-செண்பக ஜெகதீசன் 

கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற்
கொற்கத்தி னூற்றாந் துணை. (திருக்குறள் –414: கேள்வி) 

புதுக் கவிதையில்… 

கற்கவில்லை கல்வியெனிலும்,
கற்றறிந்தோரிடம்
கேட்டுத் தெரிந்துகொள்!

அது,
தளர்ச்சியுறும்போது
தாங்கிப் பிடிக்கும்
ஊன்றுகோல் போல்
உதவும் துணையாகும்…! 

குறும்பாவில்… 

கேட்டறிந்துகொள் கற்றோரிடம், நீ கற்காதபோதும்,
கேள்வியது ஊன்றுகோலாய் உனைத்தாங்கும்-
தளர்வுறும்போது துணையாகி…! 

மரபுக் கவிதையில் 

தளர்வுறும் போதில் ஊன்றுகோலாய்த்
-தாங்கிப் பிடிக்கும் துணையாகும்
வளர்த்திடும் கேள்வி யறிவதுவே
-வாழ்வில் என்றும் மறவாதே,
உளத்தினில் இதனைக் கொண்டிடுவாய்
-உயர்ந்த கல்வி பெறாவிடிலும்,
வளமாம் கல்வி கற்றோரிடம்
-வாங்கிடு கேட்டே அறிவதையே…! 

லிமரைக்கூ… 

கற்கவில்லை யெனிலும் கேட்டிடு,
தளர்வுறும்போது ஊன்றுகோலாய் உறுதுணையாவதால்
கேள்வியறிவை நீநிலை நாட்டிடு…! 

கிராமிய பாணியில்… 

வளத்துக்கோ வளத்துக்கோ
நல்ல அறிவ வளத்துக்கோ,
கேள்வி அறிவ வளத்துக்கோ…

படிப்பறிவு இல்லண்ணாலும்
படிச்சவங்கிட்ட கேட்டுத்தானே
நல்ல அறிவ வளத்துக்கோ,
கேள்வி அறிவ வளத்துக்கோ…

அதுதான் ஒனக்குத் தொணயாவும்
ஆபத்துக்கு ஒதவியாவும்,
தளர்வாநீ இருக்கும்போது
தாங்கிப்புடிக்கும் தடிக்கம்பா
தொணயா ஒனக்கு வருமிதுவே…

அதால,
வளத்துக்கோ வளத்துக்கோ
நல்ல அறிவ வளத்துக்கோ,
கேள்வி அறிவ வளத்துக்கோ…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.