அவன், அது , ஆத்மா (19)
ஒரு எளிய மனிதனின் சுயசரிதை
மீ.விசுவநாதன்
அத்யாயம்: 19
“பசு தேவதை”
அவனுக்கு அப்பா வழித் தாத்தா விஸ்வநாதையர் இரவுச் சாப்பாட்டுக்குப் பின்பு வீட்டு வாசலில் ஒரு கயிற்றுக்கட்டிலை போட்டு அமர்ந்து கொள்வார். அவனைத் தன்பக்கத்தில் உட்காரவைத்துக் கொண்டு சின்னச் சின்னக் கதைகள் சொல்வார். சிலநேரங்களில் அவன் அந்தக் கட்டிலில் இரவு ஆகாயத்தைப் பார்த்தபடி படுத்துக் கொண்டே கதைகளைக் கேட்பான். அவனுக்கு தைரியம் வரவேண்டும் என்பதற்காக அவனைத் தனியாக பக்கத்துத் தெருவான “பாட்டநயினார் புர”த்தின் கடேசிவரைப் ஓடிப் போய்வரச் சொல்லி, அவன் போவதையே பார்த்துக் கொண்டிருப்பார். அப்படி ஒருநாள் இரவில் அவன் ஓடிச் சென்று ராமச்சந்திரபுரம் தெருவின் முதல் வீடான நீலகண்டன் சத்திரத்தின் வாசலில் படுத்திருந்த ஒரு கருப்புநிற பசு மாட்டைப் பார்த்து பயந்துபோய்த் தலைதெறிக்கத் தாத்தாவை நோக்கி ஓடியே வந்தான். அப்பொழுதெல்லாம் தெருவிளக்குகள் அதிகம் இல்லாத காலம். மூச்சிரைக்க வந்து நின்ற அவனை அவனது தாத்தா அணைத்துக் கொண்டு,” ஏண்டா கண்ணா ….இப்படி மூச்சிரைக்க ஓடிவரே…” என்றார். “தாத்தா..அங்க ஒரு கருப்புப் பசுமாடு படுத்துண்டிருக்கு…அதப் பாத்தா எனக்கு பயமா இருந்துது..” என்றான். அதற்கு,” இதுக்குப் போயி இப்படி பயப்படறே…வா எங்கூட” என்று அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு அந்த மாடு படுத்துக் கொண்டிருந்த இடத்தின் அருகில் சென்று அதைத் தடவிக் கொடுத்தார். நல்ல இருட்டு வேளை. அவனுக்கு உள்ளூர பயமாகவே இருந்தது. அவனது பயத்தைப் போக்க,” இங்கவா…நீயும் இதோட கழுத்தத் தடவிகொடு..ஒண்ணும் செய்யாது” என்று அவனது வலது கையைப் பிடித்து அந்த பசு மாட்டின் கழுத்தில் தடவிக்கொடுக்கச் சொன்னார். அவனும் மெதுவாகத் தடவிக் கொடுத்தான். அது தன் தலையைத் தூக்கி நன்றாகத் தன் கழுத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. “நீ இத இருட்டுல பாத்துட்டு கருப்புப் பசுமாடுன்னு சொன்னாய்…இப்பநன்னாப் பாரு…இது கருப்பா…இல்லைடா..இது சந்தனநிறம். நம்மத்துக்குக் காலைல வருமே அதே பசுமாடுதான்…இத “கோமதி”ன்னு கூப்பிடுவோம்…” என்று அவனுக்குச் சொல்லிக் கொண்டே மீண்டும் வீட்டு வாசலில் போட்டிருந்த காயிற்றுக் கட்டிலின் அமர்ந்து கொண்டார். அவனைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, “பசுமாடு தேவதை. அதோட ஒடம்புல எல்லா தேவதைகளும் இருக்கறதாச் சொல்லுவா.” என்றார். “ஏன் பசுமாட்டோட நெத்தியையும், பின்புறத்தையும் தொட்டுக் கண்ணுல ஒத்திகாரா?” என்ற அவனது கேள்விக்கு அவர் அழகாக ஒவ்வொரு அங்கத்திலும் என்னென்ன தேவதைகள் இருக்கிறார்கள் என்று சொன்னது இன்றும் அவனுக்கு நினைவிருக்கிறது.
“பசுவோட தலைல சிவனும், நடு நெத்தில பார்வதியும்,..இரண்டு கொம்போட அடில பிரும்மாவும், விஷ்ணுவும் இருக்கா..ரெண்டு கொம்பு நுனிலையும் கோதாவரி போன்ற நதிகள்லாம் இருக்கு..ரெண்டு கண்ணும் சூரிய சந்திரா, ரெண்டு காதுலயும் அஸ்வினி தேவர்கள் இருக்கா …யமன் இதயத்துல இருக்கார்…வருணன் நாக்குலயும், வாயு பல்லிலையும், இந்திரன் கழுத்திலையும் இருக்கார்.. பசுவோட மூத்திரத்தில கங்கையும், அது போடற சாணில யமுனையும் இருக்கு…வயத்துல பூமாதேவியும், பசுவோட பின்புறத்துல லெஷ்மிதேவியும் இருக்கா…அது மட்டும் இல்ல..இன்னும் எல்லா தேவர்களும் பசுவாட உடம்பு பூராவும் இருக்கா..அதனாலதான் பசுவ நாம தேவதைன்னு சொல்லறோம். கன்னுக் குட்டி பால் குடிச்ச அப்பறம்தான் நாம பால் கறக்கணும். அது குடிக்காம நாம கறந்து குடிச்சா மகா பாவம்….. அதுக்கு ஆத்திக் கீரை, அருகம்புல் எல்லாம் கொடுத்தாப் புண்ணியம்…நம்மாத்துல வாசல்ல வருமே அந்த பசுமாட்டுக்கு கோமதின்னு பேரு. நீ நாளைக்கு அது வரும்போது அத “கோமதின்னு” கூப்புடு அது ஒன்னத் திரும்பிப்பாக்கும்…அதத் தொட்டுக் கண்ணுல ஒத்திண்டு பிரதக்ஷிணம் பண்ணு…நீ ரொம்ப நன்னா இருப்பாய்..” இப்படி அவனுக்கு தாத்தா சொன்னது அவரது குரலிலேயே இன்றும் அவனது காதுகளில் ஒலிக்கிறது. பசுக்களைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்குத் தாத்தாவின் நினைவு வரும். இப்பொழுதும் அவனுக்கு முடியும் பொழுதெல்லாம் ஆத்திக்கீரையும், கொஞ்சம் வெல்லமும் எடுத்து, மனதில் பிராத்தனை செய்துகொண்டே பசுவுக்குக் கொடுக்கிறான். அவள் “அவனது” மனக்கவலைக்கு மருந்தாகிறாள். சாந்தி தருகிறாள்.
“கோலாட்டப் பல்லக்கு”
அவனுக்கு நினைவு தெரிந்து கோலாட்டப் பல்லக்கை அவன் முதலில் பார்த்தது தொந்திவிளாகம் தெரு நீங்கலாக மற்ற தெருக்காரப் பெண்களும், சிறுமியர்களும் சேர்ந்து நடத்தியதுதான். அதனை முறைப்படுத்தியவர்கள் “வராகசீதாலட்சுமி” என்ற “சிண்டா” மாமியும், (எம்.ஆர்.ஆதிவராகன் மாமாவின் தாயார்), “வள்ளியம்மாள்” என்ற “பிசுக்குட்டி” மாமியும் (கே.எஸ்.சங்கரலிங்கம் ஐயரின் மனைவி) என்று அவனுக்கு அக்கா பாலா சொன்னாள். கிராமத்துப் பெரியவர்கள் எல்லோரும் அதற்கு நிதி உதவி செய்வார்கள். “கண்ணா… சிண்டாமாமி இருக்கும் போது, ஒரு முறை யானை மீது பசுவன் பிள்ளை அமர்ந்து, மடியில் “பசுவும், கன்றையும்” வைத்துக் கொண்டு கம்பீரமாக நடந்த கோலாட்டப் பல்லக்கு அற்புதம்டா” என்று அவனுக்கு அக்கா ரொம்பவும் பூரிப்போடு சொன்னாள். தொந்திவிளாகம் தெருக் காரர்கள் தனியாகக் கோலாட்டப் பல்லக்கு நடத்துவார்கள். அதுவும் சிறப்பாக இருக்கும்.
மழையை வேண்டிப் பிரார்த்தனை செய்து “தீபாவளி அம்மாவசை” அன்று வயல்காட்டிற்குச் சென்று மண் எடுத்து வருவார்கள். அந்த மண்ணில் ஒரு பசுவும், கன்றும் செய்து பூஜை செய்வார்கள். கோலாட்டப் பல்லக்கு விழாவுக்கு ஒரு நல்ல நாளும் குறிப்பார்கள். கிராமத்தில் உள்ள சிறுமியர்கள் முதல், வயதானவர்கள் வரை ஒவ்வொரு குழுவாக அமைத்துக் கொள்வார்கள். மண்ணெடுத்துச் செய்து பூஜை செய்துவருகின்ற “பசுவும் கன்றும்” இருக்கும் இடத்தில் தினமும் நல்ல நல்ல பாடல்களால் கோலாட்டம் அடித்து மகிழ்வார்கள். அதைப் பார்க்கவே ரொம்பவும் சந்தோஷமாக இருக்கும். அதன் பிறகு ஒவ்வொரு குழுக்களாக பிரிந்து கிராமத்தில் உள்ள அத்தனை வீடுகளுக்கும் சென்று கோலாட்டம் அடித்துப் பண்டிகைக்காக பணம் வசூல் செய்வார்கள். அதில் ஒரு பாட்டு மிகவும் முக்கியமானது. அதன் அழகான வரிகள் அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதை யார் எழுதினார்கள் என்பது தெரியவில்லை. தலைமுறையாகப் பாடப் பட்டு வருகிற அந்தப் பாடலே “கோலாட்டப் பல்லக்கு”ப் பாட்டு என்றுதான் சொல்லுவார்கள். அந்தப் பாடலை அவனுக்கு நண்பன் “கிச்சாபூ” ( கிருஷ்ணன் என்ற பெயர்) பாட்டுடீச்சர் திருமதி. லலிதா அவர்களிடம் கேட்டு வாங்கி அவனுக்குச் சொன்னான். மேலும் இப்பொழுது நடக்கும் கோலாட்டப் பல்லாக்கிற்கு வயற்காட்டில் மண்எடுத்து, பசுவனை அதே வயற்காட்டில் கொண்டு வைக்கும் வாய்ப்பும் தனக்குக் கிடைகிறது என்றும் அவனிடம் “கிச்சாப்பூ” சொல்லி மகிழ்ந்தான்.
“கோலேனாக் கோலே
பாலா லீலானாக் கோலே
பாலவிலோச்சன லீலா விலோசன
பால பிரபஞ்ச கோலே ….
பசுவா பசுவையா
உனக்குப் பணம்தர யாருமில்லை
இன்றைக்கு வாவென்று நாளைக்கு வாவென்று
ஏய்கிறாளே பசுவா..
மழை ரொம்பப் பெய்யவேண்டும் – சுவாமி
குளங்கள் பெருக வேண்டும்
பூமியில் போட்டதெல்லாம்
பொன்னாய் விளைய வேண்டும்
பொதி ரொம்பக் காணவேண்டும்…
எட்டடிக் குச்சுக் குள்ளே – சுவாமி
எத்தனை நாளிருப்பீர்
மச்சு வீடு கட்டித் தாரேன்
குச்சு வீடு காட்டித் தாரேன் –சுவாமி
மலையாளம் போய்வாரும்…. (கோலேனாக் கோலே)
ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வட்டமாக நின்றும், குதித்துக் குதித்தும் அவர்கள் அடிக்கும் கோலாட்டம் இசையோடு கேட்கவே சுகமாக இருக்கும்.
“ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் இருந்த தியாகி டாக்டர் லக்ஷ்மி அம்மாள் வீட்டில் கோலாட்டம் அடிக்கும் குழந்தைகளை வரவழைத்து கோலாட்டம் அடிக்கச் சொல்லி மிகவும் ரசித்து ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய்கள் தருவார்கள் (அந்தக் காலத்தில் அது பெரிய தொகை) என்று அவனுக்கு அக்கா பாலா சொன்னாள். மேலும் கிராமத்தை விட்டு வெளியில் மெயின் ரோட்டில் உள்ள நடேசையர் வீட்டிலும் இரண்டு இடங்களில் கோலாட்டம் அடிக்கச் சொல்லி பணம் தருவார்கள் என்றும், குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்காக ஏதேனும் பக்ஷணமும் தருவார்கள் என்றும் அவனுக்கு அக்கா சொன்னாள்.
இப்படிப் பாடிப் பிரித்த பணத்தில் கோலாட்டப் பல்லக்கு விழா நடத்துவார்கள். ஒரு பிரும்மசாரிப் பையனுக்குப் புதிய வேஷ்டி, அங்க வஸ்திரம் தந்து, மிக அழகாகப் பூக்களால் அலங்கரிக்கப் பட்ட வண்டியில் அந்தப் பையனை அமரச் செய்து , அவனது மடியில் “பசுவும் கன்றும்” பொம்மையைத் தருவார்கள். கோலாட்டமடிக்கும் பெண்கள் வயதிற்கு ஏற்றார்ப்போலக் குழுக்களாக , வட்டமாக நின்று கொள்வார்கள். மாலையில் நல்ல நேரத்தில் பல்லக்கு ஊர்வலம் புறப்படும். வண்ண விளக்குகள் மின்ன, நாதஸ்வர மேளத்துடன், கோலாட்டப் பாடலும் காற்றில் மிதந்து வந்து அனைவரது காதுகளிலும் ஆனந்தக் களிப்பூட்டும். அதை அவன் நன்றாக அனுபவித்திருக்கிறான். அத்தனை தெருக்களுக்கும் அந்த ஊர்வலம் செல்லும். நல்ல நல்ல பாடல்களை தேர்வு செய்து பாடுவார்கள். கிராமத்துப் பெரியோர்களும், வாலிபர்களும் ஊர்வலத்தின் இரண்டு பக்கமும் ரசித்தபடி வருவார்கள். அது ஒரு கண்கொள்ளாக் காட்சி.
ஊர்வலம் முடிந்து புறப்பட்ட இடத்திற்கு வந்த பின்பு “பசுவனை” அலங்கார வண்டியில் இருந்து இறக்கிவைத்து அனைவரும் கோலாட்டம் அடித்துக் கொண்டே, அந்த “பசுவையும், கன்றையும்” எந்த வயற்காட்டில் இருந்து மண்எடுத்துச் செய் தார்களோ அதே வயற்காட்டில் கொண்டு வைத்து விட்டு வருவார்கள். அப்படி வரும் பொழுதே இடியும் மின்னலுமாக மழை கொட்டும். மழையில் நனைத்தபடியே அனைவரும் வருவார்கள். இந்த அனுபவத்தை அவன் நிறைய முறை அனுபவித்திருக்கிறான். கோலாட்டப் பல்லக்கில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் ஒரு பெரிய வீட்டில் வைத்து “இனிப்பு, தாளகம், பொங்கல், வடகம்” என்று அன்னதானம் நடைபெறும். அனைவரும் வயிறாரச் சாப்பிடுவார்கள்.
இப்பொழுதும் அந்த அருமையான கோலாட்டப் பல்லக்கு விழாவை முன் நின்று நடத்தி வருகிறார் திருமதி கிருஷ்ணவேணி அம்மாள் (வேணி மாமி என்றால்தான் அனைவருக்கும் தெரியும்). அவர் கே.எஸ்.காசிவிஸ்வநாத ஐயரின் மனைவி. கிராமத்துக் குழந்தைகள், பெரியோர்கள் என்று அனைவரிடமும் மிகவும் வாஞ்சையாக இருந்து இந்த விழாவை, கிராம மக்களின் முழு ஆதரவோடு தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். இது தவிர பெண்களுக்கும், சிறுமியர்க்கும் பாடல்கள், ஸ்லோகங்கள் என்று கற்றுத் தருகிறார்கள். புதிய பாடல்களுக்கு நல்ல இசையமைத்துப் பாடக்கூடிய திறமை வாய்ந்த திருமதி. லலிதா அவர்களின் பங்கை கிராமமே பாராட்டும். தொந்திவிளாகம் தெருவில் இருந்த ஸ்ரீ ரங்கநாத வாத்தியாரின் மனைவிதான் (ரெங்கவாத்தியாராத்து மாமி) அந்தத் தெருவின் கோலாட்டப் பல்லாக்கிற்க்கு “பசுவும் கன்றும் ” பொம்மையைச் செய்வார்கள். நல்ல குரலில் பாடவும் செய்வார்கள். அந்தத் தெருவில் நடக்கும் பல்லாக்கு விழாவும் வெகு விமர்சையாக இருக்கும். அந்தக் கிராமத்தில் நல்ல ஒற்றுமை உண்டு. மற்ற கிராமங்களுக்கு அது இன்றும் ஒரு முன் மாதிரியாகத்தான் திகழ்கிறது. அவன் அந்தத் தெருவில்தான் பிறந்தான் என்பதில் அவனுக்குத் தனிப் பெருமை உண்டு.
எல்லோருக்கும் பெய்யும் மழையாக இந்தக் கோலாட்டப் பல்லாக்கு உற்சவம் நடைபெருகிறது. முன்காலப் பெரியோர்கள் கலாசாரத்தை எப்படிப் பாதுகாத்து வந்தார்கள் என்பதற்கு அவனது கிராமம் ஒரு நல்ல உதாரணம்.