5

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(514)

உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்
செறினுஞ்சீர் குன்ற லிலர்.

– திருக்குறள் – 778 (படைச்செருக்கு)

புதுக் கவிதையில்…

அமர் வரின்
ஆருயிர் பொருட்டு
அஞ்சாமல்
போரிடத் துணிந்திடும்
படைவீரர்,
அப்போர் வேண்டாமென
அரசன் சினந்து தடுத்தாலும்,
தம் வீரத்தில் என்றும்
தரம் குறையமாட்டார்…!

குறும்பாவில்…

போர்வரின் தம்முயிர்க்கு அஞ்சாது
செல்லும் படைவீரர், அரசன் சினந்தாலும்
சிறப்பில் குறைய மாட்டார்…!

மரபுக் கவிதையில்…

போரில் வெல்லத் துணிந்தேதான்
பொன்னாம் உயிருக் கஞ்சாமல்
நேரில் செல்ல விரும்பிநிற்கும்
நெஞ்சி லுறுதி கொண்டுள்ள
பாரி லுயர்ந்த படைவீரர்,
பாரை யாளும் மன்னவனும்
நேரில் சினந்தே தடுத்தாலும்
நேர்மைச் சிறப்பில் குறையாரே…!

லிமரைக்கூ…

போர்வரின் உயிர்க்கஞ்சி மறையார்
போகத்துணியும் படைவீரர், அரசன் சினந்தாலும்
படைச்சிறப்பில் அணுவும் குறையார்…!

கிராமிய பாணியில்…

படவீரன் படவீரன்
பழுதில்லாதவன் பயமில்லாதவன்,
அவந்தான் படவீரன்..

நாட்டுல போரு வந்தா
உயிருக்குப் பயந்து
ஒளிச்சிக்காம
உறுதியா
போருக்குப் போகத்
துணியிற படவீரன்,
ராசா கோவிச்சிக்கிட்டாலும்
அவனோட
படச்செறப்புல ஒருநாளும்
கொறஞ்சி போயிடமாட்டான்..

தெரிஞ்சிக்கோ,
படவீரன் படவீரன்
பழுதில்லாதவன் பயமில்லாதவன்,
அவந்தான் படவீரன்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.