மார்கழி மணாளன் 25
திருபவளவண்ணம்- அருள்மிகு திருபவளவண்ணன் திருக்கோயில்
கண்ணறியா வண்ணங்கள் காரிருளில் மறைந்திருக்கக்
கார்வண்ணம் தனக்கேற்றுக் கண்வண்ணம் கவர்ந்தவனே
கண்வண்ணம் ஏழென்ற கருத்துள்ளே களைப்புற்றோர்
நின்வண்ணம் பார்த்தே நிலையாகும் பவளவண்ணா !
பாரெல்லாம் அழகென்றால் பார்பதற்க்கே நீயெதற்கு
பார்த்தபின்னே உன்னழகை பாருக்கே அழகெதற்கு ?
பார்க்கின்ற நிறமெல்லாம் பவளத்தில் அடங்காதோ
பாற்கடலின் பாம்பணையில் பவளமே ஒளிராதோ ?
முத்தோடு இரத்தினங்கள் சொத்தாக வந்தாலும்
முதுமையை இல்லாத வாழ்வின்றே பெற்றாலும்
முடிவில்லா நிலமெல்லாம் மூவுலகில் கிடைத்தாலும்
முகுந்தா! இணையேது பவளனின் பாதங்களுக்கே !
மரகதமோ மாணிக்கமோ மனதாலும் வேண்டேன்
மார்பினிலே மங்கையைத் தரித்த மாமான்னா !
மங்காத நினைவாக மாலனேநீ உள்ளிருக்க
மற்றேதும் தேடாத மனம்மட்டும் தருவாயோ ?
வெள்ளையுள்ளம் கொண்ட செல்லப்பிள்ளை கோவிந்தா
கொள்ளைகொண்டே கோபியர் உள்ளம் நிறைந்தாயே!
முல்லைச்சிரிப்பில் மனம்தோற்று மையல் கொண்டேன்
பிள்ளைக்கனியே!சின்னப்பாதங்கள் சீண்டிடத் தருவாயோ?
கலையெல்லாம் ஒன்றாக்கிக் காஞ்சியிலே திருவாகி
மலைபோன்ற துயர்நீக்கும் மாலே! மாமணியே !
சிலையாக நீயிருந்தும் உயிர்நதியாகிக் காப்பவனே!
விடைப்பிரியாத் துயரங்கள் வேங்கடனே விலக்கிடுவாய்!