அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்கள். ஒருவாரம் தப்பி மீண்டும் உங்களுடன் மடல் வாயிலாக உறவாட விழைகிறேன். அனைவரது உள்ளத்தின் அடியிலும் வாலிபக்கால கோலங்கள் எங்கோ ஒரு மூலையில் உறைந்து கிடக்கின்றன. முதுமையின் வாசலில் நுழைந்து வாழ்வின் அனுபவ அத்தியாயங்களைப் புரட்டும்போது சிற்சில வேளைகளில் எமக்குப் புத்துணர்ச்சி அளிப்பதற்காக எமது இளமைக்கால இனிமைகளைத் தட்டிப் பார்க்கத் தேவையாகிறது.. இதயம் எனும் வீணையில் இளமைக்கால இனிய அனுபவங்கள் எனும் சங்கீதப் புத்தகத்தைத் தூசு தட்டி ஞாபக ராகங்களை இசைக்கும்போது எழும் உன்னத இசை உள்ளத்தைத் தாலாட்டி மகிழ்விப்பது எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பொதுவான ஒரு அனுபவமாகும்.
சரி எதற்காக சக்தி இந்த ஆரம்பத்தோடு மடல் வரைய முற்பட்டான் என்று நீங்கள் அங்கலாய்ப்பது புரிகிறது. காரணம் இருக்கிறது ஒவ்வொருவாரமும் இனிய உறவுகளாம் உங்களுடன் மடல் வாயிலாக மனம் திறப்பது என்பது எனக்கு இப்போது ஒரு சம்பிரதாயச் சடங்காகி விட்டது. ஒரு வாரம் மடல் வரையத் தப்பினால் கூட உள்ளத்தில் ஏதோ தவறிழைத்தது போன்ற உணர்வு. உள்ளத்தை நெருடும். சரி இனி விடயத்துக்கு வருவோம். நான் இங்கிலாந்துக்கு மாணவனாக புலம் பெயர்வதற்கு முன்னால் கடைசியாக எழுபதுகளின் மத்திய பகுதியில் கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் கல்வி பயின்றது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில். சுமார் ஜந்து வருடங்களுக்கு முன்னால் கனடா ரோரோன்றோவில் வசிக்கும் என்னுடன் அதே காலக் கட்டத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் 70பதுகளில் யாழ் மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றை மிகவும் கோலாகலமாக வெற்றிகரமாக நடத்தினார்கள்.
அதற்கு பல தரப்புகளில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருந்தாலும் இன்னோபின்னோரான காரணங்களினால் என்னால் கலந்து கொள்ள முடியாது போய்விட்டிருந்தது.. ஆனால் அந்த ஒன்றுகூடலின் மகிழ்வான தருணங்களை அதில் கலந்து கொண்ட நண்பர்கள் எடுத்துரைத்த போது எனது மனதில் ஏதோ ஒரு பெரிய வாழ்வில் ஒரேயொரு முறை கிடைக்கக் கூடிய இனிய தருணத்தைத் தழுவ விட்டது போன்ற மனக்குறை நிழலாடியது. இபோது 2017ம் ஆண்டு யூலை மாதம் 29ம் திகதி முதல் ஒரு வாரத்துக்கு மீண்டும் அதே போன்ற ஒன்று கூடல் நிகழ்வை அதே ரோரொன்றோ நகரத்தில் நிகழ்த்த நண்பர்கள் ஒரு வருடத்தின் முன் முடிவு செய்து அறிவித்த போது தவற விட்ட மகிழ்வான தருணம் மீண்டும் என் வீட்டுக் கதவைத் தட்டுவதைப் போன்ற ஒரு எண்ணம் மனதில் ஆனந்தத்துளிகளை அள்ளித்தெளித்தது.
என் வாழ்க்கையில் யாருடன் அனைத்தையும் கலந்தாலோசிப்பேனோ , யாரை எனது உற்றதோழியாகக் கருதுகிறேனோ . . . அதுதான் எனது மனைவியுடன் இதைப்பற்றிக் கலந்தாலோசித்தேன். சுமார் 41 வருடங்களின் பின்னால் சந்திக்கப் போகும் எனது பல நண்பர்களை சந்திக்கும் ஆவல் என்னுள்ளத்தில் எத்தனை தூரம் ஆழப்பரவியுள்ளது என்பதை என் மனைவி நன்கறிவாள். ஆயினும் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நாம் மேற்கொண்ட சென்னை விஜயம், அதைத்தொடர்ர்ந்து வரும் நவம்பர் மாதம் நாம் ஏற்கனவே பதிவு செய்திருந்த கப்பற்பயணம் என்பனவற்றிக்கு தனது விடுமுறை நாட்களைப் பகிர்ந்து கொண்ட என் மனைவியின் வேலையிலிருந்து மேலதிக விடுமுறை பெற்றுக்கொள்வது அவளுக்கு மிகவும் கடினமாகப் பட்டது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னால் விருப்ப ஓய்வூதியம் பெற்றுக்கொண்ட எனக்கு வருடமெல்லாம் லீவுதானே ! என்பதைச் சுட்டிக்காட்டிய என் மனைவி ஏன் நான் தனியாக கனடா சென்று இவ்வொன்றுக்கூடல் சந்தர்ப்பத்தில் நண்பர்களின் உறவில் திளைக்கக் கூடாது எனும் வினாவை எழுப்பி என்னை இந்நிகழ்வை நோக்கித் தனியாக பிரயாணம் செய்ய தூண்டி விட்டாள். எங்கு சென்றாலும் எனது மனைவியுடனேயே செல்லும் எனக்கு எமது முப்பத்தியாறு வருட திருமண வாழ்வில் தனியாக மேற்கொள்ளும் மூன்றாவது பயணம். முந்தைய இரு பயணகங்களைப் பற்றி மற்றைய மடல்களில் பேசுவோம்.
சரி நண்பர்களைச் சந்திக்கப் போகிறோம் என்பது ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்டாக இருந்தாலும் எனது அம்மா வகையிலான சின்னம்மாக்கள் சிலர் கனடாவில் இருப்பது அப்பெரியவர்களைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டுமே எனும் ஒரு அவாவையும் எனக்கு ஏற்படுத்தியது. அந்நாளும் வந்தது அதாவது ஜூலை 19ம் திகதி விண்ணேகி விட்ட என் அன்னையின் 96வது அகைவைத் தினத்தில் லண்டன் கட்விக் விமானநிலையத்தில் இருந்து எயார் ட்ரான்சாட் விமானத்தில் புறப்பட விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டேன். விமான ஊர்ந்து செல்லத் தொடங்கியது, “டிங்”, “டிங்” எனும் சத்தம் “கப்டன் பேசுகிறேன், எமது விமானத்தின் எஞ்சின்களில் ஒன்று சில பிழையான சமிக்ஞைகளைக் காட்டுகிறது. நாம் திரும்ப விமானத்தை நிறுத்திச் சில பரிசோதனைகளைச் செய்த பின்னர் மீண்டும் அறிவிக்கிறேன்” என்றார். “ போச்சுடா ! ஆரம்பிச்சுட்டாங்கய்யா , ஆரம்பிச்சுட்டாங்க ” என்று வடிவேல் பாணியில் உள்லம் ஓலமிட்டாலும், பரவாயில்லை அனைத்தையும் பரிசோதித்துச் செல்வது நமக்குத்தானே பாதுகாப்பு ” எனும் எண்ணமும் உள்ளத்தின் ஓரத்தில் மின்னலிட்டது.
ஒருவழியாக அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்து என்னையும் எனது மனைவியையும் எனது மைந்தன், மருமகள், பேத்தி ஆகியோரைப்பிரிந்து செல்லும் வேதனையை ஈடு கட்டும் நண்பர்களின் சந்திப்பு எனும் மகிழ்வினையும் கொண்டு கனக்கும் என் இதயத்தையும் சுமந்து கொண்டு எயார் ட்ரான்ஸிட் விமானம் கனடா ரொரான்றோ விமான நிலையத்தை நோக்கிப் பறந்தது.. சரி இனி என்ன விமான நிலையத்தில் எனது உற்ற நண்பன் காத்திருப்பான் பைகளைத் தூக்கிக் கொண்டு அவனுடன் செல்ல வேண்டியதுதானே ! எனும் எண்ணத்தில் ரொரான்றோ விமான நுழையத்தின் குடிவரவு பகுதியை நோக்கி நடக்கும் போதுதான் வளைந்து, வளைந்து பத்துப் பதினொரு வளைவுகளுக்குள்ளால் வரிசையில் செல்ல வேண்டிய நிலையக் கண்ணுற்றதும் பயணத்தின் முடிவு ஒன்றும் அத்தனை இலகுவாக முடியப் போவதில்லை என்பதை உணர்ந்தேன். ஒருவாறு உத்தியோக பரிவர்த்தனைகளை முடித்துக் கொண்டு என்னை நோக்கிக் காத்திருந்த என் உயிர் நண்பனுடன் அவன் வீடு வந்து சேர்ந்ததும் தான் அடுத்த கட்ட நிகழ்வை ஆனந்தத்துடன் நோக்கக் கூடியதாகவிருந்தது.
அனைத்துக்கும் மேலாக எனது மூத்த சகோதரன் கனடாவில் வசிப்பரின் மகன் ஒரு ஆண்மகவுக்குத் தந்தையாகி என் அண்ணனை தாத்தாவாக்கிய நிகழ்வும் நிகழ்ந்ததினால் அண்ணன் வகையிலான் எனது பேரனைக் காணும் பாக்கியமும் கிடைத்தது. சரி நான் இத்தனையும் குறிப்பிட்டதன் காரணம் ஏன் எனது கடந்த வார மடல் தடைபட்டுப் போனது என்பதை விளக்குவதற்காக என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா ?

ஆமாம் ” இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ” எனும் எனது பத்தியை இப்போது கனடாவில் இருந்துதான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இன்னும். . . . வரும். . . .

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *