நிலவொளியில் ஒரு குளியல் – 2
ஸ்ரீஜா வெங்கடேஷ்
இருபத்தோராம் நூற்றாண்டின் பத்தாவது தீபாவளி நெருங்கி வரும் இந்தச் சமயத்தில் நானும் என் அண்ணனும் குழந்தைகளாக இருந்து எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் கொண்டாடிய தீபாவளிகள் நினைவில் ஆடுகின்றன. முன்பே சொல்லியிருக்கிறேன், எங்களுடையது ஒரு சின்னஞ்சிறிய கிராமம். ஊருக்கே ஒரே ஒரு தையல்காரர் தான் உண்டு. பண்டிகையன்று புதுத் துணி உடுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக ஒரு மாதம் முன்பே தைக்கக் கொடுத்தாக வேண்டும்.அதனால் அதற்கும் முன்பே துணி எடுக்கும் உற்சவம் தொடங்கிவிடும். பெரியவர்கள் கையில் காசின் நிலைமையைப் பொறுத்து, ஜவுளி வாங்கும் ஊரும் துணியின் தரமும் முடிவு செய்யப்படும். எங்களுக்கு யோகமிருந்தால் திருநெல்வேலிக்கு நாங்களும் உண்டு. சில சமயம் பம்பர் பரிசாக சென்டிரல் கஃபே தோசையும் காபியும் கூடக் கிடைக்கும். ஆனால் ஒன்று நினைவிருக்கட்டும். இதெல்லாம் எப்போதாவது தான். நாங்கள் துணி எடுக்கப் போகும் விஷயத்தை ஒரு வாரத்திற்கு முன்பே எல்லோரிடமும் தண்டோரா போட்டு விடுவோம். பின்னே உள்ளூரில் துணி எடுக்கும் எங்கள் நண்பர்களைப் பொறாமைப்பட வைக்கா விட்டால் திருநெல்வேலிக்குப் போய் என்ன பிரயோசனம்?
துணி எடுத்தாச்சா? அடுத்து தைக்கக் கொடுக்க வேண்டும். இருக்கும் ஒரே தையல்காரரான இசக்கிமுத்துவின் ‘மூடை’ப் பொறுத்து அளவெடுப்பார். ஆண் பெண் எல்லோருக்கும் அவ்ர்தான் தைப்பார். எங்களுக்கெல்லாம் வளரும் குழந்தைகள் என்று சற்று தாரா…ளமாகவே தைப்பார். “இவருக்கு ஒரே ஒரு அளவுலதான் துணி வெட்டத் தெரியும். அதை மறைக்க வளர்ற பிள்ள அது இதுங்கறாரு” என்பான் என் அண்ணன். அவர் தைத்துக் கொடுக்கும் துணிகளைப் பார்த்தால் அது உண்மையோ? என்று தோன்றும். இந்த லட்சணத்தில் தினமும் பள்ளி விட்டதும் ஒரு முறை அவர் கடைக்குப் போய் “எங்க துணி தெச்சாச்சா?” என்று நினைவு வேறு படுத்த வேண்டும். அப்போது தான் குறிப்பிட்ட நேரத்தில் தருவார். இப்படியெல்லாம் செய்து ஒரு வழியாகத் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு துணி தைத்து வாங்கி விடுவோம். அப்புறம் தான் இருக்கிறது, வெடி வாங்கும் திருவிழா.
நானும் என் அண்ணனும் பேப்பர், பேனாவை எடுத்துப் பட்டியல் போட ஆரம்பிக்கும்போதே வீட்டுப் பெரியவர்கள் சொல்லும் ஒரே பழமொழி “நரிக்குக் கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்” என்பது தான். (ஒரு தீபாவளி கூட சொல்லாமல் இருந்ததேயில்லை). நாங்கள் போடும் பட்டியலுக்கும் எங்கள் அப்பாவின் பட்ஜெட்டுக்கும் இடையே இழுத்துப் பறித்து போரட்டம் நடத்தி ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து வெடி வாங்கக் கடைக்குப் போவோம். பார்க்கும் புது வகை வெடிகள் அனைத்தையும் வாங்க வேண்டும் போல் தோன்றும். ஆட்டம் பாம், ஹைட்ரஜன் பாம் எல்லாம் வண்ண வண்ண அட்டைகளில் எங்களை வசீகரிக்கும். வழக்கமான குருவி வெடி, லட்சுமி வெடிகள் வேறு எங்களைக் கண்கொட்டாமல் பார்க்கும். மனத்தை ஒருமுகப்படுத்தி எதிர்காலப் பலன்களை யோசித்து, புது வெடிகளைக் கொஞ்சமாகவும் லட்சுமி வெடியை நிறையவும் வாங்குவோம். தீபாவளிக்கு முந்தைய நாள் வரை, வாங்கிய வெடிகளைப் போட அனுமதி கிடைக்காது. பொட்டு வெடியிலும் ஓலை வெடியிலும் மனத்தை நிறைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஒரு வழியாக வந்ததையா, தீபாவளி விடியற்காலை! அவசர அவசரமாகக் குளித்து, அம்மா கொடுக்கும் தின்பண்டங்களைக்கூட லட்சியம் செய்யாமல் வெடி போடுவதில் முனைந்து விடுவோம். வெடி வாங்கும் போது எதிர்காலப் பலன்களை யோசித்து வெடி வாங்கியது, அப்போது கை கொடுக்கும். யார் யார் வீட்டில் அதிகம் பேப்பர் குப்பை சேர்ந்திருக்கிறது என்று பத்து மணியளவில் சர்வே நடக்கும். நாங்கள் தான் ஜெயிப்போம். ஏனென்றால் லட்சுமி வெடியில் தான் பேப்பர் மிக அதிகமாகச் சேரும். அதன் பிறகு வெடிக்காமல் ஏமாற்றிய வெடிகளை சேகரித்து மருந்தைத் தனியாக ஒரு பேப்பரில் போட்டுக் கொளுத்தி விடுவோம். நெருப்பு அந்த மருந்தில் படும்போது புஸ் புஸ்… எனச் சீறும். அதில் ஒரு சந்தொஷம். பகல் முழுவதும் இந்த விளையாட்டிலேயே கழிந்துவிடும். மாலையில் நண்பர்களொடு கூடிப் பேசியபடியே பலகாரங்கள் சாப்பிடுவோம். யார் வீட்டுப் பலகாரங்களை யார் சாப்பிட்டார்கள் என்பதே தெரியாது. ஆனால் எல்லார் வீட்டுப் பலகாரங்களுமே சுவையானதாகத்தான் இருக்கும்.
இவ்வளவு சொன்ன பிறகு, இப்பொதைய தீபாவளி கொண்டாட்டங்களைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை. மற்ற நாட்களை விடக் கொஞ்சம் தாமதமாகவே எழுந்து, ஒரு குளியலைப் போட்டு, பெயருக்கு நாலு வெடி போட்ட பின் (இடம் எங்கே இருக்கு வெடி போட?), நேரே தொலைக்காட்சியின் முன்னால் போய் உட்கார்ந்தால் சாயங்காலம் வரை எழுந்திருக்கத் தேவை இல்லை. கடையில் வாங்கிய பலகாரங்களைத் தொலைக்காட்சி முன் உட்கார்ந்து சாப்பிடுவதே சரி என்று எனக்குத் தோன்றுகிறது. இன்றைய குழந்தைகளுக்கு வருடம் முழுவதும் புதுத் துணி கிடைப்பதால் புதுத் துணி போடும் சந்தொஷமும் பெரிதாக இல்லை. இதற்கெல்லாம் என்ன? அல்லது யார் காரணம்? நம்முடைய பெற்றோர் நமக்கு அளித்த இனிய குழந்தைப் பருவத்தை நாம் நம் குழந்தைகளுக்கு அளிக்கத் தவறியது எதனால்? இந்தக் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒரு நீ…ண்ட ஆராய்ச்சி செய்ய வேண்டும். அது இப்பொழுதைக்குச் சாத்தியமில்லை.
அதனால் நம்முடைய இனிமையான குழந்தைப் பருவ நாட்களை நினைத்து, நிலவொளியில் ஒரு குளியல், சரி தானே!
(மேலும் நனைவோம்…