குறளின் கதிர்களாய்…(294)

செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(294)
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
– திருக்குறள் –305 (வெகுளாமை)
புதுக் கவிதையில்…
தன்னைத் தான்
துன்பம் வராமல்
காத்துக்கொள்ள விரும்பிடில்,
தன் மனத்தில்
கோபம் வராமல்
காத்திட வேண்டும்..
அவ்விதம் காவாதபோது,
அச்சினம்
தன்னையே அழித்திடும்
துன்பங்கள் தந்தே…!
குறும்பாவில்…
தன்னைத்தான் காத்திடக் கோபம்
தன்மனதில் எழாமல் காத்திடவேண்டும்,
இலையேல் தன்னையேயழிக்கும் அக்கோபமே…!
மரபுக் கவிதையில்…
தனக்குத் துன்பம் வந்திடாமல்
தன்னை யொருவன் காத்திடத்தன்
மனதில் சினமது தோன்றிடாமல்
முயன்று காத்திடல் அவசியமே,
சினமதைக் காவா திருந்துவிட்டால்
சீக்கிரம் முடிவது வந்திடுமே,
சினமதே யழித்திடும் அவன்தனையே
சிதைத்திடும் துன்பம் பலதந்தே…!
லிமரைக்கூ..
சினமெழாமல் காத்திடவேண்டும் மனத்திலே
தனையொருவன் காத்திடவே, அவ்விதம் காக்காவிடில்
அழிந்திடுவான் அவனேயச் சினத்திலே…!
கிராமிய பாணியில்…
கோவப்படாதே கோவப்படாதே
எதுக்கும் கோவப்படாதே
மனசால எப்பவும் கோவப்படாதே..
தன்ன ஒருத்தன் காக்கணுண்ணா
தனக்கு மனசாலக்
கோவம்வராமக் காக்கணுமே,
அதுபோலக் காக்கலண்ணா
அந்தக் கோவமே
ஆபத்தாகி
அவன அழிச்சிடுமே..
அதால
கோவப்படாதே கோவப்படாதே
எதுக்கும் கோவப்படாதே
மனசால எப்பவும் கோவப்படாதே..!