ஆண்டுகள் பலகடந்து குழந்தைவரம் வேண்டி

=====ஆவலாய்க் காத்திருக்கும் தம்பதிகள் பலராவர்.!

ஆண்டாண்டு காலமாய் ஆலயங்களின் முன்

=====அரிதான தவம்பூண்டு அரசமரத்தைச் சுற்றுவர்.!

சீண்டி விளையாட பிள்ளையிலை எனும்பெரு

=====குறைகொண்ட மாந்தர்கள் வாழுமிவ் வுலகில்..

வேண்டாமினிப் பெண்குழவி யென்றே..பிறவி

=====வருமுன் கருவையழிப்பார் தாய்மை அறியார்.!

 

 

கருவிலிருப்பது ஆணா? பெண்ணா? வென்பதை

=====கண்டுகொள்வது சட்டப்படி குற்றமாம்..வளர்ந்த

கருவைக் கலைப்பதுவும் குற்ற மென்பதைக்

=====கருத்தில் இருத்திக் கொளாத் தாய்மாருமுண்டு.!

கருவிலே தொலைந்த பெண் சிசுக்களைக்

=====கணக்கிட்டால் கலியுகத்தின் தீமை அறியலாம்.!

கருவில் தப்பிவிட்டாலோ?பின்கள்ளிப் பாலும்

=====கதிர்நெல்லும் கொலைக் குதவும் ஆயுதமாகும்.!

 

 

உருவில் பெண்ணாயினும் உளமதில் உரமுடன்

=====உருமும் புலியை விரட்டியவள் தமிழ்ப்பெண்.!

பெரும்பகுதி வாழ்வை வெள்ளையருக் கெதிராக

=====போராடிக் கழித்தவீர மங்கை வேலுநாச்சியார்.!

குருவாக அண்ணலையேற்று அவரின் விடுதலைக்

=====கொள்கைக்குத் தியாகம் செய்த அம்புஜம்மாள்.!

கருவில் தொலைந்த பெண் குழந்தையாகின்

=====காலமிவர்களை இன்றளவும் நினைவு கூறுமா..?

 

=========================================================

 

நன்றி:: தினமணி கவிதை மணி வெளியீடு::

 

நன்றி படம்:: கூகிள் இமேஜ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *