அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள்.  கிறீஸ்துமஸ் பண்டிகை jesusவாரத்தில் இம்மடலூடாக உங்களோடு உரையாட விழைகிறேன். வருடம் முழுவதும் ஓயாமல் வாழ்க்கை கொடுக்கும் உளைச்சல்களுக்கு ஒரு நிவாரணம் போல மார்கழி மாதம் வரும் இந்தக் கிறீஸ்துமஸ் பண்டிகை இந்நாட்டு மக்களுக்கு ஒரு உற்சாகத்தையளிக்கிறது. இல்லங்கள் தோறும் கிறீஸ்துமஸ் பண்டிக்கையை முன்னிலைப்படுத்தும் வகையில் சிறிய கிறீஸ்துமஸ் மரங்களை வைத்து அவற்றை மிகவும் சிறப்பான முறையில் வண்ண விளக்குகளாலும், பல வண்ணக் காகித மாலைகளாலும் அலங்கரித்து மகிழ்கிறார்கள்.

இயேசு கிறீஸ்து அவர்களின் பிறந்தநாள் டிசம்பர் 25 என்பதைக் குறிப்பாகக் கொண்டு இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. வியாபார ஸ்தலங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வழமைக்கு மாறாக இரவு 9 மணி வரை திறந்திருக்கக் காண்கிறோம். இன்றைய காலகட்டங்களிலே இப்பண்டிகைத் தினம் விற்பனைக் களமாக மாறிவிட்டதோர் நிலையைக் காண்கிறோம். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒருவருக்கொருவர் பரிசளிப்பது வழமை. ஆனால் இந்தச் சம்பிரதாயம் இப்போது மாறி இப்பரிசளிப்பே இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாக மாறிவிட்டது. அதுவும் இப்பரிசுகள் சாதாரணமாக இல்லாமல் மிகவும் விலையுயர்ந்த பரிசுகளை எதிர்ப்பார்க்கும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.

இப்பண்டிகையின் அடிப்படை நிலைப்பாடு என்ன ?  “அன்பு” ஒன்றே உலகில் பிரதானம் என்பதையே தனது குறிக்கோளாகக் கொண்ட இயேசுநாதர் அவர்களின் பிறந்தாளின் அடிப்படை ஆதாரம் அன்பு என்பதை அடியோடு மறந்து விட்டோமோ? என்று எண்ணத் தோன்றுகிறது. கிறீஸ்துமஸ் மரங்களை அலங்கரித்துக் கொண்டாடும் வழமையின் பின்னணி என்ன? என்று சிறிது அலசினேன். மிக வியத்தகு விடயங்கள் வெளிப்பட்டன. பழங்குடி மக்கள் எப்போதும் வாடாது இருக்கும் பச்சை மரங்களைப் போற்றினார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக வட துருவத்தில் , டிசம்பர் 21ஆம் திகதியே மிகவும் குறைந்த நீளமுள்ள நாள் என்று கணிக்கப்படுகிறது, அன்றைய விஞ்ஞான அறிவு குறைந்த காலத்தில் இத்தினமே சூரியன் தனது அதிக சக்தியை இழந்த நாளாகக் கருதினார்களாம். இதன் பின்பு நாளின் நீளம் அதிகரிப்பதால் சூரியன் மெதுவாக நலம் பெறத் தொடங்குவதாகக் கருதினார்களாம். அத்தினத்தை ஒட்டிய தினங்களில் எப்போதும் தனது பசுமையை இழந்து விடாமல் இருக்கும் செடிகளையும், மரங்களையும் கெளரவித்தார்களாம்.

இன்றைய கிறீஸ்துமஸ் மர அலங்காரங்கள் 16ஆம்
நூற்றாண்டில் அன்றைய ஜெர்மனியில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள். tree1அலங்கரிக்கப்பட்ட பச்சை மரங்களை இல்லங்களுக்குள் வைக்கும் பழக்கம் இவர்களால் ஏற்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்பழக்கம் அதன் பின்னாலேயே ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.  அன்றைய இராணுவத் தளபதிகளான வில்லியம் ப்ராட்போர்டு, ஒலிவர் குரோம்வெல் என்பவர்கள் இத்தகைய பண்டிகைகளை எதிர்த்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1659ஆம் ஆண்டு “மசேசுட்ஸ்” (Massachusetts ) எனும் நகரில் டிசம்பர் 25ஆம் திகதி தேவாலயத்தில் நடத்தப்படும் பிரார்த்தனைகளைத் தவிர வெளியே நடைபெறும் எத்தகைய பண்டிகைகளும்,விழாக்களும் குற்றமாக அறிவிக்கப்பட்டது.

1846ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அன்றைய மகாராணியான விக்டோரியா மகாரணியும் அவரது கணவரும் பிள்ளைகளும் அலங்கரிக்கப்பட்ட கிறீஸ்துமஸ் மரத்தினருகே நிற்கும் படம் பத்திரிகைகளில் வெளியானது. மக்களிடையே மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த மகாராணியாரால் கொண்டாடப்பட்ட இப்பழக்கம் ஏனைய சமுதாயத்தினிடையே வேகமாகப் பரவியது. அதன் பின்னரே இக்கிறீஸ்துமஸ் மர அலங்கரிப்புகள் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் பெருமளவில் கலாசாரமாக்கப்பட்டது.

இன்று இக்கிறீஸ்துமஸ் பண்டிகையானது புலம்பெயர் மக்கள் மத்தியில் அதுவும் குறிப்பாகத் தமிழ்பேசும் மக்களிடையே மிகவும் பிரபலமாகக் கொண்டாடப்படுகிறது. இது ஒரு வேற்று மதக் கலாசாரமாக இருந்தாலும், ஊரோடு ஒத்து வாழ் எனும் பழமொழிக்கேற்ப இந்து மதத்தைச் சார்ந்தவர்களும் இவ்விழாக்களில் பங்கேற்கிறார்கள். இதுகூட ஒருவகையில் கலாச்சாரப் புரிந்துணர்வுக்கு வழிவகுக்கிறது என்று சொல்லலாம்.

எந்த விழாவை எந்தக் காரணத்திற்காகக் கொண்டாடினாலும் அன்பு, சமாதானம், அமைதி என்பவற்றை முதன்மைப்படுத்தி மனிதாபிமானம் ஒன்றே மனிதர்களுக்குத் தேவையான முக்கியப் பண்பு என்பதை ஏற்றுக் கொண்டால் அதுவே சிறந்ததோர் ஒற்றுமையான வாழ்வுக்கு அத்திவாரம் அமைக்கும் என்பதுவே உண்மையாகிறது.

உங்கள் பாவங்களை எல்லாம்
நானே சுமக்கிறேன் என்றான்
மனிதகுலத்தின் மாபெரும்
பெருந்தகையாளன் தேவமைந்தன்

முள்ளில் ஓர் கிரிடம்
முதுகிலோர் சிலுவை அறைந்து
உண்மையை மெளனிக்க வைக்க
உன்மத்தர் செய்த சித்திரவதைகள்

அறியாமல் செய்கின்றார் மூடர்
ஆண்டவரே அவரை மன்னித்து விடும்
அன்பின் புதல்வன் அன்போடு வேண்டினான்
அண்டசராசரத்தின் ஆண்டவனிடத்தே

தம்மைத் தாமே அறிந்திட வேண்டித்
தன்னைத் தானே மெழுகாய் உருக்கிய
தனியொரு தேவ மைந்தன்
தவப்புதல்வனாய் மண்ணில் உதித்திட்டான்

நல்லதோ மக்களாய் நாளும் வாழ்ந்து
நன்மைபல புரிந்திட்டே வையகத்தில்
வேதநாயகன் இயேசு உரைத்திட்ட
அருள்மொழிகளை உள்ளத்தே நிறுத்திட்டு

நத்தார் புனிததினமதில் அனைவரும்
நலமாய் வாழ்ந்திட அன்பு வாழ்த்துக்கள்
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்
புனித நத்தார் வாழ்த்துக்கள் ஆயிரம்!

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.