திவாகர்

(மே 13 – 20, 2012)

சங்கீதக் கச்சேரிகள் என்றால் இயற்கையாகவே எனக்கு ஒரு பயம் உண்டு. இன்றைய காலத்தில் நடக்கும் கச்சேரிகளில் பாடல் பாடுவதென்றால், அப்பாடலில் உள்ள பொருள் நமக்கு சரிவரப்பதியும் அளவுக்கு நமது பிரபல பாடகர்கள் பாடுவதில்லை என்பது பலநாள் குறை கூட உண்டு. அது எந்த மொழியாக இருந்தாலும் அந்தப் பாடல் வரிகளைக் கீறிக்கொண்டு பாடும்போதும் சற்று மனம் வருத்தப்படும். ஒருவேளை இவர்களையெல்லாம் பார்த்துதானோ நம் ஏ.ஆர். ரகுமான் கூட இசைக்கு மொழியோ, பாடல் வரிகளோ தேவையில்லை, சப்தம் மட்டுமே போதுமானது என்று முடிவு கட்டியிருக்கலாம் என்றும் நினைப்பதுண்டு… மொழியின் இனிமையையும் எளிமையையும் ஏன் இந்த இசை கொண்டுவருவதில்லை.. இனி எதிர்காலத்து இசை எந்த அளவுக்கு மொழியை சின்னாபின்னப் படுத்தும் என்றெல்லாம் விசனமும் வருவதுண்டு.

ஆனால் நமது தமிழ் மொழி போல ஒரு மொழி வருமோ.. அதிலும் தமிழில் உள்ள எளிமையையும் இனிமையையும், வளமையையும் வேறெந்த மொழியால் தரமுடியும், பாடல் பாடுவதற்கேற்ற மொழி தமிழ்தான் என்று பல்லாண்டுகளாகவே நமக்குச் சொல்லிக் கொடுத்து வரும் முன்னோர் பலர் உண்டு. நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டு, இனிமையாகப் பாடப்பட்ட ஒரு பாடலை (ஸாம்பிள்) இங்கு தருகிறேன்..

 

உனை நம்பினேன் அய்யா

 

ராகம்: கீரவாணி
தாளம்: ஆதி

பல்லவி
உனை நம்பினேன் அய்யா (நான்)

அனுபல்லவி
நாகம் புனை சம்போ நடராஜா புலியூர் வாழ் ஈசா (உனை)

சரணம் 1
இருவர் தம் இசைகொண்ட காதா தித்தி என நின்று நடம்செய்யும் இங்கித பொற்பாதா
திருநாவலூரன் விடு தூதா தில்லை சிவகாமி ஒரு பாகா சிதம்பர நாதா (உனை)

சரணம் 2
மழுவினைத் தரிக்கின்ற கையா கொன்றை மலர் மாலை புனைகின்ற வடிசுடர் மெய்யா
எழு புவி துதிக்கின்ற துய்யா அன்பர் இடமாய் இருந்தின்பம் உடனாளும் அய்யா

சரணம் 3
நெடியமால் அயன்தேடிக் காணாதெங்கும் நிறைந்தவா எலும்பெல்லாம் அணிந்திடும் பூணா
அடியவர் தொழுந் தமிழ்ப்பாணா தில்லையம்பதி நடராஜா அம்பலவாணா (உனை)

முத்துத்தாண்டவர் எனும் தெய்வப்புலவர்தாம் இயற்றியது இது. அவர்தாம் முதன்முதலில் நாம் இப்போதெல்லாம் பாடும் பாடலுக்கு சுவை சேர்க்கும் பல்லவி, அனுபல்லவி, சரணம் எனும் முறையை முதன்முதலில் கொண்டுவந்தவர் (எனக்குத் தெரிந்து). அந்தத் தமிழை மறுமுறைப் படித்துப் பாருங்களேன்.. மிக எளிமை.. பொருள் காண அகராதியைத் தேடவேண்டாம். கீரவாணி ராகத்தில் இந்தப் பாட்டைப் பாடினாலோ, கேட்டாலோ பக்திப் பரவசம் மிகுந்து கண்ணீர் வரும் பாடல் இது. ஆனால் இவரைப் பற்றி தமிழர்களாகிய நமக்கே அதிகம் தெரியாது என்பது உண்மை. இவரது பாடல்கள் கூட நம் இசைக் கலைஞர்கள் அதிகம் பாடுவதில்லை (ஓரிருவர் தவிர) எல்லோருக்குமே கர்நாடக சங்கீதப் பாடல், கீர்த்தனை என்றால் தியாகய்யாவின் தெலுங்குப் பாடல்கள்தான் என்று பல ஆண்டுகளாகவே கங்கணம் கட்டிக்கொண்டுவிட்ட காலம் இது. முத்து தாண்டவர் பாடல்கள் பாடினால்தான், அல்லது பாடிக்கேட்டாலோ அதிசயம் என்ற நிலைகூட ஏற்பட்டுவிட்ட காலகட்டம் இது. இனி இவரை யாரும் சீண்டுவாரில்லை என்று கூட நினைப்பதுண்டு. எளிய தமிழுக்கு மறு வாழ்வு தேவையோ என்று வெறுத்துப் போனதுமுண்டு.

முத்துத்தாண்டவர் சாதாரணமான கவிஞரோ, பாடலாசிரியரோ அல்ல என்பதை அவரது வரலாறு சொல்லும். சாதாரணமானோர் நம்பமுடியாத பல அதிசயங்களை நிகழ்த்திக்காட்டிய மகான். தில்லையையே நினைத்து நினைத்து, ஆடலழகனையேப் பாடிப் பாடி, அவன் சந்நிதியிலேயே அவன் பாதம் சேர்ந்த மிகச் சில மகான்களில் முத்துதாண்டவரும் ஒருவர். அவர் பாடல்கள் அனைத்தும் பாமரத் தமிழ், எளிய தமிழ், இனிமையான தமிழ், வளம் செறிந்த தமிழ், பக்திமயமான தமிழ்.

ஆனால் அதிசயத்திலும் அதிசயமாக வல்லமையில் இந்த வாரம் நம் ஷைலஜா அவர்கள் முத்துத்தாண்டவர் பற்றிய வரலாற்றை ஒரு கட்டுரையாக வடித்துத் தந்துள்ளார்.

https://www.vallamai.com/literature/articles/20584/

இந்த திருவரங்கத்து நாயகி, எல்லோரும் இப்படிப்பட்ட எளிமையான தமிழை அறியவேண்டும் என்று இப்படி ஒரு அழகான பதிவை இந்த வாரம் வெளியிட்டிருப்பதும் முத்துத்தாண்டவர் பாடல்களை எல்லோரும் மறந்துவிட்ட நிலையில் அந்த மகானின் சரித்திரத்தை வெளி உலகுக்கு எடுத்துக் காண்பித்திருப்பதும் மிக மகிழ்ச்சியான செய்தியாகப்பட்டது. அந்த ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்ததற்காகவே அவருக்கு வல்லமை சார்பாக ’சென்ற வார வல்லமையாளர் விருது’ கொடுத்து கௌரவிக்க விழைகின்றேன். இவர் ஒரு பன்முகநாயகி. நாவலாசிரியை, சிறுகதை எழுத்தாளர், இணைய உலகில் வெகுவாக அறியப்பட்டவர். வல்லமையாளர், பழகுதற்கு இனியவர் எந்த விஷயத்தையும் எங்கும் எடுத்துச் செல்லும் சக்தி படைத்தவர். ’வல்லமை’யின் சார்பாக ஷைலஜாவுக்குக் கொடுக்கப்படும் இந்த வல்லமையாளர் விருது கொடுக்க இப்படி ஒரு அவகாசம் கொடுத்ததற்கு நன்றி சொல்லும் அதே வேளையில் இப்படிப்பட்டவர்கள் இன்னமும் அதிகமாக முன்வந்து எளிய தமிழின் புகழைப் பரப்பவேண்டும். என்று இந்த சந்தர்ப்பத்தில் தாழ்மையான விண்ணப்பத்தையும் முன் வைக்கின்றேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.