-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

   பாஞ்சாலி துயர்தீர்த்தாய்
   பார்த்தனுக்கு உதவிநின்றாய்
   பாரதக் கதைதன்னை
   பக்குவமாய் முடித்துவைத்தாய்!      krishna

   பலவேலை நீசெய்தாய்
   பாதகமாய்த் தெரிந்தாலும்
   பலபேரைத் திருத்துதற்குப்
   பக்குவமாய் மருந்தாச்சு!

   மாமருந்தாம் கீதைதனை
   மாதவனே தந்தாயே
   மாநிலத்தார் கீதையினால்
   மயக்கநிலை தெளிந்தாரே!

   சோதிவடி வானவனே
   சுந்தரமாய் இருப்பவனே
   ஆதியே அரும்பொருளே
   அனைத்துமே நீயன்றோ!

   குழந்தையாய் வந்திடுவாய்
   குதூகலமும் தந்திடுவாய்
   குறையொன்றும் வாராமல்
   குணக்குன்றாய் நின்றிடுவாய்!

   கண்ணா எனவழைத்தால்
   கணப்பொழுதில் வந்திடுவாய்
   எண்ணமெலாம் இருப்பதனால்
   எங்குதான் போய்விடுவாய்?

   அவதாரம் பலவெடுத்தாய்
   அகிலமதைக் காத்துநின்றாய்
   அனைவரது துயர்துடைக்க
   அழைத்தவுடன் வந்துவிடு!

   பால்தந்து மோர்தந்து
   பதமாக வெண்ணைதந்து
   பாலகனாய் நாளுமுனைப்
   பார்க்கின்றோம் நாமுமிங்கே!

   நீகடவுள் நீசக்தி
   நினைப்பெமக்கு இல்லையப்பா
   நீயென்றும் எம்மனதில்
   நித்தமுமே குழந்தையப்பா!!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.