Tag: முனைவர் அ.மோகனா

  • தேமாவில் ஆன திருமாலை

    -முனைவர் அ.மோகனா

    பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
    அச்சுதா வமரரேறே யாயர்தங் கொழுந்தே யென்னு
    மிச்சுவை தவிர யான்போய் யிந்திர லோக மாளுளு
    அச்சுவை பெறினும் வேண்டே னரங்கமா நகரு ளானே

    – தொண்டரடிப் பொடியாழ்வார்

    மார்கழி! திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் உகந்த மாதமாகக் கருதப்படுவது. திருப்பாவையும், திருவெம்பாவையும் தெருக்கள் தோறும் முழங்கக் கூடிய மாதமிது. மாதங்களில் சிறந்த மாதமாகக் கருதப்படுவதும் மார்கழிதான். இம்மாதத்தின் கேட்டை நட்சத்திர நாளில் (ஜனவரி.4 வெள்ளிக்கிழமை) அவதரித்தவர் விப்ரநாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட தொண்டரடிப் பொடியாழ்வார்.

    பக்தி இயக்கத்தின் தோற்றமானது அக்கால மக்கட் சமூகத்தின் வாழ்நிலையில் மட்டுமன்றி இலக்கிய வகைமைகளுககுள்ளும் பல புது மாற்றங்களை ஏற்படுத்திய எனில் அது மிகையாகாது. யாப்பியல் நோக்கில் பல்வேறு புதுமுயற்சிகளைப் பக்தி இலக்கியங்களில் காணமுடியும். குறிப்பாக ஆழ்வார்களின் பாசுரங்கள். திருமாலோடு தாங்கள் பெற்ற அனுபவங்களின் நேரடி பதிவாகவே ஆழ்வார்களின் பாசுரங்கள் அமைந்துள்ளன. உள்ளத்தில் உருக்கத்தையும் நெகிழ்வையும் ஏற்படுத்துபவை இப்பாசுரங்கள். ‘ஆழ்வார்’ என்பதற்கு, “இறைவனுடைய கல்யாண குணங்களாகிய அமுத வெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபடுவோர் என்றும், இறைவனுடைய வடிவழகில் ஈடுபட்டு அழுந்தினவர்களாதலின் ஆழ்வார்கள் எனப்பட்டனர் என்றும், மக்கள் படும் துன்பத்தைக் கண்டு பொறாமல் அத்துக்கத்தில் அழுந்தினவர்களாதலின் ஆழ்வார்கள் எனப்பட்டனர் என்றும் பல வகையான பொருட்களைச் சான்றுகளோடு விளக்கிச் செல்கின்றார் ம.பெ.சீனிவாசன் (2017:6). தமிழ்இலக்கிய வரலாற்றில் தவிர்க்க இயலாத வகிபாகத்தைப் பெற்றமைபவை பக்தி இலக்கியங்கள். அவற்றுள் திருமாலின் தொண்டர்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு தொண்டர்களின் அடிப்பொடியாக வாழ்ந்த விப்ரநாராயணனின் பாடல்கள் தன்னிகரற்ற பாடல்களாக ஒளிர்பவை.

    சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் பிரபவ வருடம் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர் இவர். ஆழ்வார்களின் வரிசையில் பத்தாமவராக இடம்பெற்றவர். திருமாலின் வனமாலை அம்சமாகப் பிறந்தவர். திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அத்தல இறைவனாகிய அரங்கனுக்குப் பூமாலை சாற்றுவதை வாழ்நாள் பணியாகச் செய்தவர். பூமாலை மட்டுமன்றிப் பாமாலையாலும் அரங்கனைப் பூஜித்தவர். தெளிந்த நீரோடையாகச் சென்று கொண்டிருந்த இவர்தம் பக்திப் பெருமித வாழ்வில் சோழ நாட்டுக் கணிகையான தேவதேவியின் இடையீடு ஏற்பட்டது. அனைத்தையும் அரங்கனின் வடிவமாகக் கண்ட விப்ரநாராயணன் தேவ தேவியின் மீதான காதலில் மெய்ம்மறந்து செல்வங்களை இழந்தார். இவரைச் சோதிக்க கருதிய திருமால் சிறுவனின் வேடமிட்டுத் தன் கோயிலின் பொன்வட்டிலைத் தேவதேவியிடம் கொடுக்க பழி விப்ரநாராயணனின் மேல் விழுகின்றது. முடிவில் அரங்கனால் உலகத்திற்கு உண்மை அறிவிக்கப்பட்டு இறுதிவரை அரங்கனுக்காக தம்மை அடிமை பூண்டார். மேலும் அரங்கனின் அடியார்களுக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் விப்ரநாராயணன். அன்றுமுதல் தொண்டரடிப் பொடியாழ்வாரானார்.

    இவர் அரங்கனின் மீது பாடிய திருமாலை, திருப்பள்ளி எழுச்சி ஆகிய பாசுரங்கள் முதல் ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. மாலை, பள்ளி எழுச்சி ஆகிய ப்ரபந்த இலக்கிய வகைமைகளுக்கு இவர்தம் பாடல்களை முன்னோடியாகக் கருதமுடியும். முன்னர்க் குறித்தபடி ஆழ்வார்கள் தங்களுக்குத் திருமாலோடு ஏற்பட்ட அனுபவப் பதிவுகளையே பாசுரங்களாக உள்ளம் உருகப் பாடியுள்ளனர். இந்தப் பின்புலத்தில் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலை அவர் திருமாலுக்குச் செய்துவந்த கைங்கரியத்தின் விளைவாக எழுந்தது. பூமாலையோடு சேர்த்து அவரால் அளிக்கப்பட்ட பாமாலைதான் திருமாலை. அவ்வாறே பெண்மயக்கமான இருளில் விழுந்து திருமாலின் அருளால் மீண்டு ஒளியை அடைந்த அவர் உறங்கும் திருமாலை எழுப்பும் திருப்பள்ளி எழுச்சியினைப் பாடியுள்ளார். அதன்மூலம் இருள்கடந்து ஒளிபெற்ற தம் நிலையினையும் ஊடுபொருளாக்கியுள்ளார். இவருடைய பாடல்கள் பொருண்மையில் மட்டுமன்றி வடிவத்திலும் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன.

    தமிழ் யாப்பியல் மரபில் சீர்களை தேமா, புளிமா உள்ளிட்ட வாய்பாட்டு அலகுகளால் குறிப்பர். தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலைப் பாசுரப் பாடல்கள் யாவும் தேமாச் சீரினால் முடிகின்ற அடிகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஈரசைச் சீர்களாலான பாடலடிகள் ஓசை நயமும், பொருட்செறிவும் கொண்டவைகளாக அமைந்து பாடுவதற்கு இன்பம் அளிப்பவை. தொண்டரடிப் பொடியாழ்வாரின் பாடல்களும் இத்தன்மைத்தாகவே அமைந்துள்ளன. திருமாலைக் கண்முன் காட்சிப்படுத்துகின்ற ‘பச்சைமா மலைபோல் மேனி…’ என்று தொடங்கும் திருமாலைப் பாடல் ஒலிக்காத வைணவத் தலங்களைக் காணமுடியாது. இப்பாடலின் அமைப்பினை நோக்கும்போது அவை ஒரு விளச்சீரினைத் தொடர்ந்து மாச் சீர் மற்றும் தேமாச் சீரினைக் கொண்டமைகின்றன. பாசுரத்தில் உள்ள நாற்பத்தைந்து பாடல்களும் இவ்வமைப்பு மாறாமல் பாடப்பட்டுள்ளமை தனிச்சிறப்பு.

    பெண்டிராற் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு
    உண்டிராக் கிடக்கும்போ துடலுக்கே கரைந்து நைந்து
    தண்டுழாய் மாலை மார்பன் றமர்களாய்ப் பாடி யாடித்
    தொண்டுபூண் டமுத முண்ணாத் தொழும்பர்சோ றுகக்கு மாறே (1:876)

    தம் சுய அனுபவத்தையே இப்பாடலில் கூறியுள்ளார் தொண்டரடிப் பொடியாழ்வார். இவ்வாறு உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்துவரும் உணர்வுகளை வார்த்தைகளாக்கும் அதே நேரத்தில் அவை குறிப்பிட்ட வடிவத்தோடும் வடிக்கப்படுகின்றன. இது தமிழ்ப் பக்தி இலக்கியங்களின் தனிச்சிறப்பு. இவ்வடிவத்தின் இலக்கணத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய தி.வீரபத்திர முதலியாரின் ‘விருத்தப்பாவியல்’ கீழ்க்கண்டவாறு விளக்கியுள்ளது.

    ‘சீர்வளர் கமலச் செவ்வி திகழ்தரு வதனக் கொண்மூக்
    கார்வள மலிந்த கூந்தற் கன்னலுங் கசக்கு மின்சொ
    லேரிளங் கொங்கை மின்னே ரிடையெழிற் கொடியம் பேதாய்
    சீர்விள மாச்சீர் தேமாச் சீரிணைந் திரட்டு மீங்கே’ (வி.பா.முதற்படலம்:1)

    பிற்காலத்தில் இந்த அறுசீர் ஆசிரிய விருத்த வடிவம் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றது. கம்பராமாயணம், பெரியபுராணம் உள்ளிட்ட காப்பியங்களில் இவ்வடிவம் பெரிதும் பயன்படுத்தப் பெற்றுள்ளது. பெரும்பாலான விருத்த வடிவங்களுக்கு இலக்கணம் வகுத்த நூலாக விருத்தப்பாவியல் உள்ளது. இருப்பினும் இதில் இலக்கணம் பெறாத வடிவங்களும் பக்தி இலக்கியங்களில் உள்ளன. இவர்தம் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் மூன்றுவிளச்சீர்களைத் தொடர்ந்த மாச்சீரினால் முடியும் அமைப்பினைப் பெற்றுள்ளன. சம்பந்தர், சுந்தரர் தேவாரப் பாடல்களில் இவ்வமைப்பிலான பாடல்களைக் காணமுடியும்.

    கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன விவையோ
    கதிரவன் கனைகடன் முளைத்தன னிவனோ
    துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித்
    துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா
    தொடையொத்த துளவமுங் கூடையும் பொலிந்து
    தோன்றிய தோட்டொண்ட ரடிப்பொடி யென்னு
    மடியனை யளியனென் றருளியுன் னடியார்க்
    காட்படுத் தாய்பள்ளி யெழுந்தரு ளாயே (1:926)

    தொடர்கின்ற விளச்சீர்கள் பாடல்களுக்குச் சந்த ஓசையினைத்தரக் கூடியவை. தொண்டரடிப் பொடியாழ்வாரின் இப்பாடல்களைப் பாடித்திருமாலின் அருளினைப் பெறுவதோடு இதன் இலக்கிய வடிவச் சிறப்பினையும் கவனித்து இன்புற வேண்டியது அவசியம்.

    துணை நின்ற நூல்கள்

    1. ஆழ்வார்கள் அருளிச் செயல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (ஆய்வுப் பதிப்பு), சீனிவாசன், ம.பெ., (ப.ஆ.), தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2017.
    2. Viruttappaviyal or The Prosody of Tamil viruttams, T.Viabadura mudaliar. 1938

    கட்டுரையாளர்

    முனைவர் அ.மோகனா
    உதவிப் பேராசிரியர்
    தமிழ்த்துறை
    தியாகராசர் கல்லூரி, மதுரை

    Share
  • ஆடிப்பாவைப் போல: சூழும் பிரதிபிம்பங்கள்

    முனைவர் அ.மோகனா
    உதவிப் பேராசிரியர்
    தமிழ்த் துறை
    தியாகராசர் கல்லூரி, மதுரை


    பிரதி என்றால் பல்வேறு செய்திகள் போகும் தந்திக் கம்பி எனலாம். வாழ்த்துச் செய்தியும் போகும். மரண அறிவிப்பும் போகும். நாவல் பிரதியாகப் பார்க்கப்படுகையில் அதன் அழகியல் தள்ளிப் போடப்படுகிறது. அழகியலாகப் பார்க்கப்படுகையில் அதன் பிரதியியல் (அதாவது மொழி, வடிவம், செய்தி, உத்தி) என்று எந்திரத்தின் பல பாகங்கள் போல தன்மைத் தள்ளிப் போடப்படுகிறது.
    – தமிழவன்

    சமகால அரசியலுடன் நெருங்கிய தன்மை கொண்டவை நவீனப் புனைவுகள். வடிவத்திலும் கோட்பாட்டு அளவிலும் அவை புதிய தன்மைகளை உட்செரித்துக் கொண்டிருந்தாலும் பேசும்பொருளில் சமகால யதார்த்தத்தை அவற்றால் தவிர்க்க இயலுவதில்லை. 2017 ஆகஸ்டில் தமிழவனின் ‘ஆடிப்பாவைபோல’ நாவல் வெளியானது. அந்நாவல் குறித்த நிகழ்வுகளும் தொடர்ந்து ஒருங்கிணைக்கப்பட்டன. தற்பொழுது ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு அந்நாவலுடனான பயண அனுபவத்தை நோக்கும்போது இன்றும் இந்நாவலைப் பேச வேண்டிய தேவை இருப்பதனை உணரமுடிகின்றது.

    தமிழவனின் ‘ஆடிப்பாவைபோல’ நாவலைப் பிரதியாகக் காணும்போது பெறப்படுகின்ற அனுபவத்திற்கும் அதனை அழகியலாகப் பார்க்கும்போது பெறுகின்ற அனுபவத்திற்குமான ஊடாட்டம் குறிப்பிடத்தக்கது. இவ்விரு நிலைகளிலும் அணுக வேண்டிய தேவை இந்நாவலுக்கு உண்டு. இந்நாவலைப் பிரதியாக அணுகும்போது இரண்டு காலங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று பிரதியின் காலம் மற்றொன்று கதையின் காலம். பிரதியின் காலத்தைப் பொறுத்தவரை அது நேர்கோட்டுத் தன்மையானது மட்டுமன்றி மாற்றவே முடியாதது. ஒருபடித்தாக அமைந்த இந்தத் தன்மையினால்தான் வாசிப்பவர், வார்த்தை அடுத்து வார்த்தையாக, வாக்கியம் அடுத்து வாக்கியமாக வாசிக்க பழக்கப்பட்டுள்ளனர். (2016:258) இவ்வாறு புனைகதைக்காக வரையறுக்கப்பட்ட வாசிப்பு எல்லைகளைத் தமிழ்ச்சூழலில் உடைக்க முயன்றதாகத் தமிழவனின் ஆடிப்பாவைப்போல நாவல் உள்ளது. இருப்பினும் ஸ்பானிஷ் மொழியிலும் ஆங்கிலத்திலும் இதற்கான முன்னெடுப்புகள் 1963இல் தொடங்கிவிட்டன. அப்புனைவுகள் குறித்துப் பிரம்மராஜனின் பதிவு வருமாறு,

    இத்தகைய புனைகதையின் விவரணை எல்லைகளை உடைக்க முயன்ற இரண்டு நாவல்கள் சாமுவெல் பெக்கெட்டின் வாட் மற்றும் கொர்த்தஸாரின் ஹாப்ஸ்காட்ச். அத்தியாயங்களின் ஒழுங்கில் மாறுபாட்டினைச் செய்வதன் மூலம் பிரதியின் ஒருதிசைத் தன்மையை மறுக்கிறார் கொர்த்தஸார். பிரதியின் காலம் தவிர்க்க இயலாதபடி நேர்க்கோட்டுத் தன்மையில் இருப்பதால் நிஜமான கதைக்காலத்தின் பன்முகக் கோட்டுத் தன்மையுடன் ஒன்றிணைய முடியாது. ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்திலும் அவை இல்லை. (2016:258,259)

    ஆடிப்பாவை நாவலில் தமிழவன் மூன்றுவிதமான வாசிப்புகளை வாசகனுக்கு அறிமுகப்படுத்துகின்றார். ஒன்று அகம். அதாவது மொத்தமுள்ள பத்தொன்பது அத்தியாயங்களை 1,3,5 என்று வாசித்து விட்டுப் பின்னர் புறம் 2,4,5 என்று வாசிப்பது. இரண்டாவது வாசிப்பு புறம். முதலில் 2,4,6 என்று புறத்தை வாசித்து விட்டுப் பின்னர் 1,3,5 என்று அகத்தை வாசிப்பது. மூன்றாவது இவற்றை விடுத்து எப்போதும் போல அகப்புறமாக வரிசையாக அத்தியாயங்களை வாசிப்பது. நாவலைப் படிக்கும்போது மூன்று வழிமுறைகளுள் ஏதேனுமொன்றைப் பின்பற்ற வேண்டும். இம் மூன்று முறைகளில் வாசித்தபின்பும் வாசிப்புப் பயணம் முடியவில்லை. ஆடிக்கு முன் பாவையை விடுத்துப் பிறிதொரு ஆடியினை வைப்பதனால் நிகழும் எதிரொளிப்பு முடிவற்ற பிரதிபிம்பங்களாகச் சூழுகின்றன. இத்தன்மை வாசகனுக்கும் பிரதிக்குமான நெருக்கத்தைக் கூட்டுகின்றது. ஆடிப்பாவைபோல நாவலின் பிரதித்தன்மை குறித்த சில விவாதங்களைக் கீழ்க்கண்ட நிலைகளில் பகுக்கலாம்.

    பிரதியின் உருவாக்கமும் ஒத்திசைவும். இந்நாவலின் மொழி, அமைப்பு குறித்த சில புரிதல்கள். வசதிகருதி விக்ரம் சந்திராவின் red earth and pouring rain, ஜூலியோ கொத்தஸாரின் Hopscotch ஆகிய நாவல்கள் குறித்த அறிமுகத்துடன் ஆடிப்பாவை போல நாவலுடனான சில ஒப்புமைகள்.
    – பிரதி கூறவந்துள்ள செய்தி. குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காலம் (1964). அக்காலத்தின் சூழல், அரசியல் குறித்த சில பதிவுகள். மூன்று நிலைகளில் இதனைப் புரிந்து கொள்ளலாம். ஒன்று திராவிட இயக்கச் செயல்பாடுகள், இரண்டு இடதுசாரி இயக்கத்தின் நிலைப்பாடு,
    – மூன்று இவை குறித்த எந்தப் பிரக்ஞையுமற்ற திருவாளர் வெகுசனங்கள். இவற்றை மையப்படுத்தி நிகழும் கதை.

    1996 ஆம் ஆண்டு முதன்முதல் வெளியிடப்படுகின்ற சிறந்த படைப்புக்கான Commonwealth writer பரிசினை விக்ரம் சந்திரா என்கிற மகாராஷ்டிர எழுத்தாளர் பெறுகின்றார். அவருடைய Red earth and Pouring rain (1995) நாவலுக்காக இவ்விருது அளிக்கப்பட்டது. 1985இல் ஏ.கே.இராமானுஜம் எட்டுத்தொகை நூல்களிலிருந்து சில பாடல்களை மொழிபெயர்த்து Love and War என்று வெளியிடுகின்றார். அந்நூலில் இடம்பெற்ற செம்புலப் பெயல்நீராரின் குறுந்தொகைப் பாடலை, What could my mother be/ to yours? what kin in my father/ to yours anyway? and how/ Did you and I meet ever?/ But in love/ our hearts have mingled/ as red earth and pouring rain (Kurunthogai 40) என்றவாறு இராமானுஜன் மொழிபெயர்த்திருக்கின்றார். இப்பாடலின் கடைசி அடியைத்தான் விக்ரம் சந்திரா தன் நாவலுக்கு வைத்திருக்கிறார்.

    அமெரிக்காவில் படிக்கின்ற இந்திய மாணவனான அபய் கோடை விடுமுறைக்கு மும்பை வருகின்றான். விளையாட்டாக அவனால் சுடப்படுகின்ற வெள்ளை முகங்கொண்ட குரங்கொன்று தான் உயிர்த்திருக்க கடவுளோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்கின்றது. அதன்படி தினமும் ஒரு கதையினைக் கூறி அபயின் குடும்பத்தினரை அது மகிழ்விக்க வேண்டும். ஒரு அத்தியாயம் குரங்கு சொல்லும் கதையாகவும் இன்னொரு அத்தியாயம் நிகழ்காலமாகவும் நகர்கின்ற கதையமைப்பினைக் கொண்டது இந்நாவல். அரபியநாட்டின் ஆயிரத்தி ஓர் இரவுகளை ஒத்த அமைப்பில் அக்குரங்கு கதை சொல்லத் தொடங்குகின்றது. அக் குரங்கு தன்னை பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானிய காலனிய ஆதிக்கத்தை எதிர்த்த கவிஞரான சஞ்சய் பராசர் என்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான சமூகச்சூழல் அக்குரங்கின் மொழியாகப் பயணிக்கின்றது. பல பிராந்தியங்களின் தொகுப்பாக அமைந்த இந்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற முகலாயர்களின் ஆக்கிரமிப்பு, பாரம்பரிய நம்பிக்கை, கடவுளர்கள், தொன்மங்களின் அழிவு மற்றும் தொடர்ச்சியான பண்பாட்டு கலப்பு, பண்பாட்டு சிதைவு, சதி நிகழ்வு, கிறித்தவ மிஷனரிகளின் செயல்பாடு, அமெரிக்க வணிக ஏகாதிபத்தியம் என கதைகளினூடாகப் பரந்து பட்ட அரசியல் செயல்பாடுகள் விரிந்து செல்கின்றன. இடையிடையே அபயின் நிகழ்காலமும் ஊடாடுகின்றது. இறுதியில் அபய் தனது நண்பர்களுடன் இணைந்து அமெரிக்காவின் throwaway pop culture ஐயும் இந்தியாவின் தர்மம், கர்மம் அடிப்படையிலான பண்பாட்டையும் முரண்பொருளாகக் கொண்டு நாடகம் ஒன்றினை இயக்குகிறான்.

    இந்த நாவலை ஆடிப்பாவை நாவலோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அதன் தலைப்பு; இரண்டு நாவலின் அமைப்பு. தலைப்பினைப் பொறுத்தவரை முன்னர்க் குறித்தபடி சங்க இலக்கியத்துள் குறுந்தொகைப் பாடலொன்றின் அடியினை விக்ரம் சந்திரா கைக்கொண்டது கவனத்திற்குரியது. இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறிதொரு தளத்தில் மீண்டும் சங்க இலக்கியப் பாடலின் அடி தமிழவனால் நாவலின் தலைப்பாகக் கொள்ளப்படுகின்றது. இவ்விரண்டு நாவல்களுமே பிரதியின் காலத்தைப் பேசவில்லை. முந்தைய காலத்தையே பேசுகின்றன.
    இரண்டாவதாக நாவலின் அமைப்பு. இரண்டு கதைகள் ஒரே தளத்தில் பயணிப்பது. Red earth and pouring rain நாவலின் உள்ளமைப்பு,
    The book of war and ancestors
    . . .now. . . 19
    The strange passion of Benito de Bojgne 21
    . . . now. . . 38
    A thin kind of happiness 42
    என்றவாறு அமைந்துள்ளது. ஆடிப்பாவை போல நாவலின் உள்ளமைப்பு முன்னர்க் குறித்தபடி அகம், புறம் என்று உள்ளது. விக்ரம் சந்திராவின் படைப்பில் குரங்கின் மூலம் வெளிவருகின்ற கவிஞரின் கதை, அபயின் நிகழ்கால கதை இரண்டையும் தனித்தனி நெடுங்கதைகளாகக் கொள்ளமுடியும். இறுதியில் அவை ஒரு பொருண்மையில் முடிகின்றன. ஆடிப்பாவைபோல நாவலில் அகமும் புறமும் ஒன்றிற்குள் ஒன்று ஊடாடினாலும் தனித்தனியே நகர்ந்து செல்கின்றன. மேலும் ‘செம்புலத்தில் நீர் கலத்தல்’ என்கிற பொருள் இந்தியப் பண்பாட்டின் பொதுத்தன்மையாக விக்ரம் சந்திரா நாவலில் குறியீட்டாக்கம் பெற்றிருக்கின்றது. ஆடிப்பாவைபோல நாவலோ யதார்த்தத்தினைப் பிரத்தியட்சமாகக் காட்டு ஆடி அல்ல. அது அதுபோல் காட்டுவது; பிரதி பலிப்பது. அதாவது அது இப்படியாகவும் இருக்கலாம் என்ற இரட்டைத் தன்மையைக் கூறுவது. இந்த ஆடிஅரசியலின் குறியீடாக இப்பொருள் பயன்பட்டிருக்கிறது. அமைப்பிலும் கதைசொல்லல் தன்மையிலும் தவிர்க்க இயலாத ஒப்புமையை இவ்விரண்டு நாவல்கள் பெற்றிருப்பதைப்போலவே வேறுபட்டும் உள்ளன. இருப்பினும் இந்திய புனைவு மரபில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்ற விக்ரம் சந்திராவின் நாவல் தமிழவனின் ஆடிப்பாவைபோல நாவலை வாசிக்கும்போது நினைவிற்கு வருவது தவிர்க்க இயலாததாகின்றது.
    அடுத்ததாக ஜூலியத் கொர்த்தஸாரின் Hopscotch. ஸ்பானிஷ் மொழியில் 1963இல் வெளியிடப்பட்ட இந்நாவல் 1966இல் கிரிகோரி ரபாசாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. Hopscotch என்பது குழந்தைகள் கட்டம் போட்டுத் தாண்டி விளையாடுகின்ற ஒரு விளையாட்டினைக் குறிப்பது. இந்நாவலை இத்தகு கட்டங்களால் ஆன விளையாட்டாக கொர்த்தஸார் ஆக்கியிருக்கின்றார். ஆடிப்பாவைபோல நாவல் வெளிவந்த நேரத்தில் முகநூலில் Hopscotch நாவலின் உத்திகள் குறித்துச் சிலாகித்துப் பேசப்பட்டது. எனவே அந்நாவலை முழுமையாக வாசித்து ஆடிப்பாவைபோல நாவலோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது. ஆனால் அது அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. Hopscotch ஒரு மூடுண்ட பிரதி. நாவலின் தொடக்கத்தில் தமிழவன் அளித்திருக்கும் முறை போலவே நாவலைப் படிப்பதற்கான வழிமுறைகள் Table of Instruction என்று கொடுக்கப்பட்டுள்ளன. அப்பகுதி வருமாறு,
    In its own way, this book consists of many books, but two books above all.
    The first can be read in a normal fashion and it ends with chapter 56, at the close of which there are three garish little stars which stand for the word The End. consequently, the reader may ignore what follows with a clean conscience.
    The Second should be read by beginning with chapter 73 and then following the sequence indicated at the end of each chapter. In case of confusion or forget fullness, one need only consult the following list:
    73-1-2-116-3-84-4…
    Each chapter has its number at the top of every right – hand page to facilitate the search.
    584 பக்கங்களும் மூன்று பகுதிகளும் கொண்ட இந்நாவலின் கடைசிப் பகுதி நாவலின் பிற்சேர்க்கை போன்றுள்ளது. இவ்வாறான முயற்சிகள் தமிழில் இன்னும் கால்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. இந்நாவலின் அமைப்பு குறித்து பிரம்மராஜன் கூறியுள்ள கருத்து வருமாறு,
    1-36 அத்தியாயங்கள் பாரிஸ் நகரில் அமைந்திருக்கின்றன. 37-56 அத்தியாயங்கள் அர்ஜன்டீனாவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஹாப்ஸ்காட்சின் முன்னேற்றம் அத்தியாயம் 73இல் ஆரம்பிக்கிறது. இந்த வாசிப்புகளுக்காக ஆசிரியனின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நாவலின் முழுமைக்கும் முன்னும் பின்னுமாகத் தாவித் தாவிக் குதித்துச் செல்ல வேண்டியிருக்கிறது. ஹாப்ஸ்காட்ச் ஒரு திறந்த முனை எதிர்நாவல். பிரதான இரண்டு விவரணைப் பகுதிகளும் மொத்த நாவலின் 349 பக்கங்களை எடுத்துக் கொள்கின்றன. மூன்றாவது விவரணைப் பகுதியான 350 – 564 From Divers Sides தேவையில்லை என்று நினைத்தால் கூட எடுத்துவிடக் கூடிய அத்தியாயங்களால் அமைந்திருக்கிறது.(2016:262)
    Hopscotch நாவல் From the other side என்று தொடங்குகிறது. இந்நாவலில் மீனவர்களின் சடங்கு குறித்த லெவிஸ்ட்ராஸின் சிறிய மேற்கோளொன்று எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.(ப.359) நவீன பெண் நாவலாசிரியரான அனைஸ்நின் வின்டருடைய ஆட்டிவிஸ் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள் ஓர் அத்தியாயமாக (110) உள்ளது. நவீன கனடா நாவலாசிரியரான மால்கம் லவ்ரியின் அண்டர் த வால்கனோ நாவலின் ஒற்றை வரி மேற்கோள் அத்தியாயம் 118 ஆக உள்ளது. இப்பகுதிகளை வாசகர்கள் கழற்றிவிடக்கூடிய அத்தியாயங்களாகக் கருதலாம் என்கிறார் பிரம்மராஜன் (2016:266,267). ஆடிப்பாவைபோல நாவலின் தொடக்கத்திலும் தமிழவன் சுந்தரராமசாமி, ஏ.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோரின் எழுத்துகள் பயன்படுத்தியுள்ளேன். அவர்களுக்கு நன்றி என்று குறிப்புப் போட்டுள்ளார். ஆனால் அவ்வெழுத்துகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவை பிரதியின் கதைக்குள் பிணைந்துள்ளன. அவ்விருவரையும் முழுமையாகப் படிக்காத வாசகனால் அவ்வெழுத்துக்களைக் கண்டுபிடிக்க இயலாது. இருப்பினும் ஆய்வு நேர்மையைப் போல ஒரு படைப்பு நேர்மையைத் தமிழவன் கடைபிடித்துள்ளார். இந்தத் தன்மை Hopscotch நாவலுடன் அமைப்பு நிலையில் ஒப்பிட உதவுகிறது.

    Hopscotch நாவலின் பிரதான பாத்திரங்கள் ஆலிவேய்ரா – லாமகா. இவ்விருவரின் அகவாழ்ககைச் சிக்கல்கள் நாவல் முழுக்க பரந்து கிடக்கின்றன. பாரிஸ் நகரில் Club de la serpentine என்ற கிளப் ஒன்று செயல்படுகின்றது. அதில் முடிவற்ற விவாதங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான் ஆலிவேய்ரா. பாரிஸ் நகரம் ஒரு சொர்க்கமாக உருவகிக்கப்பட்ட காலகட்டத்தை இந்நாவல் முன்னிறுத்துகின்றது. இந்தக் கற்பிதத்திற்கு எதிரான கருத்துகளை இந்தக் கிளப் வரையறுககின்றது. ஆலிவேய்ரா தனிமனித விமோசனம், எந்த விசாரம், செயல்படாதிருப்பது பற்றிய குற்ற உணர்வு சுயவெறுபபு ஆகிய பல்வேறுபட்ட உணர்வு நிலைகளால் ஆனவன். அவனை ஒரு மத்தியர வர்க்க அறிவுஜீவியாக மட்டுமன்றி சுயப்ரக்ஞை மிகுந்த நாடோடியாகவும் இனங்காண்கிறார் பிரம்மராஜன் (2016:250). ஆடிப்பாவைபோல நாவலின் அகத்திற்குரிய நாயகன் வின்சென்ட் ராஜாவும் ஏறக்குறைய இதே பண்புகளை ஒத்தவன்தான். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னிட்டுக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நேரத்தில் அவன் காதலியான காந்திமதியை ஊருக்குப் பத்திரமாகக் கொண்டு சேர்க்க வேண்டிய ‘கடமை’தான் அவனுக்கு இருக்கின்றது. அந்தக் கடமை நிறைவேறும் நேரத்தில் அவனும் ஊருக்குச் சென்றிருந்தான். நாவலின், ‘வெளியில் நடந்து கொண்டிருந்த கலவரங்கள் அவனுக்குள் மெதுவாய் ஒரு பெரும் தீயைக் கிளப்ப ஆரம்பித்தன. தான் புறப்பட்டுப்போய் தன் ஊரை அடையும்போது இருள் தன்னை வரவேற்கும் என்ற நினைப்பு வந்தது. அப்போது கலவரம் நினைவிலிருந்து அகன்றது. இருள் மட்டுமே நினைவில் அகலாமல் நின்றது ’(256) இந்தப் பகுதி வின்சென்ட் குறித்த புரிதலுக்கு உதவுகிறது. இங்கு அவன் மனதில் கிளம்பிய தீ கலவரம் குறித்த ப்ரக்ஞையால் உருவான தீ; காந்திமதி பத்திரமாகப் போய்ச்சேர்ந்திருப்பாளா என்கிற தீ; இரண்டில் எதுவாக இருப்பினும் அந்தத் தீயானது அவன் ஒரு அநாதை என்கிற இருளில் அவிந்துவிட்டது. பிற்காலத்தில் இந்தச் சம்பவத்தை நினைத்து அவன் கொள்ளும் சுயவெறுப்பு, ‘எனக்கு ஆச்சரியமா இருக்கு. நான் இந்தி எதிர்ப்பு சூழ்நிலையில் நடந்துகிட்ட முறைகூட… என் சுயமான உணர்வுகள் சார்ந்து மட்டுமே வாழ்ந்திருக்கிறேன். ஹௌ ஸ்டுப்பிட் ஐ வாய்…’ (388) என்றவாறு வெளிப்படுகின்றது. ஆலிவேய்ரா பாரிஸ் பற்றிய கனவுத் தன்மையான எண்ணங்கள் கரைந்து போவதற்கு முன்னரான தன் நாட்களைக் குற்ற உணர்வு மிகுந்த ஓய்வு நேரங்களால் நிரப்புகின்ற நிலை இத்தருணத்தில் சுட்டத்தக்கது. காந்திமதி குறித்த எந்தக் குழப்பங்களுக்கும் விடைதேடும் முயற்சியில் வின்சென்ட் ஈடுபடவில்லை. ஆலிவேய்ரா தன் காதலியுடன் கொள்கிற மனவிசாரம் இங்குக் கவனத்திற்குரியது. அவன் லாமகாவை ஒரு பைத்தியக்கார ஹாப்ஸ்காட்சாகக் கூறுவது; மனநிலை பிறழ்ந்த நிலையில் லாமகாவின் உண்மை இயல்பினைப் புரிந்து கொள்ளும்போது இறந்து போவது. அல்லது இறக்காமலும் இருக்கலாம் என்கிற வாசப் பிரக்ஞைக்கு விடப்பட்டு பிரதிக்குள் தொலைந்து போவது நிகழ்கிறது. ஆனால் வின்சென்ட் ராஜா ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தன் நண்பன் ஆதிக்க சாதியினரால் கொல்லப்பட்ட நிகழ்வை ஏற்றுக் கொள்ள இயலாமல் சமூகப் ப்ரக்ஞை பெற்று அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்கிறான். இது தமிழ்மரபிற்குரிய ஹீரோயிச மாற்றம். மேற்கொண்டு Hopscotchன் கதை மாந்தர்களோடும் நிகழ்வுகளோடும் ஆடிப்பாவைபோல நாவலை ஒப்பிட அதன்மீதான ஆழ்ந்த வாசிப்பும் பிரெஞ்சு மொழிப் பயிற்சியும் தேவை. ஒரு சிறிய நிலையிலான ஒப்பிடலுடன் மேற்கத்திய புனைவுலக மரபில் உருவான உத்தியொன்றின் அறிமுக நிலையாக மேற்கண்ட செய்திகளைக் கொள்ளலாம்.

    அடுத்ததாக ஆடிப்பாவைபோல நாவலின் கதை. மேலும் வெளியீட்டகம் ஆடிப்பாவைபோல நாவல் குறித்துச் சொல்லாட்டம் என்கிற கட்டுரைத் தொகுப்பொன்றினை வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பினைத் தாண்டி இந்நாவல் குறித்து விவாதிப்பதற்கு ஏதேனும் இடம் இருக்கிறதா எனில் அது கடினம். குறிப்பாக ஜமாலன், துரைச்சீனிச்சாமி, வின்சென்ட் இவர்களுடைய கட்டுரைகளைக் கடந்து பேசுவதற்கு ஏதேனும் கண்ணிகள் உள்ளனவா என்று தேட வேண்டியுள்ளது. இவர்கள் விட்ட இடங்களில் இட்டு நிரப்புகின்ற வேலையை மட்டுமே அடுத்த கட்டத்தில் செய்ய இயலும். முன்னர்க் குறித்தபடி மூன்று நிலைகளில் இக்கதையினை அணுகலாம். ஒன்று திராவிட இயக்கச் செயல்பாடு ஒரு கட்சிசார்ந்த செயல்பாடாக மடைமாற்றம் அடைந்து அது மாணவர், மக்களின் போராட்டத்தை உணர்வு நிலைகளை எப்படிப் பயன்படுத்திக் கொண்டது என்பது. இரண்டாவது இடதுசாரி இயக்கமானது ஒரு பார்ப்பனிய போர்வையில் செயல்படுகின்றது என்கிற குற்றச் சாட்டிற்கு ஆளாவதோடு தொடர்ந்து நக்சல்களாகப் போராளிகள் கருதப்பட்ட நிலையினையும் அவர்களின் கருத்துகள் திருடப்படுவதையும் பேசுவது. மூன்றாவது இது குறித்த எந்த அக்கறையும் அற்ற வெகுசனங்களின் வாழ்வு.
    கடவுள் மறுப்பு என்பது புரூனோ எரிக்கப்பட்ட

    பிறகு மேற்கத்திய சூழலில் ஓர் அதிர்வாகக் கிளம்பி இரண்டாம் உலகப்போரின் பேரழிவிற்குப் பின்னர் இயக்கமாக உருப்பெற்ற கருத்தாக்கம். இதன் நீட்சியைத் தமிழகத்தில் காணமுடிந்தது. தியோபிகல் சொசைட்டி, சுயாக்கியானிகள் சங்கம் ஆகியன இந்நிலையில் முன்னோடித்தன்மை கொண்டவை. இதற்குப் பின்னர் உருவான பெரியாரின் சுயமரியாதை இயக்கம் (1879 – 1973) அந்த நூற்றாண்டிற்கு உரிய நெளிவு சுழிவுகளை உள்வாங்கிக் கொண்டு ஒரு சனநாயக இயக்கமாக வடிவம் பெற்றது. பொருளதார காரணங்களை ஒதுக்கிவிட்டுப் பண்பாடு சார்ந்த அடையாளங்களைக் கருத்துநிலைகளை இவ்வியக்கம் முதன்மைப்படுத்தித் திராவிட இயக்கமாக மாறியது. மொழி இவ்வியக்கத்தின் பிரதான கருவியாக இருந்தது. இது குறித்த வீ.அரசு அவர்களின் கருத்து வருமாறு,

    வெகுசன வெளியில் பேச்சு சார்ந்து உருவாகும் தொடர்பாடல் (Communication) அரசியல் இயக்கங்கள் காலூன்ற அடிப்படையாக அமைகின்றன. வெகுமக்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்குமான உறவு என்பது, அவ்வியக்கம் மக்களிடத்து முன்னெடுக்கும் உரையாடல் மொழியாகப் பேச்சு அமைகிறது. திராவிட இயக்க பேச்சுகள் குறிப்பாக மேடைச் சொற்பொழிவுகள் திராவிட இயக்கச் சனநாயகச் செயல்பாட்டின் சட்டகங்களாக (Paradigm) வடிவம் பெற்றன. இவ்வகையான முறையில் இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் செயல்பட்டதாகக் கருதமுடியவில்லை. திராவிட இயக்கத்தின் இவ்வகையான செயல்பாடுகளால் வெகுசனப் பரப்பில் தமிழ்மொழி வளமாகப் பரவிய வரலாறு மிக முக்கியமானது. அதுவும் காலப்போக்கில் நீர்த்துப் போனதாகவும் கருதப்படுகிறது. திராவிட இயக்கத்தின் மொழிசார்ந்த இச்சட்டகத்தின் பண்புகளைப் புரிந்து கொள்ளும் தேவை நமக்குண்டு. (உங்கள் நூலகம், 2017)

    மொழியைப் பின்புலமாகக் கொண்டு மக்களோடு தவிர்க்க இயலாத பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டது திராவிட இயக்கம். இந்த இயக்கச் செயல்பாடு கட்சிச் செயல்பாடாக நீர்த்த நிலையை ஆடிப்பாவைபோல முன்வைக்கின்றது. உணர்வு நிலையால் உந்தப்பட்ட மக்களின் செயல்பாடுகளையும், மாணவர்களின் போராட்டத்தையும் கட்சியின் செயல்பாடுகளாகக் கட்டமைப்பது. மொழிக்காகத் தீக்குளித்த பள்ளி மாணவன் அவன் முருகானந்தமா இல்லையா என்பது வாசகனின் முடிவு. அவன் தம் கட்சியைச் சேர்ந்தவன் என்பதற்கான ஆதாரத்தினைத் தயார்செய்யும் அளவிற்கு மனிதத்தன்மை கேள்விக்குள்ளானதைக் காணமுடிகின்றது. தொடர்ச்சியாக மனிதர்களையும், விலங்குகளையும் வதைத்துக் கொள்கின்ற வெப்பத்தினூடாகவே கட்சி அரசியல் இந்நாவலில் பயணப்படுகின்றது. ‘இயற்கையில் இருக்கும் வெக்கையுடன் அரசியலில் உள்ள வெக்கையும் அந்த ஹாஸ்டல் மாணவர்களின் மனதில் ஏற்பட்டுவிட்டது’(30) என்ற பதிவு இதனை வெளிப்படையாகக் கூறியுள்ளது.

    இடதுசாரி இயக்கம் குறித்து எம்.எஸ்.ராவ் என்கிற பாத்திரத்தின் வழி இப்பிரதி பேசியுள்ள கருத்து, ‘நம்ம கம்யூனிஸ்டுகளைப் பாருங்க. முதலாளித்துவத்தப் புரிஞ்சுக்கல. அதுக்குப் பதிலா இன்று பொருத்தமில்லாத க்ளாஸ் அனாலிசிஸ் ஒன்றைத் தூக்கிக்கிட்டு அலையறாங்க. கம்யூனிஸ்டுகளில் பலர் பிராமின்ஸாக இருப்பதுக்கும் கிளாஸ் அனாலிஸிஸை அவர்கள் தூக்கிப் பிடிப்பதுக்கும் தொடர்பில்லன்னு நினைக்கிறீங்களா? முந்தி சமஸ்கிருதம் இப்போ கம்யூனிஸம்… (326) இடதுசாரி இயக்கத்தின் நீர்த்துப்போன தன்மையினைக் காட்டுகின்றது. இந்த இரண்டு நிலை நீர்த்தலுக்கும் இடையில் உண்மையான சமூகப் பிரக்ஞை கொண்ட ஒரு கணிதப் பேராசிரியராக வலம்வருகிறார் சபாஷ்ராஜ். ஒருபக்கம் தமிழ்ப்பேராசிரியர்கள் தான் மொழிப்பிரச்சனையைக் கிளப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பதிவாகின்றது. இன்னொருபுறம் விடுதியில் மேடைப்பேச்சு பயிற்சி வகுப்பு தமிழாசிரியர் ஒருவரால் ஒருங்கிணைக்கப்படுகிறது. அதேநேரம் சோமன் சட்டர்ஜி என்கிற வேதியியல் பேராசிரியர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராத் தீவிரவாதியாக வருகிறார்; அர்த்தமுள்ள வார்த்தைகளை மட்டும் பிரயோகித்துப் பேசுகிறார். பாலத்திற்குக் குண்டுவைத்துத் தகர்க்க முயன்றதாகச் சுடப்பட்டு இறக்கவும் செய்கிறார். கட்சி, இயக்கச் செயல்பாடுகளில் கல்லூரிப் பேராசிரியர்களின் பங்களிப்பு ஒரு சரடாக ஊடுருவிச் செல்கின்றது. இறுதியில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி அரசியல் சமரசமாவதும் கட்சி அரசியலுக்குள் காம்ரேட்களின் முயற்சிகள் காணாமல் போவதும் நடக்கிறது.

    இவ்வாறு மக்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை அவர்களை மீறித் திணிக்கின்ற அதிகார சூழலில் இதுகுறித்த பிரக்ஞை ஏதுமற்ற மனிதர்களும் உலவிச் செல்கின்றனர். சந்தோஷம், காந்திரமதி, காந்திமதியின் அக்கா விசாலாட்சி, தங்கை அபிராமி, தந்தை விநாயகமூர்தி, ஹெலன், கிருபாநிதி, கிருபாநிதியின் அண்ணன், அண்ணி, அம்மா என்று பெரிய பட்டியல் நீளுகின்றது. இவர்கள்தான் திருவாளர் வெகுசனங்கள். சமூகப் பிரக்ஞை என்ற நிலையில் வின்சென்ட் மட்டும் மடைமாற்றம் பெற்றுவிடுவது கவனிக்கத்தக்கது. அவனது மடைமாற்றம் சந்தோஷத்தின் கொலையோடு சம்பந்தப்பட்டது. ஆதிக்க சாதியினரின் வன்முறைச் செயல்பாடுகளில் காணாமல் போகிறான் சந்தோஷம். தான்சார்ந்த சமூகத்தின் மீதான ஆதிக்க சாதியினரின் காழ்ப்புணர்விற்குப் பயந்து மறைந்து பதுங்கி வாழ்கிறான் சந்தோஷம். இருப்பினும் ஒருகட்டத்தில் ஒளிவதற்கு முடியாமல் இல்லாமல் போக நேர்கின்றது. காந்திமதி இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து நினைத்துப் பார்ப்பதாக அமைந்த பகுதி,‘ காந்திமதி இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி முழுமையாய்ப் புரிந்து கொள்ளும் ‘வயது’ தனக்கு இல்லை என்று நினைத்தாள். அல்லது தன் சூழலில் அரசியல், போராட்டம் என்ற நினைவுகளுக்கு இடமில்லை என்று நினைத்தாள். பெரும்பான்மை ஆட்களும் தன்னைப் போலத்தானே என்றும் எண்ணினாள். அவள் தங்கியிருந்த பெண்கள் விடுதியில் செய்தித்தாள் வந்தன. யாரும் அந்தத் தாள்களை அதிகம் படிப்பதில்லை. அரசியல், தர்ணா, போராட்டம் என்பவை தங்கள் அண்ணன் தம்பிமார்களின் உலகத்தைச் சார்ந்தது என்றே நினைத்தார்கள். செய்தித்தாள்களில் சினிமா செய்திகள் படிப்பது பெண்களின் செயல். அல்லது வார இதழ்களில் வரும் தொடர்கதைகளைப் படிப்பது பெண்களின் ஒரே காரியமாக இருந்தது’ (327). ஒரு வெகுசனக் கருத்தியலை இதைவிடத் துல்லியமாகக் காட்சிபடுத்திவிடமுடியாது. அதே நேரம் காமாட்சி எம்.எல்.ஏ., மலர்க்கொடி இவர்களின் இருப்பு வெகுசன இருப்பிலிருந்து சற்று மாறுபட்டதாக உள்ளது. வான்மீகநாதனின் அரசியல் வாழ்க்கைக்கு முகவரியாகக் காமாட்சியும் பொன்வண்ணனின் அரசியல் செயல்பாட்டிற்குப் பின்புலமாக மலர்க்கொடியும் அவளுடைய தந்தையும் இருக்கின்றனர்.

    தமிழ்ச்சூழலில் பாவிச், சாமுவேல் பக்கெட், ஜூலியஸ் கொத்தசார் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட உத்திகள் இன்னும் முழுதாக உள்வாங்கப்படவில்லை. அதற்கான முன்னெடுப்பாக இந்நாவலைப் புரிந்து கொள்ள முடியும். இருப்பினும் தமிழவனின் ஆடிப்பாவைபோல நாவல் அறிமுகப்படுத்தியிருக்கும் உத்தி தமிழுக்கு உரியதான புதிய உத்தியாகவே கால்கொண்டுள்ளது. தமிழவனின் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள், ஜி.கே.எழுதிய மர்மநாவல், வார்ஸாவில் ஒரு கடவுள் உள்ளிட்ட நாவல்களின் வரிசையில் பார்க்கும்போது மொழிகனம் இந்நாவலில் குறைவு. ஆனால் பேசியிருக்கும் அரசியல், கைக்கொண்டுள்ள உத்திகள் வாசர்களை அடுத்தகட்ட நகர்வை நோக்கிச் செல்லவைக்கின்றன. பிறமொழி நாவல்களின் உத்திமுறைகளை வாசிக்கத் தூண்டுகின்றன. இந்நாவலுடனான பயணம் வாசகனை முடிவற்ற வெளியில் சேர்க்கின்றது.

    ———————
    உதவிய நூல்கள்
    1995 Red earth and pouring rain, Vikram Chandra, Penguin Books, New Delhi
    2013 Hopscotch, Julio Cortazar, Random house, U.S.A
    2016 இலையுதிராக் காடு, பிரம்மராஜன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி
    2017 ஆடிப்பாவைபோல, தமிழவன், எதிர்வெளியீடு, பொள்ளாச்சி

    Share
  • சங்கப் பெண்கவிதைகள்: பெண் – மொழியும் வெளியும்

    முனைவர் அ.மோகனா

    உதவிப் பேராசிரியர்

    தமிழ்த்துறை

    தியாகராசர் கல்லூரி, மதுரை

     தமிழ்மொழி செம்மொழியாக உலக அரங்கில் ஏற்கப்படுவதற்கு அடிப்படையாக அமைந்தவை சங்கக் கவிதைகள். பாட்டும் தொகையுமாக அமைந்த இவை காலந்தோறும் பல்வேறு விதமான வாசிப்புகளுக்கு உட்பட்டுப் பயணித்து வந்துள்ளன. அவை தொகுக்கப்பட்ட முறைமை, பேசும் பொருள், கவிதையாக்கம், அழகியல், தொல்லியல், மானிடவியல், சமூகவியல் எனப் பன்முகப்பட்ட வாசிப்பு முறைகளில் ஊடாடியுள்ளன. இப்பின்புலத்தில் சங்கப் பெண்கவிதைகள் என்கிற சக்திஜோதியின் நூல் கவனத்திற்குரியதாகின்றது. இந்நூலுக்குள் பயணிப்பதற்கு முன்னதாகச் சக்திஜோதி இன்று தமிழ்ச்சூழலுக்குக் கையளித்துள்ள ஆய்வு முறையின் பின்புலம் குறித்த சில தகவல்களைப் பதிவு செய்வது அவசியம். அப்போதுதான் இன்றைய தமிழ் ஆய்வுப்பரப்பிற்குள் சக்திஜோதியின் இந்நூலுக்குரிய இடம் மற்றும் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.

    1970ல் அமெரிக்க பெண்ணிய ஆய்வாளர் ஏலெயின் ஷொவால்டர் Gynocriticism என்கிற புதிய இலக்கிய விமர்சனக் கோட்பாட்டை உருவாக்கினார். இதனை ஓர் இயக்கமாகவே அங்கு முன்னெடுத்தனர். Gynocriticism என்பது குறித்து ஷொவால் கூறுவது, a female framework for the analysis of women’s literature to develop new models based on the study of female experience rather than to adapt male models and theories – சுருக்கமாகக் கூறினால் பெண் எழுத்துக்களைப் பெண்களே வாசித்தல். அதற்கான பெண்மைய ஆய்வு முறையினை உருவாக்குதல் என்பது. ஷொவால்டர் தொடங்கிவைத்த இந்தப் புதிய ஆய்வுமுறைமையின் தொடர்ச்சியாக ஜூடித் பெட்டர்லி, பேட்ரிசியா மேயர் உள்ளிட்ட பெண் பேராசிரியர்கள் தங்கள் ஆய்வுகளைத் தகவமைத்தனர். ஷொவால்டர் இரண்டு நிலைகளில் பெண்மைய திறனாய்வாளர்களை வகைப்படுத்தியுள்ளார். ஒன்று The women a reader or feminist critique, இரண்டாவது The women as writer or Gynocritics ஒரு பெண் வாசகராக, பெண்ணிய விமர்சகராக இருத்தல், ஒரு பெண் புனைவாளராகவும் அதே நேரம் பெண்நிலைப்பட்ட விமர்சகராகவும் இருத்தல். சக்தி ஜோதியின் இவ்வாய்வு இரண்டாம் நிலையில் அமைகின்றது. கவித்துவ ஆற்றலுடைய ஒரு பெண் இதுவரை சங்கக் கவிதைகளை வாசிப்பதற்காகக் காலங்காலமாக உருவாக்கி வைத்த வாய்பாட்டு முறைமைகளைப் பின்தள்ளி அந்தப் பெண் எழுத்துக்களை வாசிப்பதற்கான ஒரு புதிய சட்டகத்தை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு முன்னரும் சங்க இலக்கியத்தின் திணை, துறை, கூற்றுகளின் நம்பகத்தன்மை மீதான ஆய்வுகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வ.சுப.மாணிக்கத்தின் ‘சங்க நெறி’, கமில்ஸ்வலபிலின் The Smile of Muruga, Tamil Literature, அம்மன்கிளி முருகதாஸின் சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும், குளோரியா சுந்தரமதியின் பகுப்பாய்வுநெறி நோக்கில் சங்க இலக்கியம், அ.மங்கை அவர்களின் நக்கண்ணையின் விழைவுரை தற்சமயம் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள சுஜா சுயம்புவின் தமிழ்த் தொகுப்பு மரபு எட்டுத் தொகை பனுவல்கள் உள்ளிட்ட ஆய்வுகள் சங்க இலக்கியத்தின் திணை, துறை மரபின் பொருத்தப்பாடுகளை ஆராய்ந்து அவற்றின் பொருத்தமற்ற தன்மைகளைக் கண்டுகாட்டியுள்ளன.

    சங்கப் பெண் கவிஞர்கள் எனும்போது உ.வே.சாமிநாதையர், பேராசிரியர் ச.வையாபுரிப்பிள்ளை (பாட்டும் தொகையும்), ந.சஞ்சீவி (சங்க இலக்கிய ஆராய்ச்சி அட்டவணை), ந.முருகேசபாண்டியன் (அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில், சங்கப் பெண்பாற்புலவர்கள்) உள்ளிட்டோரால் முன்வைக்கப்பட்ட பெண்பாற்புலவர்களின் பட்டியல்களை விடுத்துத் தாயம்மாள் அறவாணன் அவர்களின் மகடூஉ முன்னிலை நூல் அளித்துள்ள பட்டியலைச் சக்திஜோதி இந்நூலிற்கான மூல ஆதாரமாகக் கொண்டுள்ள முறைமையினை எளிதாகப் புறந்தள்ளிவிட முடியாது.

    இம்முறையினைத்தான் Gynocriticismத்தின் அடிப்படையாகப் புரிந்துகொள்ள முடிகின்றது. சங்கப் பாடல்களில் உள்ள பெண்மொழியினைப்புரிந்து கைக்கொள்ள பெண்நிலைப்பட்ட தரவுகளைக் ஆதாரமாக்குதல். இந்த நூலை வாசிக்கும்போது தவிர்க்க இயலாமல் ஜூடித் பெட்டர்லியின் Provisions: A reader from 19th century American women (1781 – 1914) (1965 இல் இந்நூல் வெளியானது) பேட்ரிசியா மேயரின் The Female Imagination: A Literary and psychological investigation of women’s writing ((1975) வெளியானது.) என்ற இரண்டு நூல்களும் நினைவிற்கு வந்தன. அமைப்பிலும் பேசும்பொருளிலும் வியக்கத்தக்க ஒப்புமைகளை இவை கொண்டிருந்தன. பெண்எழுத்துகள் குறித்து பெட்ரிசியா மேயரின் இரண்டு கருத்துகள் இங்கு ஒப்புநோக்கத்தக்கன.

    Women writing directly about their lives in letters, journals, autobiographies or indirectly in that concealed form of auto biography we call fiction demonstrate that the experience of women has long been the same, that female likenesses are more fundamental than female (1975:17)

    Women’s writing could not be considered in isolation from the social, economic, and political facts that dictate much of women’s condition. Subsequent critics have agreed. (1975:18)

    படைப்பு சார்ந்த புலமையென்பது பெண்கள் வகைப்பட்டதாக மாறுகையில் அதன் தன்மையானது சமூகத்தின் கூட்டு மனசாட்சியாக வெளிப்படும். ஆண்களின் படைப்புகளில் பெண்களை எழுதிப்பார்க்க முனைவது பல சமயங்களில் வலிந்து வெளிப்படையாகத் தெரியும். பெண்கள் தங்களைப் பற்றித் தாங்களே எழுதும்பொழுது சமூகத்தின் ஊடுபாவு தோற்றம் அசலானதாகவும் அழுத்தமானதாகவும் உருவாகும். – சக்திஜோதி (ப.19)

    மேற்குறித்த இரண்டு கருத்துகளின் பிழிவாகத்தான் சக்தி ஜோதியின் இக்கருத்து உள்ளது. மேலும் அமைப்பு முறையில் நோக்கும்போது சக்தி ஜோதி சங்கப் பெண்பாற்புலவர்களின் பாடலடிகளை ஒவ்வொரு பகுதிக்கும் தலைப்பாகத் தந்திருக்கின்றார். சான்றாக இந்நூலிலுள்ள முதல் கட்டுரை ‘நிலந்தொட்டு புகாஅர்’ என்பது வெள்ளிவீதியாரின் பாடல் அடி. அவர்குறித்த கட்டுரைக்கான தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஜூடித் பெட்டர்லியின் Provisions: A reader from 19th century American women (1781 – 1914) நூலிலும் அமெரிக்கப் புனைகதையாளர்களின் புகழ்பெற்ற தொடர்கள், அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகளில் பேசிய தொடர்கள் ஆகியன ஒவ்வொரு கட்டுரைக்கும் தலைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது. சான்றாக Maria W. Stewart (1803 – 1879) குறித்த கட்டுரைக்கு Why sit ye here and die? என்று தலைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவர் பெண்ணிய சமூகத்தளத்தில் வினையாற்றிய முதல் ஆப்பிரிக்க – அமெரிக்க பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வடி ப்ராங்ளின் அவையில் செப்டம்பர் 21, 1832இல் அவர் ஆற்றிய சொற்பொழிவின் தலைப்பு.

    1970களில் தொடங்கிய gynocritic விமர்சனமுறை தமிழ் ஆய்வுப்பரப்பில் சக்திஜோதியின் மூலம் கால்பாவியுள்ளது என்றே கருதலாம். ஆராய்ச்சி மரபில் இவ்வகைமையில் இந்நூலினை அடையாளங்காண முடிகின்றது. சங்கப் பெண்கவிதைகள் என்ற இந்நூலைப் பொறுத்தவரைக் கீழ்க்கண்ட நிலைகளில் இதன்தன்மைகளைப் புரிந்துகொள்ள இயலுகின்றது.

    • முதலாவதாக இந்நூலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி. இந்நூலின் கட்டுரைகள் யாவும் குங்குமம் தோழி இதழில் ‘பெண் உடல் மனம் மொழி’ என்ற தலைப்பில் தொடர்கட்டுரையாக வெளிவந்தவை. எனவே அனைத்துத்தரப்பட்ட வாசகர்களையும் சென்று சேர்கின்ற ஒரு மொழிநடையைக் கையாண்டுள்ளார். அதே நேரம் தமிழியல் ஆய்வாளர்களுக்குத் தேவையான அளவிற்குக் கருத்துகளில் அழுத்தத்தையும் ஆழத்தையும் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
    • ஒவ்வொரு பெண்கவிஞர் குறித்த கட்டுரை முடிவிலும் அவர்களைப் பற்றிய  குறிப்புகளை அளித்திருப்பது. சில இடங்களில் கல்வெட்டுச் சான்றுகளை எடுத்துக் காட்டியிருப்பது.
    • சமகாலப் பெண்கவிஞர்களின் கவிதைகள், புகழ்பெற்ற பிறமொழி நாவல்கள், திரைப்படங்கள், அன்றாடம் நாம் கடந்து போகின்ற நிகழ்வுகளிலிருக்கின்ற உயிர்ப்புக் கணங்கள் ஆகியவற்றை விவரித்து அதனூடாகச் சங்கப் பெண் கவிதைகளின் மொழியையும் வெளியையும் எடுத்துரைக்கின்ற பாங்கு.
    • சங்க இலக்கிய ஆய்வாளர்கள் சிலரால் ஆண்புலவர்களின் பட்டியலில் வரிசைப்படுத்தப் பட்டிருக்கும் புலவரைப் பெண்ணாக அடையாளங்காட்டுகின்ற ஆய்வுமுறைமை.
    • இறுதியாகக் கவிஞரின் பரந்துபட்ட வாசிப்பும் அதன் வெளிப்பாடாக அமைந்திருக்கின்ற சான்றுகளும் மேற்கோள்களும்.

    இவர் கையாண்டுள்ள மொழிநடையின் இயல்புத்தன்மைக்குச் சான்றாக ஒரு பகுதி வருமாறு: அஞ்சியத்தை மகள் நாகையார் குறித்த கட்டுரையில்,

    “ஆண் பெண் இருவருக்குமான வாழ்வின் முதல் சந்திப்பிலேயே கணவனாகப் போகிறவனை இனியவன் என்று பெரும்பாலும் பெண் நம்பத் தொடங்கிவிடுகிறாள். அவனிடம் தன்னை முழுவதுமாக ஒப்படைப்பதற்கு முன்பாகவே அவனே “தன்னுடைய ஆண்” என நினைக்கிறாள். மேலும் அவன்தான் இவ்வுலகின் மிகச்சிறந்த ஆண் என்றும், அவனுடைய நெஞ்சில்தன் ஒருத்திக்கு மட்டுமே இடம் இருப்பதாகவும், தன்னால் மட்டுமே அவனை அரவணைத்துப் போகமுடியுமெனவும் நம்புகிறாள். இந்நம்பிக்கையின் அடிப்படையிலேயே ஒரு பெண் அவளுடைய ஆணுடன் கூடி வாழத் தொடங்குகிறாள்.” (ப.58)

    தமிழ் அகமரபின் கைகோளுள் ஒன்றான களவு வாழ்வில் ஈடுபடும் பெண்ணுடைய நிலையினை இதைவிட எளிமையாக அழுத்தத்துடன் கூற இயலாது என்றே நினைக்கிறேன். இக்கட்டுரையில் ஹங்கேரிய கவிஞன் மிக்லோஷ் ராட்நோட்டி எழுதிய என் மனைவியைப் பற்றிய ஒரு எளிய பாடல் என்ற கவிதை இடம்பெற்றுள்ளது. இக்கவிதை எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.  அஞ்சியத்தை மகள் நாகையாரின் அகநானூற்றுப் பாடல் ‘முடவு முதிர் பலவின் குடமருள் பெரும்பழம்’ விளக்கப்பட்டுள்ளது. கட்டுரையின் இறுதியில்  கவிஞர்குறித்த குறிப்புடன் இப்பாடல் மூலம் தெரியவருகின்ற சில புதுமையானசெய்திகளையும் தொகுத்தளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அள்ளூர் நன்முல்லையார் குறித்த கட்டுரையின் இறுதியில் அள்ளூர் என்கிற ஊர் குறித்த குறிப்புகள் அள்ளூர்கல்வெட்டு மற்றும் திருநெல்வேலிக் கோயில் கல்வெட்டிலும் காணப்படுவதையும் சக்தி ஜோதி சுட்டியுள்ளார்.

    முதல் பதினைந்து கட்டுரைகளுள் அஞ்சில் அஞ்சியார் குறித்த கட்டுரை குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெறுகின்றது. நற்றிணையின் 90ஆவது பாடல் இக்கவிஞர் பாடியது.  இவ்வொரு பாடல் மட்டுமே இவர் பாடியுள்ளார். இப்பாடலின் பொருளைப் பூப்பெய்திய பெண்ணொருத்திக்கு ஊஞ்சல் விளையாட்டு மறுக்கப்பட்ட நிலையையும் அதனால் அவள் உற்ற துயரத்தையும் மொழிவதாக சக்திஜோதி கட்டமைத்துள்ளார். இப்பாடலுக்கு உரைகாரர்கள் அளித்துள்ள திணை, துறை குறிப்புகளிலும் விளக்கத்திலும் உள்ள சிக்கலினால் அவற்றை விடுத்துப் பாடலை மட்டும் தான் அணுகியதாகச் சக்திஜோதியே குறித்துள்ளார்.

    எட்டுத்தொகையுள் ஒன்றான நற்றிணைக்குப் பிற தொகைநூல்களைப் போல பழைய உரையோ பெயரறியாத உரையோ இல்லை. அவ்வாறே பிற தொகை நூல்களைப் போன்ற திணைப்பகுப்பு குறிப்பும் இல்லை. நூலைத் தொகுப்பித்தது பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி என்கிற ஒரு குறிப்பு மட்டும் நற்றிணையின் இறுதிச் சுவடி மூலம் கிடைக்கின்றது. 1914இல் இதற்கு உரையெழுதிய பின்னத்தூர் நாராயண சாமி ஐயரே திணைப்பகுப்பையும் துறைக்குறிப்பையும் எழுதியிருக்கிறார். குறைந்த பட்ச காலப்பழமையாக கி.பி. ஒன்று என்பதைச் சங்க இலக்கியத்தின் காலமாகக் கொண்டாலும் சுமார் பதினைந்து நூற்றாண்டுகள் நற்றிணை திணைப்பகுப்பு செய்யப்படாமலேயே வழங்கப்பட்டுள்ளது கவனத்திற்குரியது. (2016:55)  இந்த நற்றிணையில் இடம்பெற்றுள்ள அஞ்சில் அஞ்சியாரின் 90ஆவது பாடலுக்குப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் வழங்கிய திணை மருதம் துறை தோழி தலைமகளுக்குரைப்பாளாய்ப் பாணனை நெருங்கி வாயின்மறுத்தது, பரத்தையிற்பிரிந்த தலைமகனால் விடுக்கப்பட்டு வாயில் வேண்டிவந்த பாணன் கேட்பத் தோழி தலைமகளை நோக்கி நின் காதலன் முயங்கும் பரத்தையருள் பெண்டன்மையறியாப் பெதும்பைப் பருவத்தாளொருத்தி ஊசலாடாது அழுது நிற்பதை ஆற்றுவித்து, மீட்டும் ஆடச்செய்யாத அவனது அவை பயனுடையதன்று; அவளழுதூடினமையின் இங்கு வந்தான்போலுமென வெகுண்டு கூறாநிற்பது. ஆனால் இந்தப் பாடலுக்குள் இத்துறைக்குறிப்பிற்கான எந்த ஒரு ஏதுவும் இல்லை. அப்பாடலில் காட்டப்படுவது எல்லாம் விழாக்களால் ஓசை பெற்ற மூதூர்; வறுமையற்ற நிலையில் இடையறாது துணி துவைக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் புலைத்தி. அவள் தந்த கஞ்சியிட்டு உலர்த்திய பூத்தொழிலை உடைய ஆடையை அணிந்த இளைய பெண். மூதூர், வேந்தன் ஆகிய சொற்கள் இப்பாடலை மருதத்திணைக்கு உரியதாக அடையாளங்காட்டுகின்றன. ஆனால் அவ்விளைய பெண் பரத்தை என்பதற்கு எந்த அகச்சான்றும் இல்லை. இப்பின்புலத்தில் சக்தி ஜோதி இப்பாடலுக்கு அளித்துள்ள விளக்கம் விதந்து சுட்டத்தக்கது. அப்பகுதி வருமாறு,

    இன்றைக்கும் கிராமப்புறங்களில் ஒருவழக்கம் இருக்கிறது. ஒருபெண், பூப்படைந்தவுடன் அவ்வூரின் உடைவெளுப்பவள் அளிக்கும் மாற்றுடையை அணிந்து கொண்டு வீட்டின் புறத்தில் சில காலம் ஒதுங்கியிருக்க வேண்டும். இதைப்பற்றி சசிகலாபாபு தனதுகவிதை ஒன்றில்,

    வண்ணாத்தி கொடுத்த சேலையுடுத்தி

    நல்லெண்ணையும் பச்சைமுட்டையும்

    கலந்த சுவாசத்துடன்

    அவள் முதல் மூக்குத்திப் பெற்றாள்.

    இவரது இந்தக் கவிதைமூலம் வண்ணார் மாற்றுடை என்கிற இப்பழக்கம் தற்போதும் சில இடங்களில் தொடர்வதாக உணரமுடிகின்றது. அஞ்சில் அஞ்சியாரின் நற்றிணைப் பாடலில் அதுவரை சிறுமியாகக் குழந்தைமை நிறைந்தவளாக விளையாடிய இளமகள் முதல் பூப்பின் தினத்தில் அல்லது அதற்கடுத்த சில தினங்களில் தன்னுடைய விளையாட்டை விட்டு வெளியேறிதற்காக வருந்திய ஒரு பெண் எழுதிய வரிகளாக இந்தப் பாடல் அமைந்திருக்கலாம். முதல்நாள் வரைவிளையாடிய நினைவில் விளையாட ஓடிவருகிற சின்னவளை அங்கிருக்கும் பெரியவர்கள் கடிந்து சொல்லியிருக்கலாம். அல்லது அவளே கூட இனிமேல் இவ்வாறெல்லாம் விளையாடக்கூடாது எனஅந்த வீட்டின் பெரியவர்கள் சொன்னது நினைவுக்கு வந்து விசும்பியபடி நகர்ந்திருக்கலாம். இந்தக்காட்சியைப்பார்த்த ஒருவர் இந்தப்பாடலை எழுதியிருக்கலாம். (ப.78)

    இப்பாடலுக்குப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் எழுதியுள்ள உரை,

    கூத்தயர்கின்ற விழாவின் ஒலியையுடைய இம்மூதூரின்கண்ணே ஆடைகளை ஆராய்ந்து கழுவுந்தன்மையிற் பெரிதும் தன் கை ஒழியாத வறுமையில்லாத ஆடையொலிப்பவள் இரவிலே தோய்த்த சோற்றின் கஞ்சியிட்டுப் புலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று; கரிய பனைநாரினாலே திரித்த கயிற்றைப் பிணித்துத் தொங்கவிட்ட வூசலிலேறிப் பூப்போல் உண்கண்களையுடைய தன் ஆயத்தார் அதனை ஆட்டவுந் தான் ஆடாளாய் அழுதனள் பெயரும் அஞ்சில் ஓதி நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள் – அழுது மீளுகின்ற அழகிய சிலவாகிய கூந்தலையுடைய பெண்தன்மையிற் குறைவுபட்ட சிலவாய வளைகளை யணிந்த பரத்தையாகிய பெதும்பைப் பருவத்தாள் ஓரிளமகளை;(1914:120)

    மேலும் உரையின் இறுதிப்பகுதியில் பதவுரையாக நல்கூர்பெண்டு – பெண்தன்மையில்லாள். பெண்தன்மை, நாணமுதலியன. மாக்கள் – பாணன் முதலானோர். இப்பாடலில் இடம்பெற்றுள்ள நல்கூர் என்ற சொல்லுக்கு ‘வறுமைபட்ட’, ‘ஏழ்மையையுடைய’ என்பதே பொருளாக உள்ளது. குறுந்தொகை பாடலொன்றில் இச்சொல்லானது இப்பொருண்மையிலேயே வழங்கப்பட்டுள்ளது. தமிழ் அகராதி லெக்சிகனும் இப்பொருளையே தருகின்றது. ஆனால் நற்றிணையின் உரைகாரரே பெண்தன்மையில் குறைவுபட்ட அல்லது வறுமைபட்ட என்று பொருள்படுத்துகின்றார். பிறகு இது வாயில் வேண்டிவந்த பாணனுக்குத் தலைவி கூறிய மறுமொழி என்று துறையைக் கட்டமைக்கிறார். வறுமைபட்ட பெண் பரத்தையாக அல்லது பரத்தையின் மகளாகவே இருக்க வேண்டும் என்கிற உரைகாரரின் நோக்கு மேட்டிமைத்தனம் வாய்ந்ததாகவே உள்ளது. இந்நிலையில் நடைமுறையில் உள்ள சடங்கினைக் காட்டி சக்திஜோதி இக்கவிதையினை விளக்கியுள்ளது இப்பாடலை புதிய நோக்கில் அணுக உதவுகின்றது.

    பொன்முடியாரின் ஈன்றுபுறந்தருதல் என்தலைக் கடனே என்ற பாடல், காவற்பெண்டு எழுதிய புலியிருந்து போகிய கல்லளை போல ஈன்றவயிறோ இதுவே தோன்றுவன்மாதோ போர்க்களத்தானே என்ற பாடல் இவ்விரண்டு பாடல்கள் குறித்த பதிவுகள் சிந்தனைக்குரியவை. பொன் முடியார் ஆணா பெண்ணா என்கிறவிவாதம் நடந்துள்ளதாகக் குறித்துள்ளார். அது குறித்து விளக்கியிருக்கலாம். ச.வையாபுரிப்பிள்ளை பாட்டும் தொகையும் நூலில் உள்ள பெண்பாற் புலவர்கள் பட்டியலில் இவர்பெயர் இடம்பெறவில்லை. உ.வே.சா.வின் பதிப்பிலும் பாடினோர் வரலாற்றில் பெண் என்று குறிக்கவில்லை. மகடூஉ முன்னிலை நூலில் பெண்பாற்புலவராகக் குறிக்கப்பட்டிருக்கலாம். வீரம், மறம் என்றெல்லாம் புனைந்துரைக்கப்படுகின்ற போர் குறித்த பெண்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பது குறித்த சக்திஜோதியின் கருத்துகள் கவனம் பெறத்தக்கவை. ஏனென்றால் பெண்ணை இச்சமுதாயம் தொடர்ச்சியாக ஒரு சார்புயிராகவே கட்டமைத்து வந்துள்ளது. இந்த நூலிலும் அக்கருத்து பரக்க பேசப்பட்டுள்ளது. பெண் என்பவள் எப்போதும் யாருக்காகவேனும் காத்திருப்பவளாகவே இருப்பது. இந்த நிலையில் போர் என்பது எத்தகு மனநிலையினைப் பெண்களுக்கு ஏற்படுத்தியிருக்கும். இதில் பொன்முடியாரின் பாடலைப் பொறுத்தவரை முதலடிக்கு இவர் அளித்திருக்கும் விளக்கமே அப்பாடலின் முழுக்கருத்தையும் கூறிவிடுகிறது. என் தலைக்கடன் என்பது ஒரு பெண்ணிற்கு வாரிசினை உருவாக்கித்தருவதே பெருங்கடனாக இருப்பதனை உணர்த்துகிறது. தந்தை, கொல்லன், வேந்தனுக்கெல்லாம் தலைக்கடன் என்றில்லாமல் பொதுவாகக் கடன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்கிறார். பெண்ணை மையமிட்டே சமூகம் இயங்கியிருக்கின்றது. எனவே பெருமித உணர்வில் இப்பாடல் எழுதப்பட்டிருக்கிறது. பிறிதொரு நிலையிலான பெருமிதத்தை காவற்பெண்டின் பாடல் உணர்த்துகின்றது. குறிப்பாகத் தன் உடலைக் கொண்டாடுதல் என்று சக்திஜோதி அளித்துள்ள விளக்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. போர், அதனால் ஏற்படுகின்ற உயிரிழப்புகள் பெண்களுக்குத் துன்பத்தைத் தருகின்றவையாக இருப்பினும் அதனை அவள் ஏற்றுக்கொள்ளவும் கொண்டாடவும் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்கிற கருத்தினை சக்திஜோதி வலிமையாக முன்வைக்கிறார். இது குறித்துமேலும் விவாதிக்க வேண்டிய தேவையுள்ளது.

    இறுதியாக வைத்துள்ள ஔவையார் குறித்த கட்டுரை இந்நூலிற்கு மகுடம். இருப்பதிலேயே பெரிய கட்டுரை. கிரேக்கப் பெண்கவிஞர் சாப்போவின் கவிதைகள், ஹீப்ரு மொழிக்கவிஞர் தெபோரா, சமஸ்கிருத மொழியில் கல்வியறிவு பெற்ற பெண்களான கேலா, முத்கலானி, சுலபா, அபாலா…,தேரிகாதை பாடிய சியாமா, உத்தரா, வட்டேசி சிம்ஹா, காதா சப்த சதியில் இருக்கன்ற ரோஹா, ரேவா, நாதா எனத் தொன்மை மொழிகள், மதங்கள் சார்ந்த பல பெண்பாற்புலவர்களின் கவிதைகளையும் கருத்துக்களையும் எடுத்துக்காட்டி ஔவையின் முட்டுவேன் கொல் தாக்குவென் கொல் கவிதையை இவர் விவரித்திருக்கும் முறை சக்திஜோதியின் பரந்துபட்ட வாசிப்பினைக் காட்டுகின்றது.

    இதை தன்னுடைய முதல் உரைநூல் என்று சக்திஜோதி குறித்துள்ளார். இந்த ஆய்வுப் பரப்பில் இவர் இன்னும் பயணிக்க வேண்டும். அதற்கான தேவை உள்ளது. பேட்ரிசியா மேயர் தன்னுடைய  நூல் குறித்த கூறியுள்ள முடிவு இந்நூலுக்கும் பொருந்துகின்றது.

    This book is an investigation of some possibilities – not a history of women’s writing; indeed, explicitly anti historical in orientation, but an examination of the ways the life of the imagination emerges in the work of women writing prose directly as women.                                                                                                               (1975:18)

    துணை நூல்கள்

    1914 நற்றிணை மூலமும் உரையும், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் (உ.ஆ.), சைவ  வித்யாநுபாலனயந்திரசாலை, சென்னை.

    1965   Provisions: A reader from 19th century American women (1781 – 1914), Judith fetterly,  Indiana university press, Bloomington

    1975    The Female Imagination: A Literary and psychological investigation of women’s writing, Patricia Meyer Spacks, Newyork.

    2016    தமிழ்த் தொகுப்பு மரபு எட்டுத் தொகை பனுவல்கள், சுஜா சுயம்பு, சந்தியா பதிப்பகம்,  சென்னை

    2017    சங்கப் பெண்கவிதைகள், சக்திஜோதி, சந்தியா பதிப்பகம், சென்னை

    Share
  • திராவிட சிசு!

    -முனைவர் அ.மோகனா

    ‘வைகாசி’ அருளாளர்கள் பல அவதரித்த மாதம். சைவ அடியார்களுக்கும் வைணவ ஆழ்வார்களுக்கும் உகந்த மாதம். பல விசேஷங்கள் நிறைந்த மாதமும் கூட. இந்த வைகாசி மாதத்தின் மூல நட்சத்திர நாளன்று அவதரித்தவர்தான் திராவிட சிசு என்று ஆதிசங்கரரால் அழைக்கப்பட்ட திருஞானசம்பந்தர். இதே நாளில்தான் திருநீலநக்கரும், திருநீலகண்ட பாணரும் அவதரித்தனர். சம்பந்தரின் வாழ்வில் இந்நாள் பல முக்கியத் தருணங்களைக் கொண்டதாக உள்ளது. சம்பந்தர் பிறந்த இதே நாளில்தான் அவருக்குத் திருமணமும் நிகழ்ந்தது. அந்நாளின் பின்னிரவு விடியலில்தான் இறைவனுடன் இரண்டறக் கலந்தது.

    சம்பந்தர் தமிழ்ப் பக்தி இலக்கியத்தின் தலைசிறந்த முன்னோடி. இவர் பாடிய பாடல்களைக் காணும்போது இவர் பற்றிய நிகழ்வுகளின் உண்மையை உணரமுடிகின்றது. தம் மூன்றாம் வயதினிலே உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டு அதன் பெருமையால் தேவாரம் பாடியவர். சிவபெருமானிடத்தே பொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும், உலவாக் கிளியும் பெற்றவர். வேதாரணியத்திலே திருக்கதவு அடைக்கப்பாடியவர். திருநீற்றுத் திருப்பதிகம் பாடிப் பாண்டியனுக்கு வெப்பு நோயை நீக்கியவர். எலும்பைப் பெண்ணாக்கியவர் எனப் பல அற்புதங்கள் நிறைந்த வாழ்வினை வாழ்ந்தவர் திருஞானசம்பந்தர். தலங்கள் தோறும் சென்று சம்பந்தர் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. குறிப்பாகக் கோளறு திருப்பதிகம். ஏனெனில் இறைவனிடம் சரணடைந்த அடியார்களை நாளும் கோளும் எதுவும் செய்வதற்கில்லை என்பதை உலகிற்கு உணர்த்த சம்பந்தரால் இப்பதிகம் பாடப்பட்டது. மதுரை அரசி மங்கையர்க்கரசி அழைப்பைஏற்று மதுரை செல்லக் கிளம்பினார். அப்போது அந்த நாள் நல்ல நாள் இல்லை என்று அவர் பயணத்தை தடுத்தார் திருநாவுக்கரசர். இறைவன் அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள்தான் என்று சொல்லி கோளறு பதிகம் என்னும் இந்த பத்துப் பாடல்களைப் பாடியருளினார் திருஞான சம்பந்தர். பத்துப் பாடல்களின் தொகுப்புக்குப் பதிகம் என்று பெயர். இதில் பதிகப் பயனுடன் சேர்த்து மொத்தம் பதினொரு பாடல்கள் இதில் உண்டு. இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது இன்றளவும் மக்களின் நம்பிக்கையாகஉள்ளது.

    வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
    மாசறு திங்கள்கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
    ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
    ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. (இரண்டாம் திருமுறை, கோளறு திருப்பதிகம், பாடல்.1)

    மூங்கிலைப் போன்ற தோளினை உடைய உமையினை ஒருபாகமாகக் கொண்டவன். விடத்தை உண்ட கண்டத்தினை உடையவன். அவன் திங்களையும் கங்கையையும் முடிமேல் அணிந்தவன். மகிழ்ச்சியுடன் வீணையை மீட்டிக்கொண்டு என் உள்ளத்தில் புகுந்துள்ளான். அதனால் ஞாயிறு, திங்கள் முதலிய ஒன்பது கோள்களும் எனக்குக் குறறத்தைச் செய்யாது. எனக்கு மட்டுமல்ல அவை அடியார்களுக்கும் நல்லதை மட்டுமே செய்யும் என்கிறார் சம்பந்தர். மேலும் கோள்கள் மட்டுமா அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பது, பதினாறு, பதினெட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவனவும் பிறவுமான நட்சத்திரங்களும் அடியார்களுக்கு அன்போடு மிக நல்லனவே செய்யும். சினம் மிக்க காலன், அக்கினி, யமன், யமதூதர், கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடையனவாய் நல்லனவே செய்யும். கொடிய சினமுடைய அவுணர், இடி, மின்னல், செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும். வலிய குரங்கு, புலி, கொலையானை, பன்றி, கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியனவும் நல்லனவே செய்யும்! கொடிய சினமுடைய அவுணர், இடி, மின்னல், செருக்குடைய பூதங்கள் ஆகியனவும் அடியார்களைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும் என அடியார்களுக்கு இப்பூவுலகில் உள்ள அனைத்து உயிர்களும், பொருட்களும் நல்லதை மட்டுமே செய்யும் என்கிறார் சம்பந்தர்.

    சம்பந்தரின் பாடல்கள் பக்திச் சுவையில் மட்டுமன்றி இலக்கிய வடிவத்திலும் சிறப்புற்று இருக்கின்றன. இரண்டு சீர்களாலான அடியில் தொடங்கிப் ஒன்பது, பத்துச் சீர்களாலான அடிகள்வரைப் பாடல்களைப் புனைந்துள்ளார் சம்பந்தர். இரண்டு சீர்களால் ஆனவற்றைத் திருவிருக்குக்குறள் என்பர். ஒன்பது சீர்களைக் கொண்ட அடிகளால் ஆனது யாழ்முரிப்பதிகம். பத்துச் சீர்களால் ஆனது திருத்தாளச்சதி. ஒன்று யாழில் அடங்காதது. மற்றொன்று ஆடுவதற்கு உகந்தது. சம்பந்தர் பாடிய பதிகங்களுக்குள் தனிச்சிறப்பு வாய்ந்த பதிகமாக இவ்விரு பதிகங்களும் அமைகின்றன. யாழ்முரிப் பதிக வரலாறு சுவாரசியமானது. சம்பந்தரின் பாடல்களுக்கு யாழ்வாசித்துத் தொண்டு செய்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். அவர் வாசித்த யாழ்க்கருவி சகோடயாழ் என்னும் பெயருடையது. அவரைச் சேக்கிழார் “சகோடயாழ்த் தலைவர்” எனப் போற்றுகின்றார். சகோடயாழின் பண்டைத் தமிழ்ப் பெயர் “செம்முறைக் கேள்வி” என்பது. இதில் பதினான்கு நரம்புகள் கட்டப் பெற்று இருக்கும். திருநீலகண்ட யாழ்ப்பாணரின் உறவினர்கள் யாழ்ப்பாணர் தேவாரப்பதிகங்களை யாழில் வாசித்து வருவதனைக் கேட்டு, “நீங்கள் அத்திருப்பதிகங்களை யாழிலிட்டு வாசிக்கும் சிறப்பினாலே அப்பதிகங்களின் இசை அகிலமெல்லாம் வளர்கின்றது” என்று பாராட்டி மகிழ்ந்தனர். யாழ்ப்பாணர் அந்த பாராட்டுரைக்கு மகிழவில்லை. அதற்கு மாறாகச் செவிபொத்தி உளம் நடுங்கினார். திருஞானசம்பந்தப் பிள்ளையாரை அடைந்து அவரது திருவடியைப் போற்றித், “திருப்பதிக இசை அளவுபடாத வகையில் இவர்கள் மட்டுமேயன்றி உலகிலுள்ளோரும் அறியும் வகையில் பலரும் புகழும் திருப்பதிகம் பாடியருள வேண்டும். அவ்வாறு பாடியருளப் பெற்றால் பண்புமிக்க அந்த இசை யாழின்கண் அடங்காமை யான் காட்டப் பெறுவன்” என்று விண்ணப்பித்தார். பிள்ளையாரும், “மாதர் மடப் பிடி”என்ற திருப்பதிகத்தை, “பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலு நிலத்தநூல் புகன்ற பேத நாதவிசை முயற்சிகளா லடங்காத வகை `காட்ட”ப் பாடியருளினார். கண்டம் என்றால் மிடறு என்று பொருள். கலம் என்றால் கருவி, யாழ் என்று பொருள். அதுவரையிலும் மிடற்றிலோ, யாழிலோ நாதவிசை முயற்சிகளால் இசைக்கப் பெற்றிராத, இசைநூல்களில் சொல்லப் பெற்றிராத இசை வகை காட்டிப் பிள்ளையார் பாடியருளினார், எனச் சேக்கிழாரும் இந்நிகழ்ச்சியைக் கூறியுள்ளார். பாடல் வருமாறு,

    மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
         -நடையுடைம் மலைமகள் துணையென மகிழ்வர்
    பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
         -அவர்படர் சடைநெடு முடியதொர் புனலர்
    வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
         -இரைந்நுரை கரைபொரு துவிம்மிநின் றயலே
    தாதவிழ் புன்னைத யங்குமலர்ச் சிறை வண்டறை
        -எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.

    (முதல் திருமுறை, யாழ்முரிப் பதிகம், பாடல் 1)

    இப்பாடல் ஒன்பது சீர்களைக் கொண்டிருந்தாலும் சந்த வாய்பாட்டில் தான தனத்தனனா – தன – தானன தானனா/ தனா – தனா – தனா தனதன தனனா என்றவாறு அமைந்துள்ளதை ந.சுப்புரெட்டியார் குறித்துள்ளார். அடிமுதற்கண் தொடங்கிய இயலும் இசையும் அவ்வடிக்குள்ளேயே முரிந்து மாறுபடும்படி அமைந்தமையால் முரி ஆனது. திருநீலகண்ட பாணர் யாழை முரிக்க முயன்றதனாலும் முரியாயிற்று.

    திருஞானசம்பந்தர் தான் வாழ்ந்த பதினாறு ஆண்டுகளுக்குள் பல்லாயிரம் ஆண்டுகள் புரிய வேண்டிய சாதனையைப் புரிந்தவர். அவர்தம் பக்திச்சிறப்பையும் இலக்கியப்புலமையையும் கருத்து நிலைப்பாட்டையும் புரிந்து கொண்டதால்தான் ஆதிசங்கரர் அவரைத் திராவிட சிசு என்றார்.

    *****

    பார்வை நூல்கள்

    சம்பந்தர்,   திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரப்  பதிகங்கள், திருமுறை (1,2,3), கயப்பாக்கம் சதாசிவ செட்டியாரால் பார்வையிடப்பெற்றன, கழகம், சென்னை, 1973.

    சேக்கிழார்,பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் (பன்னிரண்டாந்திருமுறை), சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, மூன்றாம் பதிப்பு, 1950.

    ந.சுப்பிரெட்டியார், மூவர்தேவாரம் – புதிய பார்வை, நிவேதிதா பதிப்பகம், சென்னை, 2003

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்
    தமிழ்த்துறை
    தியாகராசர் கல்லூரி
    மதுரை
    8056621869

     

     

    Share