thamizh_Valluvar

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
       –திருக்குறள் –546 (செங்கோன்மை)

புதுக் கவிதையில்…

அரசனுக்கு
வெற்றி தருவது
பற்றிப் பகைவர் மேலெறியும்
வேல் அல்ல..
ஏந்தும் செங்கோலே,
அதுவும்
நீதிநெறி வழுவாது
நல்லாட்சி நல்குவதானால்…!

குறும்பாவில்…

வேந்தனுக்கு வெற்றி தருவது
வயவரை வீழ்த்திடும் வேலல்ல
வழுவாத செங்கோல்தான்…!

மரபுக் கவிதையில்…

எதிரியை வீழ்த்திடக் களத்தினிலே
     எறிந்திடும் கைவேல் தருவதில்லை
புதியதாய் வெற்றி எதனையுமே
   புவியினை யாண்டிடும் மன்னனுக்கே,
அதிகமாய் வெற்றியைத் தருவதெல்லாம்
  அரசன் ஏந்திடும் செங்கோலே,
அதுவும் நெறிமுறை தவறிடாத
  அரசது நல்லதாய் அமைந்தாலே…!

லிமரைக்கூ..

வெற்றியைத் தந்திடாது வேலே,
நல்லாட்சி தந்திடும் அரசனின் செங்கோலே
வெற்றிதரும் அனைத்திற்கும் மேலே…!

கிராமிய பாணியில்…

நல்லாயிருக்கணும் நல்லாயிருக்கணும்
அரசாட்சி நல்லாயிருக்கணும்,
நாட்டு மக்களுக்கு நல்லது செய்யிற
நல்லாட்சியா இருக்கணும்..

எதிரிமேல சண்டையில
எறியிற வேலால
வருவதில்ல ராசாவுக்கு வெற்றி,
மக்களுக்குத் துன்பமில்லாம
நல்லாட்சி செய்யிற
செங்கோலாலத்தான் வருமே
நெசமான வெற்றி..

அதால
நல்லாயிருக்கணும் நல்லாயிருக்கணும்
அரசாட்சி நல்லாயிருக்கணும்,
நாட்டு மக்களுக்கு நல்லது செய்யிற
நல்லாட்சியா இருக்கணும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.