ராஜ விளையாட்டு – ஸ்டீபன் ஜ்ஸ்வேய்க் – தமிழாக்கம் லதா ராமகிருஷ்ணன்
மதுமிதா
லோகமே சதரங்கம்’
“வாழ்க்கை ஒரு நாடக அரங்கம்
பூலோகமே ஒரு சதுரங்கம்”
எனும் பாடல் அளிக்கும் சிந்தை விரிவான விசாலமான உயரத்தைத் தொடுகிறது.
சதுரங்க ஆட்டத்திற்கு மிக அருமையான ஒரு குணாம்சம் உண்டு. அது ஒருவருடைய மூளைச் சக்தியை வலுப்படுத்தி மூளையின் வேலைத் திறனை வளப்படுத்துகிறது. வேலை மிகுதியால் மூளை களைப்படைந்தாலும் அதன் சக்தியும், திறனும், இயக்கவிசையும் உண்மையில் மேம்பாடடைகிறது.
சதுரங்க ஆட்டம் குறித்து கவிதை, கதை, நாவல், சினிமா என பல படைப்புகள் பல்வேறு காலங்களிலும் வெளி வந்துகொண்டே இருக்கின்றன.
எழுத்தாளர் முன்ஷி ப்ரேம்சந்த் ’சதரஞ்ச் கே கிலாடி’ என்னும் கதையை ஹிந்தியில் எழுதினார். இயக்குநர் சத்யஜித் ரே 1977 ஆம் ஆண்டில் இதே பெயரில் சினிமாவாக எடுத்தார்.
’சதரஞ்ச் கே கிலாடி’ சிறுகதை சதுரங்கம் விளையாடுபவர்களைப் பற்றியது. மிர்ஸா சாஜித் அலி, மிர் ரௌசான் அலி இருவரும் தங்களுடைய கடமைகளைச் சரியாகச் செய்யாமல் தீவிரமாக சதுரங்கம் விளையாடுபவர்கள். அவர்களுடைய ஆட்டத்தின் மீதான மோகம் எல்லைமீறிச் சென்றுவிடுகிறது. ’அவாத்’ ஐ ஆட்சி புரியும் ’வாஜித் அலி ஷா’ வை பிரிட்டிஷார் பிடித்துச் செல்லும்போதும் அவர்கள் தங்களுடைய ராஜாவைக் காப்பாற்ற முனையவில்லை. தொடர்ந்து சதுரங்கப்பலகையில் ஆட்டத்தில் உள்ள தங்கள் ராஜாவைக் காக்க பெருமுயற்சி செய்துகொண்டிருப்பார்கள். கதையின் முடிவில் ஆட்டத்தில் ஒரு காயை நகர்த்தும்போது, வாக்குவாதம் முற்றி, சண்டை மூண்டு, வாட்களை வீசிக்கொண்டு, இருவருமே இறந்துபோவார்கள்.
சதுரங்கப்பயிற்சி ஒரு மனிதனின் தனிமையைப் போக்கி, செயல்திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கையில் உந்துதல் அளிப்பதையும், ஸ்டீஃபான் ஜ்ஸ்வேய்க் தனது ‘Royal Game’ என்னும் ஜெர்மானிய குறுநாவலில் கச்சிதமாகக் குறிப்பிடுகிறார். ’ராஜ விளையாட்டு’ என்னும் தலைப்பில் லதா ராமகிருஷ்ணன் அதனைத் தமிழாக்கம் செய்துள்ளார். புதுப்புனல் வெளியீடாக ’ராஜ விளையாட்டு’ 2012 இல் வெளிவந்துள்ளது.
’ராஜ விளையாட்டு’ குறுநாவல், செஸ் விளையாட்டில் உலகப் புகழ் பெற்ற செஸ் சேம்பியனான கதாபாத்திரம் ஜ்ஸெண்ட்டோவிக் -க்கும், டாக்டர் B என்னும் இன்னொருவருக்கும் இடையே நடக்கும் செஸ் போட்டியின் வழியாக பல செய்திகளைச் சொல்லிச் செல்கிறது.
நியூயார்க்கிலிருந்து அயர்ஸுக்கு நள்ளிரவில் புறப்படவிருக்கும் கப்பலில் ஆரம்பிக்கிறது கதை. கதைசொல்லியின் பார்வையில் முழுக்கதையும் சொல்லப்படுகிறது. கதைசொல்லியின் நண்பர் அந்தக் கப்பலில் பயணிக்க இருக்கும் உலக சாம்பியன் ஜ்ஸெண்ட்டோவிக் குறித்து சொல்கிறார். அமெரிக்கா முழுமையும், கிழக்கு கடற்கரை முதல் மேற்கு பகுதிவரை அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்ற அவர், புதிய வெற்றிக்காக அர்ஜெண்டீனாவுக்கு பயணம் போகிறார் என்ற செய்தி கிடைத்ததும் இவருக்கு ஆர்வம் மேலோங்குகிறது. முதலிலேயே இந்த செஸ் சேம்பியனை அறிந்திருந்தார். அந்த செஸ் சேம்பியனின் இதர துறைகளில் உள்ள அறியாமை அனைவருக்கும் தெரிந்ததாய் இருக்கிறது. இந்தக் குறைபாட்டை அந்தச் சேம்பியனும் அறிந்திருக்கிறான்.
மிகவும் ஏழையான தெற்கு யூகோஸ்லேவிய மனிதனின் மகனாகப் பிறந்த ஜ்ஸெண்ட்டோவிக் தனது தந்தையின் மரணத்துக்குப்பிறகு பன்னிரண்டு வயது சிறுவனாக இருந்த அவனை மதகுரு தன் பாதுகாப்பில் வைத்து படிக்க வைக்க பெரும்பாடுபட்டார். எதுவுமே அவனுக்கு பிடிபடவில்லை. தரப்பட்ட வேலையை எந்த வேலையாக இருந்தாலும், தண்ணீர் கொண்டுவருவது, விறகு வெட்டுவது, வயலில் வேலை செய்தல், சமையலில் வேலை செய்தல் என அனைத்து வேலைகளையும் செய்தான். ஆனால், எந்த ஒரு படிப்பும் ஏறவில்லை. தானாக எதையும் தேடுவதில்லை. தானாக எதையும் கற்பதில்லை. வெற்றுப்பார்வையுடன் அமர்ந்திருப்பான்.
மதகுருவும், காவல் அதிகாரி ஒருவரும் செஸ் விளையாடும்போது வெறித்துப்பார்த்தபடி அமர்ந்திருப்பான். இருவரும் விளையாடிக்கொண்டிருக்கும்போது மதகுரு அவசரமாக ஒரு நோயாளியைப் பார்க்கச் செல்லும்போது இவன் செஸ் பலகையை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். அகஸ்மாத்தாக காவல் அதிகாரி செஸ் விளையாட அவனுக்கு விருப்பம் இருப்பதை அறிந்து விளையாடுகிறாயா என்ற போது அவன் சம்மதித்து காய் நகர்த்துகிறான். விளையாட்டில் இவனின் திறமையைக் கண்ட அதிகாரி மதகுருவிடம் தெரிவிக்க அவன் அவரிடமும் விளையாடி வெற்றி பெறுகிறான். மதகுரு மகிழ்ந்து அவனை முடிதிருத்தி, நல்லுடை அணியச் செய்து நகரின் இன்னொரு விளையாடுமிடத்துக்கு அழைத்துச் செல்ல அங்கே வெல்கிறான். தொடர்ந்த எல்லா இடங்களிலும் வெற்றி பெற்று கடைசியில் உலக சாம்பியன் ஆகிறான். எனினும் வேறு எதுவும் அவனுக்குத் தெரியாது என்பதைப் பலரும் அறிந்திருந்தனர்.
கப்பலில் இவன் பயணம் செய்கிறான் என்றதும் கதைசொல்லிக்கு அவனிடம் பேசுவதில் ஆர்வம். ஆனால், தன்னுடைய அறியாமை குறித்து அறிந்து வைத்திருக்கும் செஸ் சேம்பியன் விளையாடுவதும், விளையாட்டில் கிடைக்கும் பணமும் இவற்றில் மட்டுமே கவனமாக இருப்பவன் ஆதலால் பேசவே இல்லை.
சகபயணி மாக் கானர் செஸ் விளையாட விரும்புகிறான். வேறு எந்த வழியும் இல்லாத நிலையில், செஸ் சேம்பியனுக்கு குறைந்த பட்சமாய் 250 டாலர்கள் கொடுத்து விளையாட சம்மதிக்க வைக்கிறான்.
இப்போது ஒரு பக்கம் உலக செஸ் சேம்பியன். இன்னொரு பக்கம் கப்பலின் உறுப்பினர்கள் பலரும் இருந்து ஆட நிச்சயிக்கப்பட்டது. செஸ் சேம்பியன் சில அடி தூரத்தில் இருப்பான். இந்தப் பக்கம் இவர்கள் கலந்தாலோசித்து காய் நகர்த்திய பின் வந்து தனது காயை நகர்த்திவிட்டு சென்று விடுவான். அனைவரும் கலந்து பேசி காய் நகர்த்தினாலும் வெற்றி செஸ் சேம்பியன் பக்கமே இருந்தது.
அப்படி இருக்க ஒரு காய் நகர்த்தலின் போது , ‘கடவுளே வேண்டாம். காய் நகர்த்தாதீர்கள்’ என ஒரு குரல் கேட்கிறது. அனைவரும் அங்கே ஆர்வமாய் பார்க்க நாற்பது நாற்பத்தைந்து வயதுடைய ஒரு மனிதன்,’ இப்போது ராணியை நகர்த்தினால் உடனே எதிராளி பிஷப்பை QB 8க்கு நகர்த்தி ராணியை வெட்டிவிடுவார். அவருடைய அந்தக் காயை நீங்கள் நைட்டைக் கொண்டு வீழ்த்திவிடலாம். ஆனால், அவர் படைவீரரை 7க்கு நகர்த்தி உங்களுடைய யானையை அச்சுறுத்துவார். உங்களுடைய ‘நைட்’ டைக்கொண்டு நீங்கள் அவருடைய ராஜாவுக்கு ‘செக்’ வைத்தாலும் கூட நீங்கள் பத்தில் ஒன்பது காய்நகர்த்தல்களில் தோல்வியைத் தழுவப்போவது உறுதியாகி விடும்’ என்று சொன்னவுடன் மாக் கானர் அவர் சொன்னபடி காயை நகர்த்த ஆரம்பித்தான். டிராவாக முடியும் என்று அவர் சொல்ல அவர் சொல்லியபடியே காயை நகர்த்த விளையாட்டு டிரா வாகிறது. மறுநாளும் விளையாடுவது என முடிவாகிறது. செஸ் சேம்பியனுக்கு புதியவனால் தான் எதிர் அணியினர் வெற்றிபெற்றனர் என்று மறுநாளும் விளையாட சம்மதம் தெரிவிக்கிறான்.
டாக்டர் B யிடம், கதைசொல்லி வியன்னா குறித்து பேசும்போது அவரும் இயல்பாய் பேச ஆரம்பிக்கிறார். விளையாட சம்மதம் வேண்டியதும் ‘என்னை முழுமையாக நம்ப வேண்டாம், நான் விளையாடி 25 வருடங்களுக்கு மேலாகின்றன. வேண்டுமானால் ஒருமுறை விளையாடுகிறேன்’ என்கிறார். பேச்சு இயல்பாய் தொடரும்போது, டாக்டர் B தன்னைப்பற்றி குறிப்பிடுகிறார்.
நாங்கள் பெரிய அரச குலத்தவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்குவதை மட்டுமே செய்து வந்தோம். குறிப்பாக, அவர்களுடைய எஸ்டேட்டுகளை நிர்வகித்துவந்தோம். ராஜ குடும்பத்தின் உறுப்பினர்கள் சிலருடைய நிதிநிலவரங்களை, கணக்கு வழக்குகளை நிர்வகித்துவரும் பொறுப்பு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அரசவை மற்றும் திருச்சபையுடனான எங்கள் தொடர்பு இரண்டு தலைமுறைகளாகத் தொடர்ந்து வருவது.
‘ஹிட்லர் ஜெர்மன் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபோது, திருச்சபையின் சொத்துடமைகளின் மீதும், அரச குடும்பங்களின் சொத்துடமைகளின் மீதும் அதிரடி சோதனைகள் நடத்த ஆரம்பித்தனர். அரசகுலத்தினரின் அசையும் சொத்துக்களையாவது, ஹிட்லரின் ஆட்சி பறிமுதல் செய்துவிடாமல் பாதுகாப்பதற்கான பேச்சு வார்த்தைகளும், பரிவர்த்தனைகளும் ஜெர்மனியின் எல்லைகளுக்கு அப்பாலிருந்து எங்களின் வழியாக அனுப்பி வைக்கப்பட்டன. எனக்கும் எனது தந்தைக்கும் அரச குடும்பம் தொடர்பான சில குறிப்பிட்ட ரகசியமான அரசியல் விஷயங்கள் தெரிந்திருந்தது.’ என்கிறார்.
ஹிட்லர் வியன்னாவை தன் கையிலெடுப்பதற்கு ஒருநாள் முன்பாக டாக்டர் B கைது செய்யப்படுகிறார். அவர்களுக்குத் தேவை நிரூபணங்கள். இவரை வதைமுகாமில் அடைக்கவில்லை என்பதைத் தவிர்த்து, ஒரு தனி அறையில் அடைக்கின்றனர். ஒரு கதவு, ஒரு ஜன்னல், ஒரு படுக்கை, ஒரு மேஜை, ஒரு கைகழுவும் தொட்டி. இது தவிர வேறு எதுவும் கிடையாது அந்த அறையில். மனதை தனிமைப்படுத்தி சித்திரவதை செய்து உண்மையை வெளிக்கொணரும் உத்தியைச் செய்தனர். மனரீதியாக சித்திரவதைக்கு ஆளாகும் மனிதனின் தப்பிக்கும் வேட்கை, வாழ அவன் எடுத்துக்கொள்ளும் உத்தி சிறப்பாக இந்த இடத்தில் சொல்லப்பட்டுள்ளது.
டாக்டர் B யின் கவனிக்கும் திறன் அதீதமாக அதிகரிக்கிறது. வாழவேண்டுமெனும் வேட்கையில் அவர் அனைத்தையும் புலன்களின் வழி நிலை நிறுத்தி மனனம் செய்துகொள்கிறார். அப்போது இந்த அறையிலிருந்து விசாரணைக்காக காத்திருக்கும் அறையில் தொங்கவைக்கப்பட்டிருந்த காவலர் ஒருவரின் மேலங்கியின் சட்டைப்பையில் சற்றே தூக்கலாய் புடைத்து இருப்பதைப் பார்த்து அது ஒரு புத்தகமாக இருக்க வேண்டுமெனும் முடிவுக்கு வருகிறார். அதை பிறர் அறியாமல் அந்தப் புத்தகத்தைத் தன் உடையில் மாற்றிக்கொண்டு விசாரணையில் பதில் அளித்து அறைக்கு வந்தவுடன் அவர் அடையும் ஆசுவாசம் வார்த்தைகளுக்கடங்காதது.
புத்தகத்தைப் பிரித்துப்பார்க்கையில் அது சதுரங்க கையேடு 150 சேம்பியன்ஷிப் செஸ் விளையாட்டு நுணுக்கங்களைக் கற்றுக்கொடுக்கும் புத்தகம் என்பது தெரிகிறது. பெரிதும் ஏமாற்றம் அடைந்தாலும், அதை மனப்பாடம் செய்ய ஆரம்பிக்கிறார். படுக்கை விரிப்பை சீராக மடித்து 64 கட்டங்களை வைத்துக்கொண்டு, மேலும் ரொட்டித்துணுக்குகளை காய்களாக்கி அதன் மேல் வைத்து ஆட்டமாட ஆரம்பிக்கிறார். அந்த பயிற்சியே இப்போது விளையாட துணை நின்றது.
அவருக்கு தான் ஒரு உலக செஸ் சேம்பியனுடன் விளையாடினோம் என்பதே வியப்புக்குரியதாய் இருந்தது. கடைசியில் இருவரும் விளையாடும் காட்சியும் இவரின் பரபரப்பில் இவர் தன்னை இழப்பது, பிற துறைகளில் திறமையே இல்லாத உலக செஸ் சேம்பியன் இவரை நிதானமாக விளையாடி வெல்வதும் முடிவாகிறது.
ஜ்ஸெண்ட்டோவிக் , டாக்டர் B இருவருக்கும் இடையே நடைபெறும் செஸ் விளையாட்டினை நேரில் காண்பது போன்ற மனோபாவத்துடன், கொந்தளிக்கும் உணர்வுப்பிரவாகம், செஸ் விளையாடும் அதே உணர்வின் வெளிப்பாட்டுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. இடையில் வியன்னா, ஹிட்லரின் ஆட்சி வரும்போது வரை முகாம், மற்றும் உண்மையை வெளிக்கொணர நிகழும் விசாரணை நிகழ்ந்த சில காட்சிகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
Royal Game ராஜ விளையாட்டு ஸ்டீஃபான் ஜ்ஸ்வேய்க் – கின் வாழ்க்கையின் கடைசி நான்கு மாதங்களில் எழுதப்பட்டது. இவரின் குறுநாவல்கள் சுயசரிதத்தன்மை கொண்டவை என்ற் பரவலான அனுமானம் அவருக்கு எரிச்சலூட்டும். ஆனால், அவரின் எழுத்துகளில் அவை தென்படுவதைக் காணவியலும். நாஜிகளின் நான்கு ‘கெஸ்டபோவைக் கடந்து, காயப்பட்டாலும், தொடர்ந்து வாழும் துணிச்சலைத் தேடிப்பெறும் பாத்திரம், ஓடிவிடவோ, விரக்தியில் அமிழ்ந்துவிடவோ செய்யாத மனிதன், தன்னுடைய எழுத்தில் தன் குற்றவுணர்வையும் சோகத்தையும் நீக்கிக்கொள்ளும் எழுத்தாளர்களுக்கேயுரிய முயற்சியாகத்தான் தெரிகிறது.
கற்பனை செஸ் விளையாட்டில் கதாநாயகன் கண்டடையும் பாதுகாப்பும், சரணாலயமும், எப்பொழுதெல்லாம் குடும்ப அல்லது அரசியல் நிலவரங்கள் தன்னை மிக அச்சுறுத்துகின்றனவோ நெருக்குகின்றனவோ, அப்போதெல்லாம் கற்பனையில் (அல்லது இலக்கிய படைப்பில்) நிவாரணம் தேடிக்கொள்ளும் ஜ்ஸ்வேக்கின் மனப்போக்கை பிரதிபலிக்கிறது எனலாம்.
“இரவு பகல் என்ற சதுரங்க மேடையில்
வலுவிழந்த மனிதர்களை
காய்களாக வைத்து
ஆடுகின்றான் அவன்
இங்கும் அங்கும் இழுக்கின்றான்
ஒவ்வொன்றாய் வெட்டித் தள்ளி
திரும்பப் பெட்டியில் போடுகின்றான்”
என்று உமர்கய்யாம் கூறுவதும் இப்போது ஏனோ நினைவுக்கு வருகிறது.