நிர்மலா ராகவன்

உன்னையே மதிப்பாய்!

நலம்-1-1-1

நான் ஏனோ இப்படி இருக்கிறேன்! எதையும் உடனடியாகச் செய்யத் தெரியாது!’

இப்படி வருந்திய ஒரு தோழியிடம், “ உன் குறைகளை ஏன் வெளியில் சொல்கிறாய்?பிறர் கண்டுபிடித்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடு,” என்றேன்.

அடக்கம் என்றெண்ணியோ, இல்லை, மனம் பொருமுவதாலோ, பலர் தம் இயலாமையை வெளியில் சொல்கிறார்கள். பிறர் நம்மை மட்டமாக நினைத்து நடத்த நாமே வழி வகுப்பானேன்!

நாம் பிறரை மதிக்க வேண்டுமென்றால் முதலில் நம்மையே மதிக்கக் கற்கவேண்டும்.

`இது கர்வமில்லை?’ என்ற சந்தேகமே வேண்டாம்.

இது சுய மரியாதை!  இதில் தற்பெருமை கிடையாது.

கதை

கேட்பவருக்கெல்லாம் உதவி செய்யும் தனது நற்குணத்தைப்பற்றி கவினுக்குக் கொள்ளைப்பெருமை. `இந்தக் காலத்தில் யார் இப்படி இருக்கிறார்கள்!’ என்று பார்ப்பவரெல்லாம் புகழ்ந்தார்கள்.

ஒருநாள் விளையாடும்போது அவன் காலில் அடிபட்டுவிட்டது.  வலியை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

வழக்கம்போல், அவனுடைய ஆசிரியர் மூன்றாவது மாடியில் தன் புத்தகங்களைக் கொண்டுவைக்கும்படி கூற, அவனும் அப்படியே செய்தான். கால் நன்றாக வீங்கிப்போயிற்று. சில நாட்கள் பள்ளிக்குப் போக முடியவில்லை.

“காலில் அடி பட்டிருக்கிறது, நடக்க முடியவில்லை என்று ஏன் என்னிடம் முதலிலேயே சொல்லவில்லை?”  என்று ஆசிரியர் கடிந்துகொண்டார்.

“பிறருக்கு நல்லவனாக இருக்க உனது நலனைத் தியாகம் செய்யக்கூடாது!இப்போது கஷ்டப்படுகிறாய், பார்!” என்று அவன் தாயும் அறிவுரை கூறியவாறு அங்கலாய்த்தாள்.

நம்மை நாமே மதிக்க வேண்டுமென்றால், நம்மிடமோ, அல்லது பிறரிடமோ, `இப்போது முடியாது!’ என்று (மரியாதையுடன்தான்!) சொல்லும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கதை

குடும்பத்தில் எல்லாரும் ஒரு திரைப்படத்திற்குப் போனபோது எனக்குப் பரீட்சை சமயம்.

“நீயும் வாயேன்! ஒரு நாளில் என்ன வந்துவிடப் போகிறது!” என்று எனக்கு ஆசை காட்டினார்கள்.

 “படிக்கணும்,” என்று அரைமனதாக முணுமுணுத்தேன்.

நான் ஏதும் கூறுமுன், என் சித்தி, “அவள் என்னைமாதிரி! வேண்டாம் என்றால் வேண்டாம்தான்!” என்றாள்.

படித்து, பெரிய உத்தியோகத்தில் இருப்பவள்! அவளைப்போல் நான் இருக்கிறேனாமே! `நம்மைப்பற்றி ஒருவர் இவ்வளவு நல்ல அபிப்ராயம் வைத்திருக்கிறாரே! அதை நாமே கெடுத்துக்கொள்ளலாமா?’ என்று தோன்றிப்போயிற்று. அப்போது எழுந்த பெருமையில், எனக்கு வெளியே போய்,நேரத்தை உல்லாசமாகக் கழிக்கத் தோன்றவில்லை. சபலமாக இருந்தாலும் அடக்கிக்கொண்டேன். சுய கட்டுப்பாடு வந்தது.

எல்லாரையும் மதிக்க வேண்டும், ஆனால் ஒருவரது பணிவோ, அடக்கமோ பலவீனம் என்று துச்சமாக நினைப்பவர்களை ஏற்காமல் விலகி இருக்க வேண்டும் என்று புரிய ஒரு சம்பவம் வாய்த்தது.

கதை

பள்ளித் தலைமை ஆசிரியர் பழனியப்பன்  தம் வீட்டில் பசு மாடுகளை வளர்த்து,எங்களுக்குப் பால் விற்று வந்தார்.

கன்று ஈன்றிருந்த மாட்டின் பாலை அவர் கொடுத்துவிட, என் தாய் அதை திருப்பி அனுப்பிவிட்டாள், என் உடம்புக்கு ஆகாது என்று. நானும் பிள்ளை பெற்றிருந்த சமயம் அது.

ஒரேயடியாகக் கோபித்து, பால் அனுப்புவதை நிறுத்திவிட்டார் பழனியப்பன். சில மாதங்கள் கழித்து, நான் நேரில் விசாரிக்கப் போனேன்.

ஒரேயடியாக இரைய ஆரம்பித்தார். ”வேண்டாம் என்றால் மரியாதையாகஎன்னிடம் வந்து சொல்லியிருக்க வேண்டும். அதுதான் முறை!” இந்த இரண்டாவது வாக்கியத்தை மீண்டும் மீண்டும் சொன்னார். வல்லின றகரம் அவர் வாயில் படாத பாடு பட்டது.

“அம்மா விளக்கிச்  சொல்லி அனுப்பினார்களாமே!” என்றேன். அச்சமயம் நான் வெளியில் நடமாட இயலாதவளாக இருந்தேன் என்று சொல்லியாயிற்று. அப்படியும் சண்டை பிடித்தால் என்ன செய்வது?

“நீங்களே வந்து சொல்லியிருக்க வேண்டும். அதுதான் முறை!” என்றார்,விடாப்பிடியாக. இன்னும் சிறிது நேரம் கத்தினார்.

பொறுக்க முடியாது எழுந்தேன்.

“எவ்வளவு வேண்டும்?” வந்த வியாபாரத்தை விடுவதா என்ற அக்குரல் அதிகாரமாகஒலித்தது.

நான் மெல்லத் திரும்பினேன். “வேண்டாம்! உங்களுக்கு எதுக்கு அவ்வளவு கஷ்டம்?”என்றேன் — இனிமையாக.

அதைச் சற்றும் எதிர்பாராது அவர் திகைத்து நிற்க, விறுவிறுவென்று நடையைக் கட்டினேன்.

பழனியப்பன்மாதிரி சிறுவர்களிடமும் பெண்களிடமும் அதிகாரமாக நடப்பவர்கள் மேலதிகாரிகளின் முன்னிலையில் கூனிக் குறுகுவார்கள். அவர்களது சுய மரியாதை இடம், பொருள் மற்றும் காலத்தைப் பொறுத்து வளையும். அதனால் அவர்களுக்கே ஏதோ வெறுமை உண்டாக, எப்போதும் விறைப்பாக நடந்துகொள்வார்கள்.

நான் தகுந்த காரணம் சொல்லியும், ஏதோ பெரிய அவமானத்திற்குத் தன்னைஉள்ளாக்கிவிட்டதுபோல் சண்டை பிடித்தாரே, இதில் என் தவறு என்ன?

என்னை அவமானப்படுத்த நினைத்தவரின் குற்றச்சாட்டை நான் ஏற்கவில்லை.என் சுயமரியாதை அப்போது வீறுகொண்டு எழுந்திருக்க வேண்டும். நிமிர்ந்த தலையும் நேர்ப்பார்வையும் கொண்டவரைப் பார்த்து மரியாதை ஏற்படுகிறதோ,இல்லையோ, அச்சம் எழும்.

இவர்களைத் தளரச்செய்ய பிறர் பல உத்திகளைக் கையாள்வார்கள்.

1      `இந்தமாதிரி நீ சண்டை பிடித்தால் பிறருக்கு உன்னைப் பிடிக்காமல்போய்விடும்!’

அட, மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துவிட்டுப் போகட்டும்! நம்மையே நமக்குப் பிடித்தால்தானே பிறரையும் நம்மால் உண்மையாக விரும்ப முடியும்?

பிறர் உன்னை மதிக்க, முதலில் நீ உன்னை மதி. 

குறைகளுடன் நம்மை நாமே  ஏற்பது முதல் படி.  அந்த நிலை வந்தால், பிறரைப் பார்த்து பொறாமை எழாது. எப்போதும் அமைதியாக, மகிழ்ச்சியுடன்  இருக்கலாம்.

2      `நீ அவளைப்போல், இவளைப்போல், இருக்க வேண்டும்!’

பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டால், அது நம்மையேதாழ்த்திக்கொள்வதுபோல்தான். பிறர் வித்தியாசமாக இருக்கலாம். அது அவர்கள்குணத்தை, வாழ்க்கைப் பின்னணியைப் பொறுத்தது.

நான் என்னைப்போல் இருந்தால்தான் அசலாக இருப்பேன். பிறரிடமிருந்துவித்தியாசமாக, சுய சிந்தனையுடன் இருக்க இயலும். இன்னொருவரைப் பின்பற்றி,  எதற்குப் போலி வேஷம்?

(இசைப் போட்டிகளில், பிரபல பாடகர்களைப்போல் கடும் பிரயத்தனத்துடன் பாடுகிறார்கள் சில இளம்பாடகர்கள். அவர்களைவிட, தம் சொந்தக்குரலில் பாடுகிறவர்களையே நீதிபதிகள் பாராட்டுவது ஏன் என்று அவர்களுக்குப் புரிவதில்லை).

கெஞ்சாதே!

கணவனிடம் வதைபட்ட பெண் ஒருத்தியுடன் நான் தொடர்புகொள்ள விரும்புவதாக சமூகநல அதிகாரிகளான என் தோழிகளிடம் தெரிவித்திருந்தேன்.

அப்படி என்னுடன் வலியப் பேசவந்தவள்தான் திலகா. “என் கணவருக்கு என்னைக் கண்டால் ரொம்பப் பிடிக்கும், என்றாள், பெருமையுடன். “ஆனால், கொஞ்சம் முன்கோபி!”

`ரொம்பப் பிடித்த கணவர்’ ஒரு மூர்க்கன். உயிர் போகும் நிலையில் அவனால் அடித்து உதைக்கப்பட்டு, காவல் துறையினர் மூலம் சமூகநல அதிகாரிகளின்  பொறுப்பிற்கு வந்தபின்னரும் திலகா இதையேதான் சொல்லிக்கொண்டிருந்தாள்.

அன்புக்காக ஏங்கி, தன்மானத்தை விடலாமா? அப்படியாவது என்ன இல்லற இன்பம் வேண்டிக் கிடக்கிறது!

பிறருடன் சுமுகமான உறவு இருக்கவேண்டுமே என்று எந்த அவமானத்தையும் பொறுத்துக்கொள்வது நம்மையே நாம் மதிக்கவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. நம்முடன் ஒருவரால் ஒத்துப்போக முடியவில்லை என்ற நிலைவரும்போது, நாம் கெஞ்சுவது நம்மையே இழிவு படுத்திக்கொள்வதுபோல்தான் .

பாதுகாப்பு, பணம், சமூகத்தின் அங்கீகாரம் என்ற ஏதாவது காரணத்துக்காகநைந்துபோன உறவை விடாது பிடித்துக்கொண்டு, கெஞ்சலால் நீடிக்க முயன்றால் மேலும், மேலும் இழிவுபடுத்துவார்கள்.

“சுயகௌரவத்தை இழப்பதைவிடப் பெரிய இழப்பு வேறொன்றுமில்லை!” (மகாத்மா காந்தி)

� �{�ҭ��

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.