பஜன் சாம்ராட் – தொலைக்காட்சி நிகழ்ச்சி
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் விரைவில் ‘பஜன் சாம்ராட்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சி இளைய தலைமுறையின் திறமைகளை ஊக்குவிக்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி. இளைய தலைமுறையினரை பக்தி மார்க்கத்தில் இணைக்கவும், சங்கீத ஞானங்களை வெளிக் கொணரவும், நமது பாரம்பரிய சங்கீர்த்தனத்தின் சிறப்பை எடுத்துச் சொல்லும்படியும் அமையவுள்ளது.
இதற்கான படப்பிடிப்பு ஏவிஎம் படப்பிடிப்புத் தளத்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு போட்டியிடுவதற்கு முன் சென்னை, கோவை, தஞ்சாவூர், பெங்களூரு, ஹூப்ளி போன்ற ஊர்களில் முதற்கட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு பஜன் குழுவிலும் 15 முதல் 35 வயதிற்குட்பட்ட 9 இளைஞர்கள் பங்கு பெறுவார்கள். இதில் மூன்று போர் பக்கவாத்தியக் கலைஞர்களாவர். ஆறு பேர் பஜன் பாடல்கள் பாடுகின்றனர்.
இன்றைய பரப்பான உலகில் இளந்தலைமுறையினர் ஆன்மீகத்திற்கென நேரம் ஒதுக்கி, பயிற்சி பெற்று இறைவனின் திருநாமங்களை பாடல்களாக இசைப்பதே ‘பஜன் சாம்ராட்’ நிகழ்ச்சியின் சிறப்பு.
நிகழ்ச்சி குறித்து ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் முதன்மை இயக்க அதிகாரி திரு. கே.எஸ்.எஸ் சுரேஷ்குமார், கிரியேட்டிவ் ஹெட் மற்றும் பஜன் சாம்ராட் நிகழ்ச்சியின் இயக்குனர் ஜெய் ஆதித்யா அவர்களும் விளக்கினார்கள்.
“இந்திய தொலைக்காட்சிகளில் பஜன் பாடல்களுக்கென பிரம்மாண்டமான நிகழ்ச்சி இதுவரை நடந்ததில்லை. அந்த வகையில் ‘பஜன் சாம்ராட்’ பஜன் பாடல்களுக்கான நிகழ்ச்சிகளின் முன்னோடியாக இருக்கும். அது மட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சி மூலம் தென்னிந்தியாவின் பல்வேறு பஜன் பாடல்களையும், சம்பிரதாயங்களையும் பற்றி அறிய முடியும்.
இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு கர்நாடக இசைப் பாடகிகளான திருமதி. சௌம்யா மற்றும் திருமதி குசுமா இருவரும் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.
இது போட்டி நிகழ்ச்சி என்பதால் பங்கு பெறுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல கட்டங்களைக் கடந்து இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் குழுவிற்கு ‘பஜன் சாம்ராட்’ பட்டத்தோடு ரூபாய் பத்து லட்சமும் வழங்கப்படுகிறது.
இந்த சுவாரஸ்யமான ‘பஜன் சாம்ராட்’ போட்டி நிகழ்ச்சி வரும் டிசம்பர் 1 முதல் ஒவ்வொரு வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மாலை 7:00 முதல் 8:00 மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது.”