கைகோள் நோக்கில் மருதத் திணையில் பரத்தமை

0

-ம. ஆனந்தன்

சங்க இலக்கியங்களில் பரத்தமை என்பது முக்கியப் பாடுபொருளாக விளங்கியது. காதலை மையப்படுத்திய அக இலக்கியங்களில் பரத்தமை தனி இடத்தைப் பெற்று இருந்தது. தொல்காப்பியர் தலைவன் தலைவியின் காதல் களவிலிருந்து கற்பில் பயணிக்கும் பொழுது பரத்தமையொழுக்கம் அவர்களது வாழ்வில் உட்புகுந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது என்கிறார். இதன் விளைவால் தலைவி அடையும் துன்பங்கள், ஊராரின் அலர், விருந்தோம்பல் நிகழாமை போன்ற  இன்னல்கள் தோன்றுகின்றன.

பரத்தமை என்ற ஒழுக்கம் சங்க காலத்தில் ஆதரிக்கப்பட்ட ஒன்றாகத் திகழ்ந்தது. பரத்தையர் இற்பரத்தை, சேரிப்பரத்தை எனக் கூறப்பட்டனர். இது கூடா ஒழுக்கம் எனினும் அன்றைய மக்கள் ஏற்றுக் கொண்டொழுகினர். பிற்காலத்தில் இவ்வொழுக்கம் சாடப்பட்டது. பரத்தமை பெரும்பாலும் மருதநிலத்தில் மிகுந்து காணப்பட்டது. இதற்கு காரணம் அங்குக் காணப்பட்ட செல்வ வளம், சூழல், மக்களின் வாழ்வியல் இயல்பு போன்றவையாகும்.

தொல்காப்பியர் குறிப்பிடும் செய்யுளியல் உறுப்புகளில் ஒன்றான கைகோளின் கற்பு வாழ்க்கையில் பரத்தமை நீங்கா இடம்பெற்றுள்ளது. அத்தகைய பரத்தமை வாழ்க்கையை எட்டுத்தொகையில் குறிப்பிடும் அக இலக்கியங்களில் மருதத்திணையில் காணலாகும் பரத்தமை வாழக்கையோடு பொருத்திக் காட்டுவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்காப்பியரின்  கைகோள்

தொல்காப்பியத்தின் மூன்றாவது அதிகாரமாகிய பொருளதிகாரத்தின் உட்பிரிவுகளுள் எட்டாவதாக அமைவது செய்யுளியல் என்ற பகுதி. இலக்கிய மரபினைப் பற்றிய இயல் செய்யுளியலாகும். தமிழண்ணல் அவர்கள் இன்று படைப்பிலக்கியம் என்று நாம் கூறுகிறோமே அதே பொருளில்தான் தொல்காப்பியர் செய்யுள் எனும் சொல்லை ஆள்கின்றார் எனக் கூறுகிறார். அகத்திணையைப் பற்றிக் கூறி அகப்பாடலின் பொருளை உணர்த்தும் தொல்காப்பர் 14 ஆவது உறுப்பாகக் கைகோள் என்பதைக் குறிப்பிடுகிறார்.

சோடிகளின் வாழ்வே கந்தருவ மணம் என்கிறார். எனவே வடமொழியில் கந்தருவ மணம் போன்று இங்கு ‘களவு’என்பதாகும். கைகோள் வகையில் களவு இன்னது என்பதை,

காமப் புணர்ச்சியும் இடந்தலைப்படலும், கைகோள் என்பதற்குப் பவானந்தர் தமிழ்ச்சொல்லகராதி ஓழுக்கம் எனப் பொருள் தருகிறது. மக்களின் ஒழுக்கம் பற்றிக் கூறுவது கைகோளாகும். இதனைத் தொல்காப்பியார் களவு, கற்பு என இருவகைப்படுத்துகிறார்.

கைகோளில் பரத்தமை

பரத்தமை-அயன்மை, பரத்தையர்-அயலார்: களவொழுக்கம் ஒழுகி, மணஞ்செய்து கொண்டு கற்பொழுக்கம் ஒழுகும்- இல்லறம் நடத்தும் தலைவியரல்லாத பிற மகளிர் அதாவது களவொழுக்கம் ஒழுகாமலும், மணஞ்செய்து கொள்ளாமலும் காமத்திற்காக ஆடவருடன் கூடி வாழும் பெண்டிர். இவர்,

1.காமக் கிழத்தியர்
2.காதற் பரத்தையர்
3.சேரிப்பரத்தையர்  என மூன்று வகைப்படுவர்.

இன்று சமயக் கன்னிப் பெண்கள் இருப்பது போல. ஆனால் இன்பத்தை வெறுக்காமல், அதற்காகவே பண்டு மணஞ்செய்து கொள்ளாது சில பெண்கள் இருந்து வந்தனர். அவர்கள் தன்னுரிமையுடனேயே வாழ்ந்து வந்தனர். அவர்களே இம்மூவகையினரும்.

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”        (கற்பு – 4)

என்பதால், தமிழரிடை, களவொழுக்கம் ஒழுகி, கரணம் இன்றி-பலரறிய மணம் செய்து கொள்ளாது கற்பொழுக்கம் ஒழுகி இல்லறம் நடத்தி வந்த காலமும் ஒன்று இருந்து வந்தது. அதாவது ஒருவனும் ஒருத்தியும் காதல் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர். திருமணம் என்பதே அன்றில்லை பின்னர் தான்  திருமணம் குலப்பெரியோர்களால் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இப்பரத்தையர் களவொழுக்கமொழுகாது காம நுகர்பவர். எனவே முன்னது தூய ஒழுக்கமாகும். பின்னது தீய ஒழுக்கமாகும்.

காமக் கிழத்தியர்

தக்க பருவத்தே காதலுற்று முறையாகக் களவொழுக்கம் ஒழுகாமலும் மணஞ்செய்து கொள்ளாமலும் காமத்திற்காக மனைவியர்போல் இருந்து வருபவர்.

காதற் பரத்தையர்

இவர் தலைவனிடம் அன்பு கொண்டு இன்பந்துய்ப்பவர். ஆனால் காமக்கிழத்தியர் போலத் தலைவனோடு உடனிருந்து வாழ்க்கை நடத்தாமல் தனிவாழ்க்கை வாழ்பவர். தலைவன் குடும்பத்திற்கும் இவருக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. பரத்தையர் என்பதே இதற்குச் சான்றாகும்.

சேரிப் பரத்தையர்

இவர் தமக்கென ஒருவரை வைத்துக் கொள்ளாமல் விருப்பமுள்ள போது விரும்பியவரைக் கூடி வாழ்பவர். இவர் தலைவன் மீது அன்பின்றித் தலைவன் கொடுக்கும் பொருள் மீது அன்புடையவர்.

“ஒழுங்கங் காட்டிய குறிப்பினும்”
“காமக் கிழத்தி மனையோள் என்றிவர்
ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்”       (கற்பு – 5)

என உயிரினும் ஒழுக்கமே பெரிதெனக் கொண்ட நம் முன்னையோர்க்கு இஃதொரு பேரிழுக்கே யாகும். ஒரு சில ஒழுக்கத்தை மதியாதவர்களால் உண்டான இத்தீமை தமிழினத்திற்கே ஒரு களங்கமாக விளங்கி வருகிறது.

மருதத்திணையில் பரத்தமை

மருதத்திணையின் திணை ஒழுக்கம் ஊடல் ஆகும். அவ்வூடலானது தோன்றுதற்கு முக்கியக் காரணம் பரத்தமையே. இதன் விளைவாகவே தலைவன், தலைவியிடையே ஊடல் மிகுந்தது.

ஒளி இழந்த தலைவி

புதல்வனை ஈன்ற தலைவி அதன் காரணமாகத் தான் அடைந்த முதுமை நிலையைத் தலைவன் வெறுப்பான் என ஐயமுடையவளாய் இருக்கின்றாள். அப்பொழுது தலைவன் பரத்தையரோடு தன் பொழுதினைக் கழித்து வருகின்றான். இதனைக் கேள்வியுற்ற தலைவி அவனை நோக்கி அவனது பரத்தமையை வெகுண்டு கூறுகின்றாள். இதனை,

பழனப் பன்மீ  னருந்த நாரை
கழனி
மருதின் சென்னி சேக்கு
………  ………         ……….   ……………
……..     ………         ……….    …………..
பேஎ யனையமியாஞ் சேய் பயந்தனமே

ஐங்குறுநூற்றுப் பாடல் புலப்படுத்துகின்றது. ஊர்ப் பொது நிலத்தின்கண் வாழும் பல்வேறு வகை மீன்களையும் பற்றித் தின்ற நாரையானது நன்செய் நிலத்தில் வளர்ந்துள்ள மருதமரத்தின் உச்சியிலே தங்குவதற்கு ஏற்ற இடமான மிகுந்த நீரை உடைய பொய்கையையுடைய புது வருவாய் மிக்க ஊரனே! யாம் மகப் பெற்றுள்ளோம். ஆகவே உனக்குப் பேய் போலத் தோன்றுகிறோம். அதனால் உன்னுடைய பிற பரத்தை மகளிர் தூய்மையும் நறுமணமும் கமழுகின்றோர் போலத் தோன்றுகின்றனர். அதனால் நீ இங்கு வர வேண்டாம் அவர்களிடத்தே தங்கிக் கொள்வாயாக! என வெகுண்டு கூறுகின்றாள்.

இதில் தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தினைத் தலைவி சாடுகின்றாள். பல வகையான மீன்களை உண்ட புலவு நாற்றத்தை உடைய நாரையானது கழனி மருதின் உச்சியிலே சென்று தங்குவது போலப் பல பரத்தையரோடு கலந்து உறவாடிக் களித்த பின் நீ இப்பொழுது சிறிது இளைப்பாற என்னுடைய இல்லத்திற்கு வந்திருக்கிறாய். இழிந்த புலால் உண்ணும் நாரைக்கு உயர்ந்த மருதின் உச்சி தங்குமிடம் போல மகவை ஈன்று ஒழிந்த என் இல்லம் உனக்கு தங்கும் இடம் போல ஆயிற்று என்று தலைவனின் பரத்தமையை இடித்துரைக்கின்றாள். இப்பாடல் தலைவனின் பரத்தமையைத் தலைவி நேரடியாக அவனுக்கு உணர்த்துவதாய் அமைந்துள்ளது.

வாளை மீனை உண்ணும் நீர்நாய்

பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனிடம் தலைமகள் அவனது பரத்தமையை இடித்துரைக்கின்றாள். இதனை

அரிபெய் சிலம்பி னாம்பலந் தொடலை
பிண்ட நெல்லின் உறந்தை யாங்கண்
………….     ………….               ………….    ……………….
………….      ………….               …………      ………………….
இனிமையெவன் செய்வது பொய்ம்மொழி யெமக்கே ”

என்ற நெடுந்தொகைப் பாடல் புலப்படுத்துகின்றது. பரல்கள் இடம்பெற்ற சிலம்பினையும் ஆம்பல் மலராகிய அழகிய மாலையினையும் அரத்தால் பிளக்கப் பெற்ற அழகிய வளைகளாற் பொலிந்த முன் கையினையும் அணிகலன் அணிந்த மூங்கிலையொத்த தோளினையும் உடைய ஐயை என்பாளுக்கு தந்தையாகியவன் மழைவளம் தரும் பெரிய வண்மையையுடைய தித்தன் ஆவான். அத்தகையவனின் நெற்குவியல்களை உடைய உறையூரிடத்தில் ஓடக்கோலும் நிலைத்து நில்லாத்தன்மையுடைய காவிரி நீர்ப்பெருக்கில், குழை முதலாகிய மாண்புறம் ஒளி பொருந்திய அணிகளையுடைய உன்னால் விரும்பப்பட்ட பரத்தையொடு வேழக் கரும்பாலாகிய வெள்ளிய தெப்பத்தினைக் கொண்டு அந்த இடத்து பூமி நாட்டாரது குளத்தினை நாடிச் சென்று விளையாடும்.

களிறும் பிடியும் போல முக மலர்ச்சியுற்று உயர்ந்த அழகிய மார்பிலுள்ள மலர்மாலையின் அழகுகெட நேற்று நீ புனலாடினாய்! ஆனால் இன்று இங்கு வந்து மார்பிலுள்ள அழகிய முலையில் தேமல் தோன்றிய குற்றமற்ற கற்பினையுடைய என் புதல்வன் தாயே என்று வஞ்சனை பொருந்திய பொய்ம்மொழியினை வணங்கிப் பல முறை கூறுகின்றாய்! என்னுடைய முதுமையை இகழாதே. இந்நிலைக்கு நான் காரணமல்ல என்று கூறுகின்றாள்.

பின்பு தீப்போலும் தாமரைப் பூக்களையுடைய நீர் மிகுதியாக உள்ள வயலில் அழகிய உட்டுளையுடைய வள்ளையின் மெல்லிய கொடிகளை உழக்கி வாளைமீன்களைத் தின்ற கூரிய பற்களையுடைய நீர் நாயானது முட்கள் பொருந்திய தண்டினையுடைய பிரம்பின் பழைய தூறுகளில் தங்கி இருக்கும். ‘மத்தி’ என்பனது ‘கழாஅர்’ என்ற ஊரினைப் போன்ற எனது இளமை கழிந்து மிகப் பழையதாயிற்று. எனவே உன் பரத்தமையை மறைக்க என்னிடம் உன் பொய்ம்மொழிகளைக் கூறாதே. எனக்கு உன் நிலை அனைத்தும் தெரியும். எனவே உனது பொய்ம்மொழிகள் எனக்கு இன்பம் செய்விக்காது அதை நீ புரிந்து கொள்வாயாக! எனக் கடிந்துரைக்கின்றாள்.

வாளைமீனை உண்டு களிக்கும் நீர் நாயைத் தலைவனது பரத்தமைக்குச் சான்று படுத்திக் கடிந்துரைக்கின்றாள்.

நாணமில்லாதவன்

நெல்லரியும் வினைஞர் தம் தொழிலை விடுத்து இழிந்த கள் வண்டியில் ஆழ்ச்சியைப் போக்குவதற்குச் சிறந்த கரும்பினைச் சிதைப்பது போல நீ இல்லறக் கடமைகளைச் செய்யும் ஒழுக்கத்தினைக் கைவிட்டு இழிந்த பரத்தையின் இன்பத்தை நுகர்வதற்குப் பண்பிற் சிறந்த தலைவியை வருத்துகின்றாய் எனத் தலைவனின் பரத்தமையைச் சாடி வாயில் மறுக்கின்றாள் தோழி. இதனை,

எரியகைந் தன்ன தாமரை யிடையிடை
அரிந்துகால் குவித்த செந்நெல் வினைஞர்
கட்கொண்டு மறுகுஞ் சாகாடளற்றுறின்
ஆய்கரும் படுக்கும் பாய் புனல் ஊர
ஆடுகொள் வியன்களத் தார்ப்பினும் பெரிதே” 

அகநானூற்றுப் பாடல்வழி புலவர் மிக அழகாய்ப் புலப்படுத்தியுள்ளார். நெருப்பு எரிவது போன்ற தாமரைப் பூக்களின் இடைஇடையே நெல்லரிவோர் நெல்லினை அரிந்து அரி அரியாகப் போட்டனர். உழைப்பின் களைப்புத் தெரியாமல் இருக்கவும் மகிழ்ச்சிக்காகவும் தங்களுக்குக் கள்ளினைக் கொண்டு வரும் வண்டி சேற்றில் பதிந்து கொள்ளக்கூடும் என அப்பாதைகளில் கரும்பினை அடுக்கி அதன் மீது வண்டியினை செலுத்தும் வளம் பொருந்திய ஊரனே உறுதியாக நீ மிகவும் நாணமில்லாதவனானாய்.

ஏனெனில் பொரி போலப் புன்கம்பூ மலரும்; அகன்ற நீர்த்துறை பொலிவு பெற ஒளி பொருந்திய நெற்றியினையும் நல்ல நறுமணம் வீசும் மலர்களைச் சூட்டிய பார்ப்பவர்க்கு இனிமை பயக்கும் கூந்தலையும் மாவடு போன்ற கண்ணினையும், முத்துவடம் அசையும் அழகிய முலையினையும் நுண்ணிய அழகின் நலத்தையும் உடைய ஒரு பரத்தையோடு நேற்று இடையூறு இல்லாமல் செல்லும் புனலில் நீ விளையாடினாய் எனப் பலர் கூறினர். ஆனால் அதை நாங்கள் பொய்யென புறத்தே மறைத்தோம். எனினும் எங்கள் செயலினையும் கடந்து அச்செயல் அலரானது.

அது எத்தகு தன்மையுடையது என்றால், மலர்ந்த பூமாலையினையும் தலையில் மை அணிந்த யானையையும் உடைய மறம் பொருந்திய போரில் வல்ல பாண்டியனது என்றும் நீங்காத விழவினையுடைய போர்க்களத்தில் தம்முள் ஒருங்கே இயைந்து எழுந்த சோழ,சேரர்களது கடல் போன்ற பெரிய படைகளைக் கலக்கும் பரிசு தாக்கி ஒலிக்கும் ஒலியினையுடைய முரசு ஒழிந்து கிடைக்க, அவர் பறந்து ஓடும் புறக் கொடையைக் கண்ட நாளில் வெற்றி கொண்ட பெரிய களத்தின் கண் எழுந்த ஆரவாரத்தினை விடப் பெரியதாக இருந்தது. அவ்வாறு பேரலர் தோன்றும் அளவிற்கு உனது புறத்தொழுக்கம் அமையலாயிற்று. எனவே நீ நாணமில்லாதவனானாய் எனத் தலைவனின் பரத்தமையின் இயல்பைத் தோழி கூறி வாயில் மறுக்கின்றாள்.

இந்நிலையை நோக்கும்போது அன்றைய காலகட்டச் சமுதாயச் சூழல் புலனாகின்றது. செல்வ வளத்தின் காரணமாக ஆடவர்கள் தீயொழுக்கம் புரியத் தலைப்பட்டனர். அத் தீய பண்பு நலனின் வெளிப்பாடு பிறர் அறிய நிகழ்ந்துள்ளது என்பதைப் பழம் பாடல்கள் பதிவு செய்துள்ளன.

கூடிக் களிக்கும் கொழுநன் மார்பு

தலைவி தன்னைப் பற்றி இழிவாகப் பேசக் கேட்ட பரத்தை அவளது தலைவனின் நிலையைக் கூறி நகையாடுகின்றாள். அதனை குறுந்தொகைப் பாடல் பதிவு செய்கின்றது.

கூந்தல் ஆம்பன் முழுநெறி யடைச்சிப்
பெரும்புனல்
வந்த இருந்துறை விரும்பி
…………         …………..          …………..      ………….
முனையான் பெருநிரை போலக்
கிளையொடு காக்கதன் கொழுநன் மார்பே”

பரத்தைத் தலைவியின் இயலாமையைக் கூறி அவளது தலைவனைத் தம்மிடமிருந்து காக்கும் தன்மை அவளுக்கு இல்லை. எனவே அவள் என்னைப் புறங்கூற எந்தத் தகுதியும் இல்லை என்று எள்ளுவது போன்று இப்பாடல் அமைந்துள்ளது.

கூந்தலில் ஆம்பலின் முழுநெறிப்புள்ள அறுப்பினைச் செருகிக் கொண்டு மிகுந்த நீர்வளம் பொருந்திய நீர்த்துறையை விரும்பி நானும் தலைவனும் நீர் விளையாட்டைச் செய்வதற்காக செல்வோம். தலைவி தான் அவ்விளையாட்டை அஞ்சுதலைக் கொண்டாளாயின், கொடிய போரில் தூசிப்படை அழியும்படி, மேலேறிச் செல்லும் பல வேல்களை உடைய ‘எழினி’ என்பவனின் போர்க்களத்திடத்தில் விளங்கும் பெரிய மன்னர்திரளைப் போல, அவளது சுற்றத்தாரோடு சேர்ந்து எம்மோடு கூடிக்களிக்கும் அவளது கொழுநன் மார்பைக் காப்பாளாக! எனக் கூறுகின்றாள்.

தொல்காப்பியக் கைகோளில் பரத்தமையானது களவொழுக்கம் ஒழுகாது, திருமணம் செய்து கொள்ளாமலும் காமத்திற்காக ஆடவருடன் கூடி வாழும் பெண்கள் என்று கூறப்படுகிறது. அதே போல் சங்க இலக்கிய மருதத்திணையில் தலைவன் கற்பு வாழ்க்கையில் மனைவியை விடுத்து பரத்தையுடன் சில நாள் தங்கி மகிழ்கிறான். இத்தகு பரத்தமை ஒழுக்கத்தை வெறுத்து ஊடல் கொள்கிறாள் தலைவி. மருதத்திணைக்குரிய உரிப்பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும் என்பதை தலைவியின் ஊடலுக்குத் தலைவனின் பரத்தமை ஒழுக்கமே காரணம் என்பதை இதன் மூலம் அறியலாம். இவ்வாறு மருதத்திணைப் பாடல்களில் பரத்தமை ஒழுக்கம் பெரிதும் குறிக்கப்படுகிறது.

*****

துணை நூல்கள்

தொல்காப்பியம் – இளம்பூரணர் உரை
தொல்காப்பியம் – தமிழண்ணல் உரை
நற்றிணை    – நியூ செஞ்சுரி வெளியீடு
குறுந்தொகை  – நியூ செஞ்சுரி வெளியீடு
ஐங்குறுநூறு  – நியூ செஞ்சுரி வெளியீடு
அகநானூறு  – நியூ செஞ்சுரி வெளியீடு
கலித்தொகை – நியூ செஞ்சுரி வெளியீடு
சங்க காலப் பெண்மை – பதிப்பு முனைவர் அன்னிதாமசு
தொல்காப்பியர் காலத் தமிழர் – புலவர் குழந்தை
சங்கத் தமிழர் வாழ்வியல் – மு.சண்முகம் பிள்ளை,உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
சங்க மரபு – தமிழண்ணல்

*****

கட்டுரையாளர் – முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
பாரதியார் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர்-46.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *