சிவபிரதோஷம் – “என்னே நடிப்பு”
மீ.விசுவநாதன்

உன்னை விழுந்து வணங்காமல் – வெறும்
உதவாக் கரைகளின் கால்களிலே – பெரும்
உதவிகள் கேட்டே வணங்குகிறேன்.
தென்னை மரமாய் உயர்ந்தாலும் – பெரும்
திருட்டுத் தனங்களைச் செய்கின்ற – தேசத்
திருடரின் முன்னே கிடக்கின்றேன் .
என்னே நடிப்பு பணத்திற்காய் – இங்கே
இருக்கும் இழிந்தவர் செய்கின்றார் – இதை
எப்படி ஈசா ரசிக்கின்றாய் !
தின்னும் உணவினைத் தெய்வமென – யாரும்
தெளிந்தே வாழ்ந்தன(ர்) ஓர்காலம் – அது
திரும்பிட நீதான் அருளாயோ !
முன்னை வினையின் பயனோசொல் – இந்த
முட்டாள் மனிதரின் மூர்க்கமெலாம் – ஏன்
மௌனமாய் இன்னும் இருக்கின்றாய் !
(இன்று பிரதோஷ நன்னாள் – 10.01.2017 )
உண்மையான மனக் குமுறல்
அன்புடன்
தமிழ்த்தேனீ