’கப்பலோட்டிய தமிழனின்’ 142வது பிறந்த தினம்!
ஆவுடை நாயகம்
சமுக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கும் உரிமை உங்களுக்கு சுதந்திரமாக வழங்கப்பட்டு இருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் எத்தனை தியாகம், நேர்மை ,ஆற்றல் காலம் சென்று இருக்கிறது தெரியுமா? உங்கள் குழந்தைகள் எல்லோரையும் பணக்கார பொறியாளனாக, மருத்துவனாக ,அரசியல்வாதியாக, தொழில் அதிபராக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள உங்களுக்கு சுதந்திரத் தியாகிகளை காலம் சென்றாலும் வாழும் காந்தியாகவோ, “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடிய மகாகவி பாரதி, வீரபாண்டிய கட்டபொம்பன், உமறுப் புலவர் போல வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்து உள்ளதா? அதுகூட வேண்டாம் அவர்களின் தியாகத்தை, வீரத்தை என்றாவது உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி இருக்கிறீர்களா? இன்று யார் பிறந்தநாள் தெரியுமா? சினிமா நடிகர் பிறந்த நாளாகவோ, இல்லை கிரிக்கெட் வீரர் பிறந்த நாளாகவோ இருந்திருந்தால் தெரிந்து இருக்கும் நீங்கள் நலமாக வாழ, பணக்காரனாக, வழக்கறிஞராக வாழ வேண்டியவர் தமிழ்,சுதேசியம், என்ற அரசியல் கோட்பாட்டை ஏந்தி வந்தவனை தேசத்தாய் தாங்கிக் கொண்ட தினம் .ஆம் , “கப்பலோடு வருவேன் இல்லை கடலில் விழுந்து சாவேன் ” என்ற கப்பலோட்டிய தமிழன் , செக்கு இழுத்த செம்மல், வழக்கறிஞர் வ உ சிதம்பரத்தின் 142வது பிறந்த தினம்.
ரூபாய் இருவது லட்சம் ரொக்கமாக கொடுக்க வேண்டும் என்ற ஆங்கில அரசின் சூழ்ச்சியை பாலகங்காதர திலகர் துணை கொண்டு வென்று தமிழனின் நேர்மையும், வீரத்தையும் பறைசாற்றி பட்டொளி வீசி வங்கக் கடலில் சிங்கம் ஒரு கப்பலில் வந்தது கடல் மூலமாக வணிகம் செய்ய வந்தவர்களை திருப்பிக் கடல் வணிகத்தால் கலங்க வைத்த ஒரே தலைவன் , உன் பாட்டன் கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரம். சுதேசி கப்பலில் பயணிகள் நிரம்பினாலும் காத்திருந்து முதலில் ஆங்கிலேயர் கப்பல் சென்ற பிறகுதான் சுதேசி கப்பல் செல்ல வேண்டும் என்ற உத்தரவை நீதியின் துணை கொண்டு வீழ்த்தி சுதேசி கப்பல் சென்றது அப்படிப்பட்ட மாபெரும் வழக்கறிஞர் வ. உ.சிதம்பரம். கப்பலில் செல்லப் பயணிகள் கட்டணம் இலவசம், சரக்குக் கட்டணம் இலவசம் என்று கூறிய ஆங்கில அரசின் வியாபார தந்திரத்தையும், அரசியல் சூழ்ச்சியையும் கவனித்த சிதம்பரம் இலவசம்! இலவசம் இது நம்மை விலைக்கு வாங்கும் முயற்சி. எம் மக்களே இலவசத்தை நம்பாதீர்கள் என்று இன்றைய இலவச அரசியல் நிலையை அன்றே எடுத்து உரைத்தவன் கப்பலோட்டிய தமிழன் வ. உ.சிதம்பரம்.
இந்தியாவில் முதல் தொழிற்சங்கமே 1920ம் –ஆண்டுதான் தொடங்கப்பட்டது. சோவியத்புரட்சி 1917-ஆம் ஆண்டு நடைபெற்றது.
வ.உ.சி. 1908-ஆம் ஆண்டே தொழிற்சங்கங்கள் இல்லாமல் தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் பங்கு பெறச் செய்து அவர்களை வழி நடத்தி வேலை நிறுத்தத்தைப் பெரும் வெற்றி பெறச் செய்தார். நூற்பாலை வேலை நிறுத்தத்தின் வெற்றி அவர்களை அச்சுறுத்தியது. இந்தியாவில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் வ.உ.சி.யைக் கைது செய்வது அவசியம் என்று உணர்ந்தார்கள்.வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் கொந்தளித்தனர். இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தம். காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள். ஆங்கிலேயர்கள் பயந்து தூத்துக்குடி கடலில் உள்ள குட்டி, குட்டித் தீவுகளில் இரவுப் பொழுதைக் கழித்தார்கள்.
“சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்”
1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை. வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும் வேகத்துக்கும் இதனை விடச் சிறந்த அங்கீகாரத்தை வேறு எவரும் தந்துவிட முடியாது. மரணத்தின் மடியில் வ உ சிதம்பரம் இருக்கும் போது கடைசியாய் தன் மனைவியைத் தமிழ் பாடச் சொல்லியிருக்கிறார். ” என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் “. செவிகள் பாரதியின் வரிகளைத் தாங்கியபடி, காலம் அவர் உடலை மட்டும் எடுத்துச் சென்றது. வரலாறு அவர் பெயரை எடுத்துக் கொண்டது!