அவனருள் கும்பிடடா!
நல்லவை சுமந்து நன்மைகள் ஆற்றின்
நாடு போற்றுமடா – நல்லது
அல்லவை சுமந்து அல்லல்கள் வளர்ப்பின்
அகிலம் தூற்றுமடா!
பிறப்பின் பயனும் பிறர்க்கெனச் சொல்லும்
பணியை ஆற்றிடடா – தனிச்
சிறப்பை அதிலும் செலுத்தியும் வாட்டும்
சிறுமை தூற்றிடடா!
வாழ்வின் பயனும் புகழெனச் சொல்லும்
வாழ்வை அமைத்திடடா – மிகத்
தாழ்வுறும் நினைவை அறவே தள்ளியும்
தர்மம் சமைத்திட்டா!
ஏற்றமும் இறக்கமும் இரட்டைப் பிறவிகள்
என்பதை அறிந்திடடா – நிலை
மாற்றியும் இயற்கை காட்டுதல் உணர்ந்து
மமதை எறிந்திடடா!
காற்று என்றும் ஓர்திசை தன்னில்
காலமும் வீசாது – நலம்
ஆற்றும் செயலில் நன்மைகள் விளையின்
நாடுனை ஏசாது!
நல்லவை விதைப்பின் நன்மைகள் விளையும்
நினைவில் ஏற்றிடடா – துயரில்
தள்ளிடும் நினைவுகள் தன்னைத் தள்ளும்
தர்மம் போற்றிடா!
நாடுனைப் போற்றும் வண்ணம் நடந்து
நற்பெயர் பெற்றிடடா – பெரும்
கேடன் என்றுனை ஊரார் சாடா
கொள்கையில் முற்றிடடா!
மகிழ்ச்சி என்பது மனத்துள் உள்ளது
மறந்தும் போகாதே – நிகழும்
நிகழ்ச்சிகள் யாவும் ஈசன் செயல்தான்
எவரையும் நோகாதே!
இறைவன் வழங்கும் கடுகுள் மலையும்
இருக்கும் நம்பிடடா – கூர் அறிவும்
காலமும் சமமாய் வழங்கிய
அவனருள் கும்பிடடா!
04.02.2018
கவிஞர் இடக்கரத்தான்.