கனவிலே கண்ணன்
இசைக்கவி ரமணன்
கனவிலே கண்ணன் (பாடல்)
கனவிலே கண்ணன்
நினைவிலே கண்ணன்
கனவும் நினைவும் கலந்து மயங்கும்
கவிதை யாவும் கண்ணன்
கனவும் நினைவும் கண்ணன்
கவிதை யாவும் கண்ணன்
தன்னை உருக்கிக் கரைந்து போகும்
தவத்தின் கனலில் கண்ணன்
தானில்லாத லஹரியில் வந்து
தழுவும் உறவு கண்ணன்
கவலை யாவும் கன்னியராகி
அவர்கள் நடுவில் கண்ணன்
திசைதொலைந்து திணறும்போது
தெருவின் முனையில் கண்ணன்
தவத்தின் கனலில் கண்ணன்
தழுவும் உறவு கண்ணன்
கவலை நடுவில் கண்ணன்
தெருவின் முனையில் கண்ணன்
சொல்ல மறந்த வார்த்தையுள்ளே
சுழலும் ஜோதி கண்ணன்
சொல்லி முடிந்து ஓய்ந்த பின்னும்
தொடரும் மெளனம் கண்ணன்
எல்லை யாவும் தீர்ந்த போது
இன்னும் இன்னும் கண்ணன்
எதிரில் தோன்றி மறைந்து சிரிக்கும்
இதய வாசன் கண்ணன்
சுழலும் ஜோதி கண்ணன்
தொடரும் மெளனம் கண்ணன்
இன்னும் இன்னும் கண்ணன்
இதய வாசன் கண்ணன்