித்து

இடம்மாறி படுத்துறங்கி மனமாண்ட மாதவனே !

 

சொன்னவண்ணம் வந்த பெருமாளே சுதர்சனா

சொல்லமால் வருவாயோ சுமைகள் இறக்கிடவே ?

சொந்தமென்று உனையன்றி அழைத்திடவே யாருண்டு

சொர்கமன்றோ உன்பாதம் நினைத்தாலே பலனுண்டு !

 

காலங்கள் அனைத்திற்கும் கதிகாட்டப் பிறந்தாயே

கோளங்கள் அனைத்திலுமே குடியிருக்க வந்தாயே

கோலங்கள் ஆயிரமே கோபாலா கொண்டாயே

கோமளத்தை  நெஞ்சில்   கோவிந்தா ஏற்றாயே  !

 

எட்டாத பாற்கடலில் இமைமூடிக் கிடந்தாலும்

ஏடுடைய நான்முகனை ஏதுவாய் காத்திடவே

எட்டுகைகள் ஏந்தி வந்தாய் எம்பெருமானே

ஏங்குகிறேன் வருவாயோ ஏற்றங்கள் தந்திடவே !

 

போகமதில் புலன்முழுக தாகத்தில் தவித்திரிந்து

வேகமுடை வாழ்வினிலே வேடங்கள் போட்டிருந்தேன்

வேகவதி தடுத்தவனே! வேதங்கள் காத்தவனே !

வேண்டுகிறேன் வந்திடுவாய் வேதனைகள் விலகிடவே !

 

இலைமறைவுக்  காயாக தலைமறைத்து நின்றாலும்

இணையில்லாக் கருணை இதயத்தில் கொண்டாயே

இசையில்லா ஓசையென அசைவின்றி நிற்கின்றேன்

திசைமாறிப் படுத்தாலும் இசைவாகக் கைகொடுப்பாய் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *