பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43 – அ)
பேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43)
எழுத்துத் தமிழுக்கென்று ஒரு கட்டுப்பாடு உள்ளது. எனவே ‘ லட்டு’, ‘ ராமன்’ என்று பேச்சுவழக்கில் உள்ள சொற்களை எழுதும்போது, ‘ இலட்டு’ ‘ இராமன்’ என்று எழுதுவதால் எந்தவொரு பிரச்சினையும் தோன்றாது. அயல்மொழிச் சொற்களைத் தமிழில் கடன்வாங்கும்போது, தமிழ் அமைப்புக்கு உட்பட்டே கடன்வாங்கவேண்டும் என்பது எனது கருத்து..
–-ந. தெய்வசுந்தரம். (தமிழ் மன்றம் மின்குழு விவாதத்தில் கருத்துப் பதிவு)
எந்த மொழியிலும் அதன் சொற்களின் ஒலியமைப்பில் ஒரு கட்டுப்பாடு உண்டு. ஒலியின் வரிசையிலும் ஒலி வருமிடத்திலும் கட்டுப்பாடு வெளிப்படும். மொழியை எழுதும்போது இந்தக் கட்டுப்பாடு பின்பற்றப்படும். பொதுவாக, பேச்சை விட எழுத்தில் கட்டுப்பாடு அதிகமாக இருக்கும். எழுத்தின் கட்டுப்பாட்டு விதிகளைப் பள்ளி மொழியைப் பேசுபவர்களிடம் வலியுறுத்தும். இந்த உலகளாவிய மொழியியல்புக்குத் தமிழ் விலக்கல்ல.
காலப்போக்கில் இந்தக் கட்டுப்பாட்டில் மாறுதல் ஏற்படுவது இயற்கை. மாறுதலுக்கு மொழியின் பரிணாம வளர்ச்சியும் பிற மொழித் தொடர்பும் காரணங்களாக அமையும். பேச்சு மொழியில் ஏற்படும் மாறுதல்கள் எழுத்து மொழியில் காலம் தாழ்த்து ஏற்றுக்கொள்ளப்படும். கலாச்சாரக் காரணங்களால் ஏற்றுக்கொள்ளப்படாமலேயும் இருக்கலாம். பிற மொழித் தொடர்பினால் சொற்கள் தமிழுக்கு வந்துசேரும்போது அதன் உச்சரிப்பு தமிழின் சொல்லொலி அமைப்புக்கு ஏற்ப மாறியிருக்கும். பிற மொழியில் புலமை இல்லாதவர்களிடம் அதிகமாகவே மாறியிருக்கும். tractor என்னும் ஆங்கிலச் சொல்லை ஆங்கிலம் தெரிந்தவர்கள் ட்ராக்டர் என்றும், தெரியாதவர்கள் தேக்தர் என்றும் உச்சரிக்கலாம். முன்னதில் ஒன்றுக்கு மேற்பட்ட தமிழ் ஒலியமைப்பு விதிகள் மாறியிருப்பதைக் காணலாம். எழுதும்போது அவற்றில் ஒன்றைக் குறைத்து டிராக்டர் என்று சிலர் எழுதலாம்.
சொல்லின் முதலில் டகரம் வராது என்னும் விதியைப் பின்பற்றி எழுதினால் சொல்லின் முன்னால் ஒரு உயிர் -இகரம்- சேர்த்து இடிராக்டர் என்று எழுத வேண்டியிருக்கும். இதைப் போலவே லகர ரகரத்தில் துவங்கும் சொற்களும். பிற மொழிச் சொற்கள் அதிகமாகித் தமிழோடு கலந்தபின் சொல்லின் ஒலியமைப்பு முறை மாறும். இந்த மாற்றம் மெதுவாக எழுத்திலும் பிரதிபலிக்கும். புகுந்த புதியதை இலக்கணமும் ஏற்றுக்கொள்ளும். இது பள்ளி முதலான நிறுவனங்களின் மூலம் நிகழ்வதால் மாற்றத்தை நிறுத்திவைக்கும் முயற்சிகளும் எடுக்கப்படலாம். இன்றைய சமூகச் சூழ்நிலையில் பள்ளியாசிரியர், இதழாசிரியர் கட்டுப்பாடில்லாமல் எழுதும் வாய்ப்பைத் தொழில்நுட்பம் தந்திருப்பதால் இத்தகைய நிறுவன முயற்சிகளின் வெற்றி வாய்ப்பு குறைவு.
எழுத்து மொழி பேச்சு மொழியின் எழுத்துப்பெயர்ப்பு அல்ல என்றாலும், எழுத்து மொழியின் மரபுகள் வேறாக இருக்கலாம் என்றாலும் இரண்டுக்கும் இடைவெளி அதிகமாக இருபபது மொழி கற்பதில் இடர்ப்பாட்டை ஏற்படுத்தும். எழுத்து மொழியை உறைந்த மொழி ஆக்கிவிடும், அதன் செயற்கைத் தன்மையை அதிகமாக்கிவிடும். இதனால், டகரம், ரகரம், லகரம் ஆகிய ஒலிகளில் துவங்கும் புதிய சொற்களை அப்படியே எழுதும் புதிய மரபு தோன்றும். இந்த மரபில் இந்த சொற்களை இகரம் முதலான முன்னுயிர் இட்டு எழுதத் தேவை இல்லை.
தமிழுக்கு இவை புதிய சொற்கள்; புதிய ஒலியமைப்பை அறிமுகப்படுத்தும் சொற்கள் என்பதற்கு மேலாக, இகரமோ உகரமோ அகரமோ சொல்லின் முதலில் சேர்த்து எழுதுவதற்கு வேறு காரணங்கள் இல்லை. இந்தச் சொற்களின் முன்னால் காதுக்குப் புலனாகாத உயிரொலி இருப்பதாக ஒலி ஆய்வுக் கருவி காட்டும் என்று நான் நினைக்கவில்லை. உச்சரிப்பில் spade என்னும் ஆங்கிலச் சொல்லை இகரம் சேர்த்து இஸ்பேடு என்று சிலர் உச்சரித்தால் அந்த மாதிரியான சொற்கள் இரண்டு மெய்களுடன் துவங்கும். புதிய சொற்கள் முன்னுயிரோடு உச்சரிக்கப்படுவதாக எடுத்துக்கொண்டாலும், அந்த உயிர் சொல்லின் பொருளில் மாற்றம் ஏற்படுத்தும் ஒலியன் அல்ல. அதனால் அது எழுத்துப் பெறாது. ஒலியனாக உள்ள உயிர் இருந்தால், சந்தியில் வெளிப்படும். சேர்த்துப் பேசும்போதும் எழுதும்போதும் இனிய இலட்டு என்பது இனியவிலட்டு என்றாகும், இனிய இதயம் இனியவிதயம் ஆவது போல. ஆனால், பேச்சிலும் எழுத்திலும் அப்படி ஆவதில்லை. இகரம் இட்டு இந்தச் சொற்களை எழுதுவது மொழியில் நிகழ்ந்துள்ள மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாததே காரணமாகும்.
பிற மொழித் தொடர்பால் தமிழுக்கு வந்துசேர்ந்த சொற்களால் ஏற்படும் சொல்லொலி அமைப்பின் மாற்றங்களை எழுத்தில் ஏற்றுக்கொள்வதில் வரையறை உண்டா என்பது முக்கியமான கேள்வி. ஒன்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்பதும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் தமிழின் வளர்ச்சிக்கு உகந்தவை அல்ல; மொழிகளின் பொது இயல்போடு ஒத்தவையும் அல்ல. இலக்கணத்திற்கப்பால் மொழி சார்ந்த கலாச்சார மரபுகளும் வரையறையைத் தீர்மானிப்பதில் பங்குபெறுகின்றன. தெலுங்கு, கன்னடம் போல், மூலத்திராவிடத்தில் இல்லாத வர்க்க எழுத்துகளைக் கடன்சொற்களால் தமிழ் சேர்த்துக்கொள்ளவில்லை. சொல்லில் இணைந்து வராத மெய்யெழுத்துகளை உயிர் கொடுத்துப் பிரித்து எழுதுவதும் – ப்ரச்னா என்று எழுதாமல் பிரச்சினை / பிரச்சனை என்றும் ப்ரியம், ப்ரிமியம், ப்ளேட் என்று உச்சரிப்பதைப் பிரியம், பிரிமியம், பிளேட்டு / பிளேட் என்று எழுதுவதும்- தமிழின் மொழிக் கலாச்சார மரபுக்கு உதாரணங்கள். சங்கம், யுகம், வோட்டு முதலான சொற்களில் சொல்லுக்கு முதலில் வரும் எழுத்துகளாகப் புதிய எழுத்துகளைத் தமிழ் சேர்த்துக்கொண்டுள்ளது. கேக், பந்த், சிங் முதலான சொல்லின் இறுதியில் புதிய எழுத்துகளைச் சேர்த்துக்கொண்டுள்ளது. சர்க்கரை, அர்த்தம் முதலான சொற்களில் குறிலுக்குப்பின் /ரு / அல்லாமல் /ர்/ வருவதை ஏற்றுக்கொண்டுள்ளது. இவையும், பழைய இலக்கண விதிக்கு மாறுபட்டதானாலும், தமிழ் மொழி மரபே.
மேலே சொன்னதைப் போல, ஒரு சொல்லைப் பேசுவதைப் போலவே எழுதுவதும், அதன் மூல மொழியின் உச்சரிப்பைப் போலவே எழுதுவதும் எந்த மொழியிலும் இல்லை. எழுதும் விதிகளில் மொழியின் மரபுகள் வேறுபடுகின்றன. தமிழின் எழுதும் மரபு காலத்தால் உறைந்துவிடாமல் நெகிழ்வைத் தழுவ வேண்டும். இந்த நெகிழ்வைத் கடைசியில் தீர்மானிப்பவர்கள் புலவர்களோ, ஆசிரியர்களோ, மொழி ஆர்வலர்களோ, இலக்கணவாதிகளோ மொழியியலாளர்களோ அல்ல. தமிழைத் தங்கள் காலத்தின் தேவைக்கேற்ப எழுதும் பல துறை மக்களே ஆவர்.