ஜனநாயகன்

பாஸ்கர் சேஷாத்ரி
நடிகர் விஜய் தனது கட்சியை ஆரம்பித்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகப் போகிறது. இந்த நிலையில் அவர் இதுவரை சுமார் இரண்டு அல்லது மூன்று இடங்களில் மட்டுமே கூட்டம் என்ற ரீதியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
மற்றபடி அவர் பெரிய பொதுக்கூட்டத்தை மக்கள் மத்தியில் நடத்தி, ஒரு வெகுஜன ரீதியான தலைவராக, கட்சியின் முகமாகத் தன்னைக் காண்பித்துக்கொள்ள எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை.
அவர் தான் இன்னும் படப்பிடிப்புக்காக ஒரு கேரவனில் அமர்ந்துகொண்டு அல்லது பனையூரில் தனது இல்லத்தில் அமர்ந்துகொண்டு கட்சியை நடத்தினால் அவர் பிரபலத்திற்கு ஏற்றவாறு அவரது தேர்தல் வெற்றி அமையாது.
அவர் முதலில் தனது பங்களாவை விட்டு வெளியே வர வேண்டும். அதற்கு முதல் வளையமான தனது பவுன்சர்களை அகற்ற வேண்டும். அதற்கு அடுத்தபடியாக தனக்கு வாரி வழங்கப்பட்டிருக்கும் மத்திய அரசுப் பிரிவின் பாதுகாப்பை விலக்கிக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் செய்தால் இன்றி அவருக்கும் மக்களுக்கும் எந்த வகையில் நெருக்கமும் ஏற்படாது.
எந்தக் கட்சியின் தலைவராக இருந்தாலும் சரி, அவர்களின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெரும் உழைப்பு இருந்து இருக்கிறது . குறைந்தபட்சம் அவர் மாதாமாதம் பல கூட்டங்களில் பல இடங்களில் கலந்துகொள்ள வேண்டும் . இது மக்களிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை அழகாகக் கவரும் புத்தி. எம்ஜிஆரும் கலைஞரும் ஜெயலலிதாவும் இதைத்தான் செய்தார்கள்.
இன்றைய சூழலில் அவர் இப்போது போலவே தேர்தல் நேரங்களிலும் நடந்துகொண்டால் கிட்டத்தட்ட அவர் சீமான் அளவு தான் வளர முடியும் அல்லது தமிழக பாஜக போல் பெரிய வளர்ச்சி கிட்டாமல் ஒரு தேக்க நிலைக்குச் செல்லும் அபாயம் தான் மிஞ்சும்.
விஜய்க்கு விஜயகாந்த் போல ஒரு நல்ல பிரபல பிம்பம் இருக்கிறது. அதைத் திறம்படக் கையாண்டால் குறைந்தபட்சம் அடுத்த ஆட்சியில் அவரது பங்களிப்பு இல்லாமல் எந்தக் கட்சியும் அரசு அமைக்க முடியாது என்ற நிலை உருவாக வாய்ப்பு இருக்கிறது.
அளவுக்கு அதிகமான பணம் மட்டும் பெரிய வெற்றிகளைத் தேடித் தராது . இன்று இந்தியாவில் பாஜக போல் செல்வம் கொண்ட கட்சி வேறு ஏதும் இல்லை ஆனாலும் சில மாநிலங்களில் அதன் வளர்ச்சி சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதுபோல பலர் பல உபாயங்களை வளர வைத்திருப்பார்கள் இதையெல்லாம் அவரிடம் கொண்டு செல்ல, தோதான வழியில்லை.
ஒரு தலைவர் எல்லாவற்றையும் முழுமையாக உட்கொள்ள முடியாது. ஆனாலும் தினசரி நிகழ்வுகளை, கட்சியின் போக்கை அறிந்துகொள்ள ஒரு சில உண்மையான காரியதரிசிகளை அவர் வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களும் கள நிலவரத்தை அவரிடம் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்தத் தேர்தலை அவர் கோட்டை விட்டால் இன்னும் ஐந்து வருடத்திற்கு அவரால் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியுமா எனத் தெரியவில்லை ஆனாலும் இது இல்லாவிட்டால் திரைப்படம் இருக்கிறது என்ற ரீதியில் அவர் கட்சி நடத்தினால் நமக்கு மீண்டும் தளபதி விஜய் தான் கிடைப்பார். இதைத் தாண்டி இன்று அவர் கூட்டணி வியூகம் வைக்கப் போகும் உத்தியை எல்லா கட்சித் தலைவர்களும் உற்று நோக்குகிறார்கள்.
நாளை திருமா அங்கு சேரலாம் காங்கிரஸ் கட்சி மேலும் அவமானப்பட்டால் விஜய் அதை வரவேற்கக் காத்திருப்பார்.
சில உதிரி கட்சிகளும் சுலபமாக அவர் வலையில் விழக்கூடும். அலுவலகத்திற்கு நல்ல நிர்வாகி போல் அவருக்கு குறைந்தபட்சம் ஐந்து பிரபல நிர்வாகிகள் அமைந்து அவர்களிடம் அவர் கருத்து கேட்க வேண்டும்.
பின்பு அதன்படி நடக்க வேண்டும். ஆதவ் அர்ஜுனாவிடம் பணம் இருக்கிறது. பிரசாந்த் கிஷோர் பலமான யோசனைகளைத் தரலாம்.
இவை எல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல் பெரிதாக உதவாது. அவர் செய்ய வேண்டியது எல்லாம் தன்னை மக்களோடு மக்களாகக் கலந்து கொள்ளும் வழிகளை ஆராய வேண்டும். சுமார் இன்னும் ஒன்னேகால் வருடம் நேரம் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் மிக மிகத் தீவிரமாக அணுக அவருக்கு நேரம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
இன்று தி மு க, விஜயைக் கண்டு அஞ்சுகிறது என்றால் ஒரு பெரிய பலம் அவருக்கு உண்டு என்பதை அந்தக் கட்சி நன்றாக உணர்ந்து இருக்கிறது . வேதநாயகம் என்றால் பயம் என்பது போய் விஜய் என்றால் பயம் என்று வரவேண்டும். அவரின் இந்த முயற்சிக்கு அவர் தான் ஆக்க்ஷன் என்று சொல்ல வேண்டும் .