திருமுருகாற்றுப்படை இலக்கணப் பொருத்தம்

1

– கா.பெரியகருப்பன்

முகவுரை:

தமிழ் இலக்கிய வரலாற்றில் இலக்கியப் பாகுபாடு என்பது பலரால் பலவிதமாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவற்றுள், சங்கஇலக்கியம் என்பதுவும் ஒன்றே. அதன் அடிப்படையில் சங்ககால இலக்கியங்கள் என்று கூறப்படும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இரண்டும் இன்றளவும் தமிழர் வாழ்வையும் பண்பாட்டையும் பறைசாற்றுவனவாகத் திகழ்கின்றன எனில் மிகையல்ல. இத்தகு சிறப்புமிகு தமிழ் இலக்கியங்களில் இருக்கும் நன்மை தீமைகளைக் கண்டுதெளிவதும் அதன் உண்மைத்தன்மையை அறிவதுமே ஆய்வாளர்களின் கடமை என்பதை உணர்ந்து திருமுருகாற்றுப்படை இலக்கியத்தின் இலக்கணப் பொருத்தம் குறித்து ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாகக் கைக்கொள்ளப்படுகிறது.

பாகுபாடு

பதினெண்மேற்கணக்கு, பதினெண்கீழ்க்கணக்கு என்ற பாகுபாடு காலத்தால் பகுக்கப்பட்டவை என்பது நாம் அறிந்தவையே. இத்தகைய பாகுபாடுகள் பல்வேறு முரண்பாடுகளுக்கிடையே நிகழ்த்தப்பெற்றிருக்கலாம். இத்தகு கண்ணோட்டத்தோடே பத்துப்பாட்டை ஆராயும் நோக்கில், அதன்கண் இறைவணக்கம் போன்று திகழ்கின்ற திருமுருகாற்றுப்படை குறித்து நாம் அறியலாகும் பல்வேறு செய்திகள் வாயிலாக, அதன் இலக்கணப் பொருத்தம் குறித்து பல்வேறு முரண்பாடுகள் கண்டறியப்பட்டதன் விளைவே இவ்வாய்வு கட்டுரை.

ஆற்றுப்படை இலக்கணப் பொருத்தப்பாடு

“இலக்கியம் கண்டதற்கோர் இலக்கணம்” என்ற கூற்று ஒருபுறம். இலக்கண நூல்கள் குறிப்பிடும் இலக்கியத்திற்கான இலக்கணங்கள் ஒருபுறம். ஆய்வின்வழி அறிஞர்கள் சொன்ன இலக்கணப் பொருத்தப்பாடு ஒருபுறம் என்று பல்வேறு நிலைகளில் திருமுருகாற்றுப்படையின் இலக்கண, இலக்கியப் பொருத்தப்பாட்டை உற்றுநோக்குங்கால், ஆற்றுப்படை என்பது ஆறு-வழி; படை – படுத்துவது எனவே, வறியவரை வலியவர் ஆற்றுப்படுத்துவது ஆற்றுப்படை நூல்களென பல்வேறு  இலக்கிய வரலாற்று நூல்கள் சான்று பகர்கின்றன. ஆனால், பிற ஆற்றுப்படை இலக்கியப் பொருண்மையை உற்றுநோக்கும்போதும் திருமுருகாற்றுப்படையின் செய்திகள் வாயிலாக, அதன் பொருண்மையை உற்றுநோக்கும்போதும் பல்வேறு வேறுபாடுகள் இருப்பது வெளிப்படையாகின்றது. மேலும், அதன் பாவகை, இலக்கண நூல்கள் காட்டும் ஆற்றுப்படை இலக்கியத்திலிருந்து வேறுபடுதல், பொருண்மை அடிப்படையில் வேறுபடுதல், மையப் பொருள் அடிப்படையில் மாற்றம் பெற்றமை போன்ற காரணங்களை ஆராயும்போது  பெயரளவிலேயே இது சற்று முரணாகவே தோன்றுகின்றது. பின்னாளில் பதினோராம் திருமுறையில் இது சேர்க்கப்பட்டதும் இதனை உறுதி செய்யும் நிகழ்வாகவே இருக்கிறது.

இலக்கண நூலார் சுட்டும் ஆற்றுப்படை இலக்கணம்

தொல்காப்பியம்:

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
       ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
       பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
       சென்று பயனெ திரச்சொன்ன பக்கமும்”1                            (தொல். பொருள் -1037)

தொல்காப்பியர் கூற்றுப்படி, நாம் ஆற்றுப்படை நூல்களை அணுகினோமானால் ஆற்றுப்படை நூல்களாகத் தற்போது உள்ள ஐந்து நூல்களுள்,

  1. கூத்தராற்றுப்படை
  2. பொருநர் ஆற்றுப்படை
  3. பாணர் ஆற்றுப்படை
  4. விறலி ஆற்றுப்படையுமே ஆற்றுப்படைப் பாடல்கள் என்பதை நாம் தெளிவாக உணரமுடியும். இவ்வாறு வெளிப்படையான கருத்து இருக்கையில் திருமுருகாற்றுப்படை என்ற நூலானது, ஆற்றுப்படை இலக்கணத்திற்கு மறுதலைப்பட்டது என்பதை உணரவேண்டும்.

காரணம், கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் என்று கூறினாரே தவிர இவர்களுடன் பிறரும் என்று குறிப்பிடவில்லை. ஆகவே தொல்காப்பியர் காலத்தில் மேற்சொன்ன நான்கு ஆற்றுப்படை நூல்களே அமைந்திருந்தன என்பதும், பிற ஆற்றுப்படை நூல்களை அவர் ஏற்கவில்லை என்பதும் இங்கு வெளிப்படை.

பன்னிருபாட்டியல்

தொல்காப்பியத்தை அடியொற்றி அதன்பின் எழுந்த பாட்டியல் நூல்களும் ஆற்றுப்படை இலக்கணங்கள் கூறுகின்றன.

     “புரவலன் பரிசில் கொண்டு மீண்ட
       இரவலன் வெயில்தெறும் இருங்கா னத்திடை
       வறுமை யுடன்வரூஉம் புலவர் பாணர்
       பொருநர் விறலியர் கூத்தர்க் கண்டப்
       புரவலன் நாடூர் பெயர்கொடை பார்அய்
       ஆங்குநீ செல்கென விடுப்பதாற் றுப்படை
       அதுதான் அகவலின் வருமே”2 (பன்னிரு.பா.நூற்-202)

தன்னிடம் பரிசில்பெற்று மீண்ட வறியவராகிய பாணர், பொருநர், விறலியர், கூத்தர் ஆகிய நால்வரும் தன்போன்ற பிற வறியவரை ஆங்கொரு புரவலன் நம் வறுமை போக்கும் வள்ளலாக இருக்கிறான் அவனிடத்தே சென்று உன் வறுமையைப் போக்கிக்கொள் என்று ஆற்றுப்படுத்தும் பொருண்மையே ஆற்றுப்படைக்கான இலக்கணமென பன்னிருபாட்டியல் இயம்புகிறது.

ஆனால், திருமுருகாற்றுப்படையானது புலவரை ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

வெண்பாபாட்டியல்

“ஒன்றா அகவலா லொண்புலவர் யாழ்ப்பாணர்
       குன்றாத சீர்ப்பொருநர் கூத்தரே – என்றிவரை
       ஆங்கொருவன் னாற்றுப் படுத்த பரிசறைந்தால்
       பாங்காய ஆற்றுப்படை”3     (வெண்.பா.நூற்-52)

குணவீரபண்டிதர், தொல்காப்பியர் போல் இல்லாது பாணர், பொருநர், கூத்தர் இவர்கள் ஆற்றுப்படுத்துவது போல் ஆசிரியப்பாவால் புலவன் இயற்றுவதே ஆற்றுப்படையின் பாற்படும் என இயம்புகிறார்.

இருப்பினும், நக்கீரர்-இறை அருள்வேண்டி புலவன் மற்றொரு புலவனை ஆற்றுப்படுத்துவதாக திருமுருகாற்றுப்படையை இயற்றியுள்ளார் என்பதே அதன் பொருண்மையின் வழி அறியலாகிறது.

நவநீதப்பாட்டியல்

      …… புலவர்கள் வாழ்த்து நலம்
      நிறைந்த பொருநரைப் பாணரைக் கூத்தரை நீணிதியம்
      பெறும்படி யாற்றுப் படுப்பன வாசிரியம் பெறுமே”4                   (நவநீ.பா.நூற்-53)

நவநீதநாடன், பொருநரும் பாணரும் கூத்தரும் மன்னனிடம் அளவில்லாத (அழியக்கூடிய) பொருட்களைப் பெற்று வருமாறு, தம் இனத்தாரை தாம் வழிப்படுத்துவதாகவும் ஆசிரியப்பாவிலும் அமைவதே ஆற்றுப்படையாகும் என விளம்புகிறார்.

சிதம்பரப்பாட்டியல்

      “கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
       பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
       சென்று பயன் றெரிந்த ஆற்றுப்படை”5                              (சித.பா.நூற்-34)

தொல்காப்பியரும் சிதம்பரப்பாட்டியல் ஆசிரியரும் ஆற்றுப்படை குறித்த ஒத்த கருத்தினையே மொழிகின்றனர்.

மேலும், ‘பத்துப்பாட்டுஆராய்ச்சி’ என்ற நூலில், மா.இராசமாணிக்கனார் திருமுருகாற்றுப்படை குறித்து கூறும் கூற்றானது “சில ஆற்றுப்படைகளில் காணப்படும் ஆற்றுப்படுத்தப்படுபவனின் நிலையை விவரித்தல், ஆற்றுப்படுத்தப்படுவோன் தனது பழைய நிலையை விளக்குதல், பரிசில் பெற்ற முறையைக் கூறுதல் என்பன தெளிவாகச் சுட்டப்பெறவில்லை”6 (பத்து.ஆராய்ச்சி-ப.57)எனக் கூறும் கூற்றின் அடிப்படையிலும், திருமுருகாற்றுப்படையானது ஆற்றுப்படை இலக்கியத்திற்கு முற்றிலும் மாறுபாடுடையது என்பது வெளிப்படை.

ஆற்றுப்படைப் பொருண்மையில் பொருத்தப்பாடின்மை)-(திருமுருகாற்றுப்படை)

திருமுருகாற்றுப்படையில் ஆற்றுப்படுத்தபடுபவனின் நிலைகளாக,

  1. முதல் பகுதியில், திருப்பரங்குன்றம் என்ற மலைக்கோவில், இயற்கை வளம், திருக்கோலம், சூரனுடன் செய்த போர்முறை போன்றன குறிப்பிடப்பட்டுள்ளன.

சான்றாக, “ மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்7                              (திருமுருகு.-12)

இவ்வரிகள் இயற்கை வளம் குறித்துக் கூறுகிறது.

  1. இரண்டாம் பகுதியில்,முருகனின் ஆறுமுகம் பற்றிய குறிப்புகள் – பன்னிரு கைகள் – திருச்செந்தூர் சிறப்புகள் சொல்லப்பட்டுள்ளன.

சான்றாக- “மனன்நேர்பு எழுதரு வாள்நிறம் முகனே” 8                             (திருமுருகு.-90)

இவ்வரிகள் முருகனின் திருமுகங்கள் குறித்துக் கூறுகின்றன.

  1. மூன்றாம் பகுதியில், முனிவர்களின் பெருமை, முருகனின் சிறப்புகள் பேசப்படுகின்றன.

சான்றாக, “காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர்”9    (திருமுருகு.135 )

எனும் அடிகளில்,முனிவர்கள் அவாவொடு கூடிய சினத்தையும் போக்கின அறிவினையுடையவர்கள்  என்று முனிவர்களின் சிறப்புகளைக் கூறுகிறார் நக்கீரர்.

4.நான்காம் பகுதியில், பழனிக்கு வரும் வழிபாட்டுப் பெண்மாந்தர்களின் இயல்பு எடுத்தோதப்படுகிறது.

சான்றாக, “புலராக் காழகம் புலர உடீஇ” 10      (திருமுருகு.184)

முருகனை வழிபடும் மகளிர் ஈரம் புலராத ஆடையொடு வழிபாடு நடத்தினர் எனும் காட்சிகளை ஆசிரியர் எடுத்தியம்புகிறார்.

  1. ஐந்தாம் பகுதியில்,குன்றுதோராடலில் மக்கள் நிலை – குரவைக்கூத்து போன்ற நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன.

சான்றாக, “மயில் கண்டன்ன மடநடை மகளிரொடு ” 11      (திருமுருகு.205)

இவ்வடிகள்,குரவைக்கூத்து ஆடும் மகளிரின் நடை குறித்துக் கூறப்படுகிறது.

  1. ஆறாம் பகுதியில், பழமுதிர்ச்சோலையின் சிறப்பு, அருவியின் வருணனை கூறப்படுகிறது.

சான்றாக, “நன்பல ஆசினி முதுசுளை கலாவ” 12       (திருமுருகு.301)

இதில்,பழமுதிர்சோலையின் இயற்கை வருணனை குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நக்கீரர்- முருகன், அவரை வழிபட வரும் முனிவர், மகளிர் இயல்பு மற்றும் தலச்சிறப்புகளையும் எடுத்துக் கூறுகிறார். மேலும், அழிவில்லாத அருள்நிலை பெறுவதையே மையமிட்டு எடுத்துரைக்கிறார்.  ஆனால் இதில், நீணிதியம் எனப்படக்கூடிய பொருட்செல்வம் குறித்து யாங்கேனும் ஓரிடத்தில் கூட இயம்பவில்லை என்பது புலவரது திருமுருகாற்றுப்படை செய்தியின் வழி வெளிப்படை.

மையப்பொருள் அடிப்படையில் வேறுபட்டு நிற்றல்:

புரவலனிடம் பரிசு பெற்று வலியவனாகப் பெற்றவன், தன் போன்ற வறியவனை ஆற்றுப்படுத்துவடதே ஆற்றுப்படை இலக்கணம்.ஆனால் இதில் வறியவன் பெறும் பொருளானது அழியக்கூடியது,நிலை இல்லாதது,அளவானது. அத்தகு மையப்பொருண்மையுடையதே ஆற்றுப்படை என எல்லா நூல்களும் இயம்புகின்றன. இந்நிலையில் இருந்து திருமுருகாற்றுப்படையானது முற்றிலும் மாற்றம் எய்தி நிற்கிறது என்பது மேற்கண்ட செய்திகளின் வழி வெளிப்படை.

முடிவுரை

 திருமுருகாற்றுப்படையானது முருகனிடம் ஆற்றுப்படுத்தப்படுவதால் அவனது அருள்வேண்டி ஆற்றுப்படுத்துவதாகவேகொள்ள வேண்டும். அவ்வகையில், நோக்கும்போது இரவலனிடம் முருகன் தரும் அருளானது நீங்காதது. அது, அளவிட முடியாதது. ஆனால், பிற ஆற்றுப்படை இலக்கியங்களானது நிலையில்லாதது, அழியக்கூடியது, அளவிடக்கூடியது. அச்செல்வத்தைப் பெற்ற இரவலன் தன் போன்ற இரவலன் அப்பரிசிலைப் பெறுவதற்கு ஆற்றுப்படுத்தும் பொருண்மையில் பிற ஆற்றுப்படை இலக்கியங்கள் பாடப்பெற்றுள்ளன. அதுவே, ஆற்றுப்படை இலக்கணமென தொல்காப்பியம் முதலாக பின்னெழுந்த பாட்டியல் நூல்களும் இயம்புகின்றன.

     எனவே திருமுருகாற்றுப்படையானது, ஆற்றுப்படை இலக்கணத்திற்கு அப்பாற்பட்ட ஒர் இலக்கண மரபை ஒட்டி நக்கீரரால் எடுத்தியம்பப்பட்டுள்ளது என்பதே இவ்வாய்வின் முடிந்த முடிபு.

முதன்மைச் சான்றாதாரங்கள்

  1. நக்கீரர் – திருமுருகாற்றுப்படை (உரைவிளக்கம்)      முனைவர் ம.பெ.சீனிவாசன் (பதிப்பு – 2009)
  2. ஆறுமுகநாவலர்- திருமுருகாற்றுப்படை முல்லை நிலையம் (பதிப்பு – 2010)

துணைமைச் சான்றாதாரங்கள்

  1. சிங்காரவேலு முதலியார் – அபிதான சிந்தாமணி
  2. மா. இராசமாணிக்கனார் – பத்துப்பாட்டு ஆராய்ச்சி
  3. மது.ச. விமலானந்தம் – தமிழ் இலக்கிய வரலாறு
  4. இளம்பூரணர் – தொல்காப்பியம் (பொருளதிகாரம்)

*****

கட்டுரையாளர்
முனைவர்பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
தியாகராசர் கல்லூரி
மதுரை-09

 

                                       

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "திருமுருகாற்றுப்படை இலக்கணப் பொருத்தம்"

  1. அருமை.சிறந்தசொல்லாற்றல்.கருத்துச்செறிவு.தொடரட்டும்
    எழுத்துப்பணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.