ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ ! -1

1

 

சு. கோதண்டராமன்

பாரதியின் குயில் பாட்டு அவருடைய படைப்புகளில் தனித்தன்மை வாய்ந்தது. முதலாவதாக, இது செய்யுள் வடிவிலான கதைப் பாட்டு. பாரதி பல தலைப்புகளில் மரபுக் கவிதைகளும் வசன கவிதைகளும் எழுதியுள்ளார். பல கதைகளும் உரைநடை வடிவில் எழுதியுள்ளார். ஆனால் இது ஒன்று தான் பாடல் வடிவில் சொல்லப்பட்ட கதை.

பாரதியின் ஒவ்வொரு கதையிலும் ஒரு நீதி அல்லது சமூகத்திற்கான ஒரு செய்தி வெளிப்படையாகத் தெரியும். ஆனால் இக்கதையில் நீதிகளை வெளிப்படையாகத் தெரிவிக்காதது மட்டுமல்ல. முடிவில் ஒரு மர்மமான முடிச்சையும் வைத்திருக்கிறார்.

சோலை, குயில், காதல், சொன்னகதை யத்தனையும், 
மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே 
தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென்றே கண்டு கொண்டேன். 
ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே யானாலும்,

வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க 
யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?

 

எனவே ஏதோ செய்தி மறைந்துள்ளது என்று நமக்குத் தோன்றுகிறது. அது என்ன என்று அறிய, அந்தப் பாடலை முழுமையாகப் படிப்பதோடு மட்டுமல்லாமல் பாரதியின் மற்ற படைப்புகளையும் ஆழ்ந்து கற்க வேண்டும். ஏனெனில் நாம் சொல்ல இருக்கும் விளக்கம் நம் கற்பனையில் பிறந்ததாக இருக்கக் கூடாது. பாரதியின் பிற படைப்புகளில் காணப்படும் அவரது உள்ளத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டும். இந்த அடிப்படையில் குயில் பாட்டில் மறைந்துள்ள செய்தியைத் தேடிக் கண்டுபிடிக்க முயல்வோம். முதலில் அந்தக் கதையைத் தெரிந்து கொள்வோம்.

கவிஞர் ஒரு நாள் ஒரு மாந்தோப்பில் உலவிக் கொண்டிருந்தார். அங்கிருந்த குயில்களில் ஒன்று மட்டும் மற்றவற்றை விடச் சிறப்பாகப் பாடிக் கொண்டிருந்தது. கானத்தால் ஈர்க்கப்பட்டு அதன் மேல் காதல் கொண்டார் கவிஞர். தனக்கு ஏற்ற ஒரு காதலரைத் தேடிக் கொண்டிருந்த குயிலும் கவிஞருடன் இன் மொழிகள் பேசி, நான்காம் நாள் வருமாறு கேட்டுக் கொண்டது.

காதல் நினைவால் பித்துப் பிடித்தவர் போல் ஆன கவிஞர், மறு நாளே தோப்பிற்குச் சென்றார். அங்கு அந்தக் குயில் ஒரு குரங்குடன் காதல் வார்த்தைகள் பேசிக் கொண்டிருப்பதை மறைவிலிருந்து காண்கிறார். வஞ்சகக் குயிலையும் குரங்கையும் கொல்லக் கருதி வாளை வீசுகிறார். அவை தப்பி விடுகின்றன.

காதல் நினைவு வாட்டவே மறு நாளும் தோப்பிற்குச் செல்கிறார். அங்கு அந்த வஞ்சகக் குயில் ஒரு மாட்டுடன் காதல் செய்து கொண்டிருப்பதைக் கண்டு பதைக்கிறார். மாட்டைக் கொல்ல வாளை வீச, அது தப்பிவிடுகிறது.

நான்காம் நாள் குயில் இவரை எதிர்பார்த்துக் காத்திருந்தது. கவிஞர் தான் கண்ட அதன் வஞ்சக நடத்தைகளைக் கூறி அதைக் கொல்லக் கருதுகிறார். குயிலோ தன் கதையை முழுவதும் கேட்டு விட்டுக் கொல்லுமாறு கெஞ்சுகிறது. குயில் தன் பூர்வ ஜன்மக் கதையைக் கூறுகிறது.

வீர முருகனென்னும் வேடன் மகளாகச் சேர நாட்டில் ஓர் மலையில் பிறந்து சின்னக் குயிலி என்னும் பெயருடன் வளர்ந்தாள் அவள். அழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கிய அவளை மணக்க விரும்பினான் அவளது மாமன் மகனான மாடன் என்பான். பொன்னை, மலரை, புதுத் தேனைக் கொண்டு வந்து நித்தம் கொடுத்து நினைவெல்லாம் அவளாக அவன் சித்தம் வருந்தியதால், அவள் மாலையிட வாக்களித்தாள்; மையலினால் இல்லை; அவன் சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாள்.

இதை அறியாத அவளுடைய தந்தை அவளுக்கு நெட்டைக் குரங்கன் என்னும் இளைஞனைக் கணவனாக்க நிச்சயித்தான்.   இந்நிலையில் அவள் ஒரு இளவரசனைக் கண்டு காதல் கொள்கிறாள். அவனும் “நீயே துணை எனக்கு. நீயே குலதெய்வம். நின்னையன்றிப் பிற பெண்ணை  நினையேன். இப்பொழுதே நின் மனைக்குச் சென்றிடுவோம், நின் வீட்டிலுள்ளோர்பால் என் மனதைச் சொல்வேன். எனது நிலை உரைப்பேன், வேத நெறியில் விவாகம் உனைச் செய்து கொள்வேன்” என்று வலக் கைதட்டி வாக்களித்தான். பூரிப்புக் கொண்ட அவளை அவன் அணைத்து இதழ் பருகும் நேரத்தில் குரங்கனும் மாடனும் பார்த்துப் பதைபதைத்து இளவரசனை வாளால் வெட்டினர். அவனும் இவர்களைக் கொன்று தானும் வீழ்ந்து இறந்தான்.

சின்னக் குயிலி குயிலாகப் பிறந்தாள். அவள் ஒரு முனிவரைச் சந்தித்த போது அவர் அவளது முற் பிறப்புக் கதையையும் கூறி வருங்காலத்தையும் உரைத்தார். மாடனும் குரங்கனும் பேயாகப் பிறந்து அவளைப் பின்தொடர்வார்கள் என்றும் அவளது நெஞ்சம் கவர்ந்த இளவரசன் தொண்டை நாட்டில் ஒரு மாந்தோப்பில் அவளது பாட்டால் கவரப்பட்டு அவளைச் சந்தித்து மணப்பான் என்றும் அவர் கூறினார்.

முனிவர் கூறியபடியே, அவளுடைய முற்பிறப்புக் காதலனே கவிஞராக வந்துள்ளதைத் தான் உணர்ந்ததாக அவள் உரைக்க, கவிஞர் அக் குயிலை அணைத்து இன்பவெறி கொண்டு முத்தமிட்டார். கோகிலத்தைக் காணவில்லை. பெண்ணொருத்தி அங்கு நின்றாள்; பெண்ணவளைக் கண்டு பெருங்களி கொண்டார் அவர். இப்படி மகிழ்ச்சியாக முடிகிறது கதை.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.