செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்...(315)

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.

– திருக்குறள் – 580 (கண்ணோட்டம்)

புதுக் கவிதையில்...

யாவரும் விரும்பும்
நாகரிகமான கண்ணோட்டமாம்
இரக்கத்தை
விரும்பிக் கைக்கொள்பவர்,
தம்முடன் பழகியோர்
நஞ்சிடக் கண்டும்
மறுக்காதே
அதையுண்டு அமைவர்…!

குறும்பாவில்...

நம்பிடும் நண்பர் உணவாய்
நஞ்சு கொடுப்பினும் விருப்புடனதை உண்பார்,
நாகரிகமாம் கண்ணோட்டம் கொண்டவர்…!

மரபுக் கவிதையில்...

எவரும் விரும்பும் நாகரிகம்
ஏற்றம் மிக்கக் கண்ணோட்டம்,
உவந்தே யதனை விரும்புபவர்
உயர்ந்த குணத்தைக் கொண்டவரே,
சுவைக்கும் உணவில் நண்பன்தான்
சூழ்ச்சி கொண்டே நஞ்சிடினும்
அவனுக் காக யிரக்கத்தால்
அதனை வாங்கிக் குடிப்பாரே…!

லிமரைக்கூ..

உணவில் கலப்பர் நஞ்சும்
அதையும் விரும்பி உண்பார், அவரிடம்
இரக்க குணமே மிஞ்சும்…!

கிராமிய பாணியில்...

எல்லாருக்கும் வேணும்
நல்லகொணமாம் எரக்ககொணம்,
அதுவே
நாகரிகமான நல்லகொணம்..

எல்லாரும் விரும்பும்
நல்ல கொணமான
எரக்கத்த விருப்பத்தோட
ஏத்து நடக்கிற
ஒசந்த மனுசனுக்கு,
கூட உள்ளவன்
ஒணவோட வெசத்தக் குடுத்தாலும்
வேண்டாமுண்ணு சொல்லாம
அத அவன்
வாங்கிக் குடிப்பானே..

அதுபோல
எல்லாருக்கும் வேணும்
நல்லகொணமாம் எரக்ககொணம்,
அதுவே
நாகரிகமான நல்லகொணம்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *