குறளின் கதிர்களாய்…(226)
செண்பக ஜெகதீசன்
ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி
னன்றாகா தாகி விடும்.
-திருக்குறள் -128(அடக்கமுடைமை)
புதுக் கவிதையில்…
தீய சொல்லொன்று பிறர்க்குத்
தீங்கிளைக்குமெனில்,
அவனது
நல்ல சொல் மற்றும்
செயலால் வரும்
நற்பயன்களும் தீதாகிவிடும்…!
குறும்பாவில்…
தீமைபயக்கும் சொல்லொன்றால்
தீயதாகிவிடும்,
நற்செயலால் வரும் நற்பலன்களும்…!
மரபுக் கவிதையில்…
சொல்லும் சொல்லில் ஒருசொல்லது
சோதனை யாகத் தீச்சொல்லாய்ச்
சொல்ல வியலா தீமைதந்தால்
சொல்லும் உண்மை இதுதானே,
நல்ல சொல்லுடன் செயலாலே
நம்மைச் சேரும் நற்பலன்களும்
எல்லை யில்லாத் தீயதாகி
எல்லாம் ஒன்றாய்த் தீதாகுமே…!
லிமரைக்கூ..
சொல்லொன்று தீமைபயக்கும் போதே,
நல்லசொல் செயலால் வரும்
நற்பயன்களும் ஆகும்பார் தீதே…!
கிராமிய பாணியில்…
வேணும் வேணும் வாழ்க்கயில
நல்லதத் தருகிற நாவடக்கம்..
சொல்லுற சொல்லுல
ஒருசொல்லு
கொடுஞ்சொல்லாகிக் கேடுதந்தா,
நல்ல சொல்லு
செயலால வரும் நல்லதுகூடக்
கேடாகிப் போவுமே..
அதால
வேணும் வேணும் வாழ்க்கயில
நல்லதத் தருகிற நாவடக்கம்…!
செண்பக ஜெகதீசன்…