நடுநிசி
விஜயகுமார் டில்லிபாபு
கடிகாரம் தொலைய
திரைச்சீலை ஒளிர்வுக்கு
காத்திருக்கிறேன்
படுக்கையில் புரண்டு புரண்டு
தொலைக்காட்சி, பேசி
துணைவி, மக்கள்
எல்லோரும் தூக்கத்தில்
தெருவடங்கி
யாருமில்லாச் சாலைகளில்
வெளிச்சம் வீசி
பகலுக்கு பார்த்திருக்கும்
தெருவிளக்காய் நான்
வெளிச்சமும் சத்தமும்
சாத்தியமில்லா இரவுப்பொழுதில்
கைகொடுப்பதில்லை
பிடித்த பொழுதுபோக்குகள்
உறக்கம் சிக்காத
இரவுகளில்
அனாதையாகிறேன்
சொந்த குடும்பத்தில்.