மார்கழி மணாளன் -29
திருவிடந்தை – அருள்மிகு நித்தியகல்யாணப் பெருமாள் திருக்கோயில்
வாடிடும் மாந்தரின் வேதனை தீர்த்திட
வேங்கடன் வருவான் வேண்டிய நேரத்தில்
வேடங்கள் புனைந்தே விண்ணவர் வியந்திட
வராகனாய் வந்ததும் வேதனை களைந்திட !
அருவோ உருவோ பெரிதோ சிறிதோ
கருவில் விளைவது கண்ணுக்கு அழகே
நிறைவாய் மனமே நினைத்தே நின்றால்
வந்திடும் நித்தம் வராகன் அருளே !
அறிவும் உணர்வும் அடைக்கலம் கொடுத்தேன்
அகத்திலும் புறத்திலும் அனைத்திலும் இருப்பாய்
அலைகடல் தோண்டியே அகிலத்தைக் கொணர
அரக்கனை அழித்த ஆனந்தமூர்த்தியே வராகா !
உள்ளத்தின் அழகை உணர்வதே உண்மை
உணர்ந்த நிலமகள் தன்னையே தந்தாள்
உலகைக் கொணர்ந்த உத்தமன் மடியில்
உவகை கொண்டு உடனே அமர்ந்தாள் !
நித்திரை கொண்டவன் நித்தமும் மகிழ்ந்திட
முத்திரை மணமே மஞ்சத்தில் நித்தம் ! !
பிறக்கின்ற உயிருடன் பரமனின் ஆட்டம்
பிறவாப் பயன்தரும் பெருமாளே பரந்தாமா !
மங்கலம் தருவான் மனதினில் வைத்தால்
மார்கழி மணாளன் மடமைகள் நீக்கியே
பங்கயச் செல்வியின் பக்கத்தில் நின்றே
பாரினைக் காப்பவன் பாதங்கள் பணிவோம் !