ஷைலஜா

பாரத வரலாற்றைப் புத்தகங்கள் படித்துத் தெரிந்து கொள்வதை விட பல இடங்களுக்கு நேரில் சென்று பார்த்து அறிந்து கொண்டால் நம் நாட்டின் வரலாறு எத்தனை உன்னதமானது என்று தெரிய வரும்.

சரித்திரம் என்பது வெறும் கடந்த காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை மட்டும் நமக்கு நி்னைவு படுத்துபவை அல்ல. அவைகள் நமக்குப் பெரும் பாடங்களைக் கற்பித்துச் சென்றுள்ளன. அவைகளிலிருந்துதான் நாம் நமது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். காலம் உணர்த்திச் சென்றுள்ள பாடத்திலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும்.

பாரத நாட்டுச் சரித்திரத்தை நமக்கு எடு்த்துரைக்க எத்தனையோ வரலாற்று ஆவணங்கள் வரலாற்று நூல்களுடன் தொடர்புடைய இடங்களும் இருந்து வருகின்றன.

வரலாற்றைக் கேட்டுப் படித்துத் தெரிந்து கொள்வதைப்போலவே அவை நடந்த இடங்களுக்குச் சென்று பார்த்து வருவதும் வரலாற்றின் உண்மைகளை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள பேருதவியாக இருக்கும்.

புனித யாத்திரையாக ஆன்மீகப்பயணம் மேற் கொள்வது போல வரலாற்றுப்பயணமும் முக்கியமானது எனக்கருதி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களுக்கு நாம் செல்ல வேண்டும். அம்மாதிரி நாம் செல்ல வேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடம்தான் ஹம்பி ஆகும்.

துங்கபத்ரா நதிக்கரையில், சிதைக்கப்பட்டு இடிபாடுகளுடன் பரவிக்கிடக்கின்ற பழைய கலைநகரமான ஹம்பி, விஜயநகரப் பேரரசின் வரலாற்றினை எடுத்துரைக்கிறது.

ஹம்பி கர்நாடக மாநிலத்தில் உள்ளது. எப்போதோ சீரும் சிறப்புமாய் இருந்த இடம் மட்டுமல்ல இன்றும் கூட அதன் சரித்திரம் அங்குள்ள சிற்பங்களின் சிதைவுகளில் உயிரோடு காட்சி அளிக்கிறது. விஜயநகரத்தின் மிச்சங்களை ஹொசப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து 12 கி.மீ வரை உள்ள கமலாபுரத்திலிருந்து தொடங்க வேண்டியது அவசியமாகிறது.

இந்து சாம்ராஜ்யமான விஜயநகரத்தின் (வெற்றியின் நகரம்) இடைக்காலத் தலைநகராக விளங்கியது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹம்பி யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது,

அன்று..

தங்கம் வைரம் முத்து போன்றவைகளைப் படிகளில் அளந்து வியாபாரம் செய்த நீண்ட சாலையும், சாலையின் இரு புறமும் உள்ள கல்மண்டபங்களும் (இன்று அவைகள் கடைகளாகவும் வீடுகளாகவும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன) விஜயநகரப் பெருமையினைக் காற்றில் முனகுகின்றன. எத்தனை அடிதடிகளை, கலைப்பொக்கிஷங்களான கற்சிற்பங்கள் தாங்கிக்கொண்டனவோ? உக்கிர நரசிம்மரின் கையைக்கூட உடைத்துப் போட்டிருக்கின்றனர். கல்லிலே கொலைவண்ணம் கண்ட பாதகர்களின் செயலால் எத்தனை எத்தனை இழப்புகள்!

ஹம்பியின் ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது. ஒவ்வொரு நினைவுச்சின்னமும் அவை வெளிப்படுத்துவதை மறைத்து வைத்திருப்பது ஏராளம். ஒரு திறந்த அருங்காட்சியகமாக, வருகையாளர்கள் திரளக்கூடிய நூற்றுக்கணக்கான இடங்களைக் கொண்டுள்ளது ஹம்பி.

(ஓரிரு வாரம் தொடரும்)
கட்டுரை உதவி: எழுத்தாளர் ஜெயா வெங்கட்ராமன் பெங்களூர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.