அறுமுகநூறு (6)
சச்சிதானந்தம்
முக்கண் எடுத்த ஈசன் கூற்றை,
தர்க்கம் செய்து எதிர்த்த காற்றே,
பழனியில் வீசும் சரவணக் காற்று! 26
பாத மெனும் செம்பூவைப் பற்றிப்,
பாட லெனும் வெண்பூவைச் சூடிப்,
பால மெனப் பாலகனைக் கொண்டு,
பாரிருள் வாழ்வைப் பண்புடன் கடப்போம்! 27
பாடுபொருள் கிடைத்துவிட்ட பரவசத்தில் நாம்,
பாடும்பொருள் பரமனவன் கண்ட பொருள்,
வாடுமிருள் மனம் நீக்கி, வந்து
கூடுமருள் குமரனருள் என்ற பொருள்! 28
பாலதண் டாயுத பாணியின் பெருமையைப்,
பாடிய படியே படிகளில் ஏறிப்,
பாதச் சுவடுகள் பதிய நடந்தால்,
பாவச் சுவடுகள் விலக்கிடு வானே! 29
உண வுண்ண மறுத்துச் சிரித்து,
உடை யணிய மறுத்துக் குதிக்கும்,
உல கின்னும் அறியா மழலையாய்,
உன தருளை ஏற்க மறுத்தோம்! 30
படத்துக்கு நன்றி: https://www.vallamai.com/wp-content/uploads/2012/11/vayalur-murugan4.jpg