காங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை, இலங்கை

இந்திய நடுவண் அரசின் கப்பல் துறை அமைச்சரின் வழிகாட்டலுக்கு அமைய, காரைக்காலில் இருந்து காங்கேயன்துறைக்குச் சைவ வழிபாட்டு பயணிகளுக்காகக் கப்பல் விடுவதாகப் புதுச்சேரி முதலமைச்சர், வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை வழி புதுச்சேரிச் சட்டசபையில் அறிவித்தார்.

புதுச்சேரி முதலமைச்சரின் நிதி நிலை அறிக்கையின் 145ஆவது பந்தி

இன்று நண்பகல் இலங்கைச் சைவர்களின் சார்பில் புதுச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களுக்குத் தொலைப்பேசியில் வாழ்த்துச் செய்தியைக் கூறினேன், நன்றியைக் கூறினேன்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இலங்கையிலும் இந்தியாவிலும் இக் கப்பல் சேவையைத் தொடங்குமாறு ஈர் அரசுகளையும் வலியுறுத்திக் கடிதங்கள் கொடுத்து வருகிறேன்

இலங்கை அரசு, வடமாகாண மேதகு ஆளுநர் றெசினால்டு கூரே காலத்திலேயே இக் கப்பல் சேவைக்கு ஒப்புதல் வழங்கி இருந்தது.

இலங்கைக் கடற்படைத் தளபதி பல முறை என்னை அழைத்தார். கப்பல் சேவை எப்பொழுது தொடங்குகிறது நாங்கள் உதவுகிறோம் என ஒவ்வொரு முறையும் கூறியுள்ளார்.

அவ்வாறு அக்காலத்தில் குடியரசுத் தலைவரின் முதன்மைச் செயலாளராக இருந்த திரு. ஒஸ்டின் பெர்ணாந்து, இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனத்துடனும் இந்தியத் தூதருடனும் நேராகப் பேசி, இக் கப்பல் சேவையை விரைவாகத் தொடங்குங்கள் என ஆணையிட்டிருந்தார்.

இதையடுத்து நான் சென்னைக்கும் தில்லிக்கும் பல முறைகள் சென்றேன்.

சென்னையில் என் வேண்டுகோளை ஏற்ற தமிழக அரசின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக அரசின் ஒப்புதலைத் தில்லிக்கு வழங்கியிருந்தார்.

அக்காலத்தில் மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் திரு. இல கணேசன் அவர்கள், என்னை வெளிநாட்டு அமைச்சுக்கும் கப்பல் சேவை அமைச்சுக்கும் அழைத்துச் சென்று அவர்கள் ஒப்புதல் வழங்கக் காரணமாயிருந்தார்.

அவ்வாறு இந்தியப் பிரதமர் அலுவலகத்தின் ஆலோசகராக இருந்த திரு. எஸ் குருமூர்த்தி அவர்கள், பிரதமர் அலுவலகத்தில் ஒப்புதல்களைப் பெற உதவினார்.

சென்னையிலும் தில்லியிலும் உள்ள இந்து சமய அமைப்புகள், சார்பாளர்கள் யாவரும் இக்கருத்தை இந்திய அரசுக்கு எடுத்துக்கூறி வலியுறுத்தினார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர், புதுச்சேரிக்கு வந்தார். காரைக்கால் துறைமுகத்தைப் பார்வையிட்டார். கப்பல் சேவை தொடங்குவதற்கான வழிகாட்டல்களைக் கொடுத்திருந்தார்.

இந்த வாரம் புதுச்சேரி சட்டசபையில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாண்புமிகு முதலமைச்சர் நாராயணசாமி, மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு அமைய காரைக்காலிலிருந்து காங்கேயன்துறைக்குக் கப்பல் சேவையைத் தொடங்குவதற்கான உயர்மட்டக் குழுவை அமைத்து இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *