பணப்பொருத்தம்!…
எஸ். கோதண்டராமன்
1 டிர்ரிங்.. டிர்ரிங்..
“ஹலோ”
“மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”
“சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”
“அவன் எம்.எஸ்சி படிச்சுட்டு காலேஜிலே லெக்சர………….. ”
“சாரி. நாங்க ப்ரொபஷனல் மாப்பிள்ளையாப் பார்க்கிறோம். ”
“இதுவும் ப்ரொபஷன் தானே. ”
“சாரி, டாக்டர், எஞ்ஜினீயர்னா பேசுங்க. இல்லாட்டி போனை வெச்சுடுங்க.”
2 டிர்ரிங்.. டிர்ரிங்
“ஹலோ”
“…………மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”
“சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”
“அவன் பி.டெக். படிச்சுட்டு மெட்ராஸ்லே டைடல் பார்க்லே ஒரு கம்பெனிலே சாப்ட்வேர் இஞ்ஜினீயரா வேலை பார்க்கிறான். ”
“பி.டெக். எந்த காலேஜ்? ”
“சேலம். ”
“சாரி. அண்ணா யுனிவர்சிட்டி, ஐ.ஐ.டி அல்லது பிலானிலே படிச்ச பையனா இருக்கணும். என் பெண்ணும் பி.ஈ. அதை விட அதிகம் படிச்சவரா, பாரின்லே எம். எஸ். முடிச்சு பாரின்லே வேலை பார்க்கிற பையன் தான் வேணும். ”
3 டிர்ரிங்.. டிர்ரிங்
“ஹலோ”
“…………மேட்ரிமோனியிலே உங்க பெண் பதிவைப் பார்த்தேன். நாங்க எங்க பையனுக்குப் பெண் பார்க்கிறோம். ”
“சரி. உங்க பையன் என்ன படிச்சிருக்கார்? எங்கே வேலை பார்க்கிறார்?”
“அவன் சென்னை ஐ.ஐ.டி.லே பி.டெக். படிச்சுட்டு யு. எஸ்லே எம். எஸ் பண்ணினான். இப்போ பாஸ்டன்லே வேலை பார்க்கிறான். எங்களுக்கு இங்கே அடையாறிலே ஒரு பங்களா இருக்கு. நீலாங்கரையிலே பையன் பேரிலே ஒண்ணு வாங்கி இருக்கோம். அப்புறம் கொடைக்கானல்லே ஒரு பங்களாவும் எஸ்டேட்டும் இருக்கு. ”
“வெரி குட். நீங்க பெண் பார்க்க எப்ப வரீங்க? ”
“பையன் அடுத்த மாசம் தான் வருவான். நானும் என் வீட்டுக்காரரும் வர ஞாயிற்றுக்கிழமை உங்க வீட்டுக்கு வரோம். உங்க விலாசத்தைக் குடுங்க. ”
4 டிர்ரிங்.. டிர்ரிங்..
“ஹலோ”
“ஆண்ட்டி, நான் பாஸ்டன்லேருந்து பாஸ்கர் பேசறேன். பானு போன் வேலை செய்யல்லியா? ”
“ஒரு நிமிஷம். ”
“பானு, மாப்பிள்ளே கூப்பிடறார்டி. ஏன் உன் போன் என்னாச்சு? ஏன் லேண்ட் லைன்லே கூப்பிடறார்? ”
“பாட்டரி லோ. ஆப்ஃ ஆயிடுத்தும்மா. சார்ஜ் பண்ணலாம்னா கரண்ட் இப்பத் தானே வந்திருக்கு. ”
“என்ன பொண்ணும்மா நீ. அவர் தான் தினமும் இந்த நேரத்துக்குக் கூப்பிடறார்னு தெரிஞ்சிருக்கே. முன்னுக்கு முன்னதா சார்ஜ் பண்ணி வெச்சுக்க வேண்டாமா? ”
5 டிர்ரிங்.. டிர்ரிங்..
“ஹலோ”
“நான் பானு பேசறேம்மா. நான் நாளைக்குப் புறப்பட்டு சென்னைக்கு வரேம்மா.”
“என்னடி இப்ப திடுதிப்புன்னு. இனிமே அடுத்த வருஷம் தான் லீவு எடுக்க முடியும்னு மாப்பிள்ளே சொன்னாரே. மாப்பிள்ளையும் வராரா? ”
“அவன் வரல்லேம்மா. நான் மட்டும் தான் வரேன். ”
“என்னடி இது? மாப்பிள்ளையைப் போய் அவன் இவன்னு பேசறே. ”
“அவன் எனக்குப் புருஷனும் இல்லே. உனக்கு மாப்பிள்ளையும் இல்லே. ”
“என்னடி சொல்றே நீ? ”
“ஆமாம்மா நான் ஒரேயடியா வந்திடறேன். லக்கேஜ் ஹெவியா இருக்கு. ஏர்போர்ட்டுக்கு யாராவது வாங்க. ”
“ஏண்டி? என்னடி ஆச்சு? ”
“பின்னே என்னம்மா. தேடித் தேடி அமெரிக்க மாப்பிள்ளையைப் புடிச்சியே. சுத்த பழய பஞ்சாங்கம்மா. ”
“என்னடி சொல்றே? ”
“கொஞ்சம் கூட நாகரிகமா நடந்துக்கத் தெரியல்லே, அம்மா, அவனுக்கு. எப்போ பார்த்தாலும் பூஜை புனஸ்காரம். ரூமுக்கு ரூம் ராமகிருஷ்ணர், ரமணர், சாயிபாபான்னு சாமியார் படம் தான். அலமாரி பூரா விவேகானந்தர் புஸ்தகங்கள் தான். ஒரு க்ளப்புக்குப் போனோம், ஒரு டிஸ்கொதேயிலே கலந்துகிட்டோம் ஒண்ணு கிடையாது. ஒரு பீர் கூட குடிச்சதில்லையாம். வெளியிலே கூட்டிகிட்டுப் போனா, கோவில் இல்லாட்டா பஜனை, இந்த மாதிரித் தான். அமெரிக்காவிலே இருக்கிறவன் கொஞ்சம் நாகரிகமா இருப்பான்னு நெனச்சேன். இந்தக் கொட்டாம்பட்டியோட காலம் தள்ள முடியாது என்னாலே. ”
“ஏண்டி, நிச்சயம் பண்ணி கல்யாணம் நடக்கிற வரைக்கும் ஆறு மாசம் நாள் தவறாமே போன்லே மணிக்கணக்காப் பேசினியே. என்னடி தெரிஞ்சுகிட்டே அவரைப் பத்தி?
“அப்பல்லாம் நிறைய ஜோக் சொல்லிச் சிரிக்க வெச்சுக்கிட்டே தான் இருந்தான். நான் இந்த மாதிரித்தான் இருப்பேன்னு அவன் சொன்னப்போ, அமெரிக்காவிலே இருந்துகிட்டு இந்த மாதிரி யாராவது இருப்பாங்களா, விளையாட்டுக்குச் சொல்றான்னு தான் நான் நெனைச்சேன். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் நாம மாத்திடலாம்னு நெனச்சேன். அது முடியாதுன்னு தீர்ந்து போச்சு. நான் நாளை ராத்திரி பதினோரு மணிக்கு வருவேன். ஏர்போர்ட்டுக்கு யாராவது வாங்க”