பழகிப் போன குரல் – நவராத்திரி பாடல்கள்

0

-விவேக்பாரதி 

ஆயிரம் அலுவல்களுக்கு மத்தியிலும், கிடைத்துவிடும் ஏதோ ஒரு பயணப் பொழுதில், சில நிமிட இடைவெளிக்குள் ஒரு பாடல் நெஞ்சுக்குள் இசைக்கப்படுகிறது. யார் இசைக்கிறார்? எங்கோ கேட்ட குரலாய்…
பழகிப் போன குரலில் உள்ளே
   பாடல் கேட்கிறது! – ஆ
   பாரதி பாடுகிறாள் – மனம்
மெழுகாய் மறுகணம் மலையாய்க் கனக்க
   மெல்லிசை மீட்டுகிறாள்! – அடடா
   மேனியை மீட்டுகிறாள்!
வெள்ளைப் புடைவை தங்கப் புன்னகை
   வீணை கையளென – அவள்
   விரலில் தந்துபிகள்! – ஒரு
பள்ளத்தினில் நிறை வெள்ளத் துகளெனப்
   பரவிடும் பாடல்களில் – உள்ளே
   பலவித சங்கதிகள்
நெஞ்சில் சொற்களின் தனியரசாங்கம்
   நேர்வது தெரிகிறது – அவளின்
   நேர்முகம் தெரிகிறது! – உயிர்
தஞ்சம் என்றவள் தாளடி சேர்கையில்
   தர்மம் தெரிகிறது – அறுபடும்
   கர்மம் புரிகிறது
கல்விக் கதிபதி காக்கும் குணநிதி
   கவிதைப் பிரியையவள் – வாசக்
   கருமைக் குழலியவள்! – எழும்
சொல்வித்துக்குள் ககனம் நிரப்பி
   சொலிக்கும் மாயையவள்! – நேரில்
   தோன்றும் சாயையவள்!
ஒருநாள் தெரிவாள் ஒருநாள் மறைவாள்
   ஓயா விளையாட்டு! – சற்று
   ஓய்ந்தால் தலையாட்டு – என்றே
தருவாள் பாடலைப் பொழிவாள் அந்தத்
   தாயின் ஒருபாட்டு – காற்றில்
   தரைவரும் தாலாட்டு!!
-29.09.2019

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *