கருவில் தொலைந்த குழந்தை..!
ஆண்டுகள் பலகடந்து குழந்தைவரம் வேண்டி
=====ஆவலாய்க் காத்திருக்கும் தம்பதிகள் பலராவர்.!
ஆண்டாண்டு காலமாய் ஆலயங்களின் முன்
=====அரிதான தவம்பூண்டு அரசமரத்தைச் சுற்றுவர்.!
சீண்டி விளையாட பிள்ளையிலை எனும்பெரு
=====குறைகொண்ட மாந்தர்கள் வாழுமிவ் வுலகில்..
வேண்டாமினிப் பெண்குழவி யென்றே..பிறவி
=====வருமுன் கருவையழிப்பார் தாய்மை அறியார்.!
கருவிலிருப்பது ஆணா? பெண்ணா? வென்பதை
=====கண்டுகொள்வது சட்டப்படி குற்றமாம்..வளர்ந்த
கருவைக் கலைப்பதுவும் குற்ற மென்பதைக்
=====கருத்தில் இருத்திக் கொளாத் தாய்மாருமுண்டு.!
கருவிலே தொலைந்த பெண் சிசுக்களைக்
=====கணக்கிட்டால் கலியுகத்தின் தீமை அறியலாம்.!
கருவில் தப்பிவிட்டாலோ?பின்கள்ளிப் பாலும்
=====கதிர்நெல்லும் கொலைக் குதவும் ஆயுதமாகும்.!
உருவில் பெண்ணாயினும் உளமதில் உரமுடன்
=====உருமும் புலியை விரட்டியவள் தமிழ்ப்பெண்.!
பெரும்பகுதி வாழ்வை வெள்ளையருக் கெதிராக
=====போராடிக் கழித்தவீர மங்கை வேலுநாச்சியார்.!
குருவாக அண்ணலையேற்று அவரின் விடுதலைக்
=====கொள்கைக்குத் தியாகம் செய்த அம்புஜம்மாள்.!
கருவில் தொலைந்த பெண் குழந்தையாகின்
=====காலமிவர்களை இன்றளவும் நினைவு கூறுமா..?
=========================================================
நன்றி:: தினமணி கவிதை மணி வெளியீடு::
நன்றி படம்:: கூகிள் இமேஜ்