புதுமைக்கு வித்திட்ட வேலூர் லினக்ஸ் பயிலரங்கு

1

செல்வ முரளி

2010 ஆகஸ்டு 1ஆம் தேதி வேலூர் ஊரிசு கல்லூரியில் லினக்ஸ் பயிலரங்கு மற்றும் சைபர் கிரைம் விழிப்புணர்வுக் கருத்தரங்கு, சிறப்பான முறையில் நடைபெற்றது. இப்பயிலரங்கு மற்றும் கருத்தரங்கினை விசுவல் மீடியா குழுமம், மேக்சிமைஸ் டெக்னாலஜிஸ் மற்றும் ஊரிசு கல்லூரியின் கணினித் துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

இதில் வேலூர், கிருஷ்ணகிரி, சித்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏரளமான மாணவ, மாணவியர் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் 350க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பெரும்பாலானோர், வேலூரைச் சுற்றியுள்ள 10க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள்.

மேலும் பல ஊர்களில் இருந்து மாணவ, மாணவியர்கள் சிலர் காலை 6 மணிக்கெல்லாம் ஊரிசு கல்லூரி வளாகத்திற்கு வந்திருந்தனர். மேலும் நிகழ்ச்சி நடக்கும் நாளான ஞாயிறு அன்று அதிகாலை 5 மணிக்கு இணையத்தில் தகவல்களை கண்டு ஒரு  நண்பர் அப்போதே சென்னையில் இருந்து புறப்பட்டு விழாவில் கலந்துகொண்டார்.

காலை 9 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி தொடங்கியது. உபுண்டு தமிழ்க் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் இராமதாசன் கலந்துகொண்டு லினக்ஸ் பற்றியும் அதை எவ்வாறு நிறுவுவது என்றும் பயிற்சி அளித்தார்.

மாணவ, மாணவியர்க்கெல்லாம் ஏற்கனவே லினக்ஸ் பற்றி தெரிந்திருந்தது என்றாலும் அவர்களுக்கு முறையாக நிறுவுவது மற்றும் நிறுவும்போது ஏற்படும் பிரச்சினைகள், பயன்பாட்டுப் பிரச்சினைகள் போன்றவற்றில் ஏராளமான சந்தேகங்கள் கேட்கப்பட்டன. மேலும் மாலையில் அடியேன் சைபர் கிரைம் பற்றியும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும், நம்முடைய மின்னஞ்சல்களை எப்படி பாதுகாப்பது என்றும் விளக்கினேன். அப்போது சமீபத்தில் தொழில்நுட்ப வலைப்பதிவாளரான சூர்யக்கண்ணன் அவர்களின் ஜிமெயில் முகவரி திருடப்பட்டது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவ / மாணவியர்கள் தங்கள் கல்லூரிகளில் லினக்ஸ் பயனர் குழுமத்தை ஆரம்பிக்க உள்ளோம் என்று ஆர்வத்துடன் கூறினார்கள். இதில் குறிப்பிட்டத்தகுந்த விசயம் என்னவெனில் கணினியில் தமிழ் பற்றி நிறைய மாணவ / மாணவியர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. எனவே கணினியில் தமிழ் உருவான விதத்தையும் கணினியில் தமிழ் சார்ந்த பயன்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தோம்.

விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு லினக்ஸ் விளக்கக் கையேடு, அரசின் சிடாக்கில் இருந்து வெளிவரும் பாஸ் லினக்ஸ் டிவிடி ஆகியவற்றைஇலவசமாக வழங்கினோம். இப்பயிலரங்கு மற்றும் கருத்தரங்கு பற்றி மாணவ / மாணவியர்களிடம் கேட்டறிந்தபோது, நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது என்றும், ஓபன் சோர்ஸ் என்றால் என்ன என்று அறிந்துகொண்டோம் என்றும், இதுபோன்று இன்னமும் பயிலரங்குகளைத் தொடர்ந்து வழங்கும்படியும் கேட்டுக்கொண்டனர்.

இறுதியாக மேக்சிமைஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர் தியாகராஜன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இச்செய்தி அனைவருக்கும் சென்று சேர்ந்திட உதவிய இணையத்தளச் செய்தித் தளங்கள் சங்கமம்.காம், வல்லமை.காம் மற்றும் அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும், இச்செய்தியை தங்கள் பதிப்பில் வெளிவரச் செய்த தினகரன், தீக்கதிர் மற்றும் இதர செய்தித் தாள்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “புதுமைக்கு வித்திட்ட வேலூர் லினக்ஸ் பயிலரங்கு

  1. கட்டற்ற கணிமை விரைவில் அனைவரையும் சென்றடைய இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

    விழாவில் பங்கேற்ற மற்றும் உறுதுணையாக இருந்த அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

    அன்புடன்
    அருண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *