யசோதை உவாச….!
—————————————————

171129 Govinda Damodara Madhaveti 04 lr —ink, watercolour-24x32cms -Canson 200gsm

குறையெனக்குன் காட்சி நிறையெனக்குன் நாமம்
சரியெனக்குன் மாயையின் சூழ்ச்சி -அரியுனக்கு
இன்னும் தயக்கமேன் என்னைப் பிடித்திட
கண்ணா அவிழ்த்திடுகண் கட்டு….

மீண்டும் உரலிழுத்து மாமருதம் சாய்த்தரவத்
தாண்டவம் ஆடித் தயிருண்டு -வேண்டிய
ராதையை காதலித்து போதனையாய் கீதையை
யாதவா வந்திங்(கு) எழுது….!
——————————————————————————————————
——————————————————————————————————
கண்ணிநுண் தாம்பினால் கட்டுண்ட காரணம்
அன்னையின் அன்பினாலா அல்லது -கண்ணனே
ஓயாத லீலையின் மாயா வசப்பட்டு
ஆயாசம் ஆனதா லா….
பழிவாய் மணக்க பகலும் இரவும்
மொழிவாய் முகுந்தா முராரி -விழுவாய்
வணங்க வரதன் வளரடி தன்னில்
இணங்கும் இகபரம் இங்கு….
மூப்பும் பிணியும் முகமன் உரைத்திடும்
தோற்பும் பகையும் திரண்டெழும் -போப்போய்
மருதம் முறித்து மதயானை கொன்ற
வரதனை நெஞ்சே வணங்கு….

திருவிருந்த மார்பன் திருத்துழாய் மார்பன்
மருவிருந்த மார்பன் மகனாய்ச் -சிறையில்
கருவிருந்த மார்பன் தெருவிருந்த மண்ணை
பெருவிருந்தாய் உண்ட புதிர்….
சகஸ்ரமவன் நாமம் சகலமவன் ரூபம்
ரகஸ்யமவன் மாயை, ரசிப்போர் -அகஸ்மாத்தாய்
வானம் வசப்பட நானவன் தானென்ற
ஞானத்தில் நிற்பார் நிலைத்து….

பக்திக்(கு) அவன்பதங்கள், சக்திக்(கு) அவன்சரணம்
முக்திக்(கு) அவனின் மலர்த்தாள்கள் -யுக்தியாய்
கண்ணினுன் தாம்பினால் கட்டும் உரிமைக்குக்
கண்ணனை நெஞ்சே கருது….

காயாம்பூ வண்ணத்தை கற்றோர்தம் எண்ணத்தை
ஆயர்தம் சின்னத்தை மண்ணையுன் -ஓயாத
மாயத்தை ஒப்பில்லா சீயத்தை நேயத்தில்
தாயொத்த தாயத்தைத் தேடு….கிரேசி மோகன்….!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.