இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 15

அவ்வைமகள்
15. எளிமையே வலிமையாய்
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்புப் பொறியாளரான ஜானதன் ஐவ், ஸ்டீவ் ஜாப்ஸிற்கு மிகவும் பிடித்தவர் – பணியில் ஒரு ஆத்ம நண்பர் போன்றவர் என்றும் கூறப்படுபவர். இவர் ஜாப்ஸின், ஆப்பிள் நிறுவனத்தின் எளிமை விதியைப் பற்றிக் கூறும்போது, எளிமையை அடைய, விடயங்களில் மிக ஆழமாகச் செல்லவேண்டும். எளிமை என்பது குறைத்துக் கொள்ளுவது (minimalist approach) அல்ல. எளிமை என்பது ஒழுங்கீனத்தை (clutter), அகற்றி ஒழுங்குபடுத்துவது அல்ல.
எடுத்துக்காட்டாக, நாங்கள் உருவாக்கும் பயன்பாட்டுப் பொருட்களில் மறைகள் (screws), பொத்தான்கள் (buttons), தேவையற்ற நகர்திரைகள் (navigational screens) இல்லாதவையாக அவற்றை எளிமைப்படுத்துவது என்பதைக் கவனிப்போம். இது வெறுமனே மறைகளையும், பொத்தான்களையும், நகர் திரைகளையும் கழற்றி வீசிவிடுவது அல்ல. அவ்வாறு செய்தால் அந்தப் பயன்பாட்டுப் பொருளே, பயன்படுத்தவியலாது போகும்.
மாறாக, மறை, பொத்தான், இவற்றால் இணைக்கப்படும் பொருட்களின் வடிவம், அமைப்பு, நீள, அகல, தடிமப் பரிமாணங்களோடு அவை எவற்றால் செய்யப்பட்டிருக்கின்றன, அவற்றின் கனம் என்ன, அடர்த்தி என்ன, உறுதித்தன்மை என்ன, மற்ற பாகங்களுடன் அவை இணைந்திருக்கும் பங்கு என்ன, பாங்கு என்ன, அந்த இணைப்பின் உண்மையான தேவை என்ன எனப் பல்வேறு விடயங்களைப் பற்றி, சரியாய் ஆழமாக முதலில் அறிந்துகொள்ளவேண்டும்.
அடுத்ததாக, மறையை நோக்கி விட்டால் அதற்கு பதிலாக என்ன செய்வது, பொத்தானுக்கு பதிலாக என்ன ஏற்பாட்டை செய்வது – எத்தனை நகர்திரைக்ள உள்ளன – அவை ஒவ்வொன்றின் பயனும் என்ன – இதில் எவற்றை நீக்க முடியும் , அதில் எவற்றை நோக்கினால், கருவி, எவ்விதப் பிரச்சனையுமின்றி வேலை செய்யும் என ஏகப்பட்ட விடயங்களை ஆழ்ந்து ஆய்வு செய்யவேண்டும்.
அடுத்து மாற்றுவழிகளாக, பற்பல பரிசோதனை முயற்சிகள் செய்யவேண்டும். கடைசியில் தான், சரியான மாற்றுஏற்பாடுகள் நம் மனத்தில் உதிக்கும்.
இவை யாவற்றையும் செய்தாலொழிய, மறைகள், பொத்தான்கள், தேவையற்ற நகர்திரைகள் இல்லாதவையாக எங்களின் கருவிகளை எளிமைப்படுத்துவது முடியாது.
ஐவ் சொன்னது போலவே, இவ்வாறாக, தங்கள் தயாரிப்பில் உருவாகும் ஒவ்வொரு கணினி சார் பயன்பாட்டுப் பொருளையும் ஜாப்ஸின் ஆப்பிள் நிறுவனம் தவம் இயற்றுவது போன்ற ஒரு கடும் சாதனையாக, முழுதான விசுவாசத்துடனும் தான் ஒவ்வொரு பொருளையும் வடிமைத்து வெளியிட்டது.
iMac, iPod, iPod nano, iTunes Store, Apple Stores, MacBook, iPhone, iPad, App Store, OS X Lion, Pixar film என ஒரு டஜன் பொருட்களை ஆப்பிள் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், “உங்கள் ஆப்பிள் பொருட்களில் உங்களுக்குப் பிடித்த ஒன்று எது என் ஜாப்ஸிடம் கேட்டபோது”, ஆப்பிள் தயாரிக்கும் பொருட்களில் உயர்வு தாழ்வில்லை – எதுவொன்றாயினும் இங்கே எளிமை – பயன்பாட்டு எளிமை என்பது நிரந்தரப் பண்பு என்றார். (Walter Isaacson (2012). Real Leadership Lessons of Steve Jobs, Harvard Business Review, April 2012, ,https://hbr.org/2012/04/the-real-leadership-lessons-of-steve-jobs)
இப்போது வாழ்ந்து கொண்டு வருகிற, லியோ பபௌடா கூறுவார்: “எளிமை என்பது இரண்டு விடயங்களில் இருக்கிறது: இன்றியமையாதது எது என்பதை அடையாளம் காணுவதிலும்; மற்றவற்றைப் புறந்தள்ளுவதிலும்” என்று.
இன்றியமையாததை அடையாளங்கண்டு கொள்வதிலும் மற்றவற்றைப் புறந்தள்ளுவதிலும் ஸ்டீவ் ஜாப்ஸிற்கு ஒரு பிரத்யேக ஆற்றல் இருந்தது. அவசியத்தை எந்த விலைகொடுத்தும் நிலைநிறுத்தியும் அநாவசியத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்தெறிந்தும் வாழ்ந்த அவரைப் பற்றிய விமரிசனங்கள் பலப் பல.
ஆனால், ஜாப் தன்மீது வீசப்பட்ட விமரிசனங்களை பயபக்தியோடும் கட்டாயம் அக்கறையோடும் கவனித்தவராகவே தெரிந்தார். விமரிசனங்களில், தனது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவுவதான எந்த ஒன்றையும், எத்தனைக் கடுமையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுவார் என்றே கூறப்ப்டுகிறது. இந்த மனோபாவத்தை அவர் வெகு சீக்கிரமே கற்றுக்கொண்டுவிட்டதாகவே பலரும் கருதுவர். ஆப்பிளில் அவருக்கு ஏற்பட்ட முதல் தோல்விக்குப் பிறகு – சறுக்கல்களையும் – சாடல்களையும் எவ்வாறு எதிர்திசைக்கு மாற்றுவது என்பதே அவரது நோக்கமாக இருந்ததாகவே பெரும்பாலோர் ஜாப்பின் மறைவுக்குப்பின் அவருக்குத் தருகிற மதிப்பீடாக உள்ளது.
கணினிப் பொருட்கள் புரட்சியில் ஜாப் தம்மீது வந்து விழுந்த விமரிசனங்களை, எத்தனை எளிமையாய் இலகுவாய்க் கையாண்டார் என்பதில் பல சுவாரசியங்கள் – ஆச்சரியங்கள் உண்டு.
மற்றவர்கள், பெரிய கணினியை சிறிதாக்கிகொண்டிருக்கும்போது, செல் போனைப் பெரிதாக்கிகொண்டு போனவர் ஸ்டீவ் ஜாப்ஸ். சொல்லப்போனால், ஜாப் செல்போனைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் – அப்போதிருந்த செல்போனைவிடச் சிறந்த ஒரு செல்போனைக் கண்டுபிடித்தார் – அதுதான் ஐபோன்.
புதுசாகக் கண்டுபிடிக்காத ஒன்றை பெரிய கண்டுபிடிப்பைபோல ஏன் அனைவரும் பேசுகிறார்கள் என்றால் – ஐபோன் வெறும் செல் போன் அன்று – அது ஒரு தளம் (platform). அந்தத் தளம் உருவாகிய அந்தக் கணத்தில், அத்தளத்தில், மற்றவர்கள் தமது அரங்குகளை நிறுவ வந்தார்கள். “App” எனப்படும் அரங்க வாயில்கள் ஐபோனுக்காகவென்றே மடமடவென உலகெங்கிலுமிருந்த பல்லோராலும் உருவாக்கப்பட்டன. சனவரி 9, 2007 ல் வெளிவந்த ஐபோனுக்கு, 2017 மத்தியில், இரண்டு மில்லியன் அரங்க வாயில்கள் உருவாக்கப்பட்டுவிட்டன என்றால், அதன் பிரம்மாண்ட வளர்ச்சியை உய்ந்துணரமுடியும்.
தன்னைச் சுற்றியுள்ள, கணினி ஜாம்பவான்கள் முதல் – பல்வேறு சிறு – குறு கணினி ஆர்வலர்களும் கூட, கணினி எனும் களத்தில், காற்பதம் ஊன்றி நின்று வளர ஐபோன் ஒரு மாபெரும் உந்துசக்தியாய் விளங்கியது. இத்தகையப் புரட்சி வேறெவருக்கும் நினைந்தும் பாரா விடயமாய் இருந்தது என்பது உண்மையே.
அதேபோன்று, Digital Music எனப்படும் கணினிசார் மின்னிசையை — ஐடியூன் – வித்திட்ட கர்த்தாவாக, ஸ்டீவ் ஜாப்ஸ் கருதப்படுவதை அறிகிறோம். பார்க்கப்போனால், மின்னிசையைக் கண்டுபிடித்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ் அல்லர். 1979 லேயே கேன் க்ரேமர் (பிரிட்டிஷ் விஞ்ஞானி) mp3 மின்னிசை இசைப்பானின் முன்னோடியைக் கண்டுபிடித்து வைத்திருந்தார். பிரான்டன்பர்க் எனும் ஜெர்மானிய விஞ்ஞானி 1987 ல், அதை அடுத்தநிலைக்கு எடுத்துச் செல்ல, இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஓரளவு நல்லநிலைக்கு மின்னிசை இசைப்பான் தொழில்நுட்பம் வளர்ந்து இருந்தது.
இந்நிலையில் மின்னிசை இசைப்பானை ஐடியூனில் (ஏப்ரல் 2003) போட்டது ஸ்டீவ் ஜாப்ஸின் புரட்சி. ஒரு ஆயிரம் பாடல்களை, கைக்கடக்கமான ஐபாடில் ஏற்றிக்கொண்டு, வேண்டும்போதெல்லாம் இசைவெள்ளத்தில், மிதந்து மகிழும்படியான வசதி இதனால் வந்தது.
ஆனால், இந்த ஐடியூனின் வசதியை இசை உலகம் வரவேற்கவில்லை. ஜாப்ஸ், இசையுலகின் எதிரியாக விமர்சிக்கப் பட்டார். ஒரு பாடலை ஐடியூனில் இறக்கிக்கொள்ள 99 சென்ட் என்ற விலையை ஜாப்ஸ் நிர்ணயித்திருந்தார். ஒருவர் குறைந்த பட்சம் பன்னிரண்டு பாடல்களை ஐடியூனில் இறக்கிக் கொண்டாலொழிய, இசை உலகு லாபம் காணமுடியாது, பன்னிரண்டு பாடல்களை ஐடியூனில் இறக்கிக் கொள்ள எவரே முன்வருவார் என்பதே இசை உலகின் வருத்தம். ஜாப்ஸோ, வெறும் பன்னிரண்டு பாடல்களா? அதைவிடவும் கூடுதலாகவே பாடல்கள் இறக்கிக் கொள்ளப்படுவது கண்டிப்பாய் நடக்கும் என்றார். அவர் சொன்னபடியே நடந்தது.
ஐடியூனால் இசை உலகு நிறைத்த நிறைவை அடைந்ததோடு மட்டுமல்லாது இசையில் புதுப்புது பாணிகளும், புதுப்புது பாடல்கள், புதுப்புது பாடகர்கள் என வளரலானது. இன்று, ஆல்பங்களை விட, தனிப்பாடல்கள் அபரிமித வளர்ச்சியை எட்டியுள்ளன. இது ஐடியூனின் சாதனை.
இந்த ஏற்பாட்டால், ஐடியூனின் லாபமும் வளர்ந்து கொண்டே போகிறது. இவ்வளர்ச்சியால், ஐடியூன், இன்று வணிக உலகின் முன்மாதிரியாகத் திகழ்கிறது.
இசை எனும் சாகாக் கலையை, கணினி எனும் , இன்றியமையாத் தொழில்நுட்பத்தோடு ஜாப்ஸ் சேர்த்தது மிகப்பெரிய ஜாலம். இவ்விரண்டையும் ஒருசேர வளருமாறு செய்த ஜாப்ஸின் புரட்சியை மாபெரும் வெற்றி என்றே வணிக மாறும் தொழில் நுட்ப உலகங்கள் பறைசாற்றுகின்றன.
ஆனால் இந்த வளர்ச்சி ஒரே நாளில் வந்து விடவில்லை, நிறைய முயற்சிகள் – விமரிசனங்களை எல்லாம் ஜாப்ஸ் கடக்க வேண்டியதாயிருந்தது ஜாப் முதலில், ஐபாட் (ipod) வெளியிட்டபோது – அது கனமாக இருந்தது – அதன் கனத்தைக் குறைசொல்லிப் பல்வேறு திசைகளிலிருந்தும் எதிர்மறை விமரிசனங்கள் வந்தன.
ஆனால் சீக்கிரத்திலேயே, அவர்கள் வாயடைக்கும்படியாக ஐபாட் நேனோவை வெளியிட்டார் ஜாப்ஸ்.
அடுத்து, நேனோ நீளமாய் இருக்கிறது என்று விமரிசனம் எழுந்தது – ஜாப்ஸ் ஷஃப்ளை வெளியிட்டு அவர்கள் வாயை அடைத்தார்.
அதேபோன்று, ஜாப்ஸ், ஐபேடை (ipad) வெளியிட்டபோது – போன், லேப் டாப், டெஸ்க் டாப் இருக்கிறபோது ஐபேட் எதற்கு என்று கடுமையான விமரிசனம் எழுந்தது. ஆனால் சீக்கிரத்திலேயே, அவர்கள் வாயடைக்கும்படியாக, பர்சுக்குள் வைக்கும்படி மினி ஐபேடை வெளியிட்டார் ஜாப்ஸ்.
இவ்வாறு ஒவ்வொரு விமரிசனமும் ஒரு புது படைப்பாய் மாறிய விந்தையை உலகே கண்டு வியந்தது என்றால் அது மிகையில்லை.
பிரபல எழுத்தாளரும் திரைக்கதை வசன கர்த்தாவுமான ரே ப்ரேட்பரி (Ray Bradbury) விமரிசனங்களைப் பற்றிக் கூறும்போது, மனிதர்கள் எவரை நேசிக்கிறார்களோ, அவர்களை விமரிசிப்பார்கள் என்பார். ஒருவேளை ஜாப், தமது விமர்சனக் கர்த்தாக்களை ப்ரேட்பரியின் பார்வையில் பார்த்தாரோ என்றும் கூட நம்மை எண்ணவைக்கின்றன அவரின் செயல்கள். ஜாப்ஸின் மறைவுக்குப் பிறகு, அவரைப் பற்றி பேசுபவர்கள், அவர் விமரிசனங்களை மனப்பூர்வமாய் வரவேற்றார் என்றே சொல்கிறார்கள்.
விமரிசனங்களும் ஜாப்சும் என்று பேசும்போது, நாம் இன்னொரு கண்ணோட்டத்திலும் இதைப் பார்க்க வைப்பதான நிகழ்வுகளும் உண்டு.
அதனைப் புரிந்துகொள்ள பிராங்க்ளின் ஜோன்ஸ் விமரிசனங்கள் பற்றி என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்பது நல்லது “விமரிசனங்கள் உறவினர்களிடமிருந்தோ நண்பர்களிடமிருந்தோ, எதிரிகளிடமிருந்தோ வருவதாக இருந்தால், அதை எவரின் மனமும் ஏற்றுக்கொள்ளாது” என்று.
பொதுவாக, நம்மில் பெரும்பாலோர், இவ்வாறானவர்களே. விமரிசனங்களைக் கண்டு சினமுறுவது – வெகுண்டெழுவது – அல்லது உள்ளுக்குள்ளேயே புகைந்து குமுறுவதுமமான வழக்கம் நம்மில் வெகுபலருக்கு உண்டு. எனவே ஜாப்சிற்கு இவ்வாறான உன்ர்ச்சிக் கொந்தளிப்பு இருந்து, ஒவ்வொரு விமரிசனத்துக்குப் பிறகும், தனது பதிலாக, தனது திறமையை நிலைநாட்ட எத்தனித்தாரோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.
நமது இந்தக் கண்ணோட்டத்திற்கு சார்பாக சில செய்திகளும் ஜாப்ஸின் வாழ்வில் உண்டு; அவற்றைக் கவனித்துவிட்டு மேலே தொடர்வோம். ஸ்டீவ் ஜாப்ஸின் சகோதரி, மோனா சிம்ப்சன் “He was an intensely emotional man,” என்கிறார். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை வடிவமைப்புப் பொறியாளரான ஜானதன் ஐவ்; “He’s a very, very sensitive guy” என்கிறார்.
ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரியாக இருந்த ஜான் ஸ்கல்லி, ஸ்டீவ் ஜாப்ஸ் அழுது கரைந்திருக்கிற பல தருணங்களை நினைவு கூர்கிறார். ஸ்கல்லியின் முற்று கீழே தரப்பட்டுள்ளது. (Business Insider, March 31, 2016 https://www.businessinsider.com/steve-jobss-crying-reveals-his-emotional-side-2016-2)
“He focused his emotions entirely on the products that he was building,” Sculley says. “He took on overwhelming amounts of hard work and was willing to sacrifice things in his personal life because we wanted to create products that people would love and he was very emotional about that.”
அளவிடமுடியாத கடின உழைப்பு தந்தும், சுய வாழ்வில் பலவற்றைத் தியாகம் செய்தும், கணினிசார் கருவிகளை உருவாக்குவதில் முழுமூச்சுடன் ஈடுபட்ட ஜாப்ஸினுள், பெருத்த உணர்ச்சிப் பிரவாகம், இருந்ததை ஸ்கல்லி உறுதியிட்டுக் கூறுவதை கவனியுங்கள்.
“இவ்வுலக மக்கள் நேசிக்கும் பொருட்களை மட்டுமே நான் செய்யவேண்டும் என்பதான உணர்ச்சி வேள்வி அது” என்பதை ஸ்கல்லி வாயிலாக நாம் அறியும்போது நம்முள் தோன்றும் புனித உணர்வை நம்மால் விவரிக்க இயலவில்லை.
சமூக நேசர்கள் மட்டுமே புரட்சியை விளைவிக்கிறார்கள் என்று ஏற்கனவே பார்த்தோம், சமுதாயத்தின் குரலுக்கு, செவிசாய்க்க இசைகிறவன்(ள்) எவனோ(ளோ), அவர் அச்சமுதாயத்தின் தேவையை உணர்ச்சி பூர்வமாக அறிந்துகொண்டவராய், அத்தேவையை நிறைவு செய்கிறபோது மட்டுமே சமூக நேசனாகிறார். ஆக சமூக நேசம் என்பது ஒரு புரட்சியாளனுக்கு முதலீடு மட்டுமல்ல – விளைச்சலும் கூட.
ஊற்றிருந்து உள்ளம் களிப்போராய், சதாசர்வ காலமும், சமூக எண்ணத்துடன் – சமூக நேசகர்களாக, புரட்சியாளர்கள் வாழ்ந்து போவதன் இரகசியம் இதுதான்!
(மேலும் பேசுவோம்)