Author: முனைவர் ம.பிரபாகரன்

  • [நூல் அறிமுகம்] (Peer Reviewed) ஆனந்த் நீலகண்டனின் ”Vanara: The Legend of Baali, Sugreeva and Tara”: மாற்றி யோசிக்கப்படும் பழைய கதையின் யதார்த்தம்

    முனைவர் ம.பிரபாகரன்,
    இளநிலை ஆய்வாளர்,
    பிரெஞ்சு ஆய்வு நிறுவனம் (EFEO),
    புதுச்சேரி.

    ஆனந்த் நீலகண்டனின் ” Vanara: The Legend of Baali, Sugreeva and Tara ”: மாற்றி யோசிக்கப்படும் பழைய  கதையின் யதார்த்தம்

    சென்ற ஆண்டு(2018)  வெளியான ஆனந்த் நீலகண்டனின்  ” Vanara: The Legend of Baali, Sugreeva and Tara ” ( 304 pages, Published November 14th 2018 by Penguin Random House) என்ற ஆங்கில நாவலைச் சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. அதனை ஆய்வு நோக்கில் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற  என் அவாவே இக்கட்டுரை. கட்டுரையைத் தொடங்குவதற்கு முன் இந்நாவலை எழுதிய  ஆனந்த் நீலகண்டன் பற்றிய  குறிப்பைத்  தருவது பயனுடையதாயிருக்கும் என்று கருதுகிறேன்.

    பின்வரும் ஆசிரியர் குறிப்பு விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது.

    ஆனந்த் நீலகண்டன்:

    Anand Neelakantan (born 5 December 1973) is an Indian author,columnist, screenwriter, television personality and motivational speaker. He has authored four fiction books.His debut work Asura, The Tale of the Vanquished is based on the Indian epics of Ramayana. His next book series was Ajaya-Roll of the Dice , Ajaya – Rise of Kali based ,the two books on the epic Mahabharata told from Kaurava perspective. Anand’s books voice the suppressed party or the defeated party.

    Anand Neelakantan also had signed with The producers of Baahubali, the blockbuster film for a 3 book Series based on their film Baahubali and the series will be a prequel to the film. The first book of this trilogy , Rise of Sivagami was released in March 2017. Netflix has announced a webseries on the book. His books have been translated to different languages such as Hindi, Malayalam, Tamil, Telugu, Kannada, Marathi, Bengali ,Gujarati, Assamese and Indonesian Bahasa.

    Anand’s Asura is one of the 100 books to be read in a life time as per Amazon. The book has sold more than half a million copies across the years. Three of Anand Neelakantan’s books have been shortlisted for crossword award during the respective years and he is also listed as one among the 100 top celebrities in India in 2015, 2017 by ForbesIndia. All his books have got critical accreditions from various people across the world

    Anand also writes a column for New Indian Express on current affairs and his fortnightly column is called Acute Angle (நன்றி- விக்கிப்பீடியா)

    வானரா என்ற இந்த நாவல், பழைய இராமாயணத்தில் சொல்லப்பட்ட வாலி, சுக்ரீவன் கதையைத் தலைகீழாக யோசித்திருக்கிறது அல்லது மாற்றி யோசித்திருக்கிறது. நமக்கெல்லாம் இராமாயணத்தில்  வாலி என்று சொன்னவுடன், அவன், தன் தம்பி சுக்கீரிவனின்  மனைவி ரூமா மீது  கொண்ட  மோகத்திற்காக,  அவனை அடித்து விரட்டி விட்டு, தம்பி மனைவியை அபகரித்துக்கொண்டான்; அவன் எவ்வளவுதான் வீரனாக இருந்தாலும்  தம்பி மனைவி மீது ஆசை கொண்டதால் அவன்  ஒரு துஷ்டன் என்ற கருத்தே ஞாபத்திற்கு வரும். ஏனென்றால் வால்மீகி, கம்பன் ஆகியோர் எழுதிய இராமாயணத்தில் வாலி பற்றி அப்படி ஒரு பார்வையே காணப்படுவதாலும் அது நமக்கு சிறு வயதிலிருந்தே திரும்பத் திரும்ப கதைகளின் வாயிலாகவும் பாடங்களின் வாயிலாகவும் தொலைக்காட்சித் தொடர்களின் வாயிலாகவும்  சொல்லப்பட்டதாலும் வாலியைப் பற்றி அப்படி ஒரு கருத்து நம்முள் நிலைத்துவிட்டது.

    தமிழில், பழைய இராமாயண வாலியை அடியொற்றி ”வாலி” என்றொரு சினிமா எடுக்கப்பட்டதும், அது பெரிய வெற்றியைப் பெற்றதும் இங்குச் சுட்டிக் காட்டத்தக்கது. இராமாயணம் நடந்த கதையல்ல என்று கூறுவாரும் அது நடந்த கதையே என்று கூறுவாரும் உள்ளனர். அது நடந்த கதையோ, நடக்காத கதையோ அதுவல்ல நம் பிரச்சினை. எந்தக்  கதையும் திடீரென்று தான்தோன்றியாக உருவாகிவிட முடியாது. எல்லாக் கதைகளுக்கும் சமூக அடிப்படையும் சமூக உளவியலும் உண்டு என்பதை மறுக்க முடியாது.

    ஒரு கதை ஏன் படைக்கப்படுகிறது? அதன் நோக்கம் என்ன? என்று பார்ப்பதும் ஒரு கதை எந்தச் சூழலில் இருப்பவர்களால் எழுதப்படுகிறது? என்று கவனிப்பதும் மிகவும் அவசியமானதாகும். நோக்கத்திற்காகவே கதை எழுதப்படுமா? அது எப்படி? படைப்பாளி தான் கண்டதை எழுதுகிறான். அது எப்படி ஒரு குறிப்பிட்ட நோக்கிற்காக எழுதப்பட்டது என்று கூற முடியும்? என்று கேட்கலாம். நோக்கத்திற்காக எழுதப்பட்ட கதைகளும் உண்டு. நோக்கம் சூழலில் மறைந்து கிடக்கும் கதைகளும் உண்டு. சூழல் சுயேச்சையாக இயங்கும் தன்மை உடையது என்று மார்க்ஸ் கூறுவதை இவ்வண் கருதுக.

    இராமனைத்  தன் கதையில் கடவுளாக்க ஆசைப்பட்டவர் வால்மீகி என்பர். இராமனை மனிதனாகக் காண விரும்பியவர் கம்பன் என்பர். இப்படி படைப்பளர்களின் விருப்பம் கதையில் இருப்பதை நம்மால் உணர முடிகிறது.  எங்ஙனமாயினும்  கதைகளுக்கு  நோக்கம் இருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது. நிற்க.

    வானரா நாவல், பழைய இதிகாச கதையைக் கருவாகக் கொண்டது ஆகையால், ஏன் இதிகாச, புராணக் கதைகளை ஏன் திரும்பித் திரும்பி எழுத வேண்டும் என்ற விமர்சனத்தையும் இவ்விடத்தில் நினைவு கூர வேண்டியிருக்கிறது. வால்மீகி இராமாயணத்தை எழுதி முடித்த பிறகு ஏன் கம்பன் அதை  மீண்டும் தமிழில்  எழுதினார்? ஏன் பல்வேறு மொழிகளில் இராமாயணம் திரும்பத் திரும்ப எழுதப்பட்டது? வியாசர் எழுதியதற்குப் பிறகு மகாபாரதமும் மீண்டும்  பலமுறை பல்வேறு மொழிகளிலும்  எழுதப்பட்டுவிட்டனவே ஏன்  தற்போது மகாபாரதத்தை ஜெயமோகன் திரும்ப எழுதுகிறார்? என்ற கேள்வி இங்கு நாம் கேட்க வேண்டியிருக்கிறது.

    இன்று புராணக் கதைகள், இதிகாசக் கதைகள் போன்றவை, தொலைகாட்சித் தொடர்களாக ஏன் மீண்டும் மீண்டும் எடுக்கப்படுகின்றன? அதற்கான சமூகத்  தத்துவப் பின்புலம் என்ன? என்று நாம் கேட்க வேண்டியுள்ளது. ஏனென்றால்  சமூகத்தின் உளவியலைப் புரிந்து கொண்டால்தான் கடந்த கால கதைகளுக்கு நிகழ்கால அர்த்தம் உண்டு என்பதையும் நம்மால் விளங்கிக்கொள்ள முடியும். அப்போது பழைய கதைகள் மீண்டும் மீண்டும் எழுதுவதற்கான தேவையையும் அதற்குப் பின்னால் இருக்கும் நோக்கத்தையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

    பழைய கதைகளைத் திருப்பி எழுதும் போது பெரும்பாலும் இரண்டு வித போக்குகள் பின்பற்றப்படுகின்றன. முதலாவது, இருக்கும் கதையை அப்படியே திருப்பிச் சொல்வது, இரண்டாவது பழைய கதையை நிகழ்கால அரசியல், சமூகப் பண்பாட்டினை விளக்கப் பயன்படுத்துவது. இவற்றுள் ஆனந்த் நீலகண்டனின் ‘ வானரா ‘ என்ற இந்த நாவல் இரண்டாவது வகையைச் சேர்ந்தது எனலாம்.

    இந்தியாவின் நிகழ்கால அரசியல் மற்றும் சமூகப் பண்பாட்டினை விமர்சன பூர்வமாக அவர்  வாலியின் கதையின் மூலம் விளக்கும் திறம் வரவேற்கப்பட வேண்டியது. இந்தியாவில் மக்கள் உளவியல் உருவாக்கத்தில் தொன்மக் கதைகள் வகிக்கும் பெரும் பங்கை யாரும் மறுத்துவிட முடியாது. அதே போல இந்திய வரலாற்று உருவாக்கத்திலும் தொன்மக் கதைகள் வகிக்கும் பங்கு கணிசமானது. இதைச் சரியாகப் புரிந்துகொண்ட ஆனந்த் நீலகண்டன், தற்கால அரசியல், சமூகப் பண்பாட்டை  விமர்சனப்பூர்வமாக அணுகுவதற்கு இதிகாச கதையாகிய வாலியின் கதையை அல்லது  கிஷ்கிந்தை படலத்தைப் பயன்படுத்துகிறார்.

    இந்த முறைமையைத்தான் அவர் இவருடைய முந்தைய நாவல்களான அஜயா (இரண்டு புத்தகங்கள்), அசுரா ஆகிய நாவல்களுக்கும் பயன்படுத்தியிருந்தார். வரலாறு சொல்லப்பட்ட கதைகளில் மட்டுமே இல்லை; சொல்லப்படாத அவற்றின் பக்கங்களிலும் இருக்கும்; அவ்வரலாறு, பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்குரிய உண்மையான வரலாறாகவும் இருக்கும் என்பதையே ஆனந்த் நீலகண்டனின் வானரா என்னும் இந்நாவல் மட்டுமல்ல, இவரின் முந்தைய நாவல்களும் கூறுகின்றன.

    நிகழ்ந்து நடந்து முடித்துவிட்ட நிகழ்ச்சிகள், கதைகள் போலவே சொல்லப்படுகின்றன. நேற்றைக்கு நடந்த ஒரு விபத்தை நேரிலே பார்த்தவர் இன்னொருவரிடம் அதைச் சொல்லும் போது அதைக் கதை போலவே சொல்கிறார். நாம் இங்கு என்ன சொல்ல வருகிறோம் என்றால் இறந்தகால நிகழ்ச்சிகள் நிகழ்காலத்தில் சொல்லப்படுகிற போது, அவை கதைகளாகவே மாறிவிடுகின்றன. அதைச் சொல்பவர்களின் நோக்கங்களும் அதில் இடம் பெற்றிருக்கும்.

    ஒரு நிகழ்ச்சி  இரண்டு பேரால் சொல்லப்படும் போது அல்லது பலரால் சொல்லப்படும் போது வேறு வேறு வகையில் சொல்லப்பட வாய்ப்புண்டு. விருமாண்டி படத்தில் ஒரே கதை  கொத்தாளத்  தேவரால் (பசுபதி) சொல்லப்படும் போது  விருமாண்டிக்கு (கமல்ஹாசன்) எதிரானதாக அமைந்து   விருமாண்டியை வில்லனாக காட்டும். அதே கதை விருமாண்டியால் சொல்லப்படும் போது அது கொத்தாளத் தேவரை வில்லனாக காட்டும். இங்குப் பார்வையாளர் என்ன நினைக்கிறார். கொத்தாளத்தேவர்  சொல்வது சரியா? விருமாண்டி சொல்வது சரியா? படத்தின் அடுத்தடுத்த நிகழ்வுகள் சூழல்களின் பின்னணியில்  விருமாண்டியை நல்லவனாகவும், கொத்தாளத் தேவரை வில்லனாகவும் புரிந்துகொள்ள பார்வையாளரைத் தூண்டும். இதில் முடிவு எடுக்க வேண்டியவர் பார்வையாளரே. இது போன்ற ஒரு பார்வைதான் இந்த வானரா நாவல் என்று கூறலாம்.

    வால்மீகியும், கம்பனும் பார்த்த பார்வையிலிருந்து வேறுபட்டு ‘வாலி’யை இவர் பார்க்கிறார். பெண்ணால் வீழ்ந்தவர்கள் என்று கூறப்படும் புராண நாயகர்களுள் வாலியையும் ஒருவராக வைத்துச் சொல்வது வழக்கம். ஆனால் இந்நாவலைப் படித்தால் வாலி, பெண்ணால் வீழவில்லை. சுக்ரீவனின் துரோகத்தால் விழுந்தார் என்பது  ஒருவரின் சிந்தனையில் பசுமரத்தாணி போல் பதியும். ஏனென்றால் இந்நாவலில் சுக்ரீவனின் மனைவி மீது வாலி இச்சை கொள்ளவில்லை. மாறாக  வாலியின் மனைவி  ‘ தாரா ‘ மீதுதான் சுக்ரீவன் இச்சை கொண்டு வாலியின்  வீழ்ச்சிக்குக் காரணமாகிறார். சுருக்கமாக இந்நாவலின் கதையைச் சொல்ல முயல்வோம்:

    சுக்ரீவன், தாராவை ஒருதலையாகக் காதலிக்கிறார். ஆனால் தாரா, வாலியைத் தீவிரமாகக் காதலிக்கிறார்;  தாராவின் அன்பால் நெகிழ்ந்த வாலி, அவளை மணமுடிக்கிறார். அதன் பின்னும் சுக்ரீவன், தாரா மீது கொண்ட இச்சையை விடவில்லை. அண்ணன் வாலி, தம்பியை மிகவும் நம்புகிறார். ஆனால் தம்பி சுக்ரீவன், அண்ணன் மனைவி என்று தெரிந்த பின்னரும் தாராவை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்று எண்ணுகிறார். ஒரு கட்டத்தில் தாராவை அடைவதற்கு வாலிக்குக் கள்ளில் நஞ்சு கலக்கும் அளவுக்குக் கூட போய்விடுகிறார் சுக்ரீவன். இது தாராவுக்கு தெரிகிறது. இருந்தும் வாலியிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் வாலி, தம்பியை மிகவும் நம்புகிறார்.

    எனினும்  கடைசியில்  ஒருவழியாக வாலி, சுக்ரீவனின் இச்சையை அறிந்து கொள்கிறார். அவரை அடித்து உதைத்து நாட்டை விட்டுத் துரத்துகிறார். சுக்ரீவன் வாலியுடன் சண்டைக்கு வரும் நேரத்தில் எல்லாம் வாலி அவரை நன்றாக அடித்து உதைத்தாரே தவிர, ஒருபோதும் கொல்லத் துணியவில்லை. காரணம்,  தம்பி சுக்ரீவன்  மீது அவருக்கு அவ்வளவு அன்பு. இதை ஒருமுறை வாலியே தாராவிடம் கூறுகிறார். தன் தம்பியை அடித்து விரட்டிய பிறகு தம்பி மனைவி ‘ரூமா’, சுக்கிரீவன் போய்விட்டதால் தனக்கு வாலியே கணவனாக வேண்டும் என்கிறாள். அவரை அடைய தந்திரங்கள் செய்கிறார். அதற்கு வாலி, தன் தம்பி மனைவி ஒரு போதும் தனக்கு மனைவியாக ஆக முடியாது. தம்பி மனைவி மரியாதைக்குரிய ஸ்தானம் வகிப்பவர் என்று ரூமாவை முற்றிலும் விலக்கிவிடுகிறார்.

    இப்படி வாலியின் எண்ணப் போக்கு இருக்க, சுக்ரீவன், அனுமனிடம்  வாலி தன் மனைவியை அபகரித்துவிட்டார் என்று கூறி நம்ப வைக்கிறார். அனுமன் சூழ்நிலைகளின் பாதிப்பால் உண்மையில் வாலி, சுக்ரீவனின் மனைவியை அபகரித்து விட்டதாகவே நினைத்து விடுகிறார். உண்மை தெரியாத அனுமரும் சுக்ரீவனை நல்லவர் என்று நம்பி இராமன், இலக்குமணர்களிடம் வாலி, சுக்ரீவனின் மனைவியை அபகரித்துவிட்டதாகக் கூறி, அவர்கள் இருவரும் சுக்ரீவனின் மனைவி ‘ரூமா’ வை மீட்டுக் கொடுத்தால், சீதையை இராவணனிடம் இருந்து மீட்க அவர் உதவுவார் என்று கூறுகிறார். உண்மை தெரியாத இராமரும் இலட்சுமணரும்,  சுக்ரீவனின் பொய்யை நம்பிவிடுகின்றனர்.

    இறுதியில் இராமரின்  துணையுடன் சுக்ரீவன், தன் அண்ணன் வாலியைக் கொல்லத் துணிகிறார். கொன்றும் விடுகிறார். வாலியின் வதத்திற்குப் பிறகு தாராவைச் சுக்ரீவன் அடைய முயன்றாலும் உண்மை தெரிந்த தாரா, சுக்ரீவனை முற்றிலும் வெறுத்து ஒதுக்கிவிடுகிறார். இறுதியில் சுக்ரீவன், வானர சேனைகளுடன் இராமனுக்கு உதவியாக சென்று சீதையை மீட்க உதவுகிறார். வாலியின் மகன் அங்கதனும் அவர்களுடன் செல்கிறான். வெற்றிக்குப் பிறகு சுக்ரீவன், அங்கதன் மற்றும்  போரில் அழிந்தது போக மீதமுள்ள படையுடன் கிஷ்கிந்தை திரும்புகிறார்.

    அதற்குப் பிறகும் சுக்ரீவன், தாராவிடம் கொண்ட மோகத்தைக் கைவிடவில்லை. சுக்ரீவன் தன் காதலைத் தாராவிடம் சொல்கிறார். தன்னை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சுகிறார். தாரா, அவரை விலக்கிவிடுகிறார். தன் இறுதிக் காலத்தைக் கிஷ்கிந்தை அரச மாளிகைக்கு  வெளியே வாலியின் நினைவுடன் வாழ்கிறார் தாரா. கதையின் மிகச் சுருக்கத்தையே நாம் இங்குச் சொல்லியிருக்கிறோம்.  ஒருவர் கதையைப் படித்தால் இன்னும் பல ஆச்சரியமான, சந்தோசமான, துக்கமான தருணங்களை அங்கே உணர முடியும்.

    இனி இக்கதையின் மையத் தன்மையை இங்குச் சுட்டிக் காட்ட வேண்டும்:

    இந்நாவல், மாற்றி யோசிக்கும் தன்மைக்கு உதாரணம் என்று மேலே கூறினோம். இன்னும் தெளிவாகக் கூறப் போனால் இந்நாவல், மரபான சிந்தனையில் மாற்றத்தை கோருகிறது. இம்மாற்றம் கதையில் மட்டுமல்ல பண்பாட்டு மாற்றமாகவும் இருக்க வேண்டும் என்கிறது. பண்பாட்டு மாற்றமா? எப்படி? என்று உடனே ஒருவருக்குக்  கேள்வி எழும். வானரர் என்ற சொல்  வனநரர் என்பதன் திரிபு என்ற பொருளில் நாவல் ஆசிரியர் பயன்படுத்துகிறார். வனநரர் என்பது காட்டில் வாழும் மக்கள் தொகுதியினரைச் சுட்டும் சொல். இந்தக் காடுவாழ் மக்களே வானரர் என்று அழைக்கப்பட்டுள்ளனர் என்று கூறும் நீலகண்டன் அவர்கள் வைதீகத்தால் ஒடுக்கப்பட்டதாலே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கதையின் ஊடாகச் சொல்லிச் செல்கிறார்.

    வைதீகத்தின் கோரப் பிடியில் இருந்து தன் மக்களை விடுவிக்கும் கதாநாயகனாகவே வாலி படைக்கப்பட்டுள்ளார். வனநரர்களின் பண்பாட்டுச் சூழல்கள் நன்றாக நாவலில் படம் பிடித்துக் காட்டப் பெற்றுள்ளன. வனநரர்கள் எனப்படும் வானரர்களின் பண்பாடு,  வைதீகர்களின்  பண்பாட்டிலிருந்தும், வைதீகத்தின் எதிரியான அசுரர்களின் பண்பாட்டிலிருந்துமே வேறுபாடு உடையதாகக் காணப்படுகின்றது.

    அசுரர்கள் நகர பண்பாட்டை நோக்கி முன்னேறும் பொழுது அவர்களுக்குள் ஏற்படும் ஏற்றத் தாழ்வு பிரச்சனைகள், வனநரர்கள் சமூகத்தில் இல்லாததைக் காணும் வாலி தான் அசுரர்களைப் போல் தன் சமூகமும்  நகரமயப்படுவதை வெறுக்கிறார். முதலில் அசுரர்களின் நகரத்தை விடப் பெரிய நகரத்தை உருவாக்க நினைக்கும் வாலி, பின்பு அசுரர்கள் மத்தியில் நகரப் பண்பாட்டின் விளைவாக ஏற்பட்ட கொடூரமான இயற்கை மீறிய பண்பாட்டுச் சீரழிவுகளைக் கண்டு தன் நகரக் கனவைக் கைவிடுகிறார். இந்நாவலில் வனநரர்களின் சமூகப் பண்பாடு ஆதிக்கம் செலுத்தும்  வைதீகப் பண்பாட்டிலிருந்து முற்றிலும் விலகி நிற்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் நாவலாசிரியர்.

    மேலும் இந்நாவலில்  வனநரர்கள், வைதீகத்தின் ஆதிக்கத்திற்குள் இருப்பதே சரி; வைதீக ஆதிக்கத்திற்குள், அசுரர்களின் ஆதிக்கத்திற்குள் அடிமையாக இருந்தால் உணவாவது கிடைக்கும்; இல்லையேல் செத்துப் போக வேண்டியது வரும் என்று நினைக்கும் வனநரர்களின்  முன்னோடிகளையும்  காண முடிகிறது. இப்போக்குடையவர்களை வாலி வெறுக்கிறார். வாலியின் சமூக நோக்கு ஆதிக்கத்திற்கு எதிரானதாக இருந்த போதிலும் ஒரு கட்டத்தில் அது நகரப் பண்பாட்டிற்கு எதிராக திரும்புவதன் பலவீனத்தைத் தாராவின் சிந்தனை, பேச்சு ஆகியவற்றின் வாயிலாக நாவலாசிரியர் சரியாக உணர்த்துகிறார்.

    மேலும் வைதீகத்தின் ஆன்மா வழியிலான பக்தி மார்க்கமே  ஒருவரை உய்விக்க கூடியது என்ற எண்ணமுடையவராக  அனுமன் இருப்பதையும்; அவர் பக்தி அடிப்படையில் வைதீகத்தை சுவீகரித்தவராகவும் நாவலில் காட்டப்படுகிறார். அனுமனின் சமூகவியல் நோக்கு இன்னும் அழுத்தமாக நாவலில் பதிவு செய்யப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சுக்ரீவனைப் பொறுத்தவரை அவருக்கு வனநரர்களின் சமூக முன்னேற்றம் என்பதெல்லாம் பற்றி கவலை ஒன்றும் இல்லை. அவர் சுயநலத்தின் மொத்த உருவமாக இருக்கிறார். அவருக்குத் தாராவும் அவரது மகிழ்ச்சியும் மட்டுமே போதுமானவையாக இருக்கின்றன. இதற்காக வாலியை இராமனின் துணையோடு கொன்றும் விடுகிறார். அனுமனைப் போல இராமனும் இலட்சுமணனும்  சுக்ரீவனின் நடிப்பில் ஏமாந்து போகின்றனர். தம்பி மனைவியை அபகரித்தவன் வாலி என்றே நம்பியும் விடுகின்றனர்.

    ஒருவேளை சுக்ரீவனின் நாடகம், இராமனுக்குத் தெரிந்திருந்தால் இராமன் என்ன செய்திருப்பார்? என்பது நாவலின் போக்கில் நமக்குச் சொல்லப்படவில்லை. வாலி, வைதீக ஆதிக்கத்திற்கு எதிரானவர். நிச்சயம் இராமனுக்கு இராவணனை வீழ்த்த உதவி செய்யமாட்டார் என்று உறுதியாகச் சொல்லலாம். மேலும் இவ்விசயத்தில் வாலி இராமனை நிச்சயம் எதிர்த்து நின்றிருப்பார் என்றே நாம் கதையின் போக்கு வைத்து  அனுமானிக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில் அண்ணன் மனைவியை அபகரிக்க நினைத்த சுக்ரீவனின் துணையை இராமன் நாடியிருப்பாரா? அல்லது அவரைக் கொன்றிருப்பாரா? இதெல்லாம் கதைக்கு அப்பாற்பட்ட விசயம்.

    நாம் ஏற்கெனவே கூறியது போல  சுக்ரீவனின் ‘அண்ணி மோகம்’, அனுமனுக்குத் தெரியாது. காரணம், சந்தர்ப்ப சூழல், சுக்ரீவனை அனுமன் நம்பும்படி செய்து விடுகிறது. அனுமனுக்கு சுக்ரீவனின் ‘அண்ணி மோகம்’  தெரிந்திருந்தால், நிச்சயம் அவர் சுக்ரீவனுக்கு உதவியிருக்க மாட்டார் என்பதற்கான குறிப்பை நாவலில் ஆசிரியர்  தெளிவாகத் தெரிவிக்கின்றார். அப்படி அனுமனுக்கு தெரிந்தால் அவர்  இராம, இலக்குவரிடம் கூறி சுக்ரீவனுக்கு உதவ வேண்டாம் என்று அவர்களைத் தடுத்திருப்பார்; ஆனால் வாலியின் உதவி நிச்சயம் கிடைக்காது என்பதையும் அவர் அவர்களுக்கு உணர்த்தியிருப்பார்; இது எல்லாம் கதைக்கு அப்பாற்பட்ட விசயம் என்றாலும் நமக்கு இப்படியெல்லாம் சிந்திப்பதற்கு நாவல் களம் வழங்குகிறது.

    கதையில் வாலியின் தந்தை ஸ்தானம் வகிக்கும் அரவாணியாகிய  ரிக்ஷராஜா கதாபாத்திரம், குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது. ஏனெனில் ரிக்ஷராஜாவே, வானர இனம் வைதீகத்திற்கும் அசுரர்களுக்கும் அடிமைப்பணி செய்யப் பிறந்ததல்ல; அதற்கு சுயமரியாதை என்பது அவசியம்; வைதீக, அசுர ஆகிய பிற ஆதிக்கப் பண்பாட்டிலிருந்து விடுபட்டுச் சுதந்திரமாக செயல்படுவதற்குரிய செயல்வன்மை வானர இனத்திற்கு உண்டு  என்று முழங்கி, வானர மக்கள் முன்னேற்றத்திற்காகச் சிந்திப்பதில்  வாலிக்கும் முன்னோடியாக விளங்குகிறார்.

    அவரே வாலி, சுக்ரீவன் ஆகியோரை அழைத்துக்கொண்டு போய் மகாபலியிடம் பயிற்சி பெற வைக்கிறார்; வாலியின் மீது அளவு  கடந்த நம்பிக்கையும், பாசமும் உடையவராக இருக்கிறார்; சுக்ரீவனின் வஞ்சகத்தை அறிந்து கொதிக்கிறார்; சுக்ரீவனை எச்சரிக்கவும் செய்கிறார்.  சுக்கிரீவன் அவரை உதைத்து இகழ்கிறார்; உதைகள் பட்டாலும்   வாலியைக் காக்கும் எண்ணமே அவர் மனத்தில் முதன்மையாக இருக்கிறது. இறுதியில் தாராவைக் காக்க,  காளை முட்டிப் பலியாகிறார். இந்நாவலில் மேலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கதாபாத்திரம், வாலி வளர்க்கும் ‘குட்டி ஓநாய்’. வாலியின் மீது அது கொண்ட அன்பு, தாராவின் அன்பை விட ஒருபடி மேலாக இருப்பதை  இந்நாவலைப் படிக்கும் ஒருவர் புரிந்துகொள்வார். கடைசியாக இந்நாவலின் பாவிகத்தைப் (மைய கருத்து) பின்வருமாறு சொல்லி, இக்கட்டுரையை முடிப்போம்

    மொத்தத்தில் இந்நாவல், காலம் காலமாக வழங்கி வரும் மரபான சிந்தனைகளில் இருக்கும் ஆதிக்கப் போக்கை இனம் காட்டி முற்போக்கு அடிப்படையில்  மாற்றி யோசிப்பதற்கான தேவையை வலியுறுத்துவதாக இருக்கிறது.

    ===============================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    வாநரா என்று இந்த ஆசிரியர் அறிமுகப்படுத்தியுள்ள நாவலின் மூல வடிவம் கிடைக்காததால் வாசித்து அறிய முடியவில்லை. இந்தக் கட்டுரையின் ஆசிரியர் விவரித்துள்ளதன் அடிப்படையில் இது, இடதுசாரிச் சிந்தனையின் அடிப்படையில் புனையப்பட்டுள்ள நாவல் என்ற தோற்றம் கிடைக்கிறது. அடிப்படையில் இடதுசாரிச் சிந்தனையாளர்கள் எல்லோரும் எப்படிச் சிந்திப்பார்களோ அதே கோணத்தில்தான் இந்த நாவல் இயங்கியிருக்கிறது என்று தெரிகிறது. இடதுசாரியினரும் பெரியாரியர்களும் சிந்திக்கும் விதத்தில்தான் நாவல் புனையப்பட்டுள்ளது. எனவே, இக்கட்டுரையாசிரியர் சொல்வது போல ‘மாற்றி யோசிப்பதன்’ அடிப்படை ரேகைகள் கூட இந்தப் புனைவில் வெளிப்படவில்லை என்பது புலனாகிறது. மாற்றி யோசிப்பது என்பதை விளக்குவதற்காக இக் கட்டுரையாசிரியர் ‘வாலி’ திரைப்பட எடுத்துக்காட்டை முன்வைத்திருப்பது, கம்பன், வால்மீகி போன்றோரின் இலக்கியத் திறனைத் திரைப்படங்களின் துணையோடு அளவிட்டுவிட முடியும் என்பதுபோன்ற தோற்றத்தைத்தான் தருகிறது.

    மற்றபடி, இக்கட்டுரை, மேற்படி நாவலுக்கு நல்ல அறிமுக முயற்சி என்று கொள்ளத்தக்கது. ஆய்வு என்ற முறையில் இதில் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.

    ===============================================================

    Share
  • இலக்கண விளக்க யாப்பியல் – 3

    – ம.பிரபாகரன்

    யாப்பருங்கலக்காரிகையில் உள்ள சூத்திரத்தில் ஆறாவது அடிவரை உறுப்பு பற்றிய செய்தி இடம்பெறுகிறது. ஏழாவது எட்டாவது அடியில் பா மற்றும் பாவினம் பற்றிய செய்தி இடம்பெறுகின்றது. ஆனால் யாப்பருங்கல விருத்தியில் ஏழாவது அடி தூக்கு பற்றியதாகும். யாப்பருங்கலத்தின் கொள்கைப்படி செய்யுளுறுக்கள் ஏழு. இதில் ஏழாவது வருவது தூக்கு. யாப்பருங்கலத்தின் சூத்திரத்தை இவ்விடத்தில் எடுத்துக்காட்டுவது பொருத்தமானதாக இருக்கும்: 

    எழுத்தசை சீர்தளை யடிதொடை தோக்கோ
    டிழுக்கா நடைய தியாப்பெனப் படுமே. (சூத்.1)

    இவ்வாறு யாப்பருங்கலத்துடைய யாப்புறுப்புக்கொள்கையில் தூக்கு இடம்பெற்றிருப்பதால் யாப்பருங்கலவிருத்தியில் எடுத்துக்காட்டப்பட்டிருக்கும்
    ” எழுதப்படுதலின்” எனத்தொடங்கும் மேற்கோள் சூத்திரத்தில் ஏழாவது அடி தூக்கு உறுப்பு கூறுவதோடு முடிகிறது. ஆனால் யாப்பருங்கலக் காரிகையைப் பொறுத்த அளவில் அதனுடைய உறுப்புக்கொள்கையில் தூக்கு என்ற உறுப்பு இடம் பெறவில்லை. எனவே யாப்பருங்கலக் காரிகையின் மேற்கோள் சூத்திரம்  எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும் ஆறு உறுப்பே கூறுகிறது. எனவே யாப்பருங்கலக் காரிகையில் இடம்பெறும் மேற்கோள் சூத்திரமாகிய எழுதப்படுதலின் … என்ற சூத்திரத்தில் ஏழாவது அடியில் தூக்கு பற்றிய அடி இடம்பெறவில்லை. அதற்கு மாறாக ஒரு பொது அறிமுகத்தின் பொருட்டுப் பா மற்றும் பாவினத்திற்கு இரண்டு அடி கூடுதலாகக் கொடுக்க பட்டுள்ளது.

    யாப்பருங்கலக்காரிகையின் இந்த மேற்கோள் சூத்திரத்தை இலக்கண விளக்கம் அப்படியே எடுத்தமைத்துக்கொண்டதே தவிர இது பாடவேறுபாடாகாது என்று தோன்றுகிறது.  இந்தச் சூத்திரம் யாப்பருங்கலவிருத்தியிலும், யாப்பருங்கலக்காரிகையிலும் சற்று வேறுபட்டுக்காணப்படுவதற்கு அவ்வவ் நூல்களின் யாப்புறுப்புக்கள் குறித்த கொள்கையே காரணம் என்பது மேற்சொல்லப்பட்டது. இத்தொடர்பில் எழும் இன்னொரு ஐயம், இதற்குரிய மூலச்சூத்திரத்தை எழுதியது யார்? என்பதாகும். இதற்குரிய மூலச்சூத்திரம் யாப்பருங்கல விருத்தியில் காட்டப்பட்டிருக்கின்ற சூத்திரமா? அல்லது யாப்பருங்கலக்காரிகையில் காட்டப்பட்டிருக்கும் சூத்திரமா? என்பதாகும். காலநிலையில் யாப்பருங்கல விருத்தி யாப்பருங்கலக் காரிகை உரைக்கு முற்பட்டதாகும். எனவே யாப்பருங்கல விருத்தியிலுள்ள சூத்திரமே காலத்தாற் முற்பட்டது என்று கூறத் தோன்றும். எனினும் யாப்பருங்கல மரபில் உள்ள மேற்கோள் சூத்திரங்கள், யாப்பருங்கலத்திற்கு முந்தைய பழமை உடையனவாகத் திகழ்கின்றன. யாப்பருங்கல விருத்தியில் ” எழுதப்படுதலின்….எனத்தொடங்கும் சூத்திரத்தை எடுத்துக்காட்டிய பின் ” என்றார் ஆசிரியரெனக் கொள்க  ” (பக்.18; மு.சு.நூ) என்பது இடம்பெற்றுள்ளது. ஆனால் யாப்பருங்கலக் காரிகையில் இச்சூத்திரம் காட்டப்பட்டபிறகு  ” என்றாராகலின் ” என்பது காட்டப்பட்டுள்ளது. என்றாராகலின் என்பதற்குப் பாடவேறுபாடாக என்பவாகலின் என்பது வே.பால்ராஜ்ஜினால் குறிக்கப்பட்டுள்ளது. யாப்பருங்கல விருத்தியில் இச்சூத்திரத்தை அடுத்து ” என்றார் ஆசிரியரும் ” என்றிருப்பதால் ஒருவேளை அது அமிர்தசாகராகவும் இருக்கலாம். எனினும் உறுதியாக ஒன்றும் சொல்வதற்கில்லை இது ஆய்விற்குரியது.

    மேலே யாப்பருங்கல மரபினுடைய  சூத்திரத்தை இலக்கண விளக்கம் அப்படியே

    எடுத்துப் பயன்படுத்திக்கொண்டதைப் பார்த்தோம். இனி யாப்பருங்கல மரபினுடைய சூத்திரங்களைத் தழுவி இலக்கணவிளக்கம் எங்ஙனம் சூத்திரத்தை அமைத்துக்கொள்கிறது எனப் பார்க்கலாம். உதாரணமாக யாப்பருங்கலத்தில் வரும் அசைகள் பற்றிய சூத்திரத்தை இலக்கணவிளக்கம் எப்படி தழுவிக்கொள்கிறது எனப் பார்க்கலாம்.

    யாப்பருங்கலத்தில் வரும்  அசைகள் பற்றிய சூத்திரம்: 

    ”  நெடில்குறில் தனியாய் நின்று மொற்றடுத்து
    நடைபெறு நேரசை நால்வகை யானே   (யாப்.6) 

    குறிலிணை குறினெடி றனித்து மொற்றடுத்தும்
    நெறிமையி னான்காய் வருநிரை யசையே (யாப்.8)

    இச்சூத்திரங்களைத் தழுவி, இலக்கணவிளக்கம்:

    நெடிலுங் குறிலுங் தனித்துமொற் றடுத்து
    நடைபெறு நேரசை நான்கு நீங்காக்
    குறிலிணை குறினெடிற் றனித்துமொற் றடுத்து
    நெறிவரு நிரையசை நான்கு மாகும் (இல.வி.714)

    என்று தன் சூத்திரங்களை அமைத்துக் கொள்கிறது.

    மேலே இலக்கண விளக்கம் யாப்பருங்கல சூத்திரங்களை அப்படியே எடுத்தாண்டும் தழுவியும் அமைத்துக் கொண்டதையும் கண்டோம். மேலும் இலக்கணவிளக்கம் யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கல விருத்தி ஆகியவற்றின் உரைகளைத் தழுவி தம் உரையை அமைத்துக்கொள்ளும் போக்கையும் கவனிக்க முடிகிறது. கீழ்க்கண்ட உதாரணம் மூலம் அதைத் தெரிந்துகொள்ளலாம்.

    யாப்பருங்கல விருத்தி:

    கடியார் பூங்கோதை…….” இதனுள் பூங்கோதை என்றும் கடாயினான் என்றும் அலகிடன், ஆசிரியத்தளையும், கலித்தலையும் தட்டு, வெள்ளையுள் பிறதலை விரவா என்னும் இலக்கணத்தோடு மாறுகொள்ளும் ஆதலின் அதனைக் ‘ கடியார்பூ ‘ என்று புளிமாங்காய் ஆகவும் ‘ கோதை ‘ என்று தேமா ஆகவும் அலகிடத் தளையும் சீரும் வண்ணமும் சிதையாவாம். (பக். 396, இரா.இளங்குமரன் பதிப்பு யாப்பருங்கல விருத்தியுரை:1976 )

    யாப்பருங்கலக்காரிகை:

    கடியார் பூங்கோதை….இதனை கடியார் எனவும், ‘ பூங்கோதை ‘ எனவும் அலகிடின் ஆசிரியத்தளையும் கலித்தளையும் தட்டு வெள்ளைத்தன்மை குன்றுமாதலால் ‘ கடியார் பூ ‘ என்று புளிமாங்காயாகவும் ‘கோதை ‘ என்று தேமாவாகவும் ‘ கடாயினான் ‘ என்று கருவிளமாகவும் அலகிட்டு கொள்க. (பக்: 281, மு.சு.நூ)

    இலக்கண விளக்கம்:

    ” கடியார் பூங்கோதை…இதனுள் கடியார் என்றும் பூங்கோதை என்றும் கடாயினான் என்றும் இவ்வாறு அலகிட ஆசிரியத்தளையும், கலித்தளையும் தட்டு செப்பல் ஓசை சிதைதலின் கடியார்பூ என்றும் கோதை என்றும் அலகிட ஓசை சிதையாவாம் (பக்.774, மு.சு.நூ).

    மேற்கண்ட  உதாரணங்களில் இலக்கணவிளக்க உரைப்பகுதி யாப்பருங்கலக்காரிகையைக் காட்டிலும்  யாப்பருங்கல விருத்தியோடு ஒத்தமைவதைக் கவனிக்க.

    இன்னொரு உதாரணத்தைப் பார்ப்போம்:

    யாப்பருங்கலக்காரிகை:

    ” பாடுநர்க்கும்…..இதனுள் டுகர நகரங்கள் பிரிந்திசைத்தனவாயினும் இரண்டினையுங் கூட்டி நிரையசையாக அலகிடச் சீரும், தளையும் சிதையாவாம். அல்லாவிடின் நாலசைச் சீராய் வண்ணமழிந்து ஓசையுண்ணாது கெடும் பிறவுமன்ன.(பக். 282, மு.சு.நூ)

    யாப்பருங்கலவிருத்தி

    ” பாடுநர்க்கும்….இப்பாட்டினுள் டுகரமும் நகரமும் பிரிந்திசைத்தனவாயினும், இரண்டினையும் கூட்டி, நிரையசையாக அலகிட்டுக் கொள்க. அல்லாவிடின் வண்ணம் அழிந்து கிடக்கும்.

    இலக்கண விளக்கம்:

    ” பாடுநர்க்கும்…இதனுள் டுகர நகரங்கள் பிரிந்து இசைத்தன ஆயினும் இரண்டு அடியும் நாலசைச்சீராய்ச் செப்பலோசை சிதைதலின் டுகர, நகரங்களைக் கூட்டி நிரை அசையாக அலகிடச் சிதையாதாம்; இவ்வாறே பிறவும் அலகிட்டுக் கொள்க. (பக்.774, மு.சு.நூ)

    மேற்கண்ட அட்டவணையில் இலக்கணவிளக்கத்தின் உரைப்பகுதி யாப்பருங்கல விருத்தியை விட யாப்பருங்கலக் காரிகை உரைப்பகுதியோடு ஒத்திருப்பதைக் கவனிக்கமுடியும்.

    இலக்கண விளக்கம்,  செய்யுளியல் இறுதிப்பகுதியில் வைத்து விளக்கும் வகையுளி, வாழ்த்து,  எண்வகை வனப்பிலக்கணம், குறிப்பிசை, ஒப்பு, வண்ணங்கள் , புனைந்துரை, ஆனந்தம், அடிவரையறையில்லாத செய்யுள்வகை ஆகியவை யாப்பருங்கல மரபைப் பின்பற்றியே விளக்கப்பட்டுள்ளன. வண்ணத்தைப் பொறுத்தவரை வரிசைமுறை அடிப்படையில் (அதாவது வகையுளி, வாழ்த்து, வனப்பு, குறிப்பிசை, ஒப்பு, வண்ணம் என்ற முறையில்) யாப்பருங்கல மரபையும், விளக்க முறை அடிப்படையில் தொல்காப்பியத்தையும் (மூலம், )  யாப்பருங்கல மரபையும் (உரை)  இலக்கணவிளக்கம் பின்பற்றுகிறது. அது சூத்திரத்தில் தொல்காப்பியர் காட்டிய இருபது வண்ணங்களைப் பற்றி மட்டுமே கூறினாலும் உரையில் வண்ணம் நூறு என்றும்  கூறி யாப்பருங்கல மரபையும் ஏற்றுக்கொள்வதன் மூலம் அது யாப்பருங்கல மரபையே முன்னிலைப்படுத்துகிறது. மேலும் அது  வண்ணங்கள் நூறு என்று கூறுவதோடு மட்டும் அமையாமல் ” அவற்றைக் குறிலகவற் றூங்கிசை வண்ணம் நெடிலகவற் றூங்கிசை வண்ணமென வண்ணம் நூறென்பாரும் உளர். அவ்வேறுபாடும் உணர்க ” (பக்.732, மு.சு.நூ) என்று  கூறுவதன் மூலம் யாப்பருங்கல மரபின்  வண்ணம் தொடர்பான எந்தச் செய்திகளும் விட்டுபோய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பதையும் கவனிக்கமுடிகிறது.

    யாப்பருங்கலத்தின் உரையும் யாப்பருங்கலக்காரிகை உரையும் வண்ணங்கள் நூறு என்று கூறினாலும் அவை தொல்காப்பியத்தின் வண்ணம் தொடர்பான சூத்திரங்களை எடுத்துக்காட்டுவதையும் இவண் நினைவு கூறவேண்டும். அதனோடு ஒரு புடை ஒப்புமையாக,  இலக்கண விளக்கம், சூத்திரத்தில் இருபது வகை வண்ணங்களையும் கூறி உரையில் யாப்பருங்கல மரபின் வண்ணங்களைக் கூறுவதை ஒப்புநோக்க வாய்ப்புண்டு.  எனினும் இலக்கண விளக்கத்தினுடைய வண்ணம் பற்றிய சூத்திரம் தொல்காப்பியத்தின் சூத்திரத்தைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது. தழுவி என்பதை விட தொல்காப்பியச் சூத்திரம் என்றே கூறலாம். இவ்விடத்தில் தொல்காப்பியம் மற்றும் இலக்கண விளக்கம் ஆகியவற்றின் வண்ணம் பற்றிய சூத்திரத்தை எடுத்துக்காட்டுவது பயனுடையதாக இருக்கும்:

    தொல்காப்பியம்:

    ” வண்ணந் தாமே நாலைந் தென்ப ” ( தொல்.செய். 214)

    ”  அவைதாம்
    பாஅ வண்ணம் தாஅ வண்ணம்
    வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம்
    இயைபு வண்ணம் அளபெடை வண்ணம்
    நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம்
    சித்திர வண்ணம் நலிபு வண்ணம்
    அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம்
    ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம்
    எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம்
    தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம்
    உருட்டு வண்ணம் முடுகு வண்ணமென்று
    ஆங்கென மொழிப அறிந்திசினோரே (தொ.செய்.216)

    இலக்கண விளக்கம்:

    வண்ணந் தானே நாலைந் தவைதாம்
    பாஅ வண்ணந் தாஅ வண்ணம்
    வல்லிசை வண்ண மெல்லிசை வண்ண
    மியைபு வண்ண மெல்லிசை வண்ண
    நெடுஞ்சீர் வண்ணங் குறுஞ்சீர் வண்ணஞ்
    சித்திர வண்ண நலிபு வண்ண
    மகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ண
    மொழுகு வண்ண முரூஉ வண்ண
    மெண்ணு வண்ண மகைப்பு வண்ணந்
    தூங்கல் வண்ண மேந்தல் வண்ண
    முருட்டு வண்ண முடுகு வண்ணமென்
    றாங்கென மொழிப வறிந்திசி னோரே (இ. வி.  757)

    இரு சூத்திரங்களையும் ஒப்புநோக்குக.

    இங்குச் சூத்திரநிலையில் இலக்கண விளக்கம் தொல்காப்பியத்தைப் பின்பற்றுகிறது என்பதே சரி எனினும் சூத்திரத்தோடு உரையையும், வண்ணத்தை விளக்க எடுத்துக் கொண்ட வரிசை முறையையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது (இலக்கண விளக்க மூலமும், உரையும் ஒரே நபரால் செய்யப்பட்டதாக இருப்பதினால் ஒட்டுமொத்தமாகப் பார்க்க வேண்டிய தேவை நமக்கிருக்கிறது) இலக்கண விளக்கம் வண்ணம் பற்றிய கொள்கையில்  யாப்பருங்கல மரபைப் பின்பற்றுகிறது என்பதே நேரிதாகும். நாமிங்கே  இதை விரிவாகக் கூறுவதற்குக் காரணம் ஒரு நூல் பல நூல் செய்திகளை எடுத்தாண்டாலும் அது பின்பற்றும் மூலநூலே அது சார்ந்த கோட்பாட்டை விளக்க வல்லதாக இருக்கும் என்பதாலேயேயாகும். இது போல (வண்ணம் பற்றிய சூத்திரத்தில் இலக்கண விளக்கம் தொல்காப்பியச் சூத்திரத்தை பயன்படுத்துவது போல)   இலக்கண விளக்கம் தொல்காப்பியம் சார்ந்த சில செய்திகளைப் அடியொற்றினாலும் அது சார்ந்திருக்கும் மரபு என்பது யாப்பருங்கல மரபேயாகும்.

    இதுகாறும் கண்டவற்றால் இலக்கணவிளக்கம் தொல்காப்பியத்தின் சில செய்திகளை எடுத்தாண்டாலும்,  தொல்காப்பியத்தைப் பின்பற்றித் தன்வழியை அமைத்துக்கொள்ளவில்லை என்பதையும் அது யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது என்பதையும் தெரிந்துகொள்ளமுடிகிறது.

    *****

    கட்டுரையாசிரியர்
    ஆய்வாளர்
    பிரெஞ்ச் ஆசியவியல் பள்ளி (EFEO)
    புதுச்சேரி

     

     

    Share
  • இலக்கண விளக்க யாப்பியல் – 2

    – ம.பிரபாகரன்

    யாப்பிலக்கண உலகில் முதன்முதலில் தளையால் அடிவகுத்துப் புதுமை செய்தது இலக்கண விளக்கமே என்பர் ஆய்வாளர்கள். ஆனால் தளையால் அடிவகுக்கும் முறை யாப்பருங்கலக்காரிகை காலத்திலேயோ அல்லது அதற்கு முன்னரோ இருந்துள்ளதோ என்று ஐயப்படும் ஒரு குறிப்பு வே.பால்ராஜின் யாப்பருங்கலக் காரிகை பதிப்பிலிருந்து நமக்குக் கிடைக்கிறது. அதாவது யாப்பருங்கலக் காரிகை கூறும்  அடி பற்றிய காரிகை உரைப்பகுதியில் வரும் அடி பற்றிய மேற்கோள் சூத்திரத்திற்கு பாடவேறுபாடாக அடிக்குறிப்பில்  வே.பால்ராஜ், தளை அடிப்படையில் அடிவகுக்கும் முறையைக் கூறும் சூத்திரம் ஒன்றினை எடுத்துக்காட்டுகிறார். அச்சூத்திரத்தின் முதல் இரண்டு அடியும்  இலக்கண விளக்கம் தளை வகை அடி பற்றிக் கூறும் சூத்திரத்தின் முதல் இரண்டடியாகும். இவ்விடத்தில் இலக்கணவிளக்கம் கூறும் தளைவகை அடி பற்றி கூறும் சூத்திரம், வே. பால்ராஜின் யாப்பருங்கலப் பதிப்பிலுள்ள தளை வகை அடி ஆகியவை குறித்துக் காணலாம்.

    இலக்கண விளக்கம்:

    1. குறளொரு பந்த மிருதளை சிந்தா
      முத்தளை யளவடி நாற்றளை நெடிலடி
      யைந்தளை முதலா வெழுதளை காறும்
      வந்தவும் பிறவும் கழிநெடி லென்ப.

    பால்ராஜின் யாப்பருங்கலப்பதிப்பு:

    எண்சீ ரெழுசீ ரிவையாம் கழிநெடிற்
    கொன்றிய வென்ப உணர்ந்திசி னோரே
    என்றார் பிறரும்மெனக் கொள்க. (பக். 137:2007)

    மேற்கண்ட சூத்திரத்திற்கு பாடவேறுபாடாக, பால்ராஜ் அடிக்குறிப்பில் எடுத்துக்காட்டும் சூத்திரமாவது:

    குறளொரு பந்த மிருதளை சிந்தாம்
    முத்தளை யளவடி நாற்றலை நெடிலடி
    மிக்கன கழிநெடி லென்றி சினோரே – ங, ட, ந; ஞ, ண, த, ப, ம, ய, ர சுவடிகளில் இல்லை. (பக். 137 மேலது ).

    மேலே இலக்கண விளக்கச்சூத்திரத்தையும் வே. பால்ராஜ் எடுத்துக்காட்டும் தளையடி பற்றிய அடிக்குறிப்பில் இடம்பெறும் சூத்திரத்தையும் கவனிக்க. அடிக்குறிப்புச் சூத்திரத்தின் முதல் இரண்டு அடிகள் அப்படியே இலக்கணவிளக்கத்தில் இடம்பெற்றிருப்பதை நோக்குக. வே.பால்ராஜ், அடிக்குறிப்பில் காணப்படும் சூத்திரம் அதிக சுவடிகளில் வராததுகொண்டு அதைப் பாடமாகக் கொள்ளாது விட்டிருப்பார் போலும்.  உண்மையில் அடிக்குறிப்பில் காணப்படும் சூத்திரம் யாப்பருங்கலக் காரிகைக்குரிய பாடமாக இருந்தால் அச்சூத்திரம் பழையது என்றும் இலக்கண விளக்கம் அச்சூத்திரத்தை எடுத்துப்பயன்படுத்திக்கொண்டது என்று கூறலாம். அத்துடன் அப்பழைய சூத்திரம், தளையை அடிப்படையாகக் கொண்டு அடிவகுக்கும் பழைய தமிழ் யாப்பு மரபோடு தொடர்புடையதாக இருப்பதால்,  இலக்கணவிளக்கம் தளையை அடிப்படையாகக் கொண்டு அடிவகுத்து, தமிழ் யாப்புலகில் புதுமை செய்தது என்ற யாப்பாராய்ச்சியாளர்களின் முடிவை மாற்றி அமைக்கவும் செய்யும். ஆனால் வே.பால்ராஜ் தம் யாப்பருங்கலப்பதிப்பில் எடுத்துக்காட்டும் சூத்திரம் பழையச்சூத்திரமாக இல்லாமலிருந்து இடைச்செருகலாக இருந்தால் இலக்கணவிளக்கமே முதன்முதலில் தளையை அடிப்படையாகக் கொண்டு அடிவகுத்தது என்று கூறலாம். ஆனால் அப்படிக் கூறுவதற்கு இச்சூத்திரம் தடையாக உள்ளதால் இச்சூத்திரம் குறித்த மேலாய்வு தேவையாக உள்ளது. ஒரு வாதத்திற்கு யாப்பருங்கல காரிகை பதிப்பில், அடிக்குறிப்பில் காட்டப்பட்டிருக்கும் சூத்திரம் இடைச்செருகலாக இருக்கிறது என்று கொண்டால், இலக்கணவிளக்கம் ஏன் தளை அடிப்படையில் அடிவகுத்தது? என்ற நோக்கிலான விவாதத்தை நாம் தொடங்க வேண்டியிருக்கும். மேலே கண்ட சூத்திரத்தின் உண்மைநிலை பற்றித் தற்போது நம்மால் ஒன்றும் சொல்ல முடியாததால் நாம் இலக்கணவிளக்கம் ஏன் தளை அடிப்படையில் அடிவகுத்தது என்ற நோக்கில் விவாதத்தைத் தொடரலாம்.  வீரசோழிய உரை தளைக்கு எதிரிடையாக வலுவான வாதத்தை வைக்கிறது என்று முன்னர்ப் பார்த்தோம். இவ்விடத்தில்  தளைக்கு எதிராகக் அது கூறும் இன்னொரு வாதத்தையும் பார்ப்பது இத்தொடர்பில்  உதவியாக இருக்கும்.

    ‘ கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
    னற்றா டொழாஅ ரெனின் ‘ (கு.2)

    ‘ கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
    படாஅ முலைமேற் றுகில் ‘ (கு.1087)

    ‘ உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
    செறாஅஅய் வாழிய நெஞ்சு. ” (கு.1200)

    என்று இத்தொடக்கத்தனவற்றைச் செவிப்புலனே கருவியாக ஆராய்ந்தபொழுது ஓசை இனியாவாய் இருக்கும்; அலகிட்டு ஓசையூட்டில் அவை ஓசையுண்ணா என்றால், அற்றன்று; இவற்றின்கண் அளபெடை உண்டாகவே ஓசையுண்ணுமெனில், அளபெடை இன்றியேயும் ஓசை இனியனவாக இருந்தன என்க.  (பக்.461, தி.வே.கோலையர் பதிப்பு, வீரசோழியம்:2005).

    இங்குப் பெருந்தேவனார் ” அலகிட்டு ஓசை ” என்று கூறுவது தளைகளால் கொள்ளும் ஓசையை ஆகும். அதைப் போல பேராசிரியரும் நச்சரும் தளை உறுப்பாகக் கொள்ளத்தக்கதன்று என்று தம் கருத்தை அழுத்தமாக முன்வைக்கின்றனர். இவ்விடத்தில் பேராசிரியர் கருத்தைச் எடுத்துக்காட்டுவது  விவாதத்தைப் நன்கு புரிந்து கொள்ள உதவி புரியும் (நச்சர் பேராசிரியரைப் பின்பற்றுவதால் அவர் கருத்து இங்குச் சுட்டிக்காட்டப்படவில்லை):

    மற்று, யாத்த சீரேயாப்பென்றதென்னை? தளையென்பதோர் உறுப்புப் பிறர் வேண்டுபவாலெனின், இவருஞ் சீரது தொழிலே தளையென வேண்டுப; தளைத்தலிற் றலையாதலானும் வேறு பொருளென வேண்டாரென்பது; என்றார்க்கு, அசையின்றிச் சீருமில்லை; சீரின்றி அடியுமில்லையாம். பிறவெனின், அற்றன்று; உறுப்பும் உறுப்புடைச் செய்யுளும் போல அவை கொள்ளப்படும்; தளையென வேறொன்றின்மையிற் கொள்ளான்; என்னை? குறளடியென வேறுறுப்பாயின்மையினென்பது; தளையென்பது இதனைக் கோடுமேல் அதனைக் குறளடியெனலாகாதென்பது; அல்லதூஉம், ஈரசை கூடி ஒருசீராயினவாறுபோல இருசீர் கூடியவழி அவ்விரண்டினையும் ஒன்றென்று கோடல்வேண்டும்; கொள்ளவே, நாற்சீரடியினை இடைத்துணித்துச் சொல்லுவதின்றி, நான்கு பகுதியானெய்திக் கண்டம்படச் சொல்லுமாறில்லையென்க. யாத்தசீர் ‘ என்றதனானே அசைதொறுந் துணித்துச் சொல்லப்படா சீரென்பதூஉம் அச்சீரான் அடியானவழிச் ‘ சீரியைந்திற்றது சீரெனவே ‘ படுமென்றதனாற் சீரெல்லாந் துணித்துச் சொல்லப்படும்மென்பதூஉங் கூறினான் இவ்வாசிரியனென்பது; அற்றன்றியும் அவ்வாறு தளை கொள்வார் சீரானடிவகுப்பதூஉங் குற்றமென மறுக்க. மற்றுத் தொடை கூறியதென்னை? அடியிரண்டு தொடுத்தற்றொழி லல்லது இன்மையினெனின், அற்றன்று; தொடுத்தற்றொழின் மாத்திரையானே தொடையென்றானல்லன்; அவ்வடிக்கண் நின்ற எழுத்தும் எழுத்தும் சொல்லும் பிற பொருளாகலான் அவற்றானே தொடை கொண்டைமையின் வேறுறுப்பென்றானென்பது. அஃதேல், சீருஞ்சீரும் இயைந்தவழி அவையிடமாகநின்ற அசையால் தளைகொள்ளாமோவெனின் கோடுமென்றே; அதனி அடியென்னாமாயினென முற்கூறியவாறே மறுக்க (பக்.210-211, சி.கணேசய்யர் பதிப்பு, தொல்காப்பிய பொருளதிகார மூலமும் பேராசிரியருரையும் பின்னான்கியல்கள், பாகம்- இரண்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்:2007)

    தளைக்கு ஆதரவான யாப்பருங்கல மரபிற்கு எதிரான வாதத்தை மிகத்தீவிரமாக வீரசோழிய உரைகாரரும், தொல்காப்பிய உரையாசிரியர்களும் வைக்கிறார்கள் என்று மேலே கண்டோம். ஆனால் மறுபடியும், வீரசோழியம், தொல்காப்பிய உரைகள் ஆகியவற்றிற்குப் பின் வந்த இலக்கணவிளக்கம் தளைக்கு ஆதரவாகப் பெருங்குரல் கொடுக்கிறது. அக்குரல் தளைக்கு எதிரான சிந்தனை மரபிற்கு எதிராகவே கொடுக்கப்படுகிறது என்று கூறவேண்டும். இலக்கணவிளக்கம், அடியைத் தளை அடிப்படையில் பகுக்கும்போது தளையின் முக்கியத்துவத்தை உறுதியாக எழுப்புகிறது. இதன் மூலம் தமிழ்ச்செய்யுளில் தளையை தவிர்க்க இயலாது என்ற யாப்பருங்கல மரபின் அடிப்படை வாதத்திற்கு வலுசேர்க்கிறது. தொல்காப்பியத்தைப் பொறுத்தவரை ‘ தூக்கு ‘ ‘ பா ‘ என்ற உறுப்புகள் மிக முக்கியமானவை. எனவேதான் ‘ தன்சீர் உள்வழி தளை வகை வேண்டா ‘ என்றது. வீரசோழியமும் ‘ ஓசை ‘ யைப் பொறுத்தவரை தொல்காப்பியத்தோடு ஒத்து அமைகிறது. ஆனால் இலக்கணவிளக்கம் தளைக்கு முக்கியத்துவம் கொடுத்து ‘ தூக்கினைத் ‘ தள்ளி நிறுத்துகிறது:

    ” இவ்வோசையை (செப்பலோசை) தூக்கு என்று ஓர் உறுப்பாகி மேல்கூறுவாரும் உளர். மேல் இவ்வாறு வருவனவற்றிற்கும் இவ்வுரை உய்த்து உரைக்க ”. (பக். 731, மு.சு.நூ)

    இங்கு இலக்கண விளக்கத்தார் தளையால் பெறும் ஓசையை முதன்மைப்படுத்தி ” தூக்கு ” உறுப்பைத் தள்ளி நிறுத்துவதைக் கவனிக்க. தளைக்கு ஆதரவாக இலக்கணவிளக்கம் தளை அடிவகுக்கும் முறைக்கு ஒரு வலுவான காரண அடிப்படையை வழங்கவில்லை. வீரசோழிய உரைகாரர், மற்றும் தொல்காப்பிய உரையாசிரியர்களான பேராசிரியர், நச்சர் ஆகியோர் தளைக்கு எதிரான வாதத்தை வைக்கும் போது இன்னின்ன காரணங்களால் தளை கொள்வதும், தளையை உறுப்பாகக்  கொள்வதும் பொருந்தாது என்று விரிவாக விவாதிக்கின்றனர்.

    யாப்பருங்கல மரபு கூட ஏழ்வகைத் தளை கொள்வதற்கு ஒரு தத்துவ அடிப்படை இருந்திருக்க வேண்டும். அது சமணம் சார்ந்ததாக இருக்கலாம். யாப்பருங்கல மரபின், தளையைச் செய்யுளின் உறுப்பாகக் கொண்ட தளைகோட்பாடு வீரசோழிய உரையாசிரியர் மற்றும் தொல்காப்பிய உரையாசிரியர்களால் தர்க்கமுறையிலமைந்த காரணத்தை அடிப்படையாகக் கொண்டு மறுக்கப்பட்டது போல இலக்கண விளக்கம், வீரசோழிய உரைகாரர், தொல்காப்பிய உரையாசிரியர்கள் ஆகியோரின் வாதத்தைத் தர்க்கமுறையில் மறுக்கவில்லை. இன்னின்ன காரணங்களால் தளை உறுப்பாக கொள்ளத்தக்கது இன்னின்ன காரணங்களால் தளை அடிப்படையில் ஓசைகொள்வது பொருந்தும்

    என்று கூறி எப்படி தளைக்கு எதிரான வாதம் தவறு என்று விளக்கவில்லை. வீரசோழிய உரைகாரர், பேராசிரியர், நச்சர் ஆகியோரின் வாதம் வலுவுடையதாக தனியே நிற்க, இலக்கண விளக்கத்தார் மொழி விளையாட்டுப் போல தளைவகை அடிகள் படைத்து  யாப்பு விளையாட்டு ஒன்றை  விளையாடியுள்ளார் என்று கூறலாம். ஆனால் அந்த  விளையாட்டு என்பது தளைக்கோட்பாட்டை முக்கியத்துவப்படுத்தவே, வலுவூட்டவே  செய்யப்பட்டது என்பதை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. அந்த யாப்பு விளையாட்டை  ஒரு உதாரணம் காட்டி விளக்கலாம். 2+2 = 4 ; இது யாப்பருங்கல மரபு கூறிய இரு சீர் வருவது குறளடி என்பதற்குச் சமமானதாக வைத்துக் கொள்வோம். 2+2 = 4 என்பதை 1+1+1+1 = 4 என்றும் கூறலாம்; இது இலக்கணவிளக்கம் இருசீர் அடியில் வரும் ஒருதளையை அடிப்படையாகக் கொண்டு ஒரு தளை வருவது குறளடி என்று கூறியதோடு ஒப்பிடலாம்  (ஏற்கனவே நாம் இலக்கணவிளக்கம் எப்படித் தளைவகை அடிகளுக்கு யாப்பருங்கல மரபு பயன்படுத்திய சீர்வகை அடிகளுக்கான சூத்திரத்தையும் உதாரணங்களையும் பயன்படுத்திக்கொண்டது என்று பார்த்தோம்). இரண்டு சீர்வந்தால் ஒருதளை காணப்படும். இது இயல்பு. இரண்டுசீர் வருவதை யாப்பருங்கல மரபு குறளடி என்று கூறிவிட்டது. ஆனால் இதை ஒருதளை வந்த குறளடி என்று  யாப்பருங்கல மரபால் கூற முடிந்திருக்கும். ஆனால் கூறவில்லை.  ஏனெனில் தளை அடியின் ஓசையைத் தீர்மானிக்கும் ஆனால் அடியைத் தீர்மானிப்பதில்லை என்ற கருத்தை அம்மரபு கொண்டிருந்தது. தளை அடியைத் தீர்மானிக்கும் என்றால் சீர் செய்யுளின் ஓசையைத் தீர்மானிக்குமா? என்ற கேள்வி எழும். செய்யுளில் தளையின் பங்கு ஓசை நிமித்தமே. ஆனால் இலக்கண விளக்கம் இது எதனையும் கருத்தில் கொண்டதுபோல் தெரியவில்லை. அது தளை அடிப்படையில் அடிவகுக்கும் போது ஒரு புதுமையாகவும்; அதே நேரத்தில் தளையின் இன்றியமையாமையை வற்புறுத்துவதாகவும்  அமைகிறது. இலக்கணவிளக்கத்தார் எதிர்பார்த்ததும் இதுவேதான்; அதாவது ஒரு புதுமையான செயல்மூலம் தளைக் கோட்பாட்டை முக்கியத்துவப்படுத்தவேண்டும் அதே நேரத்தில் தர்க்கமும் செய்யக் கூடாது. எனவே தளைவகை அடிகள் கூறியதன் மூலம் தளைக்கோட்பாட்டை முக்கியத்துவபடுத்தியும் விடுகிறார்.

    பின்வரும் அட்டவணை தொல்காப்பியம், யாப்பருங்கல மரபு, வீரசோழியம், இலக்கணவிளக்கம் ஆகியவை அடிகளைப் பகுத்துள்ள முறைமையைப் பட்டியலிடுகிறது.

    அட்டவணை : 5

    தொல்காப்பியம்    யாப்பருங்கல மரபு            வீரசோழியம்          இலக்கணவிளக்கம்

    எழுத்தெண்ணிக்கை அடிப்படையில்

    1. குறளடி
    2. சிந்தடி
    3. அளவடி
    4. நெடிலடி

    5.நெடிலடி    சீரடிப்படையில்

    1.குறளடி

    1. சிந்தடி
    2. அளவடி
    3. நெடிலடி
    4. கழிநெடிலடி சீரடிப்படையில்

    1.குறளடி

    1. சிந்தடி
    2. அளவடி
    3. நெடிலடி
    4. கழிநெடிலடி தளையடிப்படையில்

    1.குறளடி

    1. சிந்தடி
    2. அளவடி
    3. நெடிலடி
    4. கழிநெடிலடி

    தொடை:

    தொடை மரபைப் பொறுத்தவரையிலும் இலக்கண விளக்கம் யாப்பருங்கல மரபை அப்படியே பின்பற்றுகிறது. தொல்காப்பியத்தோடு முரண்படவில்லை எனினும் அதைத் தன் வழிக்குரியதாகக் கொள்ளவில்லை. தொல்காப்பியம் முதன்மைத்தொடைகளாக மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை என்ற ஐந்தைக் கூறுகிறது. விகற்பத் தொடைகளாக ஒரூஉ, பொழிப்பு ஆகியவற்றைக் கூறுகிறது. விகற்பமில்லாத் தொடைகளில் செந்தொடையை மட்டுமே பேசுகிறது. யாப்பருங்கல மரபு முதன்மைத்தொடைகளாக தொல்காப்பியம் கூறியவற்றையே கூறுகிறது. மேலும் விகற்பத் தொடைகளாக இணை, பொழிப்பு, ஒரூஉ, முதலிய ஏழினைக் குறிப்பிடுகிறது. விகற்பமில்லாத தொடைகளாக இரட்டை, அந்தாதி, செந்தொடை ஆகியவற்றைக் கூறுகிறது. ஒட்டுமொத்தமாகத் தொடை விளக்குமுறையைப் பார்க்கும் போது இலக்கண விளக்கம் யாப்பருங்கல மரபை அப்படியே உள்வாங்கிக்கொள்கிறது. எந்த வித மாற்றுக்கருத்தும் கொள்ளவில்லை.

    இலக்கண விளக்கம் ” தொடையும் தொடைவிகற்பமும் ” பகுதியில் (722) தொடைகள் பற்றிய  வைப்புமுறையை அமைக்கும்போது தொல்காப்பியம், யாப்பருங்கல மரபைப் போல மோனைக்கு முதலிடமும் எதுகைக்கு இரண்டாமிடமும் அளிக்கின்றது. ” சில தொடை விகற்பங்கள் ” என்ற தொடர்ந்துவரும் பகுதியில் எதுகையை முதலில் வைத்து விளக்குகிறது (எதுகை, மோனை). வீரசோழிய உரை, எதுகை எனினும் தொடை எனினும் ஒக்கும் ‘ என்று எதுகையை முக்கியத்துவப்படுத்தும். எனினும் வீரசோழியத்தின் தொடைகள் பற்றிய வைப்புமுறையில் (தொடைகள் பற்றிய அறிமுகக் காரிகையில்) மோனை, எதுகை என்ற வரிசைமுறையே காணப்படுகிறது. வீரசோழியம்  மோனையை வைப்புமுறையில் முதலில் வைத்தாலும்  எதுகையையே கருவியாகக் கொண்டு அடிவகுத்து அதனையே முதன்மைப் படித்துகிறது. இதிலிருந்து இலக்கணவிளக்கம் ” சிலதொடைகள் விகற்பம் ” என்ற பகுதியில் எதுகையை முதன்மைபடுத்தியிருப்பது வீரசோழியத்தை பின்பற்றியோ என்று எண்ணத் தோன்றலாம். ஆனால் இலக்கணவிளக்கம் வீரசோழியத்தைப் பின்பற்றி எதுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனலாம். இலக்கணவிளக்கம் தோன்றிய காலகட்டம் வாய்பாட்டுத்தன்மையில் கவிதைபுனையும் கவிஞர்கள் பெருகியிருந்த காலகட்டம். வெண்பாவைப் பார்த்து இன்னொரு வெண்பாவும் விருத்தத்தைப் பார்த்து இன்னொரு விருத்தமும் பாடிய காலகட்டம். இக்காலகட்டத்தில் ‘ எதுகை ‘ சொற்சிலம்பம் ஆடுவதற்குத் தேவையான ஒன்று. எனவே இலக்கணவிளக்கம் ” சில தொடை விகற்பங்கள் ” என்ற பகுதியில் எதுகையை முதலில் வைத்து விளக்கியது என்று கூறவேண்டும். மற்றபடி எதுகையைப் பொறுத்தவரை வீரசோழியத்திற்கு இருந்த வலுவான கோட்பாட்டுப் பின்னணி இலக்கணவிளக்கத்திற்கு கிடையாது என்று நிச்சயமாகக் கூறலாம். பின்வரும் அட்டவணை தொல்காப்பியம், யாப்பருங்கல மரபு, வீரசோழியம், இலக்கண விளக்கம் ஆகியவை தொடைகள் பற்றிக் கூறுவதைப் பட்டியலிடுகிறது:

    அட்டவணை:6

    தொல்காப்பியம்    வீரசோழியம்          யாப்பருங்கலமரபு இலக்கணவிளக்கம்

    முதன்மைத்தொடைகள்

    மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை

    விகற்பத்தொடைகள்

    பொழிப்பு, ஒரூஉ

    விகற்பமில்லாத்தொடை

    செந்தொடை           மோனை

    எதுகை          முதன்மைத்தொடைகள்

    மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை

    விகற்பத்தொடைகள்

    இணை, பொழிப்பு, ஒரூஉ, மேற்கதுவாய்,

    முற்று           முதன்மைத்தொடைகள்

    மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை

    விகற்பத்தொடைகள்

    இணை, பொழிப்பு, ஒரூஉ, மேற்கதுவாய்,

    முற்று

    பா மற்றும் பாவினம் ஆகியவைக்குறித்துப் பேசும் பொழுதும் இலக்கணவிளக்கம், யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது.

    கருத்துநிலை அடிப்படையில் இலக்கணவிளக்கம் முழுக்க முழுக்க யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது என்பது மேலே விளக்கப்பட்டது. கருத்துநிலை அடிப்படையில் மட்டுமல்ல விளக்குமுறை அடிப்படையிலும் இலக்கணவிளக்கம் யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது. அதாவது அதன் விளக்குமுறை யாப்பருங்கல மரபின் சூத்திரங்களை அப்படியே எடுத்தாண்டும் தழுவியும்,  உரைகளைத்  தழுவியும் விளக்குவதாக அமைகிறது. இத்தன்மை குறித்துக் கீழே காணலாம்.

    இலக்கண விளக்கத்தின் எழுத்துக்கள் குறித்து வரும்  சூத்திரமாகிய

    எழுதப் படுதலி னெழுத்தே யவ்வெழுத்து
    தசைத்திசை கோடலி னசையே யசையியைந்து
    சீர்கொள நிற்றலிற் சீரே சீரிரண்டு
    தட்டு நிற்றலிற் றளையே யத்தளை
    யடுத்து நடத்தலி னடியே யடியிரண்டு
    தொடுத்துமன் சேறலிற் றொடையே யத்தொடை
    பாவி நடத்தலிற் பாவே பாவொத்
    தினமாய் வழங்களி னினமெனப் படுமே

    என்பது யாப்பருங்கலக்காரிகையுரையில் தற்சிறப்புப் பாயிரப்பகுதியில்   மேற்கோளாகக் காட்டப்படுகின்ற சூத்திரம் ஆகும் (பக்.111, மு.சு.நூ). ஆனால் யாப்பருங்கல விருத்தியிலும் இச்சூத்திரம் இடம்பெறுள்ளது எனினும் யாப்பருங்கலக் காரிகையைப் போல எட்டடி பெறாமல் மொத்தம் ஏழு அடிகளை உடையதாக இருக்கின்றது. மேலும் ஆறாவது, ஏழாவது அடிகள் யாப்பருங்கலக்காரிகையைப் பார்க்கிலும்  வேறாக அமைகின்றது. அச்சூத்திரம் வருமாறு:

    எழுதப் படுதலி னெழுத்தே யவ்வெழுத்
    தசைத்திசை கோடலின் னசையே யசைபியைந்து
    சீர்கொள நிற்றலிற் சீரே சீரிரண்டு
    தட்டு நிற்றலிற் றளையே யத்தளை
    அடுத்து நடத்தலி னடியே யடியிரண்டு
    தொடுத்தன் முதலாயின் தொடையே யத்தொடை
    தூக்கிற்றொடர் திசைத்தலிற் றூக்கெனப் படுமே   (பக்.18; பவானந்தம் பிள்ளை பதிப்பு, யாப்பருங்கல விருத்தி தொகுதி 1 :1916)

    மேற்கண்ட இரண்டு சூத்திரங்களையும் ஒப்பிட்டு நோக்குக.  மேற்கண்ட பாடலுக்கு  யாப்பருங்கல விருத்தியின் பதிப்பாசிரியர் பவானந்தம் பிள்ளை இலக்கண விளக்கத்தில் உள்ள சூத்திரத்தைப் (மேலே நாம் காட்டிய சூத்திரம்)   பாடமாகக்  கொள்கிறார். அடிக்குறிப்பில் பவானந்தம் பிள்ளை இது குறித்து கூறுவதாவது: 

    தொடுத்துமன் சேறலிற் றொடையே யத்தொடை
    பாவி நடத்தலிற் பாவே பாவொத்
    தினமாய் வழங்கலி னினமெனப் படுமேஎனப்பாட முரைக்கும் இலக்கணவிளக்கம் (பக்.18; மேலது).

    இவர் கூறுவது போல இலக்கண விளக்கச் சூத்திரத்தைப் பாடமாகக் கொள்வது பொருந்துமா? என்ற வினா எழுகிறது.

    [தொடரும்]

    *****

    கட்டுரையாசிரியர்
    ஆய்வாளர்
    பிரெஞ்ச் ஆசியவியல் பள்ளி (EFEO)
    புதுச்சேரி

     

    Share
  • இலக்கண விளக்க யாப்பியல் – 1

    – ம.பிரபாகரன்

    தொல்காப்பியச் செய்யுளியலையும் (கி.பி 2) இலக்கணவிளக்கச் செய்யுளியலையும் (கி.பி 17) ஒப்பிட்டு இலக்கணவிளக்கத்தினுடைய செய்யுளியல் வழியை (Root) அடையாளப்படுத்துவதை, இக்கட்டுரை தன்  நோக்கமாகக் கொள்கிறது. அங்ஙனம் அடையாளப்படுத்துவதன் வழி இடைக்கால யாப்பிலக்கண வரலாற்றிற்குப் பயன்படும் செய்திகளைத் தரவல்லதாக இக்கட்டுரை அமையும்.

    தொல்காப்பியத்தையும் இலக்கணவிளக்கத்தையும் ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்கையில் அதற்கு இடைப்பட்ட நூல்களை விட்டுவிட்டு ஒப்பீடு செய்யமுடியாது. இடைப்பட்ட நூல்களைக் கணக்கில் கொண்டாலே இலக்கணவிளக்கத்தின் வழியை (Root) கண்டறிய முடியும். அவ்வகையில் தொல்காப்பியத்திற்குப் பின்னும் இலக்கணவிளக்கத்திற்கு முன்னும் உள்ள யாப்புச் சிந்தனைப்பள்ளிகளான யாப்பருங்கல மரபும், வீரசோழிய மரபும் இங்குக் கணக்கில் கொள்ளப்படுகின்றன. இலக்கண விளக்கம், யாப்பருங்கலக்காரிகையைப் பின்பற்றுகிறது என்று யாப்பிலக்கண வரலாற்று நிலையில் செய்யப்பட்ட  முன்னைய ஆய்வுகள் பொதுவாகக்  கூறினாலும், இலக்கண விளக்கத்தை மூலத்தையும் உரையையும் இணைத்து நோக்கி அதன் வழியை முந்தைய ஆய்வுகள் சுட்டவில்லை என்றே கூறலாம். எனவே இக்கட்டுரை இலக்கண விளக்கத்தை மையப்படுத்தியதாக அமைகிறது.

    தொல்காப்பியம் செய்யுள் உறுப்புக்கள் 34 என்று கூறுகிறது. பின்னர் வந்த யாப்பருங்கல மரபு 6 என்று கூறுகிறது. வீரசோழியம் செய்யுள் உறுப்புக்கள் இத்தனை என்று வரையறுத்துக் கூறவில்லை. இது இலக்கண விளக்கத்திற்கு முன்னால் உள்ள நிலையாகும். இலக்கணவிளக்கத்தைப் பொறுத்தவரை யாப்பு உறுப்புகளைத் தொகுத்துக் கூறும் முறையில் இரண்டு நிலைகள் உள்ளன.

    (I) சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட நிலை

    (ii) உரையை அடிப்படையாகக் கொண்ட நிலை

    இவற்றுள் சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட நிலையே முதன்மைத் தன்மை வாய்ந்ததாக இருக்கிறது என்று கூறவேண்டும். இலக்கணவிளக்கத்திற்கு மூலநூலாசிரியரான வைத்தியநாத தேசிகரே உரையாசிரியராகவும் உள்ளார். எனவே அவர் தன் கருத்தில் முதன்மையானவற்றைச் சூத்திரத்திலும், இரண்டாம் தன்மையானவற்றை உரையிலும் கூறுகிறார் என்று கொள்ள வேண்டும். இதை மூலத்தையும் உரையையும் படிக்கும்பொழுது தெரிந்துகொள்ள முடிகிறது.

    உறுப்புகளைத் தொகுத்துக்கூறும் முறையில் இலக்கணவிளக்கம் யாப்பருங்கல மரபோடு ஒன்றுபடுகிறது. தொல்காப்பியத்தோடு வேறுபடுகிறது. இதைப் பின்வரும்  தொல்காப்பிய, யாப்பருங்கலக்காரிகை, இலக்கணவிளக்கச் சூத்திரங்கள் காட்டும்:

    தொல் :

    மாத்திரை…………….
    யாப்பியல் வகைப்பட்ட அந்நால் ஐந்தும்
    அம்மை…………..
    பொருந்தக் கூறிய எட்டொடும் ( தொல். செய்.1)

    யா.கா :

    ………………………………… எழுத்தசைச்சீர்
    பந்தம் அடிதொடை பாஇனம் கூறுவனம்

    இ.வி:

    செய்யுள் என்பது தெரிவுறக் கிளப்பின்
    முன்னர்க் கூறிய முறைமைத்து ஆகி
    எழுத்து அசை சீர்தளை அடிதொடை என்ற
    மூஇரண்டு உறுப்பும் மேவரச் சிவணிப் (710) 

    மேற்காட்டிய சூத்திரங்களைக் கவனிக்கையில் இலக்கணவிளக்கம் தொல்காப்பிய மரபிலிருந்து விலகித் தனக்கான மரபு யாப்பருங்கல மரபு என்று காட்டிக் கொள்வதைக் காணமுடிகிறது. அடுத்தநிலை, உரையை அடிப்படையாகக் கொண்டது. தொல்காப்பியம் செய்யுள் உறுப்புகள் 34 என்று கூறியது முன்னர் எடுத்துக்காட்டப்பெற்றது. இ.வி உரை, செய்யுள் உறுப்புகள் 22 என்ற ஓர் அடிப்படையை வகுக்கிறது. மூலத்தையும் சேர்த்தால் மொத்தம் 28 உறுப்புகள். இது பிற்கால யாப்புமரபுகளில் காணப்பட்டதாகத் தெரியவில்லை. இது போன்ற ஒரு பகுப்பு வீரசோழியப் பொருட்படலத்தில் காணமுடிகிறது எனினும் அப்பகுப்பு வீரசோழியத்தைப் பொறுத்தவரைச் செய்யுள் உறுப்புகளாக இனம் காட்டப்படவில்லை. இலக்கணவிளக்க உரையில் உறுப்புக்கள் குறித்து வரும் பகுதியாவது:

    மூவிரண்டுறுப்புமேவரச்சிவணி எனவே மேவரச்சிவணாதனவும் உளவென்பதூஉம் பெற்றாம். அவை எழுத்தோத்தினுட் கூறிய மாத்திரைவகையும் அகத்தோத்தினுட் கூறிய திணை முதலிய பன்னிருவகையும் இவ்வோத்துட் கூறப்படும் வண்ணமும் அம்மை முதலிய வனப்பெட்டும் அவைபோல்வன பிறவுமாமென்றுணர்க (பக்.714, சி.வை.தா பதிப்பு, இலக்கண விளக்கம்: 1889   )

    மேலே இலக்கண விளக்க உரையில் எடுத்துக்காட்டப்பட்ட உறுப்புகளில், தொல்காப்பியர் கூறிய உறுப்புக்களிலிருந்து,  நோக்கு , பா, அளவியல், மாட்டு ஆகியவை விடப்பட்டுள்ளன. தொல்காப்பியர் கூறிய 34 உறுப்புகளில் இலக்கணவிளக்கம் 28 உறுப்புக்களைக் கூறினாலும், அவை தொல்காப்பியச் செய்யுள் உறுப்புக்கோட்பாட்டோடு பொருந்தாமலேயே உள்ளன. தொல்காப்பியச் செய்யுளியல் கோட்பாடு உருவம், உள்ளடக்கம் சார்ந்தது. 28 உறுப்புக்களைக் கூறினாலும் இலக்கணவிளக்கம் யாப்பருங்கல மரபைப் போல உருவம் மட்டுமே சார்ந்தது. இந்த 28  என்ற உறுப்பு எண்ணிக்கையை இலக்கணவிளக்கம் எதற்குக் கைகொண்டது என்னும் வினா முக்கியமானது. இது யாப்பருங்கல மரபோடு தொல்காப்பிய மரபையும் சேர்த்து ஒரு புதிய செய்யுள் உறுப்பு மரபை உண்டாக்கும் முயற்சிபோலத் தெரிகிறது. திணை முதலியவற்றைப் பற்றி யாப்புப்படலத்தில் சிறிதும் பேசாமல் பொருட்படலத்தில் ஒதுக்கிவிட்ட வீரசோழிய மரபிற்கு அல்லது அது போன்ற ஒரு சிந்தனைப் பள்ளிக்கு எதிராக இலக்கணவிளக்கம் இந்த 28 உறுப்பைக் கட்டமைத்ததா? என்ற கேள்வியை மட்டும் இங்கு எழுப்பி மேற்செல்லலாம்.

    பின்வரும் அட்டவணை வீரசோழியம் (பொருட்படலம்), இலக்கணவிளக்கம் சுட்டும் உறுப்புகளைப் பட்டியலிடுகிறது:

    வீரசோழியம் (பொருட்படலம்)        இலக்கண விளக்கம்

    1.சட்டகம்

    1. திணை
    2. கைகோள்
    3. நடை
    4. சுட்டு
    5. இடம்
    6. கிளவி
    7. கேள்வி
    8. மொழி
    9. கோள்
    10. உட்பெறு புள்ளி
    11. சொற்பொருள்
    12. எச்சம்
    13. இறைச்சி
    14. பயன்
    15. குறிப்பு
    16. மெய்ப்பாடு
    17. காரணம்
    18. காலம்
    19. கருத்து
    20. இயல்பு
    21. விளைவு
    22. உவமம்
    23. இலக்கணம்
    24. புடையுரை
    25. மொழிசேர் தன்மை

    27.பொருளடைவு   செய்யுள் உறுப்புக்கள் -6

    7.திணை
    8. கைகோள்

    9.கூற்று

    10.கேட்போர்

    11.இடன்

    12.காலம்

    1. பயன்
    2. முன்னம்

    15.மெய்ப்பாடு

    16.எச்சம்

    17.பொருள்

    18.துறை

    19.வண்ணம்

    வனப்பு-8

    இலக்கணவிளக்கம் தொல்காப்பியச் செய்யுளியல் உறுப்புக்களை என்னதான் வலிந்து சேர்த்துக்கொண்டாலும் அவ்வுறுப்புகள் இலக்கண விளக்கச் செய்யுளியல் கோட்பாட்டோடு ஒட்டாமல் தனியே துருத்திக்கொண்டு நிற்கின்றன எனலாம். பின்வரும் அட்டவணை தொல்காப்பியம், யாப்பருங்கலக் காரிகை, இலக்கண விளக்கம் ஆகியவை கூறும் செய்யுள் உறுப்புக்களைப் பட்டியலிடுகிறது.

    அட்டவணை 2

    தொல்காப்பியம்    யாப்பருங்கலக்காரிகை  இலக்கணவிளக்கம்

    1.மாத்திரை

    2.எழுத்து

    3.அசை

    4.சீர்

    5.அடி

    6.யாப்பு

    7.மரபு

    8.தூக்கு

    9.தொடை

    10.நோக்கு

    11.பா

    12.அளவியல்

    13.திணை

    14.கைகோள்

    15.கூற்று

    16.கேட்போர்

    17.களன்

    18.காலவகை

    19.பயன்

    20.மெய்ப்பாடு

    21.எச்சவகை

    22.முன்னம்

    23.பொருள்

    24.துறைவகை

    25.மாட்டு

    26.வண்ணம்

    வனப்பு-8       1.எழுத்து

    2.அசை

    3.சீர்

    4.தளை

    5.அடி

    6.தொடை     சூத்திரம்- 6 உறுப்புகள்
    1.எழுத்து

    2.அசை

    3.சீர்

    4.தளை

    5.அடி

    6.தொடை

    உரை

    7.மாத்திரை

    8.திணை

    9.கைகோள்

    10.கேட்போர்

    11.இடன்

    12.காலம்

    13.பயன்

    14.முன்னம்

    15மெய்ப்பாடு

    16.எச்சம்

    17.பொருள்

    18.வண்ணம்-8

    அசை, சீர் ஆகியவற்றைப் பொறுத்தவரையிலும் இலக்கணவிளக்கம் யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது. பின்வரும் அட்டவணைகள் தொல்காப்பியம், யாப்பருங்கல மரபு, வீரசோழியம், இலக்கணவிளக்கம் சுட்டும் அசை, சீர்களைப் பட்டியலிடுகின்றன. 

    அட்டவணை:3

    அசை:

    தொல்காப்பியம்    யாப்பருங்கல மரபு            வீரசோழியம்          இலக்கணவிளக்கம்

    நேர்

    நிரை

    நேர்பு

    நிரைபு           நேர்

    நிரை  நேர்

    நிரை  நேர்

    நிரை

    அட்டவணை 4

    சீர்:

    தொல்காப்பியம்    யாப்பருங்கல மரபு            வீரசோழியம்          இலக்கணவிளக்கம்

    ஈரசைச்சீர்

    இயற்சீர்-10

    உரிச்சீர்-6

    மூவசைச்சீர்

    வெண்பா உரிச்சீர்-4

    வஞ்சி உரிச்சீர்-60   இயற்சீர்-4

    உரிச்சீர்

    வெண்பா உரிச்சீர்-4

    வஞ்சி உரிச்சீர்-4

    பொதுச்சீர்

    நாலசைச்சீர்-16

    ஓரசைச்சீர்-2      இயற்சீர்-4

    உரிச்சீர்

    வெண்பா உரிச்சீர்-4

    வஞ்சி உரிச்சீர்-4

    பொதுச்சீர்

    நாலசைச்சீர்-16

    ஓரசைச்சீர்-2            இயற்சீர்-4

    உரிச்சீர்

    வெண்பா உரிச்சீர்-4

    வஞ்சி உரிச்சீர்-4

    பொதுச்சீர்

    நாலசைச்சீர்-16

    ஓரசைச்சீர்-2

    தளையும் அடியும்:

    அடுத்து விவாதத்திற்குள்ளாவது தளையும் அடியும் ஆகும். தொல்காப்பியம் தளையை ஓர் உறுப்பாகக் கூறவில்லை; வீரசோழியமும் (மூலம்) தளை பற்றிப் பேசவில்லை. ஆனால்  வீரசோழிய உரை தளைக்கு எதிராக தன் வாதத்தை முன் வைக்கிறது:

    ‘அன்றியும் தேமா முதலாகிய உதாரணங்களால் ஓசையூட்டில் அவ்வோசை வெண்பாவின் ஓசையன்று, அஃது உதாரணத்தின் ஓசை என்று கொள்க. ‘ வெண்பாவின் ஓசையும் உண்டே? எனில், ‘ இரண்டு ஓசை ஓரிடத்து நில்லா என்க. வெண்பாவின் ஓசை அங்கு (உதாரணத்தில்) இருப்பதாகில், வெண்பா, தன்கண் ஓசையின்றி இருக்கும். அப்பாலது வெண்பாவின்கண்ணும் கண்டோம். ஆதலால், உதாரணத்தால் ஓசையூட்டும்பொழுது உதாரணத்தின் ஓசை என்று கொள்க.(பக்.461;2005:வீரசோழியம், தி.வே.கோபாலையர் பதிப்பு).

    வீரசோழியத்திற்கு முன்னர் எழுந்த யாப்பருங்கல மரபு, தளையை உறுப்பாகக் கொண்டு தளை அடிப்படையிலேயே ஓசையும் கொள்ளும். இந்தப் பின்புலத்தின் அடிப்படையில்தான் இலக்கணவிளக்கம் தளைபற்றிக் கூறுவனவற்றை ஆராயவேண்டும். தொல்காப்பியம் எழுத்தெண்ணிக்கை அடிப்படையில் நாற்சீரடியைக் குறளடி(4-6 எழுத்துக்கள்) , சிந்தடி (7-9 எழுத்துக்கள்) அளவடி (10-14 எழுத்துக்கள்)நெடிலடி(15-17 எழுத்துக்கள்) கழிநெடிலடிகள்(18-20 எழுத்துக்கள் )என்று பகுக்கும். தொல்காப்பியத்திற்குப் பின்வந்த யாப்பருங்கல மரபு  சீரடிப்படையில் அடிகளுக்குப் பெயர் சூட்டும். அதாவது இரண்டு சீரைக் கொண்டது குறளடி, மூன்று சீரைக் கொண்டது சிந்தடி, நான்கு சீரைக்கொண்டது அளவடி, ஐந்தடியைக் கொண்டது நெடிலடி, ஆறடியும் அதற்கு மேற்பட்ட அடிகளும் கழிநெடிலடி என்று விளக்கும். யாப்பருங்கல மரபைப் பின்பற்றும் இலக்கண விளக்கம் அடியைப் பொறுத்தவரை யாப்பருங்கல மரபிலிருந்து வேறுபட்டு தளை அடிப்படையில் அடிகளை வகுக்கிறது.இது குறித்த இலக்கண விளக்கப் பகுதியாவது:

    குறளொரு பந்த மிருதளை சிந்தா
    முத்தளை யளவடி நாற்றளை நெடிலடி
    யைந்தளை முதலா வெழுதளை காறும்
    வந்தவும் பிறவுங் கழிநெடி லென்ப  இது முற்கூறிய அடிகளாமாறு கூறுகின்றது.

    இ-ள் ஒரு தளையான் வந்த அடியினைக் குறளடியென்றும், இருதளையான்வந்த அடியினைச் சிந்தடியென்றும், முத்தளையான் வந்த அடியினை அளவடியென்றும், நாற்றளையான் வந்த அடியினை நெடிலடி யென்றும், ஐந்தடியான் வந்த அடியினையும் அறுதளையான் வந்த அடியினையும்   எழுதளையான் வந்த அடியினையும் இவற்றின் மிக்கதளையான் வந்த சிறப்பிலடியினையுங் கழிநெடிலடியென்றுங் கூறுவர் ஆசிரியர் எ-று.(பக்.722,மு.சு.நூ)

    மேலும் இவ்வடிகளுக்கு உதாரணங்கள் கொடுக்கும் போது ஆசிரியர் எண்டளை, மற்றும் ஒன்பது தளையான் வந்த பாடல்களுக்கும்  உதாரணம் கூறுகிறார். இதன் மூலம் ஒருதளை முதல் ஒன்பது தளை வரை அமையும் அடிகள் பற்றி  இலக்கண விளக்கத்தார் வெளிப்படையாகப் பேசுகிறார் எனக் கொள்ளவேண்டும். எனினும் அவரின் உரைப்பகுதியிருந்து தெரியவரும் முக்கியமான கருத்து ஏழுதளையான் மிக்கு வந்த அடிகள் சிறப்பில்லை என்பதாகும். ஒன்பது தளை அடிகளுக்கும் இலக்கண விளக்கத்தார் காட்டியுள்ள பாடல்கள் அனைத்தும் யாப்பருங்கல விருத்தியிலும், யாப்பருங்கலக் காரிகையிலும் சீரடிப்படையிலான அடிகளுக்கு காட்டப்பட்ட உதாரணங்கள் ஆகும்.  அது குறித்து ஓர் உதாரணத்தைக் கீழே காணலாம்:

    யாப்பருங்கல விருத்தி:

    ” திரைத்த சாலிகை
    …………………… ”

    இது குறளடியான் வந்த செய்யுள் (பக்.107:1973, இரா.இளங்குமரன் பதிப்பு,கழகம்)

    யாப்பருங்கலக் காரிகை:

    திரைத்த இருது குறள் சிந்து:
    திரைத்த சாலிகை
    ……………………..

    இது குறளடியான் வந்த செய்யுள்.(பக்.88.1993 EFEO பாண்டிச்சேரி, உல்ரிகே நிகோலஸ் மொழிபெயர்ப்பு)

    இலக்கண விளக்கம்:

    குறளடியான் வந்தச் செய்யுள்;

    ” திரைத்த சாலிகை
    ……………………..” (மு.சு.நூ:பக்.722)

    இவ்விடத்தில் இன்னொன்றும் சுட்டிக்காட்டத் தகுந்தது. இலக்கண விளக்கம், ஏழுதளை வரும் அடிகளே சிறப்பானவை என்றும் அவற்றின் மிக்க தளைகளான் வந்த அடிகள் சிறப்பில என்று காட்டுவதற்கு, யாப்பருங்கல விருத்தியும், யாப்பருங்கலக் காரிகையும்,  சீர்வகை அடிகளில் எட்டு சீரடிகளால் வருவன சிறப்புடையவை, அதற்கு மேற்பட்ட சீர் வகை அடிகளால் வருபவை சிறப்பற்றவை என்பதை நிறுவுவதற்கு மேற்கோளாக எடுத்துக்காட்டிய காக்கைபாடினியாரின் சூத்திரத்தை எடுத்துக்காட்டுகிறது. இங்ஙனம் இலக்கண விளக்கம் எதனால்  தளை வகை அடிகளை விளக்கச் சீர்வகை அடிகளுக்கான காக்கைபாடினியார் சூத்திரத்தை எடுத்துக் காட்டுகிறது? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. காக்கைப்பாடினியாரின் சூத்திரம் குறித்த யாப்பருங்கல விருத்தி, யாப்பருங்கலக் காரிகை, இலக்கண விளக்கம் ஆகிய நூல்களின் பகுதியைக் இவ்விடத்தில் காண வேண்டியது அவசியமாகும்:

    யாப்பருங்கல விருத்தி

    அதனால், எண்சீரின் மிக்கு வந்த செய்யுள்கள் சிறப்பில எனக் கொள்க.

    இரண்டு முதலா எட்டீ  றாகத்
    திரண்ட சீரான் அடிமுடி வுடைய
    இறந்தன வந்து நிறைந்தடி முடியினும்
    சிறந்த அல்ல செய்யு ளுள்ளே (காக்கைபாடினியார்) (மு.சு.நூ: பக் 108)

    யாப்பருங்கலக் காரிகை

    விரிக்கும் நெடிலடி என்று சிறப்பித்தவதனால், எண்சீரின் மிக்க சீரான் வரும் அடிகள் சிறப்பில எனக் கொள்க. என்னை,

    இரண்டு முதலா வெட்டீ றாகத்
    திரண்ட சீரா னடிமுடி வுடைய
    இறந்து வரினு மடிமுடி வுடைய
    சிறந்த வல்ல செய்யு ளுள்ளே

    என்றார் காக்கைபாடினியார்.(மு.சு.நூ: பக். 92)

    இலக்கணவிளக்கம்

    இரண்டு முதலா வெட்டீ றாகத்
    திரண்ட சீரா னடிமுடி வுடைய
    விறந்தன வந்து நிறைந்தடி முடியினுஞ்
    சிறந்த வல்ல செய்யு ளுள்ளே என்றார் பிறருமெனக் கொள்க..(மு.சு.நூ: பக்.722)

    மேற்கண்ட உரைப்பகுதியில் காக்கைபாடினியாரின் சூத்திரத்தின் மூன்றாம் அடி (இறந்து வரினு மடிமுடி வுடைய) யாப்பருங்கல விருத்தியிலும், இலக்கணவிளக்கத்திலும் ஒத்து அமைவதைக் கண்டுக் கொள்க. யாப்பருங்கலக் காரிகையில் அந்த மூன்றாமடி சற்று வேறுபட்டு அமைவதைக் காண்க. வே.பால்ராஜ் தன் யாப்பருங்கலக்காரிகைப் பதிப்பிலும்  மேற்கண்ட  யாப்பருங்கலக்காரிகைப் பகுதியில் காணப்படுவது போலவே பாடம் கொண்டுள்ளார்.

    இலக்கண விளக்கத்தார் சீரடிப்படையில், யாப்பருங்கல மரபு காட்டிய உதாரணங்களை ஏன் தளை அடிப்படையிலான அடிகளுக்குக் காட்ட வேண்டும்?. நிற்க. இவ்விடத்தில் இன்னொரு முக்கியமான செய்தியையும் சுட்டிக்காட்டவேண்டும்.

    [தொடரும்]

    *****

    கட்டுரையாசிரியர்
    ஆய்வாளர்
    பிரெஞ்ச் ஆசியவியல் பள்ளி (EFEO)
    புதுச்சேரி

     

     

    Share
  • தமிழ் யாப்பு எழுத்துக்களும் வடமொழி யாப்பு எழுத்துக்களும் – 2

    -ம. பிரபாகரன்

    யாப்பருங்கல விருத்தி, ” நாலெழுத்தாதியா…எனத்தொடங்கும் சூத்திரம் முதல் தன்சீர் எழுத்தின் சின்மை மூன்றே ” என்ற, தொல்காப்பியர் எழுத்தெண்ணிக்கை அடிப்படையில் அமைந்த சூத்திரங்கள் அனைத்தையும் எடுத்துக்காட்டி என்றார் ஆசிரியர்  தொல்காப்பியனார் ஆகலின்  (இரா.இளங்குமரன் பதிப்பு, யாப்பருங்கல விருத்தி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பக்: 112:1973) என்று தெளிவாகக் கூறுகிறது. இதுவும், இதனைத் தொடர்ந்து வரும், யாப்பருங்கலவிருத்தியின் நேரிசை வெண்பா உரைச்சூத்திரங்களும், தொல்காப்பியம் தொடர்ந்து பயிலப்பட்டு வந்தது என்பதையும், இச்சூத்திரங்கள் எந்த உரையாசிரியரின் கைச்சரக்கும் இல்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. யாப்பருங்கல விருத்தி காட்டும் நேரிசை வெண்பா உரைச்சூத்திரங்கள் பின்வருமாறு:

    ஈரிரண்டும் ஒரேழும் ஈரைந்தும் மூவைந்தும்
    பாரியன்ற நாற்சீர் பதினெட்டும் – ஓரா
    விளையும் பதினேழ் நிலத்துக் குறள்சிந்
    தளவுநெடில் கழிலோ டைந்து ”

    ஐந்தும் அகவற்கு வெள்ளைக் களவடியும்
    சிந்து நெடிலடிக்கண் தொல்லிரண்டும் – வந்த
    தளவிரண்டும் ஆன்ற நெடில்கழியும் ஒண்பாற்
    றளைசிதைவில் தண்டாக் கலிக்கு ”       – யா.வி.95

    ஈரிரண்டோ டீரா றெழுவாய் இறுவாயாச்
    சேரும் எழுத்திருசீர் வஞ்சிக்காம் – ஓரும்
    நெடிலடிக்கு நேர்ந்தனவும் மூவொருசீர் வஞ்சிக்
    கடிவகுத்தார் எட்டாதி ஆய்ந்து ” – யா.வி. 95 மேற்.

    அளவியற்பா ஆன்றசீர் ஐந்தெழுத்திற் பல்கா
    வளவஞ்சிக் காறுமாற்மாம் மாதோ – வளவஞ்சிச்
    சின்மையொரு மூன்றாகும் என்பர் சிறப்புடைமைத்
    தன்மை தெரிந்துணர்வோர் தாம் ” – யா.வி.95. மேற்.

    குற்றிகரம் குற்றுகரம் என்றிரண்டும் ஆய்தமும்
    ஒற்றும் எனவொரு நான்கொழித்துக் – கற்றோர்
    உயிரும் உயிர்மெய்யும் ஓதினார் எண்ணச்
    செயிரகன்ற செய்யுள் அடிக்கு ” – யா.வி.36. மேற்.

    (25 வது நூற்பா உரை, மேலது பக்.113)

    அதுமட்டுமின்றி தொல்காப்பியரின் சிந்தனைகள் அவர் காலத்தோடு முடிந்து போகாமல் அவர் காலத்திற்குப் பிறகும் ஒரு சிந்தனைப்பள்ளியாக விளங்கியமையையும் யாப்பருங்கலவிருத்தி மூலம் அறிந்துகொள்ள முடிகிறது:

    ஈரிரண்டும் ஏழெழுத்தும் ஈரைந்து மூவைந்தும்
    பாரியன்ற நாற்சீர் பதினெட்டும் – ஏர்பாய்
    விளையும் பதினேழ் நிலத்துக் குறள்சிந்
    தளவு நெடில்கலியோ டைந்து ” 

    ………………………………………………. 

    ஐந்தாதி ஐரண் டீறாம் அறுநிலமும்
    வந்தவடி வெள்ளைக் களவு ”

    பண்பாய் ஏழு பதினா றிழிபுயர்வா
    வெண்பா அடிக்கெழுத்து வேண்டினார் – வெண்பாவின்
    ஈற்றடிக் கைந்தாதி ஈரைந் தெழுத்தளவும்
    பாற்படுத்தார் நூலோர் பயின்று ”…………………………………………………..

    ” அவற்றுள் ஐந்தடியாலும் ஆசிரியம் வரப்பெறும். சிந்தடியாலும், அளவடியாலும், நெடிலடியின் முதல் இரண்டடியாலும் வெண்பா வரப்பெறும். வெண்பாவின் ஈற்றடி ஐந்தெழுத்து முதலாகப் பத்தெழுத்தின்காறும் உயர்ந்த ஆறுநிலத்தானும் வரப்பெறும்.

    பதின்மூன்றெழுத்து முதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த எட்டுநிலத்தானும் இலக்கணக் கலிப்பா வரப்பெறும். இலக்கணக் கலிப்பா அல்லாதன, மிக்கும் குறைந்தும் வரப்பெறும்.

    இருசீரடி வஞ்சிப்பா நான்கெழுத்து முதலாகப் பன்னிரண்டெழுத்தின்காறும் உயர்ந்த ஒன்பது நிலத்தானும் வரப்பெறும். முச்சீரடி வஞ்சிக்கு எழுத்து எண்ணி வகுத்திலரேனும், ஏழெழுத்து முதலாகப் பதினேழெழுத்தின்காறும் உயர்ந்த பத்தடியாலும் வரப்பெறும்………..

    நாற்சீரடிப் பாவினங்களின் அடி இருபது எழுத்தின் மிக்கு, இருபதெழுத்தின்காறும் வரப்பெறும் என்பது. (மு.சு.நூ, பக்.495-496 )

    இதில் வெண்பா சிந்தடியாலும், அளவடியாலும், மட்டுமின்றி, நெடிலடியின் முதல் இரண்டடியாலும் வரப்பெறும் என்பதும் வெண்பாவின் ஈற்றடி ஐந்தெழுத்து முதலாகப் பத்தெழுத்தின் காறும் ஆறுநிலத்தானும் வரப்பெறும் என்பதும், முச்சீரடி வஞ்சிக்கு ஏழெழுத்து முதலாகப் பதினேழெழுத்தின்காறும் உயர்ந்த பத்தடியாலும் வரப்பெறும் என்பதுவும், தொல்காப்பியத்தில் இல்லாதவை. அதுபோல இலக்கணக்கலிப்பா அல்லாதன என்பதும் நாற்சீரடிப் பாவினங்களின் அடி இருபது எழுத்தின் மிக்கு இருபத்துநான்கு எழுத்தின்காறும் வரப்பெறும் என்பதுவும் தொல்காப்பியத்தில் இல்லாதவை. இக்கருத்துக்கள்  எல்லாம் பிற்கால தொல்காப்பியச் சிந்தனைப்பள்ளியால் வளர்த்தெடுக்கப்பட்டவை எனலாம். இவ்வெழுத்து வகைப்பட்ட அடிகளுக்கு தரப்படும் உதாரணங்கள், அச்சிந்தனைப்பள்ளி தொல்காப்பியக் கல்விக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும் அறிவிப்பனவாய் உள்ளன. உதாரணங்கள் பின்வருமாறு:

    அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

    குறளடி

    4-6               பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து    (4)

    தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து        (5)

    வண்டு சூழ விண்டு வீங்கி             (6)

    சிந்தடி

    7-9              நீர்வாய்க் கொண்டு நீண்ட நீலம்   (7)

    ஊர்வாய் ஊதைவீச ஊர்வாய்        (8)

    மணியேர் நுண்டோ டொல்கி மாலை (9)

    அளவடி

    10-14          நன்மணம் கமழும் பன்னெல் ஊர  (10)

    அமையோர் மென்றோள் ஆயரி நெடுங்கண் (11)

    இணையீ ரோதி ஏந்திள வனமுலை (12)

    இறும்பர் மலரிடை யெழுந்த மாவின் (13)

    நறுந்தழை துயல்வரூஉம் செறிந்தேந் தல்குல் (14)

    நெடிலடி

    15-17       அணிநடை அசைஇய அரியமை சிலம்பின் (15)

    மணிமருள் வணர்குழல் வளரிளம் பிறைநுதல் (16)

    ஒலிநிலவு வயங்கிழை உருவுடை மகளொடு (17)

    கழிநெடிலடி

    18-20             நளிமுழவ முழங்கிய அணிநிலவு நெடுநாள் (18)

    இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை (19)

    கலனளவு கலனளவு நலனளவு நலனளவு (20)

    பெருமணம் புணர்ந்தனை என்பவஃ

    தொருநீ மறிப்பின் ஒழிகுவ தன்றே (  மேலது பக். 496)

    பேராசிரியரும் இதே உதாரணங்களையே பயன்படுத்துகிறார். (கணேசையர் .சி, தொல்காப்பியம் பொருளதிகாரம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை, பக், 298,299:2007)

    எனவே இவ்வுதாரணங்கள் பிற்காலத் தொல்காப்பியச் சிந்தனைப்பள்ளியால் பயன்படுத்தப்பட்டவை என ஊகிப்பது தவறாகாது.

    இதுகாறும் கண்டவற்றால் தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபு வடமொழி நெறிபற்றியதன்று என்பதையும், எழுத்தெண்ணிக்கை பற்றிய நூற்பாக்கள் இளம்பூரணருக்கு முன் உள்ள உரையாசிரியர்களால் இடைச்செருகப்பட்டதன்று என்பதையும் அறிந்து கொண்டோம். தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபு  வடமொழி நெறிபற்றியதன்று என்பதைப் புறநிலைரீதியாக மேலே சுட்டிக்காட்டினோம். எழுத்து அடிப்படையில் அமைந்த தமிழ், வடமொழிப் பாக்களை ஒப்பிடுவதன்மூலம் இரண்டும் வேறு வேறு மரபைச் சார்ந்தவை என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டமுடியும். இதை விளக்கமான  ஒப்பீடு மூலம் கூறவேண்டும். இரண்டையும் ஒப்பிடுவதற்குமுன் தொல்காப்பிய எழுத்தெண்ணிக்கை மரபைப் புரிந்து கொள்ளவேண்டும். முதலில் எழுத்தெண்ணிக்கை பற்றிய தொல்காப்பிய நூற்பாக்களையும், கருத்துக்களையும் தொகுத்துக்கொள்வோம்.

    1. நால் எழுத்து ஆதியாகி ஆறெழுத்து

    ஏறிய நிலத்தே குறளடி என்ப

    பொருள்: நால் எழுத்து முதலாக ஆறுஎழுத்து ஈறாக ஏறி நிலத்தில் வருவது குறளடி.

    1. ஏழ் எழுத்து என்ப சிந்தடிக்கு அளவே

    ஈர் எழுத்து ஏற்றம் அல்வழி யான

    பொருள்: சிந்தடிக்கு அளவு ஏழு எழுத்து என்று கூறுவர்; இரண்டு எழுத்து ஏற்றம் இல்லாதவிடத்து.

    1. பத்தெழுத் தென்ப நேரடிக் களவே

    ஒத்த நாலெழுத்து ஒற்றலங் கடையே

    பொருள்: பத்து எழுத்து முதல் பதினான்கு எழுத்து வரை நேரடி என்ற அளவடியாகும்.

     மூவைந் தெழுத்தே நெடிலடிக்கு அளவே

    ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப

    பொருள்: பதினைந்து எழுத்து முதல் பதினேழெழுத்துவரை நெடிலடிக்கு அளவாம் என்று கூறுவர்.

    1. மூவாறு எழுத்தே கழிநெடிலடிற்கு அளவே

    ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப

    பொருள்: பதினெட்டு எழுத்து முதலாக இருபது எழுத்தளவும் கழிநெடிலடியின் இயல்பென கூறுவர்.

    1. சீர்நிலை தானே ஐந்து எழுத்து இறவாது

    பொருள்: ஒருசீரின்கண் நிற்கும் எழுத்துக்கள் ஐந்தினைக் கடவாது.

    1. நேர்நிலை வஞ்சிக்கு ஆறும் ஆகும் 

    பொருள்: இருசீர் அடிகளான் வரும் வஞ்சியடிக்கண் ஒருசீரில் ஆறெழுத்தும் வரும்.

    1. ஐவகை யடியும் ஆசிரியர்க்கு உரிய

    பொருள்: நாற்சீரடிக்கண் வகுக்கப்பெற்ற ஐவகை அடிகளும் ஆசிரியப்பாவிற்கு உரிய.

    1. அளவும் சிந்தும் வெள்ளைக்கு உரிய

    தளைவகை ஒன்றாத் தன்மை யான 

    பொருள்: அளவடியும் சிந்தடியும் வெண்பாவிற்கு உரிய; தளைவகை ஒன்றாத் தன்மைக்கண்.

    1. அளவடி மிகுதி உளப்படத் தோன்றி

    இருநெடில் அடியும் கலியிற் உரிய 

    பொருள்: அளவடி முகுதிஒயாகிய 13 எழுத்து முதலாக நெடிலடியும், கழிநெடிலடியும் ஆகிய 20 எழுத்தின்காறும் வரும் அடி, கலிப்பாவிற்குரிய.

    1. குறளடி முதலா அளவடி காறும்

    உறழ்நிலை இலவே வஞ்சிக்கு என்ப

    பொருள்: குறளடி முதலாக அளவடி வரையும் வஞ்சியுரிச்சீர் வந்து மயங்கும் நிலை இல்லை என்று கூறுவர். இங்கு இயற்சீரும் ஆசிரியவுரிச்சீரும் வரும்.

    இவற்றைப் பின்வருமாறு அட்டவணைப்படுத்தலாம்: 

    அட்டவணை 2

    எழுத்துக்கள்                        பாக்கள்

    அளவு- 10 எழுத்து முதல் 14 எழுத்து வரை

    (10,11,12,13,14)

     

    சிந்து – 7 எழுத்து முதல் 9 எழுத்து வரை

     

    வெண்பா

    குறளடி – 4  எழுத்து முதல் 6 எழுத்துக்கள் வரை

    (4,5,6)

    சிந்தடி – 7 எழுத்து முதல் 9 எழுத்து வரை

    (7,8,9)

    அளவடி – 10 முதல் 14 எழுத்துக்கள்

    (10,11,12,13,14)

    நெடிலடி- 15 முதல் 17 எழுத்துக்கள்

    (15,16,17)

    கழிநெடிலடி – 18 முதல் 20 எழுத்துக்கள்

    (18,19,20)

    ஆசிரியப்பா

    நெடிலடி – 15 முதல் 17 எழுத்துக்கள்

    கழிநெடிலடி – 18 முதல் 19 எழுத்துக்கள்

    6 எழுத்து

    6 முதல் 12 எழுத்துக்கள்                இருசீரடி வஞ்சி

    வஞ்சி

    இதுவரை கண்ட வடமொழி, தமிழ் எழுத்துக்கள் பற்றிய செய்திகளின் அடிப்படையில்

    தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபை வடமொழி எழுத்தெண்ணிக்கை மரபோடு கீழ்க்காணும் வகையில் ஒப்பிடலாம்:

    எழுத்துக்கள்

    வடமொழி சந்தஸ்கள்

    தமிழ்ப்பாக்கள்

    1

    2

    3

    4              ப்ரதிஷ்டா              ஆசிரியப்பா

    5              சூப்ரதிஷ்டா           ஆசிரியப்பா

    6              காயத்திரி                ஆசிரியப்பா, இருசீரடி வஞ்சியின் ஒருசீர், வஞ்சி

    7             உஷ்ணிக்               ஆசிரியப்பா

    வெண்பா(சிறப்பு)

    8            அனுஷ்டுப்பு         ஆசிரியம், வெண்பா, வஞ்சி

    9            ப்ரகதி          ஆசிரியம், வெண்பா, வஞ்சி

    10        பங்தி              ஆசிரியம் , வெண்பா(சிறப்பு), வஞ்சி

    11        த்ருஷ்டுப்பு              ஆசிரியம், வெண்பா (சிறப்பு), வஞ்சி,

    12        ஜகதி              ஆசிரியம், வெண்பா (சிறப்பு), வஞ்சி

    13        அதிஜகதி   ஆசிரியம்

    வெண்பா (சிறப்பு)

    14        சக்வரி          ஆசிரியம், வெண்பா

    15        அதிசக்வரி             ஆசிரியம்,

    கலிப்பா

    16        அஷ்டி           ஆசிரியம்,

    கலிப்பா

    17         அதியஷ்டி              ஆசிரியம்

    கலிப்பா

    18        த்ருதி           ஆசிரியம்

    கலிப்பா

    19        அதித்ருதி     ஆசிரியம்

    கலிப்பா

    20        க்ருதி            ஆசிரியம்

    கலிப்பா

    மேலே காட்டிய ஒப்பீடு புறநிலையானதே. பொதுநிலையானதே. இவ்வொப்பீட்டின் மூலம் வடமொழி எழுத்தெண்ணிக்கை மரபிற்கும் தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபிற்கும் பெரும் வேறுபாடு இருப்பதை நன்றாக உணரமுடியும். வடமொழி எழுத்தெண்ணிக்கைமரபு மிகவும் கட்டுப்பாட்டோடு இருக்க (6 எழுத்து – காயத்திரிதான், வேறு எதுவுமாக இருக்க முடியாது. தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபு, நெகிழ்வுடன் தனக்கேயுரிய சுயேச்சைத்தன்மையுடன் இருப்பதை உணரமுடியும். அதாவது 10 எழுத்து பங்திக்கு மட்டும்தான் உரியது என்று கூறும் வடமொழி எழுத்தெண்ணிக்கை மரபை விட 10 எழுத்து ஆசிரியப்பா வெண்பாவிற்கும் உரியது என்னும் தமிழ் மரபு இயல்புத்தன்மையோடு அதாவது தனக்கேயுரிய சுயேச்சைத்தன்மையோடு இருப்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளமுடிகிறது.

    தமிழில் எழுத்தெண்ணும் போது வடமொழி சந்தஸ்களைப்போல் எழுத்துக்களை  கட்டுப்பாட்டோடு புலவர்கள் நிறுத்தவில்லை. அப்படி அவர்கள் செய்ய நினைத்தாலும் அது செயற்கைப் பாக்களை உருவாக்குவதாகவே அமையும். தமிழ்ச் செய்யுள்களின் தூக்கு எழுத்துக்களைக் கட்டுபாட்டோடு நிறுத்துவதற்கு வாய்ப்பும் கொடுக்காது. தொல்காப்பியர் 6 ,7,8,9,10 என்று பாக்களுக்கு எழுத்துக்களைக் கூறுகிறாரேயொழிய அவை குறிலா? நெடிலா? என்றெல்லாம் வேறுபடுத்தவில்லை. அதாவது அவர் வடமொழியில் இருப்பதைப் போல மகணம், சகணம் என்பது போல் கட்டுப்பாட்டோடு எழுத்துக்களை எண்ணவில்லை. அதே போல் வடமொழி மாத்ரா விருத்தங்களைப் போல் ஒருஅடியில் வரும் எழுத்துக்கள் இத்தனை மாத்திரை பெற்று வரவேண்டும் என்றும் அவர் கூறவில்லை. இனியும் வடமொழி எழுத்தெண்ணிக்கை மரபும், தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபும் வேறு வேறு என்பதற்குச் சான்றுகள் தந்து விளக்க வேண்டியதில்லை. இரண்டு மொழிகளின் எழுத்தெண்ணிக்கை மரபும் வேறு வேறு என்ற நிலையில் இருமொழிகளின் எழுத்தெண்ணிக்கை மரபும் பரஸ்பரம் மற்ற மொழிகளின் எழுத்தெண்ணிக்கை மரபு வளர்ச்சிக்குப் பங்காற்றியிருக்கலாம். இது வேறொருதளத்திலான பரந்துபட்ட ஆய்விற்குரியது.

    ******

    ஆய்விற்குப் பயன்பட்ட கட்டுரை மற்றும்  நூல்கள்:

    1. தொல்காப்பியச் செய்யுளியல் இரு சூத்திர விளக்கம், மணிமேகலை மன்றம், இராஜபாளையம், ஆண்டு தெரியவில்லை.
    2. சி.வை.தாமேதரம்பிள்ளை பதிப்பு, வீரசோழியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2008.

       3.இரா.இளங்குமரன் பதிப்பு, யாப்பருங்கல விருத்தி,     சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை,1973

    1. கணேசையர் .சி, தொல்காப்பியம் பொருளதிகாரம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை, 2007

    வடமொழி யாப்பு செய்திகளுக்கு  பயன்பட்ட நூல் மற்றும் ஆய்வேடு:

    1. இராஜ இராஜ வர்மா , எ.ஆர்., விருத்தமஞ்சரி, கரன்ட் புக்ஸ், கோட்டயம், 2008. கேரளா.
    2. Ranjith rajan, –  Metres of bhattananarayana (M.Phil Desertaton), Department of Sanskrit,  University of   Kerala, 2009.

    ******

    கட்டுரையாசிரியர்
    ஆய்வாளர்,
    EFEO,
    புதுச்சேரி.

     

     

    Share
  • தமிழ் யாப்பு எழுத்துக்களும் வடமொழி யாப்பு எழுத்துக்களும் – 1

    ம.பிரபாகரன்

    தமிழ், வடமொழி ஆகிய இரண்டுமொழிகளிலும் உள்ள யாப்பிலக்கணத்தில் எழுத்தெண்ணிக்கை மரபு காணப்படுகின்றது. அடிப்படையில் இந்த எழுத்தெண்ணிசெய்வதைத் தன் நோக்கமாகக் கொள்கிறது.

    முதலில் தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபைக் பார்பதற்கு முன் வடமொழி எழுத்துக்களோடும், எழுத்தெண்ணிக்கை மரபோடும் அறிமுகம் ஆகிக் கொள்வது பயனுடையதாயிருக்கும். அங்ஙனம் செய்கையில் தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபோடு வடமொழி எழுத்தெண்ணிக்கை மரபை ஒப்பிட வசதியாக இருக்கும்.

    வடமொழி யாப்புலகில் குறிலை இலகுவென்றும் நெடிலைக் குருவென்றும் வழங்குவர். அதுபோல் குறில் ஒற்றையும் நெடில் என்றே வழங்குவர் அதாவது க- இலகு, கக்- குரு.  விருத்தமஞ்சரி என்னும் மலையாள யாப்புநூல் இது குறித்து விரிவாக கூறுவதைக் கீழே காணலாம்:

    கிருஸ்வா க்ஷரம் லகுவதாம்
    குருவாம் தீர்க்க மாயது
    அனுஸ்வாரம் விஸர்க்கம்தான்
    தீவிர இயத்தினம் உரைச்சிடும்
    சில்லு கூட்டக்ஷரம் தானோ
    பின்வந்தால் ஹ்ரஸ்வம் குரு ”

    ஹ்ரஸ்வம் – இலகு (குறில்)
    தீர்க்கம் – குரு (நெடில்)

    ஹ்ரஸ்வத்திற்குப் (இலகு) பின் அனுஸ்வாரம் (o) விஸர்க்கம் (:) நீட்டி ஒலிக்கும் சில்லு இவை வந்தால் ஹ்ரஸ்வம் (இலகு) குருவாய் ஒலிக்கும்.

    കമല (கமல) – ஹ்ரஸ்வம் ஆனதால் எல்லாம் இலகு.
    வம்சம் – இதில் அனுஸ்வாரம் (o) வந்ததனால் எல்லாம் குரு.
    துக்கம்     – இதில் து என்பதற்குப் பின் விஸர்க்கம் இருப்பதனால் இதில் ஹ்ரஸ்வமான (இலகு) து குருவாகிறது. க என்ற ஹ்ரஸ்வத்தின் பின் அனுஸ்வாரம் வந்ததனால் இலகுவான ‘ க ‘ குருவாய் மாறியது.

    க்ருஷ்ணன் – இதில் க்ரு என்பதற்குப் பின்னர் ‘ ஷ்ண ‘ என்ற கூட்டெழுத்து வந்தனால் ஹ்ரஸ்வமான (லகு) க்ரு என்பது குருவானது.

    ஷ்ண என்பதற்குப் பின்னால் ‘ ன் ‘ என்ற சில்லெழுத்து வந்ததனால் ‘ ஷ்ண ‘ என்ற இலகு குருவாகியது.

    ரோசாப்பூ – இதில் எல்லாமே தீர்க்கமாகியதால் (நெடில்) இதில் உள்ள எல்லா எழுத்தும் இரண்டு மாத்திரைகள் பெறும்.

    வெஞ்சனமும் சில்லும்:

    க 1 க 2 க 3 க    இவை தமிழ் ‘ க ‘ வை ஒத்தவை. இவை போன்றன வெஞ்சனம் (உயிர்மெய்) என்றழைக்கப்படுகின்றன. தனியாய் நிற்கும் வெஞ்சனங்களுக்கு (மெய்யெழுத்துக்கள் ) சில்லு என்று பெயர்.

    சில்லுகள், கூட்டெழுத்துகளுக்கு ஒரு சிறப்பு விதி:

    சில்லுகளையும் கூட்டெழுத்துக்களையும் உச்சரிப்பது சில இடங்களில்                    தீவிரமாகவும் (அழுத்தமாகவும்) சில இடங்களில் லகு அளவிலும் (Normal) நடைபெறும். அவைகளில் தீவிரமாய் (அழுத்தமாய்) உச்சரிக்கப்படும் சில்லுகளுக்கு முன்வரும் லகுதான் குருவாய் மாறும். அல்லாத இடங்களில் லகு லகுதான்.

    உதாரணம்:

    மலர்பொடி – இதில் ர் என்பது அழுத்தமாய் உச்சரிக்கப்படுவதால் ‘ ல ‘ என்னும் இலகு குருவாய் மாறியது.

    மலர்மால – இதில் ர் என்பது அழுத்தம் இல்லாமல் சாதாரணமாக அல்லது இயல்பாக வந்தமையால் ‘ ல ‘ என்பது லகுவேதான்.

    கல்ப்னப்ரகாரம் – ப்ர என்பது அழுத்தமாக உச்சரிக்கப்படுவதால் இலகுவான ‘ ன ‘ என்பது குருவாய் மாறியது.

    கல்பிச்சப்ரகாரம் – ‘ ப்ர ‘ என்பது அழுத்தமாக உச்சரிக்கப்படாததால் லகுவான ச்சா என்பது குருவாய் மாறவில்லை. மேலும் ஓர் அடியின் இறுதியில் வரும் லகு நீட்டம் வேண்டுமிடத்து குருவாகவும் மாறும்.

    வடமொழி விருத்தங்களும் எழுத்துக்களும்:

    வடமொழியில் விருத்தங்கள் எழுத்து, மாத்திரை ஆகியவற்றின் அடிப்படையில் பகுக்கப்படுகின்றன. எழுத்தின் அடிப்படையில் அமையும் விருத்தம் வர்ணவிருத்தம் (வர்ணம் – எழுத்து) என்று அழைக்கப்படுகிறது. மாத்திரை அடிப்படையில் அமையும் விருத்தம் மாத்திராவிருத்தம் என்று அழைக்கப்படுகிறது.

    வர்ணவிருத்தத்தில் மூன்று எழுத்துக்கள் சேர்ந்தால் ஒரு கணம் என்று அழைக்கப்படுகிறது. மொத்தம் 8 வகைக் கணங்கள் காணப்படுவதாக வடமொழி விருத்த நூலான சந்தசூத்திரம் கூறுகிறது.

    1.குரு /குரு /குரு – சர்வகுரு – மகணம்

    1. லகு /லகு/ குரு – ஆதிலகு – யகணம்

    3.குரு/லகு/குரு – மத்யலகு – ரகணம்

    4.லகு/லகு/குரு – அந்திகுரு- சகணம்

    5.குரு/குரு/லகு- அந்திலகு- தகணம்

    6.லகு/குரு/லகு- மத்யகுரு – ஜகணம்

    7.குரு/லகு/லகு – ஆதிகுரு – பகணம்

    8.லகு/லகு/லகு- சர்வலகு- நகணம்

    வர்ணவிருத்தம் மூன்று வகைப்படும்:

    1. சமவிருத்தம் : நான்கு அடிகளும் ஒரே மாதிரியான கணங்களைக் கொண்டு வருவது சமவிருத்தமாகும்.
    1. அர்த்தசமவிருத்தம்: முதலடியிலும் மூன்றாமடியிலும் ஒரே மாதிரியான கணங்களையும், இரண்டாம் அடியிலும் நான்காம் அடியிலும் ஓரே மாதிரியான கணங்களையும் பெற்றுவருவது அர்த்தசமவிருத்தமாகும்.
    2. வியமவிருத்தம்: நான்கு அடிகளும் ஒன்றுபோல் அமையாமல் ஒன்றுக்கொன்று வேறுபட்டு வருபவை வியமவிருத்தம்.

    மேற்கண்ட மூன்று பெரும் வர்ணவிருத்தங்களுள் சமவிருத்தம் 26 வகைப்படும். இந்த 26 விருத்தங்களும் குறிப்பிட்ட எழுத்தெண்ணிக்கை அடிப்படையில் அமைவனவாகும். இதைக் கீழ்க்கண்ட அட்டவணை மூலம் அறியலாம்.

    எழுத்துக்கள்          சந்தஸ்கள்

    1          உக்தா

    2          அதியுக்தா

    3          மத்யா

    4          ப்ரதிஷ்டா

    5          சூப்ரதிஷ்டா

    6          காயத்ரி

    7          உஷ்ணிக்

    8          அனுஷ்டுப்பு

    9          ப்ரஹதி

    10        பங்தி

    11        த்ருஷ்டுப்பு

    12        ஜகதி

    13        அதிஜகதி

    14        சக்வரி

    15        அதிசக்வரி

    16        அஷ்டி

    17        அதியஷ்டி

    18        த்ருதி

    19        அதித்ருதி

    20        க்ருதி

    21        ப்ரக்ருதி

    22        ஆக்ருதி

    23        விக்ருதி

    24        ஸம்க்ருதி

    25        அபிக்ருதி

    26        உத்க்ருதி

    இந்த 26 வகைகளுள்ளும் எழுத்து மாற்ற அடிப்படையிலான உள்வகைகள் உள்ளன. இது குறித்த விரிவான விளக்கத்திற்கு  விருத்த மஞ்சரியைக் காண்க.

    வியம விருத்தங்களில் எழுத்துக் குழுக்கள்:

    வியமவிருத்தங்களில் எழுத்துக்கள் அடிப்படையில் குழுக்கள் இருந்தமையை வடமொழி யாப்புநூல்கள் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.

    பிங்கலர் கூறும் வர்ணவிருத்தங்களில் ஒரு வகையான வியமவிருத்தம் 4 குழுக்களைக் உடையதாக உள்ளது.முதல் குழு வக்த்ரா குழுவாகும். இதில்  நான்கடிகள் வரும். ஒவ்வொரு அடியும் எட்டெழுத்துவீதம் வரும். இரண்டாவது குழு பாதசதுரூர்த்துவா குழுவாகும். இதில் நான்கடிகள் வரும். முதல் அடி எட்டெழுத்தும், இரண்டாம் அடி பன்னிரண்டு எழுத்துக்களையும்,  மூன்றாம் அடி பதினாறு  எழுத்துக்களையும் நான்காம் அடி இருபது எழுத்துக்களையும் கொண்டு அமையும். மூன்றாவது உத்காதா குழு, இதில் நான்கடிகள் வரும். முதல், இரண்டு, மூன்று, நான்காம் அடிகள் முறையே பத்து , பத்து, பதினொன்று, பதின்மூன்று எழுத்துக்கள் பெற்று வரும். நான்காவது குழு, உபஸ்திதப்ரஜீபிதா குழு ஆகும். இதிலும் மற்றைய குழுக்கள் போலவே நான்கு அடிகள். முதல் அடி பதினான்கு எழுத்துக்களும், இரண்டாம் அடி பதின்மூன்று எழுத்துக்களும், மூன்றாமடி ஒன்பது எழுத்துக்களும், நான்காமடி பதினைந்து எழுத்துக்களும் பெற்றுவரும். மேற்கூறிய எழுத்துக்களின் எழுத்துவரிசையை மாற்றி ஒவ்வொரு குழுக்களிலும் பல்வேறு வகைகளை உருவாக்க முடியும். ஜெயகிருதி என்ற வடமொழி யாப்பியலாளர் மூன்று வகைப்பட்ட வியமவிருத்த (எழுத்து) குழுக்களைக் கூறுகிறார். அவையாவன:

    (I) சமனாக்ஷரா குழு
    (II) ஊனாக்ஷரா குழு
    (III) அதிகாக்ஷரா குழு

    இம்மூன்றுள் முதல்குழு பிங்கலரின் வக்த்ரா குழுவினோடும், இரண்டாவது குழு உத்காதா குழுவினோடும், மூன்றாவது குழு பாதசதுரூர்த்துவா குழுவினோடும் பொருந்தி வருகின்றன.

    மாத்திரா விருத்தம்:

    மாத்திராவிருத்தத்தைப் பொறுத்தவரை நான்குமாத்திரைகள் சேர்ந்தது ஒருகணம். இங்கு மாத்திரையை அடிப்படையாகக் கொண்டு அடிவகுக்கப்படுகிறது. மாத்திரை கணம் ஐந்து வகையாக வரும்.

    1. _ _ _ சர்வகுரு
    2. _ U U ஆதிகுரு
    3. U _ U மத்யகுரு
    4. U U _ அந்திகுரு
    5. U U U U சர்வலகு

    வர்ணவிருத்தம் போல் இவற்றிற்கு பகணம் ஜகணம், சகணம் என்ற பெயர்கள் கொடுப்பதில்லை. மேற்கண்ட ஐந்து வகையில் ஒன்றாவது வகை குருமயம் என்றும் ஐந்தாவது லகுமயம் என்றும் அழைக்கப்படுகிறது. 

    தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபு:

    தொல்காப்பியர் செய்யுளியலில் எழுத்தெண்ணிக்கை பற்றி விரிவாகப் பேசுகிறார். தொல்காப்பியர் பேசும் இவ்வெழுத்தெண்ணிக்கை மரபு தமிழிற்குரியதா? வடமொழிக்குரியதா? இத் தொடர்பில் பூ.கு.குப்புசாமிராஜா என்பவருடைய கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் தொல்காப்பியச் செய்யுளியலில் வரும் எழுத்தெண்ணிக்கை மரபு வடமொழி நெறிபட்டது என்றும் எழுத்தெண்ணிக்கை பற்றி வரும் சூத்திரங்கள் இளம்பூரணருக்கு முன்வந்த உரையாசிரியர்களின் இடைச்செருகல்கள் என்றும் கூறுகிறார். இவர் கருத்து எழுத்தெண்ணிக்கை பற்றிய விவாதத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறது. அவர் கூறுவதாவது: தொல்காப்பியத்தில் நிலத்தை எழுத்தெண்ணும் முறை பற்றி வரும், 

    நாற்சீர் கொண்ட தடியெனப் படுமே
    நாலெழுத் தாதியாக வாறெழுத்
    தேறிய நிலத்தே குறளடி என்ப ”

    என்று தொடங்கும் ஒன்பது சூத்திரங்களும் கூறுவது கட்டளையடியன்றோ? அது பற்றிக் கருத்தென்னை எனின் அச்சூத்திரங்கள் தொல்காப்பியர் சூத்திரங்களல்ல. இளம்பூரணருக்கு முன்பிருந்த உரையாசிரியர்களால் இயற்றப்பட்ட உரைசூத்திரங்களிவை எனத்தெரிகிறது. செய்யுளியலின் முதற்சூத்திரத்திற் தொகையாகக் கூறியபடி,

    மாத்திரை யெழுத்திய லசைவகை யெனாஅ
    யாத்த சீரே யடியாப் பெனாஅ ”

    என்றபடி மாத்திரை, எழுத்து, அசைகளை விளக்கிப் பின் சீர்களை விளக்கும் சூத்திரங்களை நிரல்பட வைத்துள்ளார்.

    அந்நிலை மருங்கின் வஞ்சி யுரிச்சீர்
    ஒன்றுத லுடைய வோரொரு வழியே ”

    என்று சீரைப் பற்றிக் கூறுகிறார். அந்த ஒன்பது சூத்திரங்களையும் கழித்தபின்

    ”   சீர்நிலை தானே ஐந்தெழுத்திறவாது
    நேர்நிலை வஞ்சிக் காறு மாகும்
    எழுத்தள வெஞ்சினும் சீர்நிலை தானே
    குன்றலு மிகுதலு மில்லென மொழிப ”

    என்ற சூத்திரங்களால் சீர்களைப் பற்றியே கூறுகிறார். அதன் பிறகுதான், ” வஞ்சியடியே இருசீர்த்தாகும்” என்று அடிகளை விவரிக்கிறார். ஆதலின் சீரைப் பற்றிக் கூறும் சூத்திரங்களிடையே அடியைப் பற்றி நிரல்பட அமைக்கும் போக்குடைய தொல்காப்பியர் சூத்திரம் செய்திருக்க மாட்டார். ஆதலின் வடமொழி நெறிபற்றி வந்த எழுத்தெண்ணும் முறையை  தொல்காப்பியர் மேலே சுமத்த விரும்பிய பிற்காலத்தவர்களின் இடைச்செருகலே கட்டளை அடி என்னும் கற்பனை அடிகள் என்பது தெளிவாகும். அளவடிக்குள் குறளடி, சிந்தடி, நேரடி, நெடிலடி, கழிநெடிலடி என்று கூறுவது யாப்புக்குப் பொருத்தமில்லை என்பது நன்கறிந்த தொன்றாதலின். அஃது தொல்காப்பியர் கருத்தன்று என்றும் பதினேழு நிலம் என்பதும் எழுத்தலவு பற்றி வருவதன்று அசைச் சீர்களின் இடைநிலமே என்றும் தெளிவாக உணர வேண்டும் ” (தொல்காப்பியச் செய்யுளியல் இரு சூத்திர விளக்கம், மணிமேகலை மன்றம், இராஜபாளையம், ஆண்டு தெரியவில்லை)

    இக்கூற்று பொருந்துமாறில்லை. தமிழ்ச்செய்யுள் மரபில் ” எழுத்தெண்ணிக்கை ” என்பது முக்கிய இடத்தை வகித்துள்ளது என்பதை தொல்காப்பியரின், 

    உயிரில் எழுத்தும் எண்ணப் படாஅ
    உயிர்த்திறம் இயக்கம் இன்மை யான ”

    என்ற செய்யுளியல் நூற்பா மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது. இங்கு ” உயிரில் எழுத்து எண்ணப்படா ” என்பது மேலும் கவனதிற்குரியது. இந்த இடம் குறிப்பிடத்தக்கது. இது வடமொழி எழுத்தெண்ணிக்கை மரபையும், தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபையும் பிரித்துக்காட்டுகிற இடம். எழுத்தெண்ணிக்கை மரபு தமிழில் அதற்கேயுரிய முறையியல் படி அமைந்திருந்தது என்பதைக் காட்டும் இடம்.

    தமிழ்ச்செய்யுளில் உயிரில் எழுத்து- மெய், சார்பெழுத்துக்கள் எண்ணப்படாது. ஆனால் வடமொழி யாப்பில் ‘ மெய் ‘ எண்ணப்படுவதற்குரியது. விலக்கப்படும் தன்மையுடையதன்று.

    ( தமிழில் கக் – 1 மாத்திரை.

    வடமொழியில் கக் – 2 மாத்திரை )

    மேலே காட்டிய உயிரில் எழுத்து….என்ற சூத்திரத்தோடு தொல்காப்பியர், ” அளபெடை அசைநிலை ஆகல் உரித்து ” ” ஒற்று அளபெடுப்பினும் அற்றென மொழிப ” ஒற்றெழுத்தியற்றே குற்றியலிகரம் ” என்ற சூத்திரங்களை எழுத்தெண்ணிக்கையோடு தொடர்புபடுத்திச் சிந்தித்திருக்கிறார் என்பது வெளிப்படை. எழுத்தெண்ணும் இம்முறையியல் தமிழ் எழுத்தெண்ணிக்கை மரபிற்கே யுரியது. இத்தன்மையை வீரசோழிய உரைகாரர் பெருந்தேவனார் உரை மூலமும் நம்மால் அறிந்துகொள்ளமுடிகிறது. அவர் கூறுவதாவது:

    கடாஅ வுருவொடு கண்ணஞ்சாதி யாண்டு
    முகாஅமை வல்லதே யொற்று ”

    இதனை எப்படி ஓசையூட்டுவதெனிற் குற்றியலிகரம் என்று ஒன்றாக்கி அதனைச் சீரும் தளையுஞ் சிதையிற் சிறிய இட அளபோடாது மறிவர் அலகுபெறாமை யென்றிகரம் அலகுபெறாதாக்கி ஓசையூட்டுக என்பர். அதுவும் பிழையென்க. இகரங் குற்றெழுத்தாய் நின்று அலகு காரியம் பெறுதலல்லது ஒற்றெழுத்தே போல் அரைமாத்திரை உடைத்தாயினும் அலகு காரியம் பெறாதொழிதற்குக் காரணமின்மையாலென்க. அன்றியும் அலகு காரியம் பெறாவிடில் எல்லாவிடத்தும் பெறாதொழிய வேண்டுமென்க. அன்றியும் குற்றியலிகரம் அரைமாத்திரையாய் முற்றியலுகரம் ஒருமாத்திரையானமை உச்சாரணையினால் வேறுபடுத்திக் காட்டவொண்ணா வென்க…….அன்றியும் வடநூல் புலவர்க்கு ஓசையூட்டுக என்பதில்லை ”. (சி.வை.தாமேதரம்பிள்ளை பதிப்பு, வீரசோழியம்,  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக்: 142: 2008) இங்குக் குற்றியலிகரத்தை அலகு பெறாதாகி ஓசையூட்டுவது போன்ற முறையியல் வடமொழியில் இல்லை என்று பெருந்தேவனார் கூறுவதைக் கவனிக்க.

    முன்னர் காட்டிய பூ.கு. குப்புசாமி கட்டுரையிலிருந்து இன்னொரு கருத்தை எடுத்து விவாதிப்பதும் இக்கட்டுரைக்கு அவசியமானதாகும். அவர்தம் கூற்றாவது: ” மேலும் நமக்குக் கிடைத்த சங்க இலக்கியத்திலும் பயிலாத – முற்காலத்தில் இருந்ததாக உரையாசிரியர்களின் கற்பனையாகிய கட்டளை அடிகட்கே இச்சூத்திரம் பொருந்தும் என்பது சிலர் கருத்து ” (மு.சு.க.பக்.5)

    தொல்காப்பியரின் எழுத்தெண்ணி அடிவகுக்கும் முறை சங்க இலக்கியத்தில் இருக்கிறதா என்பது பற்றி இன்னும் முழுமையான ஆய்வு செய்யப்படவில்லை. இது முழுமையாகச் செய்யப்படவேண்டிய ஆய்வாகும். தொல்காப்பியர் செய்யுளியலில் கூறிய பல இடங்கள் தெளிவுபடுத்தபடாமலேயே உள்ளன. அவை உரிய தரவுகள் கிடைக்கும்போது தெளிவாகும். ஒரு வாதத்திற்காக குப்புசாமிராஜாவின் கருத்தை நாம் ஒப்புக்கொண்டாலும் கூட அதாவது எழுத்தெண்ணி அடிவகுக்கும் முறை சங்க இலக்கியத்தில் இல்லை என்பதற்காக அவ்வெழுத்தெண்ணிக்கை பற்றித் தொல்காப்பியர் கூறவில்லை என்ற பொருளில் குப்புசாமிராஜா கூறுவது பொருந்துமாறில்லை. வீரசோழிய ஆசிரியர் புத்தமித்திரர்  கூறும் ஏழ்வகைப் பத்தியக்கவிகளுக்கு  இலக்கியச்சான்றுகள் இல்லை என்பதற்காக அவற்றை இடைச்செருகல்கள் என்று ஒதுக்கமுடியாது. தொல்காப்பியர் கூறும் எழுத்தெண்ணி அடிவகுப்பது தொடர்பான சூத்திரங்கள் என்று குப்புசாமிராஜா கூறுவதற்கு போதுமான ஆதாரம் இல்லை.

    [தொடரும்]

    ******

    கட்டுரையாசிரியர்
    ஆய்வாளர்,
    EFEO,
    புதுச்சேரி.

     

     

     

    Share
  • ஒப்பீட்டு நோக்கில் வீரசோழிய யாப்புப் படலம் – தொன்னூல் விளக்க யாப்பதிகாரம்

     .பிரபாகரன்,

         ஆய்வாளர்,

    EFEO, புதுச்சேரி

                  ம.பிரபாகரன் photo - ஒப்பீட்டு நோக்கில் வீரசோழிய யாப்புப்படலம் - தொன்னூல் விளக்க யாப்பதிகாரம்                                                                   

                            வீரமாமுனிவர் தொன்னூல் விளக்கத்தில் அமைத்துள்ள ஐந்திலக்கண முறைக்கும்  புத்தமித்திரர் தன் நூலான வீரசோழியத்தில் ஐந்திலக்கணத்தை அமைத்திருப்பதற்கும் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. வீரசோழியம் தொல்காப்பிய மரபை விட்டுத் தன்போக்கில் எழுத்து, சொல் மரபை வடமொழியை ஒட்டி அமைத்துக் கொள்வதோடு பொருளிலக்கணத்திலும் தொல்காப்பியத்தைப் பின்பற்றாமல் வேறுமுறையில் அமைத்துக் கொள்கிறது. அணிக்குத் தண்டியின் காவியாதர்சத்தை மொழி பெயர்த்து அமைத்துக் கொள்கிறார் வீரசோழிய ஆசிரியர். யாப்பில் தொல்காப்பியம் யாப்பருங்கல மரபை ஒட்டி அவருக்கே உரிய ஒரு மரபை உருவாக்கி அமைக்கிறார். வீரசோழியம் செய்ததைப் போலவே வீரமாமுனிவரும் தமிழ்ப் பொருளிலக்கண மரபை முற்றிலும் தன் கோட்பாட்டின்படி அமைத்துள்ளார்’ என்று தன் கட்டுரையொன்றில் (மணற்கேணி9) முனைவர்.கி. நாச்சிமுத்து  கூறுகின்றார். மேற்கண்ட கூற்றில் பேராசிரியர் அவர்கள் வீரசோழியம் – தொன்னூல் விளக்கம் இரண்டிற்கும் உள்ள ஒற்றுமையை சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரை, இவ்விரு நூல்களிலுமுள்ள யாப்பிலக்கணத்தை ஆராய்ந்து ஒற்றுமை, வேற்றுமைகளை சுட்டிக்காட்டுவதை தம் நோக்கமாகக் கொள்கிறது. கட்டுரையைத் தொடங்குவதற்கு முன் ஒரு கருத்து இங்குச்  சுட்டற்பாலது.  ராஜமாணிக்கம் என்பவர் தன்னுடைய வீரமாமுனிவருடைய தொண்டும் புலமையும் என்ற நூலில், தொன்னூல் விளக்க உரையில் நிறைய இடைச்செருகல்கள் இருப்பதாகக் கூறுவதால் இக்கட்டுரையில் தொன்னூல் விளக்கத்தின் உரை கணக்கில் கொள்ளப்படவில்லை.

                            முதலில் ஒரு கருத்தைக் கவனப்படுத்திக் கொள்ள வேண்டும். வீரமாமுனிவர், யாப்பிலக்கணத்தைப் பொறுத்தவரை எவ்விடத்திலும் தொல்காப்பியத்தைப் பின்பற்றவில்லை. இங்கு இவர் தொல்காப்பியம் பற்றித் தெரிந்திருந்தாலும் அது கடினமான வழக்கத்திலில்லாத நூல் என்ற கருத்தைச் சொல்லியிருக்கிறார். அக்காலத்தில் தொல்காப்பியம் எல்லாவகைத் தமிழறிஞர்களாலும் கற்கப்படாத நூலாக இருந்திருக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்’ (மேற்கண்ட கட்டுரை) என்ற முனைவர்.கி. நாச்சிமுத்து  கருத்தும் இவண் ஒப்பு நோக்கற்பாலது. நாம் இக்கட்டுரையில் வீரமாமுனிவர் பின்பற்றியுள்ள முந்தைய யாப்பிலக்கண நூல்களின் பெயரைத் தனித்தனியாக சுட்டவில்லை. அவற்றை நாம் சிந்தனைபள்ளியாகக் கருத்தில் கொண்டு கூறியுள்ளோம். அதாவது காக்கைபாடினியம், யாப்பருங்கலம், யாப்பருங்கலவிருத்தி, யாப்பருங்கலக்காரிகை என்று தனித்தனியாகச் சுட்டாமல் யாப்பருங்கல மரபு என்றே கூறியுள்ளோம். வீரமாமுனிவர் உறுப்புக்களைத் தொகுத்துக் கூறும் முறையில் யாப்பருங்கல மரபைப் பின்பற்றுகிறார். ஆனால் உறுப்புக்களை விரித்துரைக்கும் போது எழுத்தை விளக்காமல் விட்டுவிடுகிறார். யாப்பருங்கல மரபில் (யாப்பருங்கலம்) ‘தூக்கு’ என்ற உறுப்பையும் சேர்த்து உறுப்புக்கள் 7 என்னும் முறைமை இருந்ததை அறியமுடிகிறது. ஆனால் வீரமாமுனிவர் தூக்கை சேர்த்துக்கொள்ளவில்லை. தூக்கை வீரசோழியர் ஓர் உறுப்பாகக் கூறாவிடினும் தூக்கு என்ற ஓசைக்கு வீரசோழியம் (உரை) மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. வீரசோழியம் தளையை நிராகரிக்கிறது. தளையால் பாவினது ஓசையை உண்டாக்க முடியாது. தூக்கு அடிப்படையிலேயே பாவினது ஓசையை உண்டாக்க முடியும் என்பது வீரசோழியக் கொள்கை. இத்தன்மையைத் தொன்னூல் விளக்கத்தில் நம்மால் காணமுடியவில்லை. தூக்கு என்ற சொல்லை ‘பா’ என்ற பொருளிலது பயன்படுத்தினாலும் தளையே ஓசையை உண்டாக்கும் என்ற கொள்கையை உடையதாய் இருக்கிறது.

     உதாரணம்:

                            வெள்ளையுள் பிறதளை விரவா வெண்டளை

                       ஒன்றாய்ச் செப்பல் ஓசையாம் அஃதே

                       ஏந்திசை வெண்சீர் இயற்சீர் தூங்கிசை

                       ஒழுகிசை இரண்டும்உள எனில் ஆகும்

                            வெண்பா ஓசையின் விகற்பம் உணர்த்துகின்றார். பிறதளை விரவாது வெண்தளையே வந்ததால் விளையும் செப்பலோசை இதற்குரியது. வெண்சீர் மட்டும் வருவது ஏந்திசையும் இயற்சீரே பெறுவது தூங்கிசையும் இரண்டும் கலப்பது ஒழுகிசைச் செப்பலும் ஆம் (131:1978).

                            வீரசோழியம் தொல்காப்பியத்தைப் பின்பற்றி தளையை ஓர் உறுப்பாகக் கூறவில்லை. தொன்னூல் விளக்கம் தளையை யாப்பருங்கல மரபைப் பின்பற்றி ஏழுவகையாகக் கூறுகிறது. நாம் ஏற்கனவே கூறியது போல் வீரசோழியம் தளையை நிராகரித்தது அதன் கோட்பாட்டம்சத்தில் மிகவும் முக்கியமானதாகும். தொன்னூல் விளக்கத்தில் காணப்படும் உறுப்புக்களைத் தொகுத்துக் கூறும் முறைமையை நாம் வீரசோழியத்தில் பார்க்கமுடியாது. வீரசோழியம் தன் யாப்புப் படலத்தை அசைகளை விளக்குவதுடன் தொடங்குகிறது. அது எழுத்தைப் பற்றி எதுவும் விளக்கவில்லை. அதே போல் எழுத்திற்கு முந்தைய உறுப்பான மாத்திரையையும் வீரசோழியம் விளக்கவில்லை. யாப்பருங்கல மரபு  மாத்திரையைச் செய்யுள் உறுப்புக்களுள் ஒன்றாகத் தொகுத்து கூறவில்லை. எனினும் யாப்பருங்கல மரபைச் சார்ந்த   உரைகள் (யாப்பருங்கல்ம், யாப்பருங்கலக்காரிகை உரைகள்) மாத்திரையை விளக்குகின்றன. தொன்னூல் விளக்கம் மாத்திரையைப் பற்றி நூற்பாவில் எதுவும் கூறவில்லை. உரையைப் பற்றி ஒன்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. தொன்னூல் விளக்கம் எழுத்தை விளக்காமல் விட்டது வீரசோழியத்தைப் பின்பற்றியதனாலாகலாம். தளை 7 என்பதில் யாப்பருங்கலமரபோடு தொன்னூல் விளக்கம் ஒத்தமைகின்றது. ஆனால் வைப்பு முறையில் வேறுபடுகிறது. பின்வரும் அட்டவணை இதனைக் காட்டும்.

    வ. எண்    யாப்பருங்கலம்   வீரசோழியம் தொன்னூல்விளக்கம்

     

     1 இயற்சீர் வெண்டளை          –  நேரொன்றாசிரியத்தளை

     

     2  வெண்சீர் வெண்டளை          – நிரையொன்றாசிரியத்தளை

     

     3 நேரொன்றாசிரியத்தளை          – வெண்சீர் வெண்டளை

     

     4 நிரையொன்றாசிரியத்தளை          – இயற்சீர் வெண்டளை

     

     5 கலித்தளை          – கலித்தளை

     

     6 ஒன்றிய வஞ்சித்தளை         – ஒன்றா வஞ்சித்தளை

     

     7 ஒன்றா வஞ்சித்தளை         – ஒன்றிய வஞ்சித்தளை

     

                      அசையைப் பொறுத்தவரை தொன்னூல் விளக்கம் முந்தைய யாப்பருங்கல மரபைப் பின்பற்றி அசை, நேரசை, நிரையசை என இருவகைப்படும் என்றே கூறுகிறது. வெண்பாவின் இறுதியை பொறுத்தவரை முந்தைய யாப்பருங்கல  மரபு நாள், மலர், காசு, பிறப்பு என்பனவற்றுள் ஏதேனும் ஒன்றை கொண்டு முடியும் என்று காட்டுகின்றது. அதையே தொன்னூல் விளக்கமும் பின்பற்றுகிறது. இது குறித்த தொன்னூல் விளக்கப் பகுதியாவது:

                       வெள்ளைக்கு இயற்சீர் வெண்சீர் விரவி

                       ஏற்கும் அளவடி ஈற்றடி சிந்தடி

                       ஈற்றுச்சீர் அசைச்சீர் உக்குறள் மிகலுமாம்

     

    வெண்பாவின் இயல்பு உணர்த்துகின்றார். இயற்சீரும், வெண்சீரும் விரவி, அளவடியாய், ஈற்றடி சிந்தடியாய் ஈற்றுச்சீர் அசைச்சீர் ஆய் வரும். அசைச்சீர் ஆய் வரும். அசைச்சீர் உக்குறள் மிக்கும் வரும்.

     

                       ‘சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்

                        கொல்லப் பயன்படும் கீழ்’

                                                              (130:1978)

     

                             வீரசோழியம் தமிழ்ச்சீரை முற்சீர், இடைச்சீர், கடைச்சீர் என்று பாகுபடுத்திக்காட்டும். இம்மரபைத் தொன்னூல் விளக்கத்தில் காணமுடியவில்லை. யாப்பருங்கல மரபு நாலசைச்சீர், ஓரசைச்சீர் ஆகிய இரண்டையும் பொதுச்சீராக அடையாளப்படுத்தும். ஆனால் தொன்னூல் விளக்கம் அசைச்சீரைப் பொதுச்சீரிலிருந்து தனியாக பிரித்துக்காட்டுகிறது. வீரசோழியத்தில் இத்தன்மை காணப்படவில்லை. பின்வரும் அட்டவணை இதனைத் தெளிவாகக் காட்டும்.

       யாப்பருங்கல மரபு   வீரசோழியம்  தொன்னூல் விளக்கம்

     

    இயற்சீர் – 4    முதற்சீர் (இயற்சீர்) அசைச்சீர்

     

     வெண்பா உரிச்சீர் – 4    இடைச்சீர் (உரிச்சீர்)   இயற்சீர் – 4

     

      வஞ்சி உரிச்சீர்    கடைச்சீர் ( கனிச்சீர்)   வெண்பா உரிச்சீர் -4,

    வஞ்சி உரிச்சீர் -4

      பொதுச்சீர்

    நாலசைச்சீர் -16

    ஓரசைச்சீர் – 2

       பொதுச்சீர்

    நாலசைச்சீர்

    இங்ஙனம் தொன்னூல் விளக்கம் அசைச்சீரைப் பொதுச்சீரிலிருந்து விலக்கிக்காட்டுவது கவனத்திற்குரியது. ஒரு அடியில்  எட்டுச்சீர் வரை வருவது சிறப்பு என தொன்னூல் விளக்கம் கூறுவது யாப்பருங்கல மரபைப் பின்பற்றியாகும். இலக்கண விளக்கத்தில் ஏழு சீர் வரை வருவது சிறப்பு என கூறப்பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் வரும்  ‘நாற்சீர் கொண்ட தடியென படுமே’ என்ற சூத்திரம் இவண் எண்ணற்பாலது.

                            தொடைகளை விளக்குமிடத்து தொன்னூல் விளக்கம் யாப்பருங்கல மரபையே பின்பற்றுகிறது. ச.வே. சுப்பிரமணியன் அவர்கள், ‘தலையாகு, இடையாகு, கடையாகு எதுகைகள் இந்நூலுக்கே (தொன்னூல் விளக்கம்) உரியன (215)’ என்று கூறுவது பொருத்தமாக தோன்றவில்லை. இம்மூன்று எதுகைகளையும் தொன்னூல் விளக்கம் யாப்பருங்கலமரபிலிருந்தே பெற்றிருக்கிறது என்றே தோன்றுகிறது. யாப்பருங்கல விருத்தியில் இம்மூன்று எதுகைகளும் விளக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும் வீரசோழியம் ‘எதுகை எனினும் தொடை எனினும் ஒக்கும்’ என்று எதுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. வீரசோழிய யாப்பிலக்கணக்கோட்பாட்டில் எதுகை முக்கிய இடம் வகிக்கிறது. இத்தன்மையை தொன்னூல் விளக்கத்தில் காணமுடியவில்லை. எதுகைக்கு என இவர் இரு சூத்திரங்கள் ஒதுக்கியுள்ளார். இதனால் இவர் எதுகைக்கு முக்கியத்துவம் கொடுத்தார் என்று கூறமுடியாது. கீழ்க்காணும் ஒப்பீட்டு அட்டவணை தொன்னூல் விளக்கத்தின் தொடை பற்றிய நோக்கைத் தெளிவாக்கும்.

      யாப்பருங்கலம்   வீரசோழியம்  தொன்னூல் விளக்கம்

     

       மோனை, எதுகை, முரண்,இயைபு, அளபெடை   மோனை , எதுகை    மோனை, எதுகை,

    முரண், இயைபு, அளபெடை

    இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று  

    இணை, பொழிப்பு,

    ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க்கதுவாய், முற்று.

    செந்தொடை, இரட்டைத்தொடை, அந்தாதித்தொடை செந்தொடை,

    இரட்டைத்தொடை, அந்தாதித்தொடை

    எதுகை

    வ.எண்      யாப்பருங்கலம்   வீரசோழியம்  தொன்னூல்

    விளக்கம்

       1     முதலெழுத்து குற்லாய் இரண்டாம் எழுத்து ஒன்றி வந்த எதுகை         ✓        ✓

     

       2 மூன்றாமெழுத்து ஒன்றின எதுகை           ✓        ✓
       3     இரண்டடி எதுகை            ✓        –

     

       4   சீர் முழுதும் ஒன்றிவந்த  எதுகை              ✓        –

     

       5     இன எதுகை             ✓         ✓

     

      6     உயிரெதுகை             ✓         –

     

      7 ஆசிடையிட்ட எதுகை

                ✓

             ✓

     

      8  தலையாகு எதுகை             –     தலையாகு

    எதுகை

      9  இடையாகு எதுகை             –    இடையாகு எதுகை

     

      10  கடையாகு எதுகை            –    கடையாகு எதுகை

     

    தொன்னூல் விளக்கத்தைப் பொறுத்தவரை வைப்புமுறையில், ஆசு எதுகைக்கு பின்னரே இன எதுகை இடம்பெற்றுள்ளது. ஒப்பீட்டு முறைக்காக மேல் அட்டவணையில் மாற்றிக் கூறப்பட்டது.

                            தமிழ்ப்பாவினங்களுடைய விளக்கமுறையைப் பொருத்தவரை வீரமாமுனிவரின் விளக்கமுறை மற்ற மரபுகளிலிருந்து வேறுபட்டு அமைகிறது. யாப்பருங்கலத்தில் ஒவ்வொரு பாவிற்கும் பிறகு அதன் இனங்கள் விளக்கப்படுகின்றன. வீரசோழியத்தில் பாவினங்கள் பாக்கள் விளக்கப்பட்ட பிறகு   மொத்தமாக, வரிசையாக விளக்கப்படுகின்றன. தொன்னூல் விளக்கத்தில் ஒவ்வொரு கூறின் கீழ் (துறை, தாழிசை, விருத்தம்) அனைத்து பாவினங்களும் விளக்கப்படுகின்றன. சான்றாகத் துறை எனும் கூறின் கீழ் வெண்டுறை, ஆசிரியத் துறை, கலித்துறை, வஞ்சித்துறை ஆகியவை விளக்கப்படுகின்றன. இது பிற மரபுகளில் காணப்படாதது ஆகும். கீழ்க்கண்ட அட்டவணைகள் இதனை உணர்த்தும்.

    யாப்பருங்கலம்:

          வெண்பா    ஆசிரியப்பா       கலிப்பா     வஞ்சிப்பா

     

          தாழிசை    தாழிசை       தாழிசை     தாழிசை

     

         துறை   துறை        துறை    துறை

     

         விருத்தம்    விருத்தம்       விருத்தம்     விருத்தம்

     

    யாப்பருங்கலக் காரிகை:

       வெண்பா   ஆசிரியப்பா      கலிப்பா   வஞ்சிப்பா

     

         விருத்தம்    தாழிசை       தாழிசை       தாழிசை

     

         தாழிசை   துறை        துறை        துறை

     

         துறை    விருத்தம்       விருத்தம்       விருத்தம்

     

    வீரசோழியம்:

     வெண்பா பாவினம்   ஆசிரியப்பாவினம்  கலிப்பாவினம்  வஞ்சிப்பாவினம்

     

       விருத்தம்   தாழிசை      தாழிசை   துறை

     

       தாழிசை   துறை     விருத்தம்    விருத்தம்

     

       துறை   விருத்தம்      துறை    தாழிசை

     

    தொன்னூல் விளக்கம்:

               துறை         தாழிசை  விருத்தம்

     

        வெண்பா      வெண்பா      வஞ்சி

     

        ஆசிரியம்      ஆசிரியம்      கலி

     

        கலிப்பா      கலிப்பா    வெள்ளை

     

       வஞ்சி      வஞ்சி    அகவல்

     

    மேலே கண்ட அட்டவணைகளில் யாப்பருங்கல மரபைப் போல் பாவின வைப்புமுறை வீரசோழியத்தில் அமையாமல் மாறுபட்டும்  தொன்னூல் விளக்கத்தில் பாவின வைப்புமுறை யாப்பருங்கலம், வீரசோழியம் ஆகிய இரண்டும் போல்  அமையாமல் மாறியும் அமைந்துள்ளமையை உற்றுநோக்குக.

                            பொதுநோக்கில் வீரசோழியத்தோடு தொன்னூல்விளக்கத்திற்கு வேறுபாடு இருப்பினும் சிறப்பு நோக்கில், அது வீரசோழியத்தை ஒட்டித் தன் கோட்பாட்டை உருவாக்கிக் கொள்கிறது. உண்மையில் வீரசோழியத்தைப் போல சில புதுமைகளைத் தொன்னூல் விளக்கம் படைத்துள்ளது என்றே கூறவேண்டும்.  வீரசோழியம் கலிவெண்பாவை வெண்பா வகையில் சேர்த்து புதுமை உண்டாக்கியிருக்கும். அதே போல் தொன்னூல் விளக்கமும், சவலை வெண்பா என்ற பாவை வெண்பா வகையில் சேர்த்துப் புதுமை செய்துள்ளது. சவலை வெண்பா வகையை மாறன் அலங்காரம் கூறினாலும், அதை வெண்பா வகையில் முதலில் சேர்த்தது தொன்னூல் விளக்கமேயாகும். சவலை வெண்பாவை வெண்பா வகையில் வைத்து விளக்கிய தொன்னூல் விளக்கம் கலிவெண்பாவை கலிப்பாவில் வைத்தே விளக்கியுள்ளது. வீரசோழியம் சவலை என்ற ஒரு பா வகையைத் தன் பத்தியக்கவி வகையில் வைத்துள்ளது. சவலையை அது முதற்சவலை, இடைச்சவலை, கடைச்சவலை என்று விளக்கும். வீரமாமுனிவர் சவலை வெண்பா கூறுவதற்கு வீரசோழியம் காரணமாக இருந்திருக்கலாம்.

                            தொன்னூல் விளக்கத்தைப் பொருத்தவரை முக்கியமாக அமைவது செய்யுளைப் பத்தியம், கத்தியம் என்று பகுத்திருக்கும் முறையாகும். இப்பகுப்பை வீரமாமுனிவருக்கு முன்னர் தமிழ் யாப்பிலக்கண மரபில் செய்திருப்பது வீரசோழியமே ஆகும். பகுப்பு நிலையில் ஒற்றுமையிருப்பினும் விளக்கமுறையில் வீரசோழியத்திற்கும் தொன்னூல் விளக்கத்திற்குமிடையில் வேறுபாடு உள்ளது. வீரசோழியம் பத்தியப் பிரிவில் கூறும் குறள், சிந்து, திரிபாதி, திலதம் முதலிய எதுவும் தொன்னூல் விளக்கத்தில் இல்லை. தொன்னூல் விளக்கம் தமிழ்ப்பாக்களையும் பாவினங்களையும் பத்தியமாகக் கூறுகிறது. அந்நூற்பா பின்வருமாறு.

     

                       ‘பத்தியம் என்ப பாவொடு பாவினம்

                        கத்தியம் அவைபோல் கலை அல்லனவே’

                                                                       (நூற்.250)

    வீரசோழியம் (மூலம்) கட்டுரைப்போலி, செய்யுள் போலி ஆகியவற்றைக் கத்தியமாகக் கூறும். ஆனால்  வீரசோழிய உரை ஒரு படி மேலே சென்று செய்யுள் போலி என்பதற்கு  தமிழ்ப்பா பாவினங்களைக் உதாரணமாகக் கொண்டு அவற்றைக் கத்தியம் என்று கூறும்.ஆனால் தமிழ்ப் பாக்களையும், பாவினங்களையும்    தொன்னூல் விளக்கம் ‘பத்தியம்’ என்று கூறுவதைக் கவனிக்க. தொன்னூல் விளக்கம் பத்தியம், கத்தியம் என்று வீரசோழிய மரபை அடியொற்றி கூறினாலும் அதிலிருந்து விலகி தனக்கென தனிக் கோட்பாட்டை வகுப்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளமுடியும். அடுத்துப் போலி பற்றி இவ்விரு நூல்கள் கூறும் கருத்துக்கள் முக்கியமானவையாகும். வீரசோழியம் பத்திய இலக்கணத்தில் மிக்கும் குறைந்தும் வருவன பத்தியப்போலி என்கிறது. இவற்றை அது கத்தியத்தில் அடக்கியது போல் தெரியவில்லை. வீரசோழியத்தைப்(மூலம்) பொருத்தவரை, கத்தியம் என்பது கட்டுரைப்போலி, செய்யுள் போலி ஆகிய இரண்டுமேயாகும் என்று தோன்றுகிறது. ஆனால் அது கட்டுரைப்போலி மற்றும் செய்யுட்போலி ஆகியவை எவை என்று கூறவில்லை.(வீரசோழிய உரைதான் கட்டுரைப்போலி என்றால் என்ன ? செய்யுள் போலி என்றால் என்ன? என்று விளக்குகிறது. தமிழ்ப்பாவினங்களை அது செய்யுட்போலி என்று கூறியது மேலே சுட்டிக்காட்டப்பட்டது).   தொன்னூல் விளக்கமோ தமிழ்ப்பாவினங்களின் இலக்கணத்தில் பிழைத்து வருவனவற்றைப் போலி என்கிறது. இது ஒரு வகையில் வீரசோழியர் காட்டும் பத்தியப் போலி போலவே தோன்றுகிறது. பத்தியம், கத்தியம், போலி இவையெல்லாம் வடமொழி இலக்கணங்கள் எனினும் வீரசோழியருக்கு இருந்த ஆழமான கோட்பாட்டுப் பின்னணி தொன்னூல் விளக்கத்திற்கு இருந்ததாகத் தெரியவில்லை. வீரசோழியரின் கோட்பாட்டைப் பொருத்தவரை பத்தியம் என்பது தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவாக அமைகிறது. ஆனால் தொன்னூல் விளக்கம் வடமொழிப் பிரிவில் (பத்தியம்) தமிழ்ப்பாக்களைச் சேர்க்கிறது என்பது கவனத்திற்குரியது. இதன்மூலம் இரு வேறுபட்ட கற்றல்-கற்பித்தல் மரபை நம்மால் உணர முடியும். வீரசோழியத்தின் கற்பித்தல் மரபு ஏற்கெனவே விளக்கப்பட்டுவிட்ட சூழ்நிலையில் தொன்னூல் விளக்கத்தின் கற்பித்தல் மரபை அதன் சமூகப் பின்னணி கொண்டு விளக்க வேண்டிய தேவை நமக்கிருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. கீழ்க்கண்ட அட்டவணைகள் வீரசோழியம், தொன்னூல் விளக்கம் ஆகியவை கூறும் பத்தியம் கத்தியம் ஆகியவற்றை ஒப்பிட்டுக் காட்டுகின்றன.

    பத்தியம்

       வ.எண்             வீரசோழியம்       தொன்னூல் விளக்கம்

     

        1          குறள்     வெண்பா               துறை

     

    அகவல்        X       தாழிசை   = 17

     

    கலிப்பா                 விருத்தம்

     

    வஞ்சி

       2   சிந்து  

     

       3  திரிபாதி  

     

       4   வெண்பா  

     

       5   திலகம்  

     

       6  விருத்தம்  

     

       7   சவலை  

     

    கத்தியம்

     வ.எண்      வீரசோழியம்   தொன்னூல் விளக்கம்

     

        1      கட்டுரைப்போலி     இலக்கணம் சிதையினும்

    இலக்கணப் பாவின்

    நடையோடு ஒப்ப வருவன

     

        2    செய்யுள் போலி  

     

    பத்தியப்போலி

    வ. எண்     வீரசோழியம்  தொன்னூல் விளக்கம்

     

      1   குறள் போலி                 –

     

      2    சிந்துப் போலி                –

     

      3    திரிபாதிப் போலி                –

     

      4     வெண்பாப் போலி                –

     

      5    திலதப் போலி                 –

     

      6   விருத்தப் போலி                 –

     

       7   சவலைப் போலி                 –

     

                            தொன்னூல் விளக்கம் தமிழ்ப்பாவினங்களை விளக்கி வரும் போது விருத்தம் பற்றிய பகுதியில் வடமொழி விருத்தத்தையும் சேர்த்து விளக்குகிறது. இது  குறிப்பிட்டுச்சொல்லத்தகுந்தது. வீரசோழியத்தில் வடமொழிவிருத்தம் தனியாக விளக்கப்படுகிறது. அது பத்தியக் கவிவகைகளில் ஒன்றாகக் கூறும் விருத்தம் என்பது தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவாக அமைகிறது. இதைத் தொன்னூல் விளக்கத்தோடு ஒப்பிடமுடியாது. வீரமாமுனிவர் தமிழ் விருத்தத்துடன் வடமொழி விருத்தத்தைச் சேர்த்து விளக்குவதை யாப்பருங்கல விருத்தி, காக்கைபாடினி முதலானோர் வடமொழி சந்த தாண்டகங்களைத் தமிழ்ப் பாவினங்களுள் அடக்குவர் என்றும் தொல்காப்பியர் கொச்சகக் கலிப்பாவுள் அடக்குவர் என்றும் கூறுவதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். தொன்னூல் விளக்கம் தமிழ் விருத்தத்துடன் சேர்த்து வடமொழி விருத்தத்தை எண்ணிப்பார்ப்பதற்கு மேற்சொன்ன யாப்பருங்கல மரபு ஒரு முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். இதில் மற்றொரு செய்தியும்  கவனிக்கத்தக்கது. யாப்பருங்கல மரபைப் போல் தொன்னூல் விளக்கம் தமிழ் விருத்தத்திற்குள் வடமொழி விருத்தத்தை அடக்கவில்லை சேர்த்து எண்ணுகிறது. இது முக்கியமானதாகும். மேலும் தொன்னூல் விளக்க ஆசிரியர் சந்த விருத்தத்தின் வகையாக எடுத்துக்காட்டும் எழுத்து சந்த விருத்தம், அசைச்சந்த விருத்தம் ஆகியவை வீரசோழியம் எடுத்துக்காட்டும் வர்ண விருத்தம், மாத்திரா விருத்தம் ஆகியவற்றுடன் ஒத்துள்ளமை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். வீரசோழிய மரபில் உள்ள வர்ண விருத்தம், மாத்திரா விருத்தம் ஆகியவற்றை மொழிபெயர்த்து எழுத்து சந்த விருத்தம், அசைச் சந்த விருத்தம் எனத் தொன்னூல் விளக்கம் அமைத்துக் கொண்டது எனலாம். யாப்பருங்கல மரபில் மாத்திரா விருத்தம் தனியாக விளக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு விடயம், தொன்னூல் விளக்கம் சந்த விருத்தத்தை வண்ண விருத்தம் என்று கூறுவது மேற்கண்ட இரு மரபுகளிலும் இல்லாதது. மேற்கண்ட கருத்துக்கள் மூலம் தொன்னூல் விளக்கம், யாப்பருங்கல, வீரசோழிய மரபுகளை பின்பற்றினாலும் அப்படியே தம் நூலில் அமைத்துக் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ள முடியும். இவ்விடத்தில்  முக்கிய கருத்தொன்றைச் சுட்டிக்காட்டுவது அவசியம். யாப்பருங்கல விருத்தி பாவுக்கு சாதி, நிலம், நிறம், ராசி ஆகியவை கூறும்போது தம் கருத்தை எங்கும் பதிவு செய்யாது. அங்ஙனம் பதிவு செய்யாமைக்கு அதனுடைய சமூகச் சூழல் காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால் வீரமாமுனிவர் பாவுக்குச் சாதி நிலம் முதலியன விரிக்கும் போது முதற்பாவாகிய நான்கிற்கும் சிலவிலக்கணங்களையுரைத்தார் முன்னோர். அவையொரு  பயனுமொரு காரணமுமின்றி முன்னர் நிறுத்திய மதத்திலூன்றினவாயினும் பிறன் மதங் கூறவே தந்திரயுத்தி யாகையிலவற்றைக் காட்டுதும் ‘ (214:1891) என்று தம் கருத்தைப் பதிவு செய்கிறார் (உரை இடைச்செருகல் நிறைந்ததாகையால் இக்கருத்து அவரால் சொல்லப்பட்டது என்று உறுதியாக கூறமுடியாதென்றே கூறலாம்). இங்ஙனம் பதிவு செய்வதற்கு அவருடைய ஐரோப்பிய பின்னணியே காரணமாகும். இதுவரை கண்ட கருத்துக்கள் பின்வரும் பேரா.கி. நாச்சிமுத்து அவர்களின் கூற்றை நோக்கி நம்மை இட்டுச் செல்கின்றன.

                            ‘கிளிப்பிள்ளை போல தொல்காப்பியருக்கு பின்வந்தோர் சொல்லிச் செல்ல வீரமாமுனிவர் மட்டும் முன்னையோர் கருத்தை மீட்டும் சொன்னாலும் தானாகச் சிந்தித்துத் தன் கருத்தைப் புதுமையாகப் புரட்சிகரமாக தன் இலக்கணநூலில் முன்வைக்கிறார். இதுமேலே சுட்டிய தமிழ் வழி வந்த சமூக நீதிக்கருத்துக்களை உட்கொண்டும் கிறித்துவக் கோட்பாடுகளின் பின்னணியில் ஐரோப்பியக் கிறித்துவக் கோட்பாட்டினைப் பின்பற்றி எழுந்த சமூகநீதிக் கருத்தை முன்னிறுத்தியும் அவர் செய்த வெளிப்பாடு எனலாம்’ (மணற்கேணி 9.9).

    நூலடைவு

    சுப்பிரமணியன் ச.வே. (பதிப்பாசிரியர், விளக்கவுரையாசிரியர்) தொன்னூல் விளக்கம், தமிழ்ப்பதிப்பகம், சென்னை மு.ப.1978.

    நாச்சிமுத்து. கி., வீரமாமுனிவர் (1680-1747) தொன்னூல் அகப்பொருளிலக்கணம் காட்டும் சமத்துவக் கல்விக் கொள்கை புதுமையும் புரட்சியும், மணற்கேணி இதழ் 9, டிசம்பர் 2011, பக்.33-41.

    மெக்கென்ஜி.காபன் அய்யர். ஜி. (பதிப்பாசிரியர்) தொன்னூல் விளக்கம், ADDISON & CO, Madras: 1891.

    வீரசோழியம் பெருந்தேவனார் உரை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், மு.ப.2008.

    Share