-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

தமிழிலே கவிதை தந்த
தரமுடைக் கவிஞரே நீர்
உரமுடைக் கவிதை தந்து
உள்ளத்தில் இருந்து விட்டீர்!                        kavimani

தெளிவொடு கவிதை சொன்னீர்
சிந்தைக்கு மருந்தும் சொன்னீர்
அழிவிலாக் கவிதை தந்தீர்
ஆதலால் உயர்ந்தே விட்டீர்!

புனிதராம் புத்தர் வாழ்க்கை
புவிதனில் உள்ளார் காணச்
செவிதனில் நுழையும் வண்ணம்
சீர்மிகு கவிதை தந்தீர்!

ஆசிய ஜோதி என்று
அதற்கு நீர் பெயரைச்சூட்டி
மேதகு உண்மை யாவும்
விரித்துமே சொல்லி நின்றீர்!

சாதியைச் சாடி நின்றீர்
சமத்துவம் காட்டி நின்றீர்
பூமியில் மனிதர் வாழப்
பொறுப்புடன் இருங்கள் என்றீர்!

நாட்டையும் பாடி நின்றீர்
வீட்டையும் பாடி நின்றீர்
ஊட்டமாய் நிற்கும் வண்ணம்
உண்மையும் பாடி நின்றீர்!

தமிழ்மணி ஆகி நின்ற
கவிமணி தானே நீங்கள்!
செவிகளில் தேனைப் பாய்ச்சும்
கவிமணி நீங்கள் அன்றோ!

மாசிலாக் கவிதை தந்த
மாமணி நீங்கள் தானே
மனதிலே நிற்கும் வண்ணம்
வளம்நிறை கவிதை தந்தீர்!

கவிதையில் எளிமை காட்டி
கற்பவர் நினைவில் வைக்கப்
புவிதனில் கவிதை சொன்னக்
கவிமணி நாமம் வாழ்க!

கவிமணி ஐயா உங்கள்
கவிதைகள் கேட்க வேண்டும்
புதுமைகள் செய்ய நீங்கள்
புவிதனில் பிறக்க வேண்டும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.