-மேகலா இராமமூர்த்தி

நீரில் துள்ளும் மீனைப் பிடிக்கும் ஆவலில் துணியைப் பிடித்திருக்கும் இந்தச் சிறார்களின் முகத்தில் மகிழ்ச்சி துள்ளிவிளையாடக் காண்கிறேன்!

கிராமத்துச் சிறுவர்களின் இயல்பான இச்செயலை வெகு நளினத்தோடு படம்பிடித்துவந்திருக்கும் திரு. வெங்கட் சிவாவுக்கும், இந்தப் படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்த, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர், திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி!

தூண்டில்போட்டுப் பிடித்தால்தான் மீன் சிக்குமா? இல்லை…எம்போல் துணிபோட்டுப் பிடித்தாலும் அது சிக்கும் என்று நமக்குச் சொல்லித்தருகிறார்கள் இச்சிறுவர்கள்!

இனி, இப்படத்திற்குக் கனித்தமிழில் கவிபாட கவிஞர்களை அன்போடு அழைக்கிறேன்!

*****

ஐப்பசி மாத அடைமழையில் குட்டையில் துள்ளும் குட்டிமீன்களைத் துணிபோட்டுப் பிடிக்கக் காத்திருக்கும் சிறுவர்களை நமக்கும் காட்டிக் குதூகலிக்கிறார் திரு. ஆ. செந்தில்குமார்.

சிறு வயதில்…
ஐப்பசி மாசம் அடமழ…
அப்பவும் குட்ட நெரம்பல…
முட்டியளவு தண்ணிக்குள்ளே…
குட்டி குட்டி மீனுங்க…
கொசகொசன்னு மேயுது…
கொண்டு வாடா துண்டத்தான்…
கொஞ்சமாச்சும் பிடிக்கலாம்…
அஞ்சு நாளு பள்ளிக்கூடம்…
அதுக்கு பெறகு லீவுடா…
அப்ப அங்க போகலாம்…
அத பாஞ்சிபாஞ்சி பிடிக்கலாம்…
ஒன்னு ரெண்டு மூனுடா…
சொல்லி துண்ட வீசுடா…
கெண்ட சிக்கும் பாருடா…
கெண்ட ரெண்டு சிக்கிகிச்சு…
கெட்டியாக பிடிச்சுக்கோ…
நமக்கு கெடச்ச ரெண்டுமே…
நழுவி ஓடப் பாக்குது…
கொண்டு போயி சேக்கனும்…
கொழம்பு வச்சி திங்கணும்…!

*****

கண்ணி வலையில் சிக்காத சின்னஞ்சிறு மீன்களைத் தலைகட்டும் துணியில்  பிடிக்கும் சிறுவர்களின் சாமர்த்தியத்தை வியக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

கிராமத்திலே…

வலையைப் போட்டு மீன்பிடிக்க
வசதி யில்லா வேளையிலே,
தலையில் கட்டும் துண்டெடுத்துத்
துணிவாய் நீரில் அரிக்கின்றார்,
கலைந்து செல்லும் சிறுமீன்கள்
கண்ணி வலையில் சிக்காதே,
நிலையை யுணர்ந்த செயல்பாட்டை
நீங்களும் பார்க்கலாம் கிராமத்திலே…!

*****

”சேலைத் தூண்டிலில் பிடித்த மீன், குழம்பில் கொதித்தபோது உணர்ந்தேன் சேலை வாசம்; ஆயினும் என் தொண்டைக் குழிக்குள் மாட்டியதே முள்!”  என்று மீனைக்கொன்று சமைத்த உணவு தந்த குற்றவுணர்வை அழகாய் விவரிக்கிறார் திருமிகு. சக்திப்ரபா.

 மீனும் நானும்

கொஞ்சம் கொஞ்சமாய்
மெல்ல அடங்கியது மூச்சு
முதலில் துள்ளி
பின் துவண்டு விழுந்தது
உயிர் துறந்தும்
எமக்குணவாகியது
குழம்பில் தக்கையாய்க்
கொதித்த போதும்
அதன் உடலெங்கும் சேலை வாசம்
ஏனோ
என் தொண்டைக் குழியில் தான்
மாட்டிக் கொண்டது முள்!

*****

இரண்டாக நாலாக மடித்த  துணியை மீன்பிடிக்கும் வலையாக மட்டுமல்லாது, நீரைத் தூய குடிநீராக்கும் வடிகட்டியாகவும் பயன்படுத்தலாம் எனும் எளிய அறிவியல் வழிமுறையை இனிய பாடலில் விளக்குகிறார் திருமிகு. அவ்வைமகள்.

பருத்திச்சேலைத்துண்டோ தாவணியோ வேட்டித் துண்டோ போதுமே!
ஏரித்தண்ணி – கொளத்துத்துத் தண்ணிய குடிநீராக்க உதவுமே!
எங்க பாட்டன்தாத்தான் சொல்லிப்போன தூய்மைப்பாட்டு சேதியை
அகிலமெங்கும் சொல்லிச் சொல்லி நம்மைப் போற்றுறாங்க பாருங்க!

ஒசத்தியான வடிகட்டிங்க! செலவில்லாத வடிகட்டிங்க! – ஓஹோ!
வாட்டமான வடிகட்டிங்க! சுலபமான வடிகட்டிங்க!
காலராக்கிருமி முதல் பாசி, முட்டைப்புழு பூச்சி வரை
எல்லாம் தள்ளிப் போக்குத்துங்க! எல்லாம் தள்ளிப்போகுதுங்க!

ஒத்தயாப்போடாதீங்க ரெட்டையா-நாலாப் போட்டிடுங்க!
மடிச்சிமடிச்சிப் போடும்போது சல்லிக்கண்ணு சிறுத்திடுதே!
ரெண்டுன்னா நாப்பது நாலுன்னா இருபது! மைக்ரான் அளவு அப்படி!
சேலைக்கொண்டு வடிகட்டினா நீரை அப்படியே குடிக்கலாம்!

அமெரிக்காவின் பள்ளிப்பாடத்திலே நம்மூர் பருத்திச் சேலை வடிகட்டி!
ஐரோப்பா பள்ளிப்பாடத்திலே நம்மூர் பருத்திச்சேலை வடிகட்டி!
கீழைநாட்டுப் பாடத்திலயும் நம்மூர் பருத்திச்சேலை வடிகட்டி!
செய்து பார்த்து வியக்குறாங்க! வாழ்த்தி வாழ்த்தி வணங்குறாங்க!

எங்க பள்ளிக்கூடப் பாடத்துக்கு நிரூபணம் பண்ணறோங்க – நாங்க
நிரூபணம் பண்ணறோங்க! ஏரிக்குள்ள வடிகட்டிய கசண்டு
கொண்டு காட்டணுங்க! கசண்டுக்குள்ள கிருமியோட்டம் காட்டணுங்க!
பளிங்கு போல தண்ணி ஜோரா வடியுதே! நீங்க பார்த்திடுங்க!

*****

துணியில் மீன்பிடிக்கும் சிறுவரின் செயல் மிகவும் பாதுகாப்பானது. ஆனால் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர் நிலையோ ஒவ்வொரு நாளும் துயரம்! அவர்கள் துயர்களைந்து உயர்வாழ்வளிக்கும் வழிவகை காணவேண்டும் என்ற நியாயமான ஆசையைத் தன் பாடலில் பதிவுசெய்துள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி.

வாழ்வுக்கும் தொழிலுக்கும் வகையாயொரு யோசனை..!
உப்புநீரில் மீன்பிடிக்க ஓராயிரம் வழியுண்டு
……….ஓரளவு தேர்ச்சிபெற்றால் மட்டுமே சாத்தியம் *
கப்பலிலே சென்று மீன்பிடிக்கும் வகையால்
……….கரைசேராமல் தவிக்கும் அபாயம் அதிலுண்டு *
தப்பாமல் கரைதிரும்பி வந்து விடுவாரெனத்
……….தகுந்த பதிலொன்றும் சொல்வ தற்கில்லையே *
அப்பாவை எதிர்பார்த்து அவர் குழந்தைகள்
……….அலைகடலை நோக்கி நாளும் காத்திருக்கும் *

வெப்பம்மழை சூறாவளி சுழலும் பேரலையிவ்
……….விதுவெலாம் இவர்களுக் கொரு பொருட்டல்ல *
சிப்பாய்கள் சீருடையில் சிட்டாகப் பறந்துவந்து
……….சிறை யெடுப்பார்!தானியங்கித் துப்பாக்கியுடன் *
முப்போதும் விழித்து மீன்பிடிக்கும் தொழிலில்
……….முதலில் கரைசேருவதுதன் அதிலே முக்கியம் *
இப்போதும் கரைதிரும்பாத எண்ணற்ற பலர்
……….இருந்தும்..யாரும் கண்டுகொள்ளா நிலைதான் *

ஒப்பாரி வைத்தழுதால்கூட இங்கு ஒருவருமே
……….உதவிக்கு வரமாட்டார் ஒதுங்கியே நிற்பாரவர் *
எப்போதுமிருக்கும் ஆபத்தைப் புரிந்து கொண்டு
……….இதற்கொரு வழியும் மீன்வளமும் தேடவேணும் *
இப்பவும் நாம் பார்க்கின்றோம்…கிராமத்தில்
……….இருகையால் வலைவீசி மீன்பிடிப்பதை!அதிலும்*
துப்பட்டாவை விரித்து மீன்பிடிக்கும் சிறுவர்
……….செயலே சிறந்ததுபோல் சிலசமயம் தோன்றும் *

*****

மீன்பிடிக்கும் சிறாரின் செயல், கவிஞர் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திக்க வைத்திருப்பது சிறப்பு! அதன்பயனாய் எமக்குக் கிடைத்திருக்கும் கவிதைகளோ வனப்பு! பாராட்டுக்கள் கவிஞர்களே!

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவுபெற்றிருப்பது…

இழந்த வாய்ப்பு… 

கொடியில் காய்ந்த சேலை
கோடை வெயிலிலும்
குளம் குட்டைகளில் நட்புடன்
கூடி மீன்பிடிக்கும் வேலை

செய்யவோ களைப்பில்லாத கலை
சேர்ந்து விளையாடி
நிற்காமல் துள்ளும் மீன்பிடிக்க
நீரில் போடும் வலை

எழிலான கிராமத்தில் இருந்து
ஏக்கம் இல்லாமல்
துள்ளித் திரிந்து தோழருடன்
தூண்டில் போட்ட விருந்து 

அகப்பட்ட துணியுடன் சென்று
ஆறு குளங்களில்
வலைவீசி மீன்பிடிக்க
வாய்ப்புகள் இல்லாமல் இன்று 

கிராமங்கள் நகரமாகி நிற்குதே!
கீழிறங்கும் வெயிலால்
மழையின்றி ஆறுகுளம் வற்றி
மாசுடன் குடிநீரும் விற்குதே! 

கிராமத்துக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் பல்வகையான வாழ்வியல் அனுபவங்கள் நகரத்துக் குழந்தைகட்கு வாய்ப்பதில்லை. அதில் ஒன்று…குளம் குட்டைகளில் இறங்கி இன்பமாய் மீன்பிடிப்பது!

அன்று மழைக்குப் பஞ்சமில்லை; அதனால் தண்ணீர்ப் பஞ்சமில்லை. இன்றோ காடுகளைக் கொன்றழித்தோம்! ஏரி குளங்களைத் தூர்த்து வீடு கட்டினோம்! அதனால் வான் மழையுமில்லை; அப்படியே மழைபெய்தாலும் அதனைத் தேக்கிவைக்க ஏரி குளங்களும் இல்லை!

விளைவு? குடிநீரையும் காசுகொடுத்து வாங்கும் அவலம்! இதே நிலை நீடித்தால் மாசில்லாத காற்றையும் நாம் காசுகொடுத்து வாங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை!

இயற்கையைப் பேணாத மானுட வாழ்வின் இன்றைய இழிநிலையை, சிறார்களின் அன்றைய இனிய வாழ்வோடு ஒப்பிட்டுக் கவி வடித்திருக்கும் திருமிகு. நாகினியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படக்கவிதைப் போட்டி 155-இன் முடிவுகள்

  1. இவ்வார கவிதைகள் அனைத்தும் வெகு அருமையாக இருந்தன.
    தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கவிஞருக்கும் அவரின் படைப்புக்கும் வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *