மார்கழி மணாளன் (3)
க. பாலசுப்பிரமணியன்
திருவெக்கா – அருள்மிகு சொன்னவண்ணம் வந்த பெருமாள்
இறைபாடும் கவிதன்னை இழிவாக மதிப்பிட்டு
இசைபாட அழைத்திட்ட புவியாளும் மன்னவனை
இரவோடு இரவாக அரவோடு விட்டொழித்து
இடம்மாறி படுத்துறங்கி மனமாண்ட மாதவனே !
சொன்னவண்ணம் வந்த பெருமாளே சுதர்சனா
சொல்லமால் வருவாயோ சுமைகள் இறக்கிடவே ?
சொந்தமென்று உனையன்றி அழைத்திடவே யாருண்டு
சொர்கமன்றோ உன்பாதம் நினைத்தாலே பலனுண்டு !
காலங்கள் அனைத்திற்கும் கதிகாட்டப் பிறந்தாயே
கோளங்கள் அனைத்திலுமே குடியிருக்க வந்தாயே
கோலங்கள் ஆயிரமே கோபாலா கொண்டாயே
கோமளத்தை நெஞ்சில் கோவிந்தா ஏற்றாயே !
எட்டாத பாற்கடலில் இமைமூடிக் கிடந்தாலும்
ஏடுடைய நான்முகனை ஏதுவாய் காத்திடவே
எட்டுகைகள் ஏந்தி வந்தாய் எம்பெருமானே
ஏங்குகிறேன் வருவாயோ ஏற்றங்கள் தந்திடவே !
போகமதில் புலன்முழுக தாகத்தில் தவித்திரிந்து
வேகமுடை வாழ்வினிலே வேடங்கள் போட்டிருந்தேன்
வேகவதி தடுத்தவனே! வேதங்கள் காத்தவனே !
வேண்டுகிறேன் வந்திடுவாய் வேதனைகள் விலகிடவே !
இலைமறைவுக் காயாக தலைமறைத்து நின்றாலும்
இணையில்லாக் கருணை இதயத்தில் கொண்டாயே
இசையில்லா ஓசையென அசைவின்றி நிற்கின்றேன்
திசைமாறிப் படுத்தாலும் இசைவாகக் கைகொடுப்பாய் !